தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழுத்தடிக்கும் தந்திரம்
அவ்வாறான ஒரு காலகட்டத்தில் கியூ பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் சந்திக்க முடிந்தது. எம்மை மகேஸ்வரனிடம் அறிமுகப்படுத்தி எமது கஸ்டமான நிலைமைகளைச் சொல்லி ஏதாவது பணவசதி செய்ய முடியுமா என்று கேட்டோம். அவரோ தன்னிடம் இருந்த பணத்தினை இந்திய அதிகாரிகள் பறித்து விட்டனர் என்றும் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று தான் திருப்பித் தருகிறார்கள் என்றும் தாம் யோசித்து முடிவு சொல்வதாகவும் கூறினார்.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரனிடம் காத்தான்குடி வங்கிப்பணம் நிறைய இருந்தபோது அதில் ஒரு பகுதியினை ரெலோ 1984 இல் கொள்ளை அடித்திருந்தது. அந்தக் கொள்ளைக்கு ரெலோ கூறிய காரணம், அந்தப் பணம் சிறிலங்கா அரசினால் திரும்பவும் மீட்கப்படப் போவதாகவும் மகேஸ்வரனின் இயக்கத்தால் அந்தப் பணத்தினைப் பாதுகாக்க முடியாது என்பதுமாகும். அதனால் அவர்கள் ரெலோ மீது ஆத்திரத்துடன் இருந்தனர். அதைவிட அது மனோ மாஸ்ரரின் ஒப்புதலின் அடிப்படையில் நடந்ததாகவும் நாம் மனோ மாஸ்ரர் சார்ந்த குழுவினர் என்பதால் உதவி செய்ய முடியாது எனவும் கூறினார். பின்னர் எம்முடன் பெண்கள் இருப்பதால் தாம் மீண்டும் யோசித்து முடிவு சொல்வதாகக் கூறினார். எனவே அடிக்கடி தம்பாப்பிள்ளையைச் சந்திப்பதும் அவர்களின் முடிவுக்காகக் காத்திருப்பதும் எமது வேலையாகி விட்டது.
Read more...
|