Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

சாமத்தியச் சடங்கு ஊடான கலாச்சாரங்களும் விபச்சாரங்களும்

  • PDF

நேபாளத்தில், ''நேற்றைய குமாரிகள்" ''வாழ்வைத் தேடும் முன்னாள் தெய்வங்கள்" என்ற தலைப்புகளில் முதல் மாதவிடாய்க்குப் பின் அரண்மனைக்கு வெளியில் தூக்கி வீசப்படும் இவர்கள் பெருமளவில் விபச்சாரிகளாக அல்லது திருமணம் இன்றி வாழ்கின்றனர். (21.1.1997)34 நேபாளத்தில் குழந்தையிலேயே தெய்வத்துக்குக் காணிக்கையாக்கப்பட்ட பெண்கள் சிறுமியிலேயே அழகுமயப்படுத்தப்படுகின்றனர். இது இந்தியாவில் இந்துப் பண்பாட்டில் தேவதாசிகளை உருவாக்குவது போல் இங்கு அதற்காகவே பருவமடையும் முன் சிறுமி பயன்படுத்தப்படுகின்றாள். இப்பெண்கள் பருவமடைந்த பின் தூக்கி வீசப்படும் அதேநேரம் பகிரங்கமான விபச்சாரியாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றாள். பருவம் அடையும் வரையிலான வசதியான வாழ்க்கை. அதற்குப் பின்னால் பகிரங்கமான விபச்சாரி. இதுவே சாதாரண சாமத்தியச் (ப+ப்பெய்தும்) சடங்கிலும் பொதுப்பண்பாக உள்ளது.

சாமத்தியச் சடங்கின் பெயரால் ஆணாதிக்கம் பெண்களுக்குப் போடும் பொன் விலங்கு பலவிதத்தில் நியாயப்படுத்தப்படுகின்றது. இந்தச் சடங்கு பணம் வசூலிப்பதிலும், ஆணாதிக்கத்தை உறுதிப்படுத்துவதிலும் கவனமாக உள்ளது. ஒரு தனிநபர் திருமணத்திலோ, சாமத்தியச் சடங்கிலோ, பிறந்ததின கொண்டாட்டத்திலோ அல்லது இது போன்றவற்றிலோ பணம் வாங்குவதும், செய்வதும் சமூக நோக்கமல்ல. இதில் சுயநலன் மட்டுமே அரங்கேறுகின்றது. குறிப்பாகச் சாமத்தியச் சடங்கில் வாங்கும் போதும், செய்யும்போதும் அதன் அர்த்தம் பல உண்டு.


சாமத்தியச் சடங்கை நியாயப்படுத்தும் போது அது இல்லையென்றால் பெண்ணின் திருமணத்தைப் பார்க்க முடியாது போய்விடும் அல்லது ஒரு மகிழ்வான நிகழ்வை ஏன் செய்யக் கூடாது என்ற கேள்வி எழும்? எமது கலாச்சாரக் கட்டுப்பாடுகளைப் பிள்ளைக்கு உணர்த்துவதற்கும், சீரழிவில் இருந்து பாதுகாப்பதற்கும் என பலவற்றைக் கூறி சாமத்தியச் சடங்கை நியாயப்படுத்துகின்றனர்.


ஏன் இதைப் பெண் குழந்தைக்கு மட்டும் செய்கின்றனர்? இதை ஏன் ஆண் குழந்தைக்குச் செய்வதில்லை?. அங்கு இந்தக் காரணங்கள் இல்லையோ? இதில் இருந்து புரிகின்றது தமது ஆணாதிக்கத்தைத் தக்கவைக்கவும், ஆணாதிக்கத் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் தகர்கின்ற போது கட்டி எழுப்பவும்தான் ஆணாதிக்கச் சாமத்தியச் சடங்கைச் செய்கின்றனர்.


