"தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?" என்று தலைப்பிட்ட வினவு கட்டுரை, உள்ளடக்கத்தை குறுக்கிக் காட்டுகின்றது. இதே உள்ளடக்கத்தில் தமிழ் சிங்கள மீனவர்களின் மோதலா எனில் இல்லை. இலங்கை இனப்பிரச்சனையில் தமிழ் - சிங்கள மக்கள் மோதலா எனின் இல்லை.
மோதல் மக்களின் வாழ்வுக்கு வெளியில் நடக்கின்றது. அவர்களின் கோரிக்கை அல்லாத தளத்தில் நடக்கின்றது. மக்களின் கோரிக்கையை தமது வர்க்க மற்றும் அரசியல் தேவைக்கு ஏற்ப குறுக்கியும் திரித்தும் முன்னிறுத்துகின்றனர்.
தமிழக மீனவர்களைப் படுகொலை செய்யும் இலங்கை அரசும் சரி, அதைக் கண்டிக்கும் தமிழக தமிழ் தேசியமும் (புலித் தேசியமும்) சரி, சாராம்சத்தில் ஒன்றைத்தான் செய்கின்றனர். மீனவர்களின் நலனில் இருந்து இதை அணுகுவது கிடையாது. தங்கள் குறுகிய அரசியல் நோக்கில் இருந்து இதைத் திணிக்கின்றனர்.