Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் பெண்களின் கற்புரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்கக் "கற்பு" என்ற அடித்தளத்தைத் தகர்ப்பது எப்படி?

பெண்களின் கற்புரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தில், உருவகமான ஆணாதிக்கக் "கற்பு" என்ற அடித்தளத்தைத் தகர்ப்பது எப்படி?

  • PDF

book _6.jpg'கற்பு" என்ற சொல்லைக் கைவிடாமல் பாவிப்பவர்கள் என ''கேள்வி" கடந்து கோட்பாடு அற்று விவாதிக்கின்றனர். இங்கு ''கேள்வி"யல்ல முடிவாகக் கூறும் போதுதான் இதன் அரசியல் வெட்ட வெளிச்சமாகப் புரிகின்றது. ''கற்பு" என்பதைக் கருத்துமுதல்வாதமாகப் புரிகின்ற போது கருத்தால் மறுப்பது நிகழ்கின்றது. நேரடியாகப் பொருள் அல்லாத விளைவுகளில் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் தொடர்பான விவாதத்தை இது கோருகின்றது. தேசியம், வர்க்கப்போராட்டம் போன்றன பொருள்முதல்வாதம் சார்ந்ததா? அல்லது கருத்துமுதல்வாதம் சார்ந்ததா? என்ற கேள்வி எழுகின்றது. சமுதாயத்தில் உடன்பாடற்றவைகளைக் கருத்துமுதல்வாதமாகக் காட்டி விளக்குவது பொருள்முதல்வாதத்தை மறுப்பதாகும்.


மக்களிடம் அன்னியப்பட்ட புத்திஜீவிகள், மக்களுக்கு அன்னியமான கோட்பாடு கொண்டோர் ''கற்பழிப்பு"க்கு எதிராகக் ''கற்பு" என்ற கோட்பாட்டை எதிர்த்து போராடுவதற்குப் பதில் மொழியில் ஒளித்து (என்னதான் சொல்லை மாற்றினாலும் ஆணாதிக்கச் சமூக அமைப்பில் அச்சொல்லுக்குரிய அர்த்தங்கள் மாறிவிடுவதில்லை. மாறுவதாயின் சமூக அமைப்பு மாறவேண்டும்.) விளையாடுகின்றனர். ''கற்பழிப்பில்" ஈடுபடும் ஒருவன் பெண்ணுக்குக் ''கற்பு"உரிமை உண்டு என்ற ஆணாதிக்க நிலையில் நின்று, அதை அழித்துச் சூறையாடும் போது, அதற்கு எதிரான ஆணாதிக்க நோக்கத்தை வெளிப்படுத்தும் குற்றத்தை (எப்போதும் சர்ச்சைக்கு உள்ளாவது கற்பழிப்பு குற்றத்துக்கு எதிராக எழுதும் போதே) வேறு எந்தச் சொல்லும் மாற்றீடு செய்யமுடியாது. இப்படி மாற்றீடுவது என்பது ஆணாதிக்க வெளிப்பாடான ''கற்பழிப்பின்" நோக்கத்தை அதன் வக்கிரத்தை மழுங்கடித்து, ''கற்பு" மீதானஆணாதிக்கப் பொருள் சார்ந்த செயல் தளத்தைத் ''தேசியம் கற்பிதம்" என்று கூறித் (இங்கு ''தேசியம்" முதலாளித்துவக் கோரிக்கை. ''கற்பு" இன்று ஆணின் கோரிக்கை. ஆனால் பாட்டாளி வர்க்கம் தேசியத்தின் ஜனநாயகக் கோரிக்கையை ஆதரிக்கின்றது. இது போல் பெண்ணின் ஜனநாயக உரிமையாகப் பெண் உருவாக்கிய ''கற்புரிமையை" ஆணாதிக்கத்திடம் இருந்து பாதுகாக்கப் பெண் போராட வேண்டியுள்ளது. அதாவது இங்கு கற்புரிமை என்பது ஆணுக்கு எதிரான ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணின் தற்பாதுகாப்பு வடிவமாக உள்ளது. இதைத்தான் எல்லா ஆணாதிக்கமும் சூறையாட விரும்புவதும் பெண்ணின் எதிர்ப்பும் ஆகும்.) தேசத்தை ஏகாதிபத்தியம் சூறையாடுவதை மூடிமறைப்பது போல், இன்று ஆண் உருவாக்கிய பெண்ணின் ''கற்பைப்" கற்பிதமாக்கி ஆணாதிக்கம் சூறையாடுவதைப் பூசி மெழுக விரும்புகின்றனர். அதாவது ஒரு பெண் தனது சொந்த உடல் மீதும், உணர்வு மீதும் பாதுகாக்கும் தனித்துவத்தை ஆணாதிக்கம் சூறையாடும் போது அது பெண்ணின் கற்புரிமையாகப் பெண் முன் உள்ளது. ஆதி சமூகங்களில் ஆண் - பெண் வரைமுறையற்ற புணர்ச்சியில் இருந்த போது பெண்தான் ஆணைத் தெரிவு செய்யும் தாய்வழிச் சமூகம் இருந்தது.


பின்னால் தனிச் சொத்துரிமையூடாக ஆண் சொத்துரிமையைப் பெற்று, சமூகம் மீது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தொடங்கிய போது, பெண்ணின் உரிமை படிப்படியாகப் பறிக்கப்பட்டு, பெண் மீது ஆணின் வரைமுறையற்ற சூறையாடல் சமூகத்தில் உருவானது. இந்த வளர்ச்சியில் பெண் தற்காப்பு நிலையெடுத்து குறித்த ஆணைச் சார்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டாள். இது பெண்ணின் கற்பாக இருந்தது. பெண் தான் விரும்பும் ஓர் ஆணுடன் மட்டும் உறவு கொள்ளும் எல்லைக்குள் இது இருந்தது. இந்தத் தற்காப்பைப் படிப்படியாகப் பெண்ணிடம் இருந்து ஓர் ஆண் தனது சலுகைக்குரிய, தனக்குரிய சொத்தாக மாற்றினான். பரஸ்பரம் இணைமணத்தில் ஆணைத் தெரிந்தெடுக்கும் தெரிவை, பெண் ஆணாதிக்கச் சூறையாடலுக்கு எதிராகத் தற்காப்பு நிலையில் பெற்றாள். இதன் தொடர்ச்சியில் ஆண் சார்ந்த தனிச்சொத்துரிமை பெண்ணைத் தனது சொத்துரிமையாக்கியது என்பது, வர்க்கப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான புதிய ஒடுக்குமுறையாகும். இந்த எல்லைக்குள் கூட கற்பு என்பது பெண்ணின் தற்காப்பு அரண்களைப் பிரதி செய்கின்றது. இன்று ஆணாதிக்கச் சமூகத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியை, ஒழுக்கத்தை மீளக் கோருவது ஆணாதிக்கமே ஒழிய பெண்ணியமல்ல. பெண் விளம்பரப் பதுமையாக்கப்பட்டு, அனைத்துத் துறையிலும் சூறையாட அலைவதை நாம் காணமுடியும். இங்கும் பெண் தொடர்ந்து தற்காப்பு நிலையெடுப்பதும், உலகமயமாதல் பெண்ணை மேலும் மேலும் நிர்வாணமாக்குவதும் கண்கூடு.


விபச்சாரத்தில் பெண் எதைக் காசுக்கு விற்கின்றாள்? உடலை மட்டுமல்ல...சொந்தக் கற்புரிமையை என்பது பல பெண்ணியல்வாதிகளுக்குப் புரிவதில்லை. ஆண் மட்டுமே இங்கு உடலை அனுபவிக்கின்றான். பெண் சொந்;தக் கற்புரிமையைத் தன்மானம் கடந்து விற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள். ஆணாதிக்கம் பெண்ணை உடல் சார்ந்து அணுகுவதால் ஆணாதிக்க மொழியில் தான் பெண் உடலை விற்கின்றாள் என்ற கருத்தமைவு புனையப்படுகின்றது.