ஒரு பெண் குழந்தை சாமத்தியம் அடைகின்றாள் என்றால் என்ன? அக்குழந்தை இனவிருத்திக்குரிய கருமுட்டைகளை உற்பத்தி செய்து, அது இறக்கும் போது வெளியேற்றும் முதல் கழிவுக்குரிய நிகழ்வுதான் சாமத்தியமாகின்றது. இதைத் தான் கொண்டாட வேண்டும் என்கின்றனர், தமிழ்க் கலாச்சார ஆணாதிக்கவாதிகள்;. இந்தக் கழிவு வெளியேறுவதால் என்ன தமிழ்ப் பண்பாடு மற்றப் பெண்களிடம் இருந்து வேறுபட்டுக் காணப்படுகின்றது. இதை எப்படி பார்ப்பனியத் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் உதித்தெழுந்து பாதுகாக்கின்றது. இதில் ஆணாதிக்கத்தைத் தவிர எதுவுமே அல்ல.


மாறாகப் பெண் புதிய அடக்குமுறைக்கு உள்ளாகின்றாள்;. பெண் விளம்பரப்படுத்தப்படுகின்றாள். ஓர் அழகு பொம்மையாக (மாடலிங் ஆக) நிறுத்தப்படுகின்றாள். பெண்ணை விளம்பரம் செய்வதன் மூலம் பெற்றோர் தமது பணத்திமிரைக் காட்டுகின்றனர். மறு பக்கம் பணம் வாங்குவதும், வசூலிப்பதும், வாங்கியதைக் கொடுப்பதும் ஒரு வியாபாரம் தொடர்கின்றது. பணத்தைக் கேட்டோமா என்றபடி வாங்குவதை விமர்சிக்காது, நாசுக்காகப் பணம் வாங்கும் முறையைப் பாதுகாக்கின்றனர்.


இது ஏன் விபச்சாரமாக, சீரழிவாக உள்ளது. ஒரு விபச்சாரி தன் உடலைக் காட்ட, தொட, உறவு கொள்ள ஆணாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட விபச்சாரத் தொழிலால் பணம் சேகரிக்கின்றாள். இங்கு கூட இவ்விபச்சாரம் கூட பல ஆணாதிக்கச் சமூகக் காரணங்களால் ஏற்படுகின்றது. ஒரு பெண் குழந்தையைப் பெற்றோர், விபச்சாரி போல் இந்தப் பெண் உறவு கொள்ளவும், குழந்தை பெறவும் முடியும் என்ற விடயத்தை முன்நிறுத்தி, பகிரங்கமாக விளம்பரம் போட்டு, அதைப் பறைசாற்றி, அப்பெண்ணைப் பலர் முன் நிறுத்தி இலவசமாகவோ, பணத்துக்காகவோ முன் நிறுத்தும் போதே அது விபச்சாரத்தின் பகுதியாகி விடுகின்றது. இதன்பின் ஒர் ஆண் அப்பெண்ணைப் பார்க்கும் விதமே முற்றிலும் வேறுபட்டது. அதாவது அப்பெண்ணை ஆண்கள் பார்க்கும் பார்வை, பெண்ணின் உறுப்பில் ஏற்பட்ட மாற்றம் ஊடாக மட்டுமே (சாமத்தியச் சடங்கு) புதிதாக அடையாளம் காண்கின்றனர்.


நியாயப்படுத்தும் வாதங்கள் கேவலமானது. ஏன் இதை ஆண் பிள்ளைக்குச் செய்து மகிழலாமே! அவனுக்கு ஆண்மை விழிக்கிற நாளாகப் (விந்து வெளிவரும் நாளாகப்) பார்த்து கொண்டாடலாமே! ஏன் பெண்ணின் சட்டைக்குள் புகுந்துப் பெண் உறுப்புக்குள் புகுந்து ஏதாவது புதிய கழிவு வருகிறதா? எனத் தேடி அலைந்து கொண்டாடுகின்றார்கள். அந்தக் குழந்தையின் சுய அபிப்பிராயத்தை எத்தனை பெற்றோர் கேட்டு இருப்பர்? அந்தப் பிஞ்சுகள் எப்படி இதை எதிர் கொள்கின்றன? அக்குழந்தையின் உளவியல் பாதிப்பு என்ன? அக்குழந்தை தன்னோடு பழகிய ஆண் - பெண் குழந்தைகளிடம் மற்றும் பெரியோரிடத்தில்; இதைப் எப்படி எதிர் கொள்வாள்? எப்படி சக ஆண் குழந்தைகள் இதைப் பார்க்கும்? என எத்தனை பெற்றோர் சிந்திக்கின்றனர். பெற்றோர் இது பற்றி அறிவியலாக எதைத் தெரிந்து வைத்துள்ளனர்? எதுவுமில்லை. அறியாமையும், பிற்போக்கு சிந்தனையின் வெளிப்பாட்டால் பிறக்கும் ஆணாதிக்கமும், சுயகௌரவமும் மட்டுமே அறிந்து வைத்து உள்ளனர். சுயநலனுக்கு வெளியில் எந்த மண்ணாங்கட்டியும் கிடையாது. இதை மூடிமறைக்க கலாச்சாரம் தேவையாகின்றது.


