Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்கு

  • PDF

வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி பெற்றது. இன்று இலங்கையில் மொத்தமாக 10 590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10 042 ஆகும். இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும். மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர்.

 

இலங்கையில் மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 80 000 யாகும். 1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் 42 லட்சமாகும். இதில் 1 முதல் 5ம் வகுப்புவரை 19 லட்சம். 6 முதல் 11 வரை 21 லட்சம். 12 முதல் 13 வரை 2 லட்சமாகும். ஆரம்பபாடசாலையில் (கல்வி (1-5)) 8 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. இடைநிலைக் கல்வியில் (6 முதல்11) 25 சதவீதமானோர் கல்வி கற்கவில்லை. உயர் கல்வி வயது எல்லையில் மூன்று சதவீதமான மாணவர்களே கல்வி கற்கின்றனர். இவை இனம் கடந்த நிலையில் இலங்கையில் கல்வியின் வீழ்ச்சியைக் காட்டுகின்றது. மொத்த ஆசிரியர்களில் ஆரம்ப பாடசாலையில் 80 சதவீதமும், இடைநிலைப் பாடசாலையில் 60 சதவீதமும் மொத்தத்தில் 70 சதவீதம் ஆசிரியர் தொழிலில் பெண்கள் உள்ளனர். உயர் கல்வியை நோக்கிச் செல்லச் செல்ல பெண்களின் எண்ணிக்கையிலும் கூட வீழ்ச்சி ஏற்படுத்துகின்றது. ஆணாதிக்க அமைப்பும் கூட பொதுவாக இலங்கையில் பெண்களின் கல்விக்கு தடையாகவே உள்ளது.

 

1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுதியில 73 சதவீதமானவர்கள் தனியார் அல்லது உயர்தர பாடசாலையைச் சேர்ந்தவர்கள். 18 சதவீதமானவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகள். இவர்களும் உயர்ந்தர பாடசாலைகளின் பழைய மாணவர்களாவர். 1983 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராய்ந்த போது, 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து, பல்கலைக்கழகம் தெரிவானோர் 39.2 சதவீதமட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படுவதையும், 17.6 சதவீதமான மேட்டுக் குடியில் இருந்து 60.8 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை காட்டுகின்றது. கல்வி உயர்குடிகளின் பிடியில் இருப்பதையும், தேசிய இனப் போராட்டங்கள் இதற்குள் நிகழ்வதையும் காட்டுகின்றது.

 

கல்விக்கான செலவு தேசிய வருமானத்தில் 2.9 வீதமே ஒதுக்கப்படுகின்றது. இந்த செலவில் 76 சதவீதம் ஆசிரியர்களின் சம்பளத்துக்கும், 16 சதவீதம் நலனளித்தல் சேவைக்கும், 7 சதவீதம் பயணத்துக்கும், 1 சதவீதம் தராதர மேம்பாட்டுக்கும், ஒரு சதவீதமே கற்பிக்கும் உபகரணத்துக்கும் செலவு செய்யப்படுகின்றது. கல்விக்கு ஒதுக்கும் பணம் முதல் அது செலவு செய்யப்படும் வடிவம் வரை ஒட்டு மொத்த மக்களுக்கு எதிரானதாகவே உள்ளது. உயர்கல்வியில் சிலரை உருவாக்கும் வகையில் கல்விக்கான நிதியொதுக்கீடு காணப்படுகின்றது. ஒரு சிலருக்கு வெளியில் உள்ளவர்களின் கல்வியின் தரத்தை இழிந்த நிலையில் நிலை நிறுத்தி, கூலிகளாக சேவை செய்ய கல்வி கோருகின்றது. சாதாரண பாடசாலையை விட உயர்தரப் பாடசாலைகள் 300 சதவீதம் அதிகரித்த நிதியுதவிகளைப் பெறுகின்றன. உயர் அதிகார வர்க்கத்தையும், சமூக அந்தஸ்துக்குரிய சமூக பிரிவுகளையும் உருவாக்கும் வகையில் கல்வி திட்டமிடப்படுவதையே, இலங்கையின் ஆளும் வர்க்கம் தனது கொள்கையாக கொண்டு இருக்கின்றது. இதை தமிழ் குறுந் தேசியமும் உயர்த்தும் அதே நேரம் தலையில் வைத்து கூத்தாடுவதிலும் பண்பாட்டு தன்மை கொண்ட தமிழ் தேசிய வெறியாக காணப்படுகின்றது.

