Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் கொலைகார "கோக்"குடன் சர்வகட்சி கூட்டணி

கொலைகார "கோக்"குடன் சர்வகட்சி கூட்டணி

  • PDF

03_2006.jpgமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நெல்லைகங்கைகொண்டான் கொக்கோ கோலா ஆலைக்கு, இயங்குவதற்கான உரிமத்தை மானூர் ஊராட்சி ஒன்றியம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியன்று வழங்கியுள்ளது. இந்தத் துரோகம் எப்படி நிறைவேறியது என்பதை, மறுநாள் (11.2.06) வெளியான நாளிதழ்களின் செய்திகளிலிருந்தே தொகுத்துத் தருகிறோம்.

 

பஞ்சாயத்து யூனியன் கூட்டப் பொருட்குறிப்பில் குளிர்பானக் கம்பெனிக்கு ரன்னிங் லைசென்ஸ் வழங்கும் பொருள் சேர்க்கப்பட வேண்டும் என்று 21 யூனியன் கவுன்சிலர்களில் 14 பேர் யூனியன் தலைவர் விஜயாவுக்கு கடந்த 23.1.2006 அன்று மனு அனுப்பினர். யூனியன் தலைவர் விஜயா உடனடியாக கவுன்சிலர்களுக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில், கட்டிட அனுமதி, நகரமைப்பு அனுமதி மற்றும் பிற சான்றுகள் உரிய முறைப்படி உரிய இடத்தில் பெறவில்லை; பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது; எனவே, கம்பெனிக்கு லைசன்ஸ் வழங்க வேண்டுகோள் கூட்டம் நடத்த இயலாது என்று தெரிவித்தார். இந்நிலையில் மானூர் யூனியன் துணைத்தலைவர் பாலகுமார் 9.2.2006 அன்று மானூர் யூனியன் வேண்டுகோள் கூட்டம் நடைபெறும் என்று யூனியன் கவுன்சிலர்களுக்கு அழைப்பு அனுப்பினார். (தினத்தந்தி).

 

ஆலைக்கு இயக்க உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதற்கான ஆவணங்களும் தனது பார்வைக்கு வைக்கப்படவில்லை என்றும் கூறி கூட்டத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது என ஊராட்சிக் குழுத் தலைவி விஜயா, உறுப்பினர் சி.எஸ். மணி ஆகியோர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சிறப்புக் கூட்டம் துணைத் தலைவர் பாலகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிதாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு பார்வையாளராக உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) பரமசிவம் கலந்து கொண்டார். மொத்த உறுப்பினர்கள் 21 பேரில் 17 பேர் கலந்து கொண்டனர். தலைவி உள்ளிட்ட 4 பேர் கலந்து கொள்ளவில்லை. (தினமணி).

 

நேற்று மானூர் சுற்றுப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். மானூர் பஸ் ஸ்டாப், யூனியன் அலுவலகத்தில் நேற்று மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. யூனியன் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த சில அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் பரவியதையடுத்து மதவக்குறிச்சி, எட்டான்குளம், கங்கைகொண்டான், ரஸ்தா உட்பட பல்வேறு கிராமங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணிகளை மாவட்ட எஸ்.பி.ஆனந்தகுமார் சோமானி பார்வையிட்டார். (தினமலர்).

 

தி.மு.க.வைச் சார்ந்த துணை சேர்மன் பாலகுமார் நடத்திய இந்தக் கூட்டத்தின் ஒரே நிகழ்ச்சி நிரல் கோக் (எஸ்.ஐ.பி.சி.எல்) கம்பெனிக்கு அனுமதி வழங்குவதுதான். கூட்டம் தொடங்கியவுடனே இந்த ஆலையை எதிர்த்து வருபவரான கவுன்சிலர் சி.எஸ்.மணி பேசினார். அனுமதி கோரி விண்ணப்பித்துள்ள கோக் கம்பெனி கொடுத்துள்ள ஆவணங்களின் பட்டியலையும், நகலையும் தருமாறு அதிகாரிகளிடம் கோரினார். அவருடைய கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்கவில்லை. (தி இந்து).

