இந்த உண்மையை அனைவரும் மூடிமறைக்கவே விரும்புகின்றனர். வடக்கு – கிழக்கில் பெண்கள் உடலை விற்கின்றனர், விற்பது அதிகரித்து வருகின்றது. அவள் ஏன் உடலை விற்கின்றாள்? இதை இந்த சமூகம் ஆராய மறுக்கின்றது. தனது குற்றமாக இதை உணர மறுக்கின்றது. "நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற பேட்டியை ஒரு கற்பனை கதை என்று சொல்பவர்களும், இது ஒரு வியாபாரக் கதை என்ற சொல்பவர்களும் (ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்) வடக்கு கிழக்கில் பெண் ஏன் உடலை விற்கின்றாள் என்பதற்கு பதில் சொல்லவேண்டும். ஒரு உண்மையை வியாபாரமாக்குபவர்கள், அரசியல்ரீதியாக இழிவுபடுத்துபவர்களைக் கொண்டு, இந்த எதார்த்தத்தை யாரும் புதைத்து விடமுடியாது. இதுவொரு கற்பனை என்றால் கூட, உண்மையான எதார்த்தத்தில் இருந்து தான் புனையப்பட்டது. கற்பனையாளனின் நோக்கத்தை மறுப்பதன் பெயரால், உண்மைகளை புதைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. முரண்பாடான எதிர்முனை அரசியல் தளத்தில் இருப்பவர்கள், தங்கள் குறுகிய அரசியலில் இருந்து இதை மறுக்கின்றனர். உண்மையை வியாபாரமாக விளக்கி, இதை புதைக்க முனைகின்றனர். இதுவொரு சமூகத்தின் பொது அவலம். ஒடுங்கிச் சிதைந்து போகும் பல நூறு பெண்களின், உண்மையான சொந்தக் கதை.
Read more...
|