இதைப் பற்றி ஏங்கெல்ஸ் என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். ''பொதுமகளிர் முறை நேரடியாகக் குழு மணத்திலிருந்து வந்ததாக, கற்புரிமையை வாங்குவதற்குச் செலுத்தும் காணிக்கை என்ற முறையில் பெண்கள் உடலுறவுக்குத் தம்மை ஒப்படைத்ததிலிருந்து வந்ததாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும். பணத்துக்காக உடலுறவுக்குத் தம்மை ஒப்படைத்ததிலிருந்து வந்ததாக அடையாளம் கண்டு கொள்ளமுடியும.; பணத்துக்காக உடலுறவுக்கு உடன்படுதல் முதலில் ஒரு மதச் சடங்காக இருந்தது. அந்தச் சடங்கு காதல் தெய்வத்தின் ஆலயத்தில் நடைபெற்றது."8 முதல் விபச்சாரம் பணத்தைக் கொடுத்து தொடங்கிய போது பெண்ணின் கற்புரிமையைக் கடவுளின் பெயரில் ஆணாதிக்கம் வாங்கிக் கொண்டது. பெண்ணின் சுதந்திரத்தை விலை பேசிய அந்த நிமிடமே, பெண்ணின் கற்புரிமையைப் பெண் உடல் உரிமையில் இருந்து இழந்து விடுகின்றாள். பெண் தனது தெரிவைவிட பணத்தைப் பெற்று இழப்பது உடல் உரிமையையல்ல கற்புரிமையையே என்பதே இங்கு அடிப்படையான உள்ளடக்கமாகும்.


உடல் என்பது மனிதனில் வெறும் உறுப்புகளின் பிம்பமல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனிலும் உடல் என்பது உள்ளார்ந்த தனித்துவமிக்க புற உலகைப் புரிந்து வெளிப்படுத்தும் தன்மைதான் மனிதனின் உள்ளடக்கமாக உருவாகின்றது. அதாவது உடல் எல்லா மனிதனுக்கும் பொதுவானதாக உறுப்புகளின் தொகுதியாக இருக்கும் அதே நேரம், வெளிப்படுத்தும் வடிவம்தான் வேறுபடுகின்றது. ஒரு விபச்சாரிக்கும், விபச்சாரி அல்லாத பெண்ணுக்கும் உள்ள வேறுபாடு உடலுரிமையை விற்பதில் அல்ல... கற்புரிமையை விற்பதில் தொடங்குகின்றது. இது பெண்ணின் நிலையில் ஆணாதிக்கம் விதிந்துரைக்கும் கற்பையல்ல, மாறாக அப்பெண்ணால் தீர்மானிக்க முடியாமல் சூறையாடப்படும் கற்புரிமையைத்தான். இதை அவள் விரும்பி அல்ல, சமூக நிலைமையால் அவளை மீறி இது செயல்படுகின்றது.


அ.மார்க்ஸ் தேசியத்தைக் கற்பிதம் என்கின்றார். தேசியவிடுதலைப் போராட்டம் தான் தேசத்தை உருவாக்குகின்றது என்றார். ஆனால் தேசம் முன்கூட்டியே இருப்பதை மறுத்து, அதில் இருந்தே போராட்டம் தொடங்குகின்றது என்பதை மறுப்பது அடிப்படையிலேயே கருத்துமுதல்வாதமாகும். இது இயங்கியலின் வரலாற்று வளர்ச்சி விதிகளை மறுக்கின்றது. பொருள் முன்கூட்டியே தோன்றுவதும், அதில் இருந்தே அடுத்த கட்டப் பாய்ச்சல் நிகழ்வதும்தான் இயங்கியல் ஒழுங்காகும். இதை மீறமுடியாது. இதை மறுத்து தேசியத்தைக் கற்பிதமாகக் கூறுவது, ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பை ஏற்றுக் கொள்வதில் இருந்து உதிக்கின்றது. பூ வரும் முன்பு விதை பெறமுடியாது. மக்கள் பேசும் முன் வசனம் மொழியில் வரமுடியாது. ஆனால் அது பினனால்; ஒழுங்கமைக்கப்படுகின்றது. அது முந்திய வடிவிலும், திரிந்த வடிவிலும் கூட மாற முடியும். பூ விதையாக மாறும்போது இயங்கியல் ஒழுங்கிலும், பூ பிய்த்தெறியும்போது திரிந்த வடிவிலும் மாறுகின்றது, மாற்றப்படுகின்றது. தேசிய விடுதலைப் போராட்டம் இருக்கும் தேசத்தில் இருந்து அரசை உருவாக்குகின்றது அல்லது திரிந்த வடிவில் தரகாகத் துரோகம் செய்வதில் முடிகின்றது. இதுபோல்தான் கற்புரிமை பற்றிய வாதங்களும்.


பெண் தனது பாலியல் நடத்தை மீதான சொந்தத் தெரிவைத் தெரிந்த போதே கற்புரிமை பொருள் வடிவம் பெறுகின்றது. ஆனால் அது ஆணாதிக்கத்தால் முதிர்ச்சி பெற்ற போது கற்புரிமையின்; அர்த்தம் திரிகின்றது. இதனால் பொருளில் திரிபடைந்து மாற்றம் காண்கின்றது. அதே நேரம் பழையது தொடர்ந்து இருப்பதை மறுக்கின்ற போது, பெண்ணின் சுதந்திரத் தெரிவை மறுப்பதை அடிப்படையாக்குகின்றது. கற்புரிமை மொழிக்கு முன்னமே எதார்த்தத்தில் இருக்கின்றது. அதன் பின்புதான் மொழி வருகின்றது. இந்த மொழி திரிபடைவது பின்னால் நிகழ்கின்றது. ஆனால் பலர் இயங்கியலின் உட்கூறைக் கண்டு கொள்ள முடியாத இயங்கியல் மறுப்பாளராக இருக்கின்றனர்.


ஏங்கெல்ஸ் இயங்கியல் வளர்ச்சியை மறுப்பது பற்றி கூறிய கருத்துகள் இந்த இடத்தில் சிறப்பாகப் பொருந்துகின்றது. ''வசனம் என்ற சொல் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே அவர்கள் வசனம் பேசியது போன்று."23 எனக் குறிப்பிட்ட போதே வசனம் முன் கூட்டியே மக்களால் பேசப்பட்டது. வசனம் மொழியில் வந்த பின்பு, அதன் அர்த்தம் மாறிவிடுவதில்லை. அது எந்த மொழியில் இருந்தாலும் இது பொருந்தும். உண்மையில் இந்தச் சொல் என்பது கற்பனையானவையல்ல. சொல் என்பது பொருளைக் குறித்து அடையாளப்படுத்துவதுதான்;. பொருளை அடையாளப்படுத்துவது என்பது மக்களிடையே இருந்த தூரம், காலம், சூழல்... போன்ற இயற்கையின் விளைவாலும், செயற்கையான உழைப்பின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியாலும் ஒரு பொருளைக் குறித்து அடையாளப்படுத்துதல், மொழியின் உச்சரிப்பில் வேறுபட்டாலும் அதன் அடையாளப்படுத்துதல் ஒன்றையே குறிக்கின்றது. இந்த ஒன்றைக் குறித்து அடையாளப்படுத்தலை வந்தடைந்த பாதை வேறுபட்டு, அதன் விரிவான அர்த்தம் மற்றும் பயன்பாட்டின் தன்மை வேறுபாடுகள் இருந்த போதும் பொருள் குறித்த அடையாளப்படுத்துதல் பொது சாராம்சத்தில் ஒன்றையே குறிக்கின்றது. இது உலகில் காணப்படும் பல்வேறு ஒரே பொருளுக்கும் பொருந்தும்.