பெண்ணின் திருமணத்தைப் பார்த்தல் என்ற வாதத்திற்குப் பின், ஆண் குழந்தையின் திருமணத்தைப் பற்றி பேசவில்லை. பெண்ணின் திருமணம் என்றால் உங்கள் திருமணமா? பெண்ணும் சுயஅறிவுள்ள மனிதன்தானே? அல்லது மிருகமா? மாட்டுக்கு நாணம் (லாடம்) போட்டு இழுத்துச் சென்று தேவையானவற்றுடன் உறவு கொள்ள வைப்பது போல், பெண்ணையும் செய்ய தமிழ்க் கலாச்சாரத்தைக் கூப்பிடுகிறீர்கள். தமிழ்க் கலாச்சாரம் என்றால் ஆணாதிக்கம் மட்டும்தானோ? ஒரு பெண் சுயமாக முடிவெடுக்க, சுதந்திரமாக வாழவிட தமிழ்க் கலாச்சாரம் அனுமதிக்காதோ? அதன் வேலிகள் உங்கள் பிற்போக்கு மூடத்தனத்துடன் கூடிய ஆணாதிக்க அறிவிலித்தனம்தானோ?


கலாச்சாரத்தின் சீரழிவைத் தடுக்க இது இந்தப் பிற்போக்குப் பண்பாடு தேவையாம். எப்படி என்று புரியவில்லை? கலாச்சாரச் சீரழிவு என எதைச் சொல்லுகின்றார்கள்? ஒரு பெண் சுயமாகத் தன் வாழ்க்கையை முடிவெடுப்பதைத்தானே சீரழிவு என்கின்றார்கள். அதாவது தமிழ்ப் பெண்ணின் முடியிலே பிடித்து இழுத்து வந்து செம்மறி ஆடுபோல கழுத்தை நீட்டுவதற்கும், தலையாட்டுவதுக்கும், காட்டியவன் உடன் படுக்கவும், பிள்ளை பெறவும் தான் சீரழிவற்ற கலாச்சாரம் பற்றி பிதற்றுகின்றனர். இதைப் பாதுகாக்க பெண்ணின் சட்டைக்குள்ளே கழிவு வருகிறதா? என விழிப்போடு இருந்து தேடுவது போல் தேடிப் பார்த்து கொண்டாடினால் சரியாகிவிடும் என்று சமூகத்திற்குச் சீரழிவைத் தடுக்க அறிவு விளக்கம் கொடுக்கின்றனர்.


தமிழ்க் கலாச்சார விளக்கம் போல் ஐரோப்பியப் பெண்கள் விபச்சாரிகளா? இல்லை அவர்களும் மனிதர்களே. அவர்களுக்கும் பண்பாடு, கலாச்சாரம் என்று உண்டு. உயர்ந்த பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கொச்சையாகக் கூறி எம் பெண்களையும், குழந்தைகளையும் வதைக்கும் ஆணாதிக்கத்தை நிறுத்துவது அவசியம் ஆகும். எம் கலாச்சாரத்திலும், அவர்கள் கலாச்சாரத்திலும் நல்லது, கெட்டது என பல உண்டு. நாம் நல்லவைகளை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஆண், பெண்ணைச் சமமாக மதிக்கப் பழக வேண்டும். இது எம் ஆணாதிக்கக் கலாச்சாரத்தில்; கிடையவே கிடையாது. ஆண், பெண் குழந்தைக்கு இடையில் உள்ள வேறுபாடு இன விருத்திக்கான உறுப்பு மட்டுமே. இது பெண்ணை அடிமைப்படுத்தும் விலங்கு அல்ல. அடிமை விலங்கை ஏந்திய ஆணாதிக்கம் பெண்ணைச் சிறை வைக்க வைக்கும் வாதங்கள் கேவலமானது. சொந்தக் குழந்தைகளே தம் பெற்றோருக்கு எதிராகச் சீரழிவு மற்றும் வக்கிரக் கலாச்சாரத்தை மறுப்பதும், போராடுவதும் அவர்கள் உரிமையாகும். இதை இந்த ஆணாதிக்கக் கலாச்சாரக் காவலர்களால் தடுத்து நிறுத்தமுடியாது.


