1983 இல் 13 இராணுவத்தினரின் கொலையும் மக்கள் போராட்டமும்
1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய பல இடங்களையும் அவர்கள் ஏற்படுத்திய பல அழிவுகளையும் நாம் பார்த்தோம். வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எமக்குள் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
1983 இனப்படுகொலைகளின் பின் இயக்கத்தில் சேர வேண்டும் என்ற முடிவில் இருந்த எனக்கு புலிகளுடன் சேர வேண்டும் என்ற துளி ஆசையும் இல்லாததிற்கு இந்தத் தாக்கம் ஒரு பெருங் காரணமாகும். அத்துடன் வேறு காரணங்களும் இருந்தன. GUES போன்றவற்றில் வேலை செய்ததால் மக்கள் போராட்டம் சம்பந்தமான குறைந்தபட்ச அரசியல் அறிவும் இருந்தது. அரசியல் கொள்கைகள், தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்தபட்ச அறிவு இருந்தது. போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் எனக்கேற்பட்டிருந்தது.