உதாரணமாக நெல் இனத்தை எடுத்தால் அதில் பலவகையானவை, பலதன்மையுடன் இருந்த போதும் அது ஒன்றைக் குறித்து நெல்லாகின்றது. இதன் பொது சாராம்சம் இதைத் தெளிவாக நிர்ணயிக்கின்றது. ஏங்கெல்ஸ் இந்த வளர்ச்சி விதியை விளக்கும் போது ''எனவே நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்பது யாது? மிகவும் பொதுவான, இந்தக் காரணத்தால் மிகவும் பரந்த செயல்விளைவுடைய மற்றும் முக்கியமான இயற்கை, வரலாறு, சிந்தனை ஆகியவற்றினுடைய வளர்ச்சியின் விதியாகும். இயங்கியல் என்பது இயற்கை, மனிதச் சமுதாயம், சிந்தனை ஆகியவற்றினுடைய இயக்கம் மற்றும் வளர்ச்சியின் பொது விதிகளைப் பற்றிய விஞ்ஞானமே தவிர வேறு எதுவுமன்று..... இயங்கியல் விதிகளை மூன்றாகச் சுருக்கலாம்.


1. அளவுநிலை பண்புநிலையாகவும், பண்புநிலை அளவுநிலையாகவும் மாறுபாடு அடைவது என்னும் விதி.


2. எதிர்நிலைகள் பரஸ்பரம் ஊடுருவல் என்னும் விதி.


3. நிலைமறுப்பு நிலைமறுக்கப்படல் என்னும் விதி"23


இவ்விதிகளை மறுத்தே சொல்லின் பொது சாராம்சத்தைக் கொச்சைப்படுத்த முடிகின்றது.பல சிக்கலான செயல்களின் தொகுப்பில் தான் பொருள் உண்டாகின்றது, நிலைக்கின்றது, நீடிக்கின்றது, மாறுகின்றது, சிதைகின்றது, மீளவும் உருவாகின்றது. ஒரு பொருள் ஒரு இயக்கம் என அனைத்தும் சிக்கலான பல இயக்கங்களின் விளைவுகளாகத் தான் நடந்தன, நடந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்ந்து மாறிக் கொண்டு வருகின்றது. இது பொருளின் பொதுத் தன்மையைக் குறித்த அக்கணத்துக்கே உரிய வகையில் எந்த நிலையிலும் (அது வினாடியாக இருந்தாலும் நீடித்த பல கோடி வருடங்கள் ஆனாலும்) கொடுக்கின்றது. வளிமண்டலத்தை எடுத்தால் ஆக்ஸிஜன்(ழு2)இ நைட்ரஜன்(N2), கார்பன்-டை-ஆக்ஸைடு(ஊழு2) போன்ற வாயுக்கள் ஊடான ஒரு பொது உண்மையை, அது சார்ந்த சாராம்சத்தைப் பூமி எங்கும் கொண்டு உள்ளது. சுரண்டலை எடுத்தால் உழைப்பைச் சுரண்டும் பொது சாராம்ச உண்மை உலகெங்கும் பொதுவாக உள்ளது. பெண்ணை எடுத்தால் ஆணாதிக்கச் சுரண்டல் சாராம்ச உண்மை உலகளவில் பொதுவாக உள்ளது. சாதியை எடுத்தால் சாதி ஒடுக்குமுறையுடன் கூடிய சுரண்டல், சாதி உள்ள நாடுகளில் பொதுவாக உள்ளது. இது எல்லா இயக்கத்திற்கும், பொருளிற்கும், சிந்தனைக்கும் பொதுவான உண்மையானதாக உள்ளது. இது மாற்றத்துடன் புதிய சாராம்சத்தைத் தொடர்ந்து பிரதிபலிக்கின்றது. தொடர்ந்து மாற்றத்துக்கும் உள்ளாகின்றது.


மாற்றம் என்பது வெற்றிடத்தில் நிகழமுடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களுக்கிடையில்தான் மாற்றம் நிகழமுடியும். கற்பு என்ற சொல் வெற்றிடத்தில் இருந்து உருவாகியதல்ல. அது போல் மாற்றமும் வெற்றிடத்தில் நிகழமுடியாது. நிகழமுடியும் எனின் அது கருத்துமுதல்வாதமாகும்;. கற்பு என்பது கற்பிதமல்ல. அப்படி இருக்கவும் முடியாது. சொல்லுக்குரிய அர்த்தத்தில் கற்பு பற்றிய எதிர்க் கண்ணோட்டத்தில் கற்பிதம் எனக் கூறுவது அல்லது அதை மறுத்து எழுதுவது இலகுவானதாகும், இது புரட்சிகர வாய் வீச்சாகின்றது. கற்புக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. வரலாற்று ரீதியாக இயற்கையில் மாறிவந்த மனிதச் சமூகச் சாரம் கற்பைப் பற்றிய வரையறைக்கு, மாறுபட்ட வரலாற்று வளர்ச்சியுடன் விளக்கத்தைக் கொண்டிருந்தது. இது பொருளாதார அமைப்பில் ஏற்பட்ட வரலாற்று வளர்ச்சி விதியுடன் ஒன்றி ஆளுமை பெற்றது. மற்றது உள்ள+ராக நீடித்ததுடன் முரண்பட்டுப் போராடியது. கற்பு பற்றிய ஆணாதிக்க ஒழுக்கம் ஏகாதிபத்தியத்தால் மறுப்புக்குள்ளாகும் போது, அங்கு கற்புரிமை பற்றிய பெண்ணின் நியாயமான உரிமை அரங்குக்கு வருகின்றது.


''கற்பு", ''கற்பழிப்பு" என்பவை எல்லாம் மொழியியல் ரீதியில் திரிக்கப்பட்டவை. தமிழ் லெக்சிக்கன் கற்பு என்பதைக் ''களவுக் கூட்டத்துக்குப் பின் தலைவன் தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம்"9 என்று வரையறுத்துள்ளது. கற்பு பற்றித் தொல்காப்பியர் தொல்-பொருள்- 142-இல், கூறுவதைப் பார்ப்போம்.


''கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைத்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"9


அன்று திருமணத்துக்கு முந்திய களவுக் காதல் அனுமதிக்கப்பட்டிருந்த எல்லையில், கற்புபானது திருமணத்துக்குப் பின் ஆண் பெண் விசுவாசத்திற்குக் கோரப்பட்டது. அதாவது வாரிசுரிமை ஒருதார மணத்தை வரையறுத்த போது, திருமணத்துக்கு முந்திய உறவு நிபந்தனையாவதைத் தடுக்கின்றது. ஏனெனின் ஆண் தனது குழந்தை என்பதை உறுதி செய்யும் திருமணத்தினூடாகக் கோரிய கற்பு மட்டுமே நிபந்தனையாக இருந்தது. ஆனால் திருமணத்துக்கு முந்திய கன்னியில் உடலுறவு மூலம் கருத்தரிக்கின்ற போதும் அல்லது திருமணம் முடிந்தவுடன் முந்திய உறவால் குழந்தை உருவாகின்ற நிலைமையில் இருக்கும் போதும், அப்பெண் பெறும் குழந்தை மீதான வாரிசுரிமையை ஆண் ஏற்க மறுக்கின்ற போதும் அல்லது திருமணமே நடக்காத போதும் ~கற்பு| என்பது கன்னியிலும் பாதுகாக்கப்படுவதை நிபந்தனையாகப் படிப்படியாகக் கோருகின்றது. கன்னியில் உடலுறவுச் சுதந்திரம் இருந்ததையும், இது மாறிவந்த சமுதாயத்தையும் துல்லியமாகச் சங்க இலக்கியம் கோடு இட்டுக் காட்டுகின்றது. மேலும் தொல்காப்பியர் தொல்-பொருள்-99-இல், 'அச்சமும் நாணும் மடனும் முத்துற நிச்சமும் பெண்பாற்குரிய என்ப"9 என்கின்ற போது பெண்ணின் அடிமைத்தனத்தை உறுதி செய்கின்றார். ஆணுக்கு விதிவிலக்காக்கியதன் மூலம் ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமையை உறுதி செய்கின்றார்.