சாமத்தியச் சடங்கை இன்றைய திரைப்படம் பாதுகாக்கும் வடிவமாகின்றது. ஆபாச கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிதையும், சாமத்தியச் சடங்கும் ஆபாசமாக இருப்பதால் ஒத்தும் போகின்றது. அதைச் ''சீவலப்பேரி பாண்டி"; என்ற திரைப்படப் பாடலில் இருந்து பார்ப்போம்


ஆ: ''ஏய்.. மசாலா அரைக்கிற மைனா-
ஓம் மத்தளம் என்ன விலை
மாராப்பு வழுக்கிற மயிலே- ஓம்
மல்லியப்பூ என்ன விலை
நீ பொறந்த தேதியில் அடியே எனக்குப்
புத்தி மாறிப்போச்சு!
நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்கு பாதித்
தூக்கம் தொலஞ்சி போச்சு!
ஆமா தூக்கம் தொலஞ்சி போச்சு!"


— என்று ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் ''சமைஞ்ச" தேதி என்பதன் ஊடாகச் சாமத்தியப்பட்ட நாளையும், அதை ஒட்டி எழும் ஆணாதிக்க உணர்வுகளையும் தனது வக்கிர வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார். இங்கு சாமத்தியத்தைப் பறைசாற்றித் தமிழ்ப் பிற்போக்குக் கலாச்சார மானம் காக்க கொண்டாடுவதன் மூலம் எத்தனை இளைஞர்களின் புத்தியையும், தூக்கத்தையும் ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்து போல் இழந்து, பெண்ணின் மாராப்பு வழுக்கி விழ ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்து போல் கனவு கண்டு பெண்களை ஊடறுத்து கற்பழிக்கின்றனர் என்பதற்குச் சாட்சிகள் தேவையில்லை.


ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆபாச எழுத்துக்களை மாதிரிக்கு இன்னும் கொஞ்சம் பார்ப்போம். ''கிழக்குச் சீமையிலே" என்ற படத்தில்,


ஆ: ''எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி
எக்கச்சக்கம் ஆகிப்போச்சு கணக்கு
பள்ளிக்கூடம் போகையிலே பள்ளப்பட்டி ஓடையிலே
கோக்குமாக்கு ஆகிப்போச்சி எனக்கு
இத குத்துமுன்னு சொன்னா அவன் கிறுக்கு"


— என்கிறானே வைப்பாட்டி கவிஞர் வைரமுத்து. மூத்தத் தமிழ்க்குடியின் கலாச்சாரத்துக்கு வழிகாட்டுகிறது. ஆண்களே வைப்பாட்டிகளை உருவாக்குங்கள். பெண்களே வைப்பாட்டியாக இருங்கள் என்று வழிகாட்டுகின்றது.


அடுத்து ''ஜெய்ஹிந்த்" என்ற தே(க)சப் பக்தி படத்திலுள்ள பாடல் வரிகளைப் பார்ப்போம்.


ஆண்: ''பார்வைக்கு ஏத்த இடம்
பாவையே எந்த இடம்?
பெண்: எந்த இடம் சூரியன் பார்க்கலையோ
அன்பரே அந்த இடம்"


— இங்கு தான் சாமத்தியச் சடங்கை ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்து வழியில் புகுந்து தேடி நியாயப்படுத்துகின்றனர். வாழ்க தமிழ்ப் பண்பாட்டு ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்து. அடுத்து பல படங்களின் பாடல்களிலுள்ள ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளைக் கீழே காணலாம்.