 

""கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த துணைத்தலைவராகிய நீங்கள் கூறுங்கள்'' என்று மணி கேட்டார். உடனே துணைத்தலைவர் ""தீர்மானம் நிறைவேறிவிட்டது'' என்று அறிவித்தார். இதையடுத்து ஆவேசமடைந்த மணி கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டம் துவங்கிய 15 நிமிடத்தில் முடிந்தது. (தினமலர்).

 

கொக்கோ கோலாவிற்கு ரன்னிங் லைசென்ஸ் வழங்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்ட கவுன்சிலர்கள் அனைவருக்கும் "பெப்சி' குளிர்பானம் வழங்கப்பட்டது. அனைத்து கவுன்சிலர்களும் ரசித்து உறிஞ்சி மகிழ்ந்தனர். கவுன்சிலர்கள் அனைவரும் தனி வேனில் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டு, அதே வேனில் திரும்ப அழைத்துச் செல்லப்பட்டனர். (தினகரன்).

 

குளிர்பானக் கம்பெனிக்கு ஆதரவாக தங்கள் கட்சியின் கம்பெனி எதிர்ப்புக் கொள்கையை "கண்டுகொள்ளாமல்' புதிய தமிழகம் கட்சி கவுன்சிலர்கள் ஜெயபால், லட்சுமி, சவுரியம்மாள், கணபதி உள்ளிட்ட கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசு, ம.தி.மு.க. கவுன்சிலர்கள் "ஒற்றுமை' யுடன் செயல்பட்டு கம்பெனிக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினர். (தினமலர்).

 

இந்தத் துரோகம் எதிர்பாராதது அல்ல் கொக்கோ கோலா ஆலைக்கு எதிராகப் போராடி வரும் மக்கள் இந்தச் சம்பவத்தினால் அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அடைவதற்கும் எதுவுமில்லை. மாறாக, இச்செய்திகளைக் கூர்ந்து நோக்கினால் மக்களின் வெறுப்பையும் கோபத்தையும் கண்டு எதிரிகள் அடைந்திருக்கும் பீதியைப் புரிந்து கொள்ள முடியும். மக்களின் போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைப் பெறவும் முடியும்.

 

கூட்டம் நடப்பதற்கு 4 நாட்கள் முன்னதாகவே கோக்கிற்கு ஆதரவாக வாக்களித்த 16 கவுன்சிலர்களும் தத்தம் ஊர்களிலிருந்து காணாமல் போய்விட்டார்கள். பாதுகாப்பான விபச்சாரத்திற்கு பொறுக்கிகள் தேர்ந்தெடுக்கும் புண்ணியஸ்தலமான திருப்பதிக்கு கவுன்சிலர்களை ஓட்டிச் சென்றது கோக் நிர்வாகம். செய்தியறிந்த எமது தோழர்கள் கங்கைகொண்டான் சுற்று வட்டாரம் முழுவதும் சுவரொட்டிகள் மூலம் இதை அம்பலப்படுத்தினர். கோக்கின் சதியை அம்பலப்படுத்தி எல்லா கிராமங்களிலும் பிரசுரம் விநியோகித்தனர். 10ஆம் தேதியன்று மானூர் பஞ்சாயத்து யூனியனுக்குத் திரண்டு வருமாறு அறைகூவல் விடுத்தனர். "ஜாலி டூர் விவகாரம்' பத்திரிகைகளிலும் சந்தி சிரித்தது.

 

கொக்கோ கோலாவிற்கு கங்காணி வேலை பார்ப்பதற்காகவே ஒதுக்கப்பட்டிருக்கும் ""கியூ'' பிரிவு போலீசு பிராணிகள் உடனே விழித்துக் கொண்டன. கோக்கின் "தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி'யாகச் செயல்படும் மாவட்டபோலீசு நிர்வாகமோ, ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியே போலீசு படையை அனுப்பி மக்களை அச்சுறுத்தியது. இந்தக் கெடுபிடிகளையெல்லாம் மீறி, 10ஆம் தேதியன்று தங்கள் கைக்காசைப் போட்டு பேருந்தைப் பிடித்து மானூர் வந்து சேர்ந்த மக்கள், பஞ்சாயத்து அலுவலகத்தை நெருங்கக் கூட முடியவில்லை.