மேலும் அவர் தொல்-பொருள்-111-இல், ''நாணம் உயிரினும் சிறந்தது"9 என்றும், ''நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தது."9 என்றும் கூறி, கற்பின் தன்மையை மூன்று வகையாகப் பிரிக்கின்றார். ''மூதானந்தம் (கணவன் இறந்ததை அறிந்தவுடன் இறக்கும் பெண்), புறக்காடு (உடன் கட்டை ஏறும் பெண்), தாபநிலை (நோன்பை வழுவாது பேணும் பெண்)"9 என வகுத்துள்ளார்.


புறம்-196-இல், ''சாந்தம், அமைதி, மென்சொல், பேச்சில் துடுக்கை தவிர்த்தல் போன்ற பண்புகள் கற்புடைய பெண்ணின் குணங்களாக அமைந்தன"9 என்று மாறிவந்த சமுதாய விளக்கம் போதித்தது. வாரிசுரிமையில் ஆணின் இரத்த வழியில் உறுதி செய்ய பெண்ணைக் கட்டுப்படுத்த, அடக்கி ஆளவேண்;டிய வடிவில் இந்த நிபந்தனைகள் கற்பு வடிவில் முன்வைக்கப்பட்டுக் கோரப்படுகின்றது. இதில் இருந்தே மேலும் உடல் சார்ந்து கோருவதுடன், மற்றவை பெண்ணின் பொதுவான இயல்பாக நடைமுறைக்கு வந்துவிடுகின்றது. புறம்-198-இல், ''கடவுள் சான்ற கற்பு"9 என்று மேலும் விளக்கம் கொடுத்த போது கற்பு கோலோச்சிப் பெண்ணை அடக்கி ஆள்வதைக் காட்டுகின்றது.


ஆணாதிக்கம் பெண்ணின் கற்புரிமையை உள்வாங்கி பெண் மீது திரித்து, திணித்த போது, இதன் சமூகப் பெறுமானம் பெண்ணை இழிவு படுத்தியது. இது போல் பறை, பறையன் என்ற சொல்லையும் எடுக்க முடியும். பறை என்ற இசைக் கருவி பற்றிய கருத்தைத் திரித்து, அந்த இசையையும், அந்தக் கருவியையும் சாதிப் பண்பாட்டுப் பொருளாக்கப்பட்டுப் பறை தீட்டுப்படுத்தப்பட்டது. இங்கு இவ்விசைக் கருவி இழிவுக்குள்ளானது. பறை, பறையன் சாதி ரீதியாக இழிவுக்குள்ளாகும் போது அவ்விசைக்கருவியினை நாம் மறுக்கமுடியுமா? பார்ப்பனியம் அதைத்தான் கோருகின்றது. ஆனால் இசைக் கருவியான பறையைப் பாதுகாக்கவும், அதன் மீதான சாதிக் கறையை அகற்றவும் போராட வேண்டியுள்ளது. பறை மீது கறைபடிந்திருக்கும் சமூக மதிப்பீடுகளை மீளவும் புரட்சிய+டாகப் புரட்டி எடுப்பதன் மூலம் அதன் இயல்பான, இயற்கையான நிலைக்கு மாற்றீடு செய்யப்படவேண்டும்;. இது போல் நடைமுறை சார்ந்து பல சொற்கள் திரிபடைந்துள்ளது.


''கற்பு'', ''கற்பழிப்பு" இது போன்றவையே, தனிமனிதன் முதல் மக்கள் மீதான அத்துமீறல்களின் போது அதை எதிர்த்த போராட்டத்தில் கற்புரிமை என்ற பதம் அடிப்படையான போராட்டத்தைக் குறித்து நின்றது. சமூகத்தின் வாழ்வு பண்பாட்டைப் பாதுகாக்கும் இந்தக் கற்புரிமை என்ற வரைமுறை எல்லாக் காலத்திலும் அடிப்படையானதாக இருந்தது. ஒரு தேசம் கற்பழிக்கப்பட்டது என்று குறிப்பிடும் போது அதன் அர்த்தம் ஒடுக்கு முறைக்கு எதிரான குரலாக ஓங்கி ஒழிக்கின்றது. தனிச் சொத்துரிமை சமுதாய விழுமியங்களையும், தனிமனித உரிமைகளையும் பறித்த போது, பறிகொடுத்தவன் தனது உரிமையைக் கற்புரிமையாக அடையாளம் காண்பதும், போராடுவதும் வழக்கில் வந்தது. மொழியியல் ரீதியில் இதன் அர்த்தம் ஒடுக்கப்பட்டவனின் குரலாகவும், சொந்த உரிமைக்கு ஆதரவான குரலாகவும் பரிணாமித்தது.


சொத்துரிமைச் சமூகம் சொத்துக் குவிப்பதைப் பொதுப் பண்பாடாக, உரிமையாக ஆக்கிய போது இந்தச் சொல்லின் இயற்கையான அர்த்தத்தைத் தனது சொத்துரிமை மீதான ''கற்பாக"க் கண்டது. பெண்ணை அடிமையாக்கித் தனது சொத்துரிமையாக்கிய சுரண்டும் வர்க்கம், பெண்ணின் உரிமை மீது கற்பை நிலை நாட்டிக் கொண்டனர். பெண் மீதான ஆணின் உரிமை பெண்ணின் மீதான வேலியாகக் ''கற்பு" சிறையிட்டது. சொத்துரிமையை வாரிசாக்கும் ஒரே பாதுகாப்பு வேலி இந்தக் கற்புதான் என்பதை ஆணாதிக்கம் கண்டது.


ஆனால் கற்புரிமை தனிச் சொத்துரிமை வளர்ச்சியூடாகப் பெண் மீதான ஆணின் பொருளாதார மேலாதிக்கப் பாலியல் ஆதிக்க நாட்டத்தைத் தடுக்க, பெண்ணின் தற்காப்பின் உரிமையாக இருந்தது. பெண் தான் தெரிவு செய்யும் ஆணுடன் உறவு கொள்ளும் உரிமையைப் பாதுகாக்க, பெண்ணின் உரிமை கற்புரிமையாகப் பெண்ணுக்கு இருந்தது. ஒருதார மணத்தை முதலில் தனது தற்காப்பில் பெண் தெரிவு செய்த போது, ஒருதாரமணம் இன்று இருப்பதில் இருந்து வேறுபட்டு, அன்று ஒருதார மணம் பெண்ணின் இணை மணமாகவே இருந்தது. ஆனால் தனிச் சொத்துரிமை வளர்ச்சி பெற்று வளர்ந்த போது பெண்ணின் தற்காப்பு ஒருதாரமணத் தெரிவை, ஆணாதிக்கம் தனது பொருளாதார ஆதிக்கத்துடன் குறித்த ஆணுக்கு மட்டுமானதாகத் திரித்து, இறுக்கிய போது கற்புரிமையும் அதற்குள் சிக்கிக் கொண்டது.


