இந்த நாட்களில் தான் யாழ்ப்பாண பொதுசன நூலகம் கிழட்டு நரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அடியாட்களான காமினி திசாநாயக்கா, சிறில் மத்தியு கும்பலால் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலையின் ஏட்டுச்சுவடி, ஆனந்த குமாரசுவாமியின் ஆய்வுகள், பேராசிரியர் ஜசாக் தம்பையாவின் நூல்கள் போன்ற 97000 நூல்கள் தீயில் எரிந்து போயின. நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் பிதா. டேவிட் மரணமடைந்தார். நூலகத்தினை எரித்த நெருப்பு அடங்கிய போதும் தமிழ்மக்களின் மனதில் எழுந்த கோபம் ஒரு போதும் அணைந்துவிடவில்லை.
யாழ்ப்பாண நூலக எரிப்பை வைத்து சுஜாதா "ஒரு இலட்சம் புத்தகங்கள்" என்னும் ஒரு கதை எழுதினார். நூலகத்தை பொலிஸ்காரர்கள் எரித்தார்கள் என்று கதையில் சொல்கிறார். அதாவது ஜே.ஆர் ஜெயவர்த்தனா, காமினி திசைநாயக்கா, சிரில் மத்தியு போன்ற எரிக்கச் சொன்னவர்களை மிகக்கவனமாக தவிர்த்து விட்டு உத்தரவிற்கு கீழ்ப்படிந்து எரித்த பொலிஸ்காரர்களை குற்றவாளி ஆக்குகிறார். இது தான் அவர்களது வழக்கமான தந்திரம். இந்தியாவின் ஊழலைப் பற்றி சொல்லும் போது இந்தியாவின் ஜனாதிபதி, பிரதம மந்திரி தொடக்கம் மந்திரி, பிரதானிகள் வாங்கும் ஊழலைப் பற்றி சொல்லாமல் அய்ந்திற்கும், பத்திற்கும் கையேந்துபவர்களின் ஊழல்களை விலாவாரியாக எழுதுவார்கள். அதிகாரவர்க்கத்தை பகைத்து பிரச்சனைப்படாத அதேநேரம் ஊழலை பதிவு செய்த தார்மீகக்கடமை முடித்த திருப்தியோடு பத்திரிகை அலுவலகத்திற்கு கதையை அனுப்புவார்கள்.
Read more...
|