''இடுப்பு அடிக்கடி துடிக்குது
றவுக்க எதுக்கடி வெடிக்குது"


— கேப்டன்


''மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா
மார்க்கெட்டு போகாத குண்டு மாங்கா"
— பிரதாப்
''சோளிக்குள் என்ன இருக்கு?
மாராப்பில் என்ன?"


— இந்தி மூலம்: கல்நாயக்
தமிழில்: மனசு ரெண்டும் புதுசு
''பாவாடை காற்றில் பறந்தால் நீ
என்ன செய்வாய்?
பல பேரின் கண்கள் முறைக்கும்
வேறேன்ன செய்வாய்?
பாவாடை காற்றில் பறந்தால்
பல பேரின் கண்கள் விழுந்தால்
பாவாடை கொண்டு
முகத்தை மூடுவேன்"


— என்ற வரிகள் சாமத்தியச் சடங்கு மூலம் பெண் மீது வக்கிரப் பார்வை விழுந்தால், தமிழ்ப்; பண்பாடு, கலாச்சாரத்தால் முகத்தை மூடுங்கள் ஆபாசக் கவிப்பேரரசு வைரமுத்து பொன் மொழிப்படி. இதைத்தான் மூத்தத் தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டாளர்கள் செய்யமுடிகின்றது. ஆபாசம் என்பதற்கு இந்த எழுத்துக்கள் தான் சாட்சி.


சாமத்தியச் சடங்கை ஆணாதிக்கம் எனச் சொல்லும் போது, இல்லை அய்யோ இல்லை அது ஆணாதிக்கம் இல்லை என்று சொல்லியபடி ஆணாதிக்கத்துக்கு வக்காளத்து வாங்குவதும் ஆபாசம்தான்.


இந்த ஆணாதிக்கத்தை எப்படி, எங்கே, எதற்குள் தேடிச் செய்கின்றனர் என கொஞ்சம் விலாவாரியாகப் பேசி, எழுதி வெளிக் கொண்டு வந்தாலே அதையும் ஆபாசம்; என கூறி, மூடிவிட முயல்கின்றனர்.


ஐயா! உங்கள் பெண் குழந்தைகள் அல்லது அக்காவிற்கு அல்லது தங்கச்சிக்கு என்ன நடந்தது எனக் கேட்டால் தமிழ்க் கலாச்சாரச் செம்மல்களே என்ன கூறுவீர்கள்? நீங்கள் வாயை மூடிக் கொண்டிரு என்று கூறுவீர்களா? அல்லது உனக்குத் தெரியத் தேவை இல்லை என்று கூறி அதட்டுவீர்களா? பாடசாலையில் அல்லது புலம்பெயர் நாடுகளில் வாழும் மற்ற இனத்தவர் கேட்டால் என்ன சொல்வீர்கள்? விளக்குங்கள் கொஞ்சம் விலாவாரியாக.


தரக்குறைவு பற்றி ஒப்பாரி வைத்தபடி ஆபாசத்திலே உழலுபவர்கள் யார் என்றால் எழுதுபவர்கள்தான். இவர்கள் வீடியோவிலும் தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் பார்க்கும் ஆபாசக் (தமிழ் உட்பட) காட்சிகள் வீட்டிலும் போகும் இடம் எல்லாம் கேட்கும் திரைப்படப் பாடல்கள், பார்க்கும் வண்ணப்பட செய்திப் பத்திரிக்கைகள் என எங்கும் ஆபாசமும், தரக்குறைவு தான் இந்த மாதிரி எழுதும் தமிழனின் ஆதாரப் பண்பாடு. மாதிரிக்கு வாலியின் பாடல் வரிகளைச் சாமுண்டி என்ற படத்திலிருந்துப் பார்ப்போம்.


பெண்: ''கதவச் சாத்து கதவச் சாத்து மாமா
நான் கன்னி கழிய வேணுமையா ஆமா
கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய
நீ கட்ட வேணும்"


இது போன்ற பாட்டுகள், பாடல் வரிகள், காட்சிகள், செய்திப் படங்கள் தான் தமிழனின் பண்பாடாகி, வெற்றி பெற்ற நிலையில் தான,; சந்தையில் இதன் மவுசு அதிகமாகின்றது. இதன் பண்பாட்டால்தான் சாமத்தியச் சடங்கும் நியாயப்படுத்தப்படுகின்றது.