ஏங்கெல்ஸ் ஆய்வுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க முக்கியமான விடயத்தைப் பார்ப்போம்.. ''பொதுமகளிர் முறையிலிருந்து ஒருதார மணத்துக்கு மாற்றமடைந்த காலம் நெடுகிலும் அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர்கள் பெண்களே என்று பாஹாஃபென் கூறுவது மீண்டும் முற்றிலும் சரியானதே. பொருளாதார நிலைமைகளில் வளர்ச்சியின் விளைவாக, அதாவது பழைய பொதுவுடைமை முறை பலவீனமடைந்து மக்கள்தொகையின் அடர்த்தி அதிகரித்ததன் விளைவாகப் பழைய சம்பிரதாயப் பாலியல் உறவுகள் தமது வெகுளித்தனமான, பூர்வீகமான காட்டுத் தன்மையை இழந்து வர வர அந்த உறவுகள் மேன்மேலும் தரக்குறைவாக, ஒடுக்குபவையாகப் பெண்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அவர்கள் கற்புரிமைக்கு, விடுதலை என்ற முறையில் குறிப்பிட்ட ஒரு நபரைத் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் திருமணம் செய்து கொள்வதில் வேட்கை கொண்டிருந்திருக்க வேண்டும். இந்த முன்னேற்றம் ஆண்களிடமிருந்து தோன்றியிருக்க முடியாது. அவர்கள் நடைமுறைக் குழுமணத்தின் இன்பங்களைக் கைவிடுவதற்கு ஒருபோதும்-இன்றைய நாள் வரையிலும் கூட- கனவு கூடக் கண்டதில்லை என்ற காரணமே இதற்குப் போதும். பெண்கள் முயன்று இணை மண முறை நோக்கி மாற்றம் கண்ட பிறகுதான் ஆண்கள் கண்டிப்பான ஒருதார மணத்தைப் (அது பெண்களுக்கு மட்டுமே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை) புகுத்த முடிந்தது."8 ஏங்கெல்ஸ்சின் இந்த ஆய்வுகளை இன்று பலர் மறுக்கின்றனர்.


அதுவும் ஏகாதிபத்தியப் பெண்ணியவாதிகளும், அராஜகவாதிகளும் இதை மறுப்பதில் மிகுந்த அக்கறையாக இருக்கின்றனர். ஒருதார மணத்தை ஏன் பெண் தெரிவு செய்தாள்? என்ற அடிப்படையான காரணத்தை மறுப்பதும், அதே நேரம் கற்புரிமையை, அதாவது பெண்ணின் சுதந்திரமான செயல்பாட்டை மறுத்துச் சூறையாடுவதை மூடிமறைப்பதும், இன்றைய பெண்ணியத்தின் ஆணாதிக்கமாக உள்ளது. கட்டற்ற விபச்சாரத்தை அதாவது ஆணைப் போல் ஈடுபடும் உரிமையைப் பெண்ணியமாகக் காண்போர் ஏங்கெல்ஸ்சின் குறித்த ஆய்வுகளை மூடி மறைத்தபடி விபச்சாரத்தை சமூகமயமாக்கத் துடிதுடிக்கின்றனர்.


இந்த இடத்தில் ஏங்கெல்ஸ்சின் குறிப்பு ஒன்றைப் பார்ப்போம். ''ஆண்களுடைய வழக்கமான ஒழுக்கக் கேட்டைப் பெண்கள் சகித்துக் கொண்டிருக்கும் படி கட்டாயப்படுத்துகின்ற பொருளாதார நோக்கங்கள் - தமது வாழ்க்கையைப் பற்றிய கவலை அதற்கும் மேலாக, தமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை - மறைகின்ற பொழுது ஏற்படுகின்ற ஆண் - பெண் சமத்துவம், பெண்கள் பல கணவர் முறைக்குப் போய் விடுவதை விட ஆண்கள் உண்மையிலேயே ஒருதார மணத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பேருதவி செய்யும்..."8 என்ற கூற்றில் இன்றைய பெண்ணியச் சிதைவைக் காணமுடியும்.


ஆண்-பெண் சமத்துவத்தை அடையாது ஆணாதிக்கச் சலுகையில் வெம்பிய விடுதலைகள், பெண்களைப் பல கணவர் முறைக்குள் ஆணாதிக்க வழியில் சிதைவதைக் காட்டுகின்றது. ஆண் பெண் சமத்துவத்தைச் சொத்துரிமை ஒழிப்பில் சாதிக்காத நிலையில், கிடைக்கும் சலுகைகள் மூலம் ஆணாதிக்க வழியில் பல கணவர் முறைக்குள் சென்று விபச்சாரத்தைப் பெண்களுக்குப் பொது சாராம்சமாக்குகின்றது. சுதந்திரமான விபச்சாரம் பெண்ணின் கற்புரிமையை மறுக்கின்றது. அது ஒருதார மணத்தையும், இணை மணத்தையும் மறுத்து, விபச்சாரத்தை வரைமுறையற்ற புணர்ச்சியில் வைக்கின்றது. எனவே மொழியில் கற்புரிமையை முதலில் மூடி மறைக்கின்றது. அதை ஆணாதிக்கப் புரிதலின் அடிப்படையில் பார்க்கின்றனரே ஒழிய, பெண்ணிய நோக்கில், அதன் தெரிவில், அதன் வரலாற்றுக் காரணத்தில் காண்பதில்லை.


பறை இசைக் கருவிக்கு எது நடந்ததோ அதுவே கற்புரிமைக்கும் நடந்தது. சமூகத்தை, இருக்கும் (ஏகாதிபத்திய) ஜனநாயக வடிவில் புரிவதும், அதன் அடிப்படையைப் பார்க்க மறுப்பதும், ஏகாதிபத்திய எல்லைக்குள் பொத்தென கவிழ்ந்து விழுவதேயாகும். இன்று தேசத்தின் பொருளாதாரத்தைச் சூறையாடும் போது தேசத்தின் கற்புரிமையை எப்படி அர்த்தமற்றதாக மாற்றுகின்றனரோ, அதுபோல் பெண்ணின் கற்புரிமைக்கும் இது நிகழ்கின்றது.


கற்புரிமையைச் சமூகமும், பெண்ணும் தெரிவு செய்த போது இருந்த அர்த்தம் திரிபடைந்து ஆணாதிக்கப் பொருளாதார மொழிக் கொள்கைக்குள் புதிய வடிவத்தைப் பெற்றது. இதுதான் பறைக்கும் நிகழ்ந்தது. வரலாற்றில் எத்தனையோ திரிபுகள் இயற்கைக்குப் புறம்பாகப் பொருளாதார மாற்றங்களுடன் தோன்றி உறுதிப்பட்டுள்ளது. இதை அது மாறிவந்த வழியாக அடையாளம் கண்டு, அந்தப் பொருளாதார வடிவத்தைத் தகர்ப்பதன் மூலமே இதன் தோற்றத்தை ஒழிக்கவும், சிலதை மீளவும், பழைய இயற்கை வடிவில் மீட்டெடுக்கவும் முடியும். கற்புரிமையானது வாரிசுரிமையூடாகத் திரிபடைந்து கற்பான போது, அங்கு அதன் நோக்கம் தனிச் சொத்துரிமையை இரத்த வழியில் ஆண் உறுதி செய்வதை நிபந்தனையாக்கியது. ஆண் தனது குழந்தை என்பதை உறுதி செய்ய |கற்பு| அவசியமாக இருந்தது. இந்த ஆணாதிக்கக் ~கற்பு| தனிச் சொத்துரிமையிலான வாரிசுரிமையில் உருவாகின்றது. அதை ஒழிக்காமல் ~கற்பு| ஒழி;க்கப்படுகின்ற போது, அங்கு விபச்சாரமே கற்பை அழிக்கின்றது.