 

மக்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் சோமானியின் தலைமையில் ஒரு போலீசு படை பஞ்சாயத்து யூனியன் கட்டிடத்தை முற்றுகையிட்டிருந்தது. உள்ளே "ஜனநாயகம்' வேலை செய்த லட்சணத்தை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள் எழுதியுள்ளதைத்தான் நீங்கள் ஏற்கெனவே படித்துள்ளீர்கள்.

 

மறுகாலனியாதிக்கம் என்பது தன் இயல்பிலேயே ஜனநாயகத்திற்கு விரோதமானது என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு சான்று. எந்த ஒரு ஆலையும் இயக்க உரிமம் (சுருNNஐNபு) பெற வேண்டுமானால் அதற்குரிய தரவுகளையும் ஆவணங்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதா, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையின்மைச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா, தண்ணீர் பயன்பாடு குறித்து குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையின் மதிப்பீடு என்ன என்பன போன்ற எந்த விவரங்களையும் ஊராட்சி மன்ற உறுப்பினருக்குக் கொடுக்காமல் "கையெழுத்து போடு' என்று மிரட்டுகிறது கோக். கேள்வி எழுப்பினாலோ வாய் திறக்க மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

 

வாய் நிறைய எலும்பைக் கவ்வியிருக்கும்போது எப்படித் திறக்க முடியும்? அமைச்சர்களும், மெத்தப் படித்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இந்த பன்னாட்டு மூத்திரக் கம்பெனியின் பின்னால் ரொட்டித்துண்டுக்கு அலையும் தெருநாய்களைப் போல அலையும்போது, ஒரு சாதாரண கவுன்சிலரின் கேள்விக்கு எப்படி பதில் கிடைக்கும்? அதனால்தான் பயங்கரவாதியைப் பின் தொடர்வதைப் போல கவுன்சிலர் மணியைப் பின்தொடர்கிறது போலீசு.

 

கவுன்சிலர் மணி ஒரு மில் தொழிலாளி. ஊராட்சி மன்றத் தலைவர் விஜயாவோ தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண். கோக்கை எதிர்க்கும் மற்ற 3 கவுன்சிலர்களும் பெரிய படிப்போ அந்தஸ்தோ இல்லாத எளிய மனிதர்கள். ஆனால், தாம் பிறந்த மண்ணுக்கும் மக்களுக்கும் விசுவாசமானவர்கள். தம் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து வரக்கூடும் என்று தெரிந்தும் கோக்கிற்கு விலை போக மறுக்கும் நேர்மையாளர்கள்! வாங்கிய காசுக்காகவும், வாங்க விரும்பும் பதவி உயர்வுக்காகவும் சட்டத்தை வளைத்து எட்டப்பன் வேலை பார்க்கும் கைக்கூலிகளுக்குப் பெயரோ அதிகாரிகள், ஆட்சியாளர்கள்! இவர்கள் நடத்தும் நிர்வாகத்துக்குப் பெயர் ஜனநாயகம்!

 

16 கவுன்சிலர்களும் கோக்கினால் குளிப்பாட்டப்பட்டவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி காமெராவின் முன்னால் பிடிபட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை! கேள்வி கேட்காமலிருப்பதற்காக லஞ்சம் வாங்கிய கவுன்சிலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் திருப்பதி உண்டியலில் இவர்கள் காசு போட்டார்களா, இவர்களுடைய உண்டியலில் கோக் காசு போட்டதா என்பதையும், அங்கே லட்டு தின்று துளசி தீர்த்தம் குடித்தார்களா அல்லது சரக்கடித்து மட்டன் பிரியாணி தின்றார்களா என்று நாம் படமெடுத்து நிரூபிக்க வேண்டும். அத்தகைய அபாயத்தைத் தடுப்பதற்காக நெல்லை மாவட்ட போலீசின் பாதுகாப்பைக் கூட கோக் ஏற்பாடு செய்திருக்கக் கூடும்.