 

1984 இல் 146 977 ஆசிரியராக இருந்த நிலை 1994 இல் 1 67 579 ஆகியது. சம்பளச் செலவு 120 கோடியால் அதிகரித்தது. பணவீக்கத்தை ஏற்படுத்திய பின்பு 1995 இல் 45 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதன் மூலம் செலவு 280 கோடியால் அதிகரித்தது. ஆனால் தேசிய ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படவில்லை. பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இது பூசிமெழுகப்பட்டது. அதேநேரம் இந்த ஆசிரியர் நியமனம் கூட இனவாத அடிப்படையில் சிங்கள இனத்துக்கே வழங்கப்பட்டது. ஆசிரியர் நியமனம் பற்றாக்குறை சார்ந்த இடங்களுக்கு வழங்கப்படவில்லை. தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு 10324யாக இருக்க, சிங்கள ஆசிரியர்கள் 14168 பேர் மிதமிஞ்சியிருக்கின்றனர். அதாவது 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இன்று இனவாத அடிப்படையில், இலங்கையில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை காணப்படுகின்றது. இதுவே 1971க்கும் 1974க்கும் இடையிலும் நிகழ்ந்தது. இக் காலத்தில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது, சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. முஸ்லீம் மக்களுக்கு வழங்கிய விதிவிலக்கான ஒரு சலுகையாக இருந்த போதும், இன அடிப்படையிலும், தேவையின் அடிப்படையிலும் முஸ்லீம் மக்களின் கல்வி நிலையை மேம்படுத்தவில்லை. சிங்கள சமூகம் அதிக சலுகைகளை தொடர்ச்சியாக பெற்று வந்தன. இதை தமிழ் இன அடிப்படையில் பொதுமைப்படுத்திய போது இனவாதத்தின் அடிப்படை வெளிப்படுகின்றது. ஆனால் இந்த பொதுமைப்படுத்தலின் உள்ளே பிரதேச ரீதியாக, சாதி ரீதியாக, சிறுபான்மை ரீதியாக ஆராயும் போது இந்த இடை வெளி மேலும் அகலமாகின்றது. வெறுமனே இதை இன அடிப்படையில் புரிந்து கொண்டு தீர்க்கமுடியாது. அப்படி இனத் தேசியவாத அடிப்படையில் தீர்க்க எடுக்கும் முயற்சி, யாழ் சமூகத்தின் மிதமிஞ்சிய சலுகைகளை பெறுவதையே அடிப்படையாகக் கோருவதாகும். தமிழ் ஆசிரியர்களின் தட்டுப்பாடு என்பது பின்தங்கிய தமிழ் மாவட்டங்கள், சாதிகள், சிறுபான்மை இனங்கள் என்று அடிப்படையில் தான் காணப்படுகின்றது. யாழ்குடா நாட்டில் அளவுக்கு அதிகமாகவே ஆசிரியர்கள் எண்ணிக்கை காணப்படுகின்றது.

 

அண்மைக் காலங்களில் ஏற்படும் சில நெருக்கடிகள் கூட, இனவாத எல்லையில் புரிந்து கொண்டு விளக்குவது கூட யாழ் மேலாதிக்க தன்மைக்கு கவசமிடுவதாகும். யாழ் மாவட்டத்தில் 481 பாடசாலைகள் உள்ளன. மொத்த மாணவர்கள் 1 84 350யாகும. 6400 ஆசிரியர்கள் உள்ளனர். இது 29 மாணவருக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் காணப்படுகின்றது. இதிலும் கிளிநொச்சியின் விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக் கொண்ட பின்தங்கிய பகுதி என்பதால் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இன்றைய யாழ்குடாநாட்டில் உள்ள நெருக்கடிகள் யாழ் பூர்சுவா சமூக கண்ணோட்டத்தால் மட்டுமே ஏற்படுகின்றது. அதிக பணம் சேகரிக்கவும் மேற்கு பற்றிய காலனித்துவ அடிமைப்புத்தியும் இணைந்தபோது, மேற்கு நோக்கிய ஆசிரியர்களின் புலம்பெயர்வு செயற்கையான பற்றாக்குறைக்குள் யாழ்குடாவை நகர்த்தியது. அத்துடன் மேற்கு நோக்கி நகரும் திருமணங்களும், பிள்ளைகளை நோக்கி புலம் பெயரும் பெற்றோர்களும் ஆசிரியராக இருக்கும் எல்லா நிலையிலும், செயற்கையான நெருக்கடிக்கு கம்பளம் விரிக்கின்றது. இதை தேசியம் பொதுமைப்படுத்துகின்றது. அதற்கு பின்தங்கிய மாவட்ட நெருக்கடிகளை யாழ் தேசியம் தனக்கு சாதகமாக்குகின்றது. தேசியம் பின் தங்கிய மக்களின் நலனில் இருந்து தேசியத்தை பொதுமைப்படுத்தத் தவறி குறுந்தேசியமாகியது. பின் தங்கிய தமிழ் மாவட்ட மற்றும் சிறுபான்மை தமிழ் இனங்களின் நிலைமையை கிடைத்த புள்ளிவிபரத் தரவுகளில் இருந்து ஆராhய்வோம்.

Last Updated on Tuesday, 26 August 2008 20:34