ஆனால் இன்று ''கற்பு" சொற்பிரயோகத்தைப் பாவிப்பதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் எதற்காக இதைக் கையாளுகின்றனர்? அராஜகவாதக் கோட்பாட்டில் சிக்கிக் கொண்டவர்கள்தான் இதைக் கோருகின்றனர். ஏங்கெல்ஸ் அராஜகவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி எதிர்த்துப் போராடுகின்றார்? எனப் பார்ப்போம். ''விஷயங்களின் பெயர்களை மாற்றிவிட்டால் விஷயங்களையே மாற்றி விட்டதாக இந்தக் கனவான்கள் நினைக்கிறார்கள். மிகவும் ஆழமான இச்சிந்தனையாளர்கள் இப்படி மொத்த உலகத்தையுமே கேலி செய்கிறார்கள்"24 இந்த மாதிரி மொழியில் ஒளித்து புரட்சி செய்பவர்களை மார்க்ஸ், ஏங்கெல்ஸ்; உள்ளிட்டோர் எப்படி அடையாளம் காண்கின்றனர் எனப் பார்ப்போம். ''பிரிவுகளின் சுயாட்சி, சுயாட்சி உடைய கோஷ்டிகளின் சுதந்திரமான சம்மேளனம், எதேச்சாதிகார-எதிர்ப்பு, அராஜகவாதம்- இவை அனைத்துமே ~வர்க்கத்தினின்று இழிந்தவர்கள்|, ~கதியற்றவர்கள்|, ~பதவி முன்னேற்றமோ வாய்ப்புகளோ இல்லாதவர்கள்|........"24 இவர்கள்தான் அராஜகவாதக் கோட்பாடுகளின் அடிப்படையானவர்கள். லெனின் ~அரசும் புரட்சியும்| என்ற நூலில் ஏங்கெல்ஸ்சின் மேற்கோளைப் பயன்படுத்தும் போது, அரசு அதிகாரம் தொடர்பாக ~அதிகாரம்| என்ற சொற்றொடர் மீது அராஜகவாதிகளின், வாய் வீச்சை அம்பலப்படுத்த பயன்படுத்திய வாதங்களைப் பார்ப்போம். ''...ஒரு பொருளின் பெயரை மாற்றுவதன் மூலம் அப்பொருளையே மாற்றி விடுவதாய் நினைத்துக் கொள்கின்றார்கள்... உண்மைகளை எல்லாம் பார்க்காமலே கண்களைக் கெட்டியாய் மூடிக் கொண்டு ஆவேசமாய் இச்சொல்லை எதிர்த்துப் போராடுகிறார்கள்... என்ன என்பது தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார்கள் - அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியத்துக்குத் துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும் , அவர்கள் பிற்போக்குக்குப் பணியாற்றுவோரே ஆவர்."25


சிங்களத் தேசிய இனப் பாசிசம் தமிழ்த்; தேசியத்தைச் சிதைத்த போது உருவான தேசியவிடுதலைப் போராட்டம், மறுதளத்தில் எந்தளவுக்குப் பாசிசமாக வளர்ச்சி பெற்றதோ, அந்தளவுக்குச் சமூகத்தை விட்டோடும் ஓடுகாலிகளையும் உருவாக்கியது. சமூக அவலங்களுக்குரிய மாற்றத்தை மக்களைத் திரட்டி போராட முடியாதவர்கள், அராஜகவாதத்தைத் தமது புரட்சியாகப் பிரகடனம் செய்கின்றனர். அதை உயர்ந்தபட்சப் புரட்சியாகக் காட்டி மாற்றுகின்றனர். மக்களின் பிரச்சினைக்காக அணிதிரட்டிப் போராட முடியாத விடுதலைப்புலிகளும் மற்ற இயக்கங்களும், ஒரு குண்டு வெடிப்பு மூலம் புரட்சி செய்வதைப் பிரகடனம் செய்கின்றனர். இதன் மூலம் மக்களின் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கின்றனர். இது இன்றுவரை பொது அரசியலாக, ப+ர்சுவா வர்க்கத்தின் இயல்பான ஆதரவுக் கண்ணோட்டமாக உள்ளது.


இதில் தோற்றுப்போனவர்கள், இதற்குள் பதவியைப் பிடிக்க முடியாதவர்கள், வர்க்கத்தில் இருந்து அன்னியமானவர்கள், வர்க்கக் கோட்பாட்டில் இருந்து விலகியவர்கள், தன்னார்வக் குழுவின் கோட்பாட்டாளர்கள் ஆகியோர்கள் சமுதாயத்தில் மக்களை அணிதிரட்டிச் சமூகத்தை மாற்றுவதைக் கைவிட்டவர்கள் ஆவர். இந்த இழிந்து போன பிரிவுகளின் சமூகத் தளமே, அராஜகவாதத்தின் ஊற்று மூலமாகின்றது. இது ஒரு வெடி குண்டு போல் புரட்சி கற்பனையில் மூழ்கிப் போகின்றது. இது பல்வேறு துறையில் புரட்சி பற்றி சொற்களின் ஊடாக, சில வரிகள+டாக வாயடித்தல் செய்கின்றது. இதையொட்டி மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ''...ஒரு தத்துவஞானி ஏதாவதொரு வகையில் விமர்சனம் செய்த உடனே அது செத்துவிட்டதாகக் கருதப்படும், வரலாற்றின் பக்கங்களிலிருந்து அகற்றப்படும். அதோடு எல்லா செய்முறைக் காரியங்களும் கூட ஒழிக்கப்பட்டுவிடும்"24 என்று புரட்சி பேசத் தயங்குவதில்லை என்று கூறுகிறார்கள். இந்த வகையில் ஒன்றுதான் ''கற்பு" என்ற சொல்லை மாற்றி வேறு சொற்களைப் போடுவது. சொற்களில் உலகத்தையும், சொந்த மக்களையும் ஏமாற்ற முயன்று, அராஜகவாத அரசியல் ஆதரவுடன் தன்னை மக்களுக்கு மேல் நிலைநிறுத்துகின்றது. ''கற்பு"க்கு எதிராக, நடைமுறையில் மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்குத் தயாரற்ற பிரிவுகள், சொற்களில் புரட்சியைச் செய்துவிட கனவு காண்கின்றது. இதை மறுத்து மக்களை அணிதிரட்டிப் போராடி ஒழிக்கக் கோரும் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராகப் புரட்சிகர வசனம் பேசுகின்றது. இது எப்படி மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும்? என்று கேட்டால் பதில் அளிக்க யாரும் இருப்பதில்லை. ஆனால் மொழியில் தன்னைப் புரட்சியாளனாக நிலைநிறுத்தி பிழைக்க முயல்கின்றது.


மொழி என்பது பொருளாதார வடிவத்துக்கு உட்பட்டது என்ற இயங்கியல் வளர்ச்சியை மறுக்கும் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அராஜகத்தை, இயங்கியல் மறுப்பில் கோருகின்றனர். சொற்கள் பொருளில் இருந்து தோன்றுகின்றது என்பதை மறுக்கும் இயங்கியல் மறுப்பு, அடிப்படையில் மொழியில் கருத்துமுதல்வாதத்தைத் திணிக்கின்றது. ''எதார்த்தமான உறவுகளுக்குப் பதிலாகச் சித்தம் (விருப்பம்) புரட்சியின் முக்கியமாகச் சித்தரிக்கப்படுகின்றது."24 அதனால் சமூகத்தில் பொருள் உறவு எப்படி உள்ளது? என்பதை ஆராய மறுக்கின்றது.


பொருளாதார உறவே சமூக உறவாகப் பரிணாமிக்கின்றது. பெண் ஓர் ஆணுடன் வாழும் போது அதைத் தாண்டி,(இங்கு தாண்டல் என்பது பரஸ்பர விசுவாசத்திற்குத் துரோகம் செய்வதாகும். இது ஆண் செய்தாலும் பொருந்தும.;) கள்ள உறவு கொள்ளும் போது அல்லது திருமணத்துக்கு முன் உறவு கொண்டு ஏமாற்றப்படும்போது(இங்கு எப்போதும் ஆணாதிக்கம் பெண்ணை ஏமாற்றியும், விருப்பத்துடனும் பெண்ணின் தற்காப்பு கற்புரிமையைக் கற்பழிக்கின்றனர்.) ஆணாதிக்கம் இது போன்றவைகளைக் கற்பாக வேறு விளக்கம் கொடுத்து பெண்ணின் மீது மட்டும் நிபந்தனையாக்குகின்றது. திருமணம் செய்து வாழ்வை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண் மீளத் திருமணம் செய்யும் போது கற்பிழந்தவளாகச் சமூகம் அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் மறைமுகமான வகையில் மறு திருமணம் இதை எல்லைப்படுத்துகின்றது. அடையாளப்படுத்துதல் எல்லாம் சமூக ஒழுக்க விழுமியத்துக்குள் உட்பட்ட பொருளாதார வடிவத்தால் மட்டும் வரையறுக்கின்றது. எனவே ''கற்பு" என்பது எல்லா நேரமும் இரண்டாவது ஆணுடன் கொள்ளும் பெண்ணின் புணர்ச்சிக்குள் வரையறுப்பதில்லை. மாறாக நிலப்பிரபுத்துவப் பண்பாட்டு மீறலின் போதே வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு நிலையில் பெண்ணுக்குத் தற்காப்பு ஆயுதமாகவும், மறுதளத்தில் ஆணாதிக்கத்தின் சூறையாடலாகவும் வழக்கில் நீடிக்கின்றது.


