மனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி, குறிகளின் தொகுப்புக்கள் மொழியாகி, இன்று இனக்குழுமங்களை அடையாளப்படுத்தும் குறிகாட்டிகளாக நிற்கின்றன. காலந்தோறும் மானிடர்களின் பரிணாம வளர்ச்சி இயற்கையுடன் இயைந்ததாகவே கட்டியமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த மானுட இயக்கத்திற்கும் இயற்கையும் இயங்கியலுக்குமிடையிலேயே மனித சமூகத்தின் படைப்பாக்கங்கள் நிகழ்ந்துள்ளன. மொழியின் உருவாக்கத்துக்கு முன்னர் வேட்டையாடி வாழ்ந்த மாந்த சமூகம் தனக்குள் ஊடாடுவதற்கும், காட்டினுள் தனது இயக்கத்தினை தனது சமூகத்திற்கு தெரிவிப்பதற்கானதுமான குறிகாட்டியாக ஓசையைக் கண்டறிந்திருக்கலாம். மனித வாழ்வியல் தொடர்ச்சியின் கண்டுபிடிப்புக்களில் இன்று இனத்தின் அடையாளமாகவும் உணர்வுத் தளத்தில் மக்களை ஒன்றிணைக்கக்கூடியதுமான இசைக்கருவியாக பறையினைக் குறிப்பிடலாம். பறை என்ற சொல் “பறைதல்” என்ற வேரினடியாகப் பிறந்திருக்கலாம். கல்தோன்றி மண்தோன்றி கடல்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த தமிழுக்கும் முன்தோன்றியது பறை என்று கூற முடியும். உலகின் தொல்குடிகள் அனைத்தினதும் வரலாற்றினை நோக்கின், அவர்களது வரலாற்றில் தோற்கருவியென்பது அவர்களின் அடையாளமாக இருக்கும். தொல்குடியான தமிழர்களின் வரழ்வியலிலும் “பறை” எனும் இசைக்கருவி தொல்கருவியாக இருந்து, சமூக இயங்கியல் மாற்றங்களுக்கு உட்பட்டு, இன்று தொன்மங்களின் எச்சங்களில் ஒன்றாகவும் மீளத்தேடப்படும் மரபுகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. தமிழினத்தின் அடையாளமொன்று இன்று வெறுமனே சாதிய அடையாளமாக மாற்றப்பட்டு அதன் ஆற்றுகை வெளியைக் குறைத்துள்ளது. இவ்வேளையில் பறை என்னும் இசைக்கருவி தமிழனின் வாழ்வியலில் எவ்வாறு ஒத்திசைந்திருக்கின்றது என்பதையும் இன்று அதன் அடையாளங்கள் உருமாற்றப்பட்டு ஒரு இனக்குழுமத்தின் அடையாளத்தை சிதைப்பதற்கான கருவிகளில் ஒன்றாக எவ்வாறாகக் கையாளப்படுகின்றது என்பதையும் நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக இருக்கின்றது.
Read more...
|