 

கங்கைகொண்டானில் 16 கவுன்சிலர்கள் அமைத்துள்ள சர்வ கட்சிக் கூட்டணியிலிருந்து தமிழகமே பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். வற்றாத தாமிரவருணியை, வறண்டு போன தென் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்தை, நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயத்தை என அனைத்தையும் அழிக்கவிருக்கும் ஒரு அமெரிக்க கம்பெனிக்கு கைக்கூலிகளாகச் செயல்பட்டுள்ளவர்கள் இந்த கவுன்சிலர்கள் மட்டுமல்ல. ஜெயலலிதா, கருணாநிதி, வை.கோ., ராமதாசு போன்ற அனைவரும்தான். தொகுதிப் பங்கீடு, பேச்சு வார்த்தை போன்ற எதுவும் இல்லாமல் காதும் காதும் வைத்தாற்போல இயங்கும் இந்த சர்வகட்சிக் கூட்டணியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

இவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளும் விதத்தில் கோக் ஆலைக்கெதிராகக் குரல் கொடுத்து வருகிறது "மார்க்சிஸ்டு' கட்சி. மேற்கு வங்கத்தில் கோக்பெப்சி ஆலைகள் இயங்கி வருகின்றன் "உலகப் புகழ் பெற்ற' பிளாச்சிமடா ஆலைக்கு உரிமம் வழங்கியதும் "மார்க்சிஸ்டு' அரசுதான். இந்த உண்மைகள் ஒருபுறம் இருக்கட்டும்; தோழமைக் கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரசு போன்ற கட்சிகளும், சுற்றுச் சூழலுக்காக பசுமைத்தாயகம் என்றொரு தனி அமைப்பை வைத்து நடத்தும் பா.ம.க.வும் கோக் ஆலைக்கு ஆதரவளித்து வருவதை "மார்க்சிஸ்டு' கட்சி அம்பலப்படுத்துமா? இவர்களுடைய கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கோக் ஆலைக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி இடம் பெறுமா? அல்லது 3 மாவட்ட மக்களின் வாழ்க்கை சோரம் போவதை அனுமதித்து விட்டு "மார்க்சிஸ்டு' கட்சி தி.மு.க.வுடன் தொகுதி பேரம் பேசுமா?

 

வரவிருக்கும் தேர்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும் கொக்கோ கோலாவிற்குக் கவலை இல்லை. கங்கைகொண்டான் மக்களுக்கும் விடிவு இல்லை. ஆனால், ஓட்டுக் கட்சிகளின் இந்த நாடகம் நெடுநாள் நீடிக்க முடியாது. மக்கள் முகத்தில் விழிக்க அஞ்சி, தலைமறைவான கவுன்சிலர்களைப் போல எல்லா எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் ஒளிய வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மானூர் பஞ்சாயத்து கவுன்சிலர்களை மக்களிடமிருந்து பாதுகாக்க போலீசு படை குவிக்கப்பட்டதைப் போல சட்டமன்ற, நாடாளுமன்றக் கூட்டங்களுக்கும் போலீசைக் குவிக்க வேண்டியிருக்கும். கவுன்சிலர்களுக்கே கறுப்புப் பூனைகள் தேவைப்படுவார்கள்.

 

இராக்கில் நடப்பது மட்டுமல்ல, இங்கே கங்கை கொண்டானில் நடப்பதும் ஆக்கிரமிப்புதான் என்பதைப் பாமர மக்களும் புரிந்து கொள்வார்கள். அப்போது கோக் எதிர்ப்புப் போராட்டம் விடுதலைப் போராட்டமாக வடிவெடுக்கும்.

 

போராட்டக் குழு

ம.க.இ.க வி.வி.மு

பு.மா.இ. பு.ஜ.தொ.மு.