பெண்ணின் ''கற்பு"க்கு இலட்சணமாகப் பெண் மீதான ஒழுக்கம் எதைக் கோருகின்றது? இந்து மதப் புராணங்களில் நளாயினியின் புருஷன் குஷ்டரோகியாக இருந்தான். அவன் தாசி வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னவுடன் அவனைக் கழுவி, கூடையில் வைத்து தலையில் தூக்கிச் சென்று தாசி வீட்டில் விட்டாள். இதைப் போல் தாசி வீட்டில் இருந்து மீண்டும் தன் கணவனை வீட்டிற்குத் தூக்கி வந்தாள். இதுதான் பெண்ணின் ''கற்பு"க்கு ஆணாதிக்கம் கொடுத்த விளக்கம்;. பெண் இதைச் செய்ய மறுக்கும் போது ''கற்பு" இழந்தவளாகக் கருதப்பட்டாள். ''கற்பு" பற்றிய விளக்கங்கள் ஆணின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கோரப்பட்டது. இது மறுக்கப்படும் போது பெண்ணின் கற்புரிமையாகக் கற்பு இருக்கின்றது. அது இன்று குறிப்பாகப் பெண்ணின் உடல் சார்ந்ததாக மட்டும் எஞ்சிப் போயுள்ளது.


பெண் மீதான வன்முறையூடாக அல்லது ஏமாற்றிக் கைவிடப்படும் போதும் அல்லது இரண்டாவது உறவு கொள்ளும் போதும் ''கற்பிழ"ந்தவளாக ஆணாதிக்கம் விளக்கம் கொடுக்கின்றது. ''கற்பு" ஆண்களால் பெண்கள் மீது மட்டும் நிபந்தனையாக்கிய சமூக அமைப்பு, பொருளாதார அமைப்பால் ஒரு சமூக இயக்கமாக, கற்பை ஒரு பொருளாக மாற்றிய நிலையில் இது கற்பிதமல்ல. மாறாக இது ஒரு சமூகப் பொருளாதார அமைப்பால் இறுகக் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சமூகப் பொருளாதார அமைப்பு நிலப்பிரபுத்துவத்தின் வடிவமாக உள்ளது. இந்த நிலப்பிரபுத்துவம் பாட்டாளி வர்க்க ஆட்சியால் அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் மூலம் என இரண்டு சமூகப் பொருளாதார நிலைகளில் மட்டும் தகரும் போது ''கற்பு" கோட்பாடும் தகர்ந்துபோகும். இதில் ஏகாதிபத்தியம் சார்ந்து கற்புரிமையை ஆணாதிக்கம் சார்ந்த ஆண் வேட்கையிலும், பாட்டாளிவர்க்கம் பெண் சார்ந்த ஆணாதிக்கக் ''கற்பைப்" பெண்-ஆண் சார்ந்து கற்பிதமாக்கும்.


ஏகாதிபத்தியம் பெண்ணின் கற்புரிமையை ஒழிக்கும் போது பெண்ணை விபச்சாரத்தளத்துக்குள் விட்டுக் கற்பை ஒழிக்கின்றது. பாட்டாளி வர்க்கம் ''கற்பை" ஒழிக்கும் போது பரஸ்பரம் சேர்ந்து வாழும் சுயேட்சையான சுயநிர்ணய எல்லைக்குள் ஒழிக்கின்றது. இது இரண்டுக்கிடையிலான அடிப்படை வேறுபாடு. ஏகாதிபத்தியம் கற்புரிமையை ஒழிக்கும் போது அனைத்துச் சமூகப் பொருளாதாரத் துறையிலும் மனிதனின் கற்புரிமைத் தனத்தை ஒழித்து தனது சூறையாடலுக்கு ஏற்ற விபச்சாரத் தனத்தை ஏற்படுத்துகின்றது. பாட்டாளிவர்க்கம் மனித வாழ்வின் அடிப்படையான மனிதப் பண்பாட்டை, ஆணாதிக்கக் ''கற்பை" ஒழிப்பதன் ஊடாக மனிதனின் கற்புரிமையை, அதாவது தன்மானத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்துகின்றது.


எப்போதும் ''கற்பு" மீதான போராட்டம் என்பது பெண்ணுக்குக் கற்பு உண்டு என்கின்ற ஆணாதிக்கம் மீது, ''கற்பு"க்கு எதிரான போராட்டத்தைக் கோருவதும், கற்பு என்ற ஒன்று இல்லை என்பதை நிறுவுவதன் ஊடாக அமைய வேண்டும். இது பொதுவாகக் ''கற்பு இழந்தவள்" என்ற பொருளின் ஊடாக வருவதால் ''கற்பைக்" கற்பிதமாக்கச் சமூகத்தை மாற்றப் போராட வேண்டும். கற்பழிப்பு போன்ற குற்றத்தில் கற்புரிமை அழிப்புக்கு எதிரான எழுத்துக்களை, போராட்டங்களைக் கற்பழிப்பு (இங்கு கற்பிழந்தவளாகப் பொதுவில் கருதாமல் இந்த வன்முறைக்கு எதிரான, கற்பழிப்புக்கு எதிரான பெண்ணின் கற்புரிமையின் குரலாக உள்ளது) மீது எழுதியும், போராடியும் பெண்ணின் கற்புரிமை மீது கற்பிதமாக்க வேண்டும்;. இது மட்டுமே நடைமுறை சார்ந்த மக்கள் சார்ந்த ஒரே செயல்தள நடைமுறையாகும். இதை மறுத்து, சரிநிகரில் (தன்னார்வ நிதியில் வரும் பத்திரிக்கை அல்லவா?) தொடக்கிய இச்செயல், எதார்த்தத்தில் மக்களால் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் பொருளாக்கப்பட்டுள்ள, ''கற்பு"க்கு எதிரான போராட்டத்தை மறுதலிக்கும் செயலாக இது மாறியுள்ளது.


''கற்பு", ''கற்பழிப்பு" போன்ற சொற்கள் ஆணாதிக்கப் பொருளாதாரக் கட்டமைப்பால் அதிகாரம் பெற்றுள்ளதால், அது மக்களுக்குள் உருவகம் சார்ந்து, பொருள் சார்ந்து போயுள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை மறுதலித்து, சொற்களை மாற்றிய விளையாட்டுகள் அதற்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கவே செய்கின்றது. முன்பு காந்தி தாழ்ந்த சாதிகளை ''அரிஜன்" என அழைத்து சொற்களில் மறைத்தது போல், இன்று ''தலித்" என்று சொற்களில் மறைத்தபடி சாதிகளின் ஒழிப்புக்குப் பதில் நீடிப்பைச் சொற்களுக்குள் எப்படி பாதுகாக்கின்றனர். அதேபோல்தான் ''கற்பு", ''கற்பழிப்பு" போன்ற சொற்களுக்கும் நிகழ்கின்றது. அரிஜன் என்று காந்தி அழைத்த போது எப்படி சமூகம் தன்னளவில் சோடை போனதோ, அதேதான் தலித் என்று சொன்னதின் பின்னும் நிகழ்கின்றது. இதில் தாழ்ந்த சாதிகள் அதன் அடையாளத்துடன் புதுப் பெயர் பெற்று விளங்கியதே எஞ்சியது.


இதே போன்று இந்தியா மற்றும் இலங்கையில் சேரி எல்லாவற்றையும் காலனியாக்கிப் புது வாசனை (சென்ட்) காட்டிய போதும், சேரி சேரியாகவே தொடர்கின்றது. காலனி அதே அர்த்தத்தைப் பெற்று புதிய சேரியானது. இதுபோல்தான் கற்பும் புதுவாசனை பெற்று, அதன் அர்த்தத்தில் மயக்கத்தை ஏற்படுத்தி, போராட்டத்தை மட்டுப்படுத்திச் சிதைக்கின்றது. இதை எல்லாம் எதிர்த்து நடைமுறையில் ஈடுபட, மாற்ற தயாரற்றவர்களின் வாயடிப்புதான் இந்த மொழியில் சொற்கள் மாற்றும் விளையாட்டுகள். மக்களுக்குள் இதன் அர்த்தங்கள் இச்சமூக அமைப்பின் அதே வழியில் தொடர்ந்து உயிர்வாழ்கின்றன. சொற்களின் அர்த்தங்கள் மாறுவது என்பது மாறுகின்ற பொருளாதார வடிவங்கள் மீதான போராட்டத்தால் மட்டுமே நிகழ்கின்றது.


ஒடுக்கும் வர்க்கத்தால் ''கற்பிக்கப்பட்ட" கற்பனைப் புனைவுகள், ஒரு பொருளாதார அமைப்பால் உருவகம் பெற்று பாதுகாக்கப்படும் போது அதற்கு எதிரான போராட்டத்தால் மட்டுமே இல்லாது ஒழிக்கமுடியும். இவை அல்லாது சமூகத்தில் இருந்து அன்னியப்பட்ட, நடைமுறையில் செயல்பட தயாரற்றவர்கள், அதற்கு தெளிவான கோட்பாடு இன்றி ''நடுநிலை", ''கேள்வி", ''பரிசீலனை"என்ற சொற்களின் பின் அரசியல் பேசுவோர், தம்மை எழுத்தாளராகக் காட்டிக் கொள்ள விரும்பும் புத்திஜீவிகளின் கோட்பாடுகள் ஒடுக்குபவன் சார்ந்து சொற்களை ஒளித்துக் காட்டுவதன் மூலம் பாதுகாக்கின்றனர்.


இது இன்று மட்டுமல்ல அன்றும் இருந்தன என்பதற்கு மார்க்ஸ்சின் மூலதனம் பாகம் 1.2-இல், பக்கம்-722-இல், ''தத்துவத்தின் வறுமை" என்ற நூலில் எழுதியதைப் பாhப்போம். 'ஓர் உருவக வழக்குதான் அடித்தளம் என்றாகிறது. சமுதாயம் தன்னைப் பீடித்துள்ள கேடுகளை எல்லாம் ஒழித்துக் கட்ட விரும்புகிறதா? சரி, ஓசைக்கேடான சொற்களை எல்லாம் ஒழித்துக் கட்ட வேண்டியதுதான், மொழியை மாற்ற வேண்டியதுதான். சமுதாயம் இதற்காக வேண்டி அறிஞர் பேரவைக்கு விண்ணப்பம் செய்து அதன் அகராதிக்கு ஒரு புதிய பதிப்பை வெளியிடுமாறு கேட்டால் போதும்" என புரட்சியை மழுங்கடிக்க, பிரச்சினையைத் திசைதிருப்ப சொற்களை மாற்றி வித்தை காட்டிய அறிஞர்களுக்கு-புத்திஜீவிகளுக்கு அன்று மார்க்ஸ் பதிலளித்தது இன்றும் மாறாமல் அப்படியே பொருந்துகின்றது.


''கற்பு" என்பதை நாம் எப்படி அணுகுகின்றோம்?


1. நிலப்பிரபுத்துவ மற்றும் மதவாதக் கோட்பாடுகளில் ''கற்பு" பற்றிய அனைத்து ஒழுக்கங்களையும் எதிர்ப்பதிலும், அதைக் கண்டித்து போராடுவதிலும் பாட்டாளி வர்க்கம் தன்னை முன்நிறுத்துகின்றது.


2. ஏகாதிபத்திய உலகமயமாதலின் வளர்ச்சியில் நிலப்பிரபுத்துவம் தகர்கின்ற போது கற்புரிமைக் கோட்பாடும் தகர்ந்து விபச்சாரமாக மாறுகின்றது.


பாட்டாளி வர்க்கம் பெண்ணின் நிலையை இவ்விரண்டிலும் இருந்து வேறுபடுத்துகின்றது. காட்டுமிராண்டித்தனமான ''கற்பு" கோட்பாட்டு நடைமுறையை எதிர்த்தும், விபச்சார வாழ்முறையை எதிர்த்தும் என இரு தளத்தில் போராடுகின்றது. முதலாவது தளத்தில் நிலப்பிரபுத்துவக் கற்பை எதிர்த்து போராடும் போது பெண்ணின் சுயநிர்ணயத்தை முன்நிறுத்துகின்றது. ஒரு பெண் ஓர் ஆணுடன் சேர்ந்து வாழ்வது அல்லது பிரிந்து வாழ்வது அவளின் உரிமையாகக் கற்புரிமையை முன்வைக்கின்றது. இது சமுதாயத்தின் சுதந்திரத்தில் எல்லைப்படுத்துகின்றது. மறுதளத்தில் பெண் சமுதாயச் சுதந்திரத்துக்கு எதிரான தனிமனிதச் சுதந்திரத்தில் தனது தனித்துவத்தை விபச்சார நிலைக்கு நகர்த்தும், ஏகாதிபத்தியக் கற்புரிமை அழிப்பு கோட்பாட்டை எதிர்த்துப் பெண்ணின் தனித்துவத்தை, உரிமையைத் தற்காப்பாகக் கோருகின்றது.


பெண் மீதான ஆணாதிக்கச் சூறையாடலைத் தற்காப்பதிலும், பெண் ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தான் தெரிவு செய்த கற்புரிமையைப் பாதுகாக்க, (உதாரணமாக டிஸ்கோ பாலியல், ஒரே நேரத்தில் பலரைக் காதலித்து உறவு கொள்வது, திருமணத்துக்குள் இருந்தபடி வெளியில் பலருடன் உறவு கொள்வது, கணவன் மனைவியை மாற்றி உறவு கொள்வது, காதலைக் கைவிட்டு நுகர்வை அடிப்படையாகக் கொண்ட பல கணவன் உறவுகள்... போன்றன.) இந்த ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் பாட்டாளி வர்க்கம் தலைமையில் முன்நிறுத்துகின்றது. பெண்ணுக்கு மட்டும் இருக்கின்ற ஒருதார மணத்தை மறுத்து, பெண் சுயமான வகையில் பிரிந்தும், சேர்ந்தும் வாழும் எல்லையால் பெண் தன்னைத் தற்காத்து கொள்ளும் கற்புரிமையைக் கோருவதாகும். மறுதளத்தில் பெண் மீதான ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுக் கற்பை எதிர்த்து (உதாரணமாக மறுமணம், குடும்பத்தில் இருந்து விலகி மீளத் திருமணம் செய்தல், காதலித்துத் தோல்வி பெறும் பட்சத்தில் மீளக் காதலித்தல், காதலில் ஏமாற்றப்படும் போது மீளவும் காதலித்து வாழும் உரிமை, பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் சாதாரணமாக வாழும் உரிமை... போன்றவற்றில் காணப்படும் ஆணாதிக்க ஒருதார மணத்தில் உள்ள கற்புக் கோட்பாட்டை எதிர்த்து போராடுதல்.) பெண்ணின் சுயநிர்ணயத்தைக் கற்புரிமையில் முன்வைக்கின்றது. அதாவது தேசியத்தில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் சொந்தத் தேசியத்தைக் கோருவது போல், பாட்டாளி வர்க்கம் கற்புரிமை மீது தன்னை நிலை நிறுத்துகின்றது. இதை மறுக்கின்ற இரண்டையும் எதிர்த்து தன்னை அரசியல்மயமாக்கி ஆயுதபாணியாக்குகின்றது.