Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையே அரங்கேறிய கொலைக் கலாச்சாரம்

புளொட்டின் முதலாவது மத்தியகுழுவிலிருந்து ஜயர், சாந்தன் ஆகியோர் விலகிக் கொண்டபின் சுந்தரம்(சதாசிவம் சிவசண்முகமூர்த்தி-சுழிபுரம்), உமாமகேஸ்வரன்(கதிர்காமப்பிள்ளை நல்லைநாதன்-தெல்லிப்பளை), வசந்தன்(தம்பிப்பிள்ளை சந்ததியார்-சுழிபுரம்), ராஜன்(ஞானப்பிரகாசம் ஞானசேகரன்-பரந்தன்), காத்தான்(கிருஷ்ணகுமார்-மானிப்பாய்), பார்த்தன்(இராஜதுரை ஜெயச்சந்திரன்-திருகோணமலை, கண்ணன்(ஜோதீஸ்வரன்-வடலியடைப்பு), இராமலிங்கம் வாசுதேவா (மட்டக்களப்பு), பாபுஜி(மாதகல்), நிரஞ்சன்(சிவனேஸ்வரன்-உடுவில்), மாணிக்கம்தாசன்(நாகலிங்கம் மாணிக்கம்தாசன்-யாழ்ப்பாணம்), பெரியமெண்டிஸ்(பாலமோட்டை சிவம்) உட்பட பலர் இணைந்து புளொட்டை வளர்ப்பதை நோக்கி செயற்படத் தொடங்கியிருந்தனர்.

சுந்தரம், உமாமகேஸ்வரன், ரவி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தபால் நிலையக் கொள்ளையுடன் ஆரம்பிக்கப்பட்ட புளொட்டின் செயற்பாடுகள், சுந்தரத்தின் தலைமையில் ஆனைக்கோட்டை பொலிஸ்நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றியும், கிளிநொச்சி வங்கியைக் கொள்ளையிட்டும் ஆயுதபலத்திலும் நிதிவளத்திலும் மேலோங்கி வந்த அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்தபோதிருந்த நடைமுறையான "துரோகிகள்" ஒழிப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

1970 வட்டுக்கோட்டை பாராளுமன்ற தேர்தலில் அமிர்தலிங்கத்தை தோற்கடித்த ஆ.தியாகராசாவையும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவரையும் கொலை செய்ததும் இதன்பாற்பட்டதே. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது சுத்த இராணுவக் கண்ணோட்டத்தையும் கடுமையாக விமர்சனம் செய்த சுந்தரம் "புதிய பாதை" பத்திரிகை மூலமாக முற்போக்குக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார். இடதுசாரி அரசியலில் ஓரளவு தெளிவுபெற்றிருந்த சுந்தரத்தால் வெளியிடப்பட்ட "புதிய பாதை" பத்திரிகை தாங்கி வந்த கருத்துக்கள் புளொட்டின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. புளொட்டின் இராணுவ மற்றும் அரசியல் விடயங்களில் சுந்தரத்தினுடைய செயல்திறனும், ஆற்றலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

காந்தீயம் செயற்பாடுளில் சந்ததியாருடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த பரந்தன்ராஜன் இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சந்ததியார் தொடர்ச்சியாக காந்தீயம் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்ததோடு, காந்தீயத்திற்கூடாக பலரை புளொட்டுக்குள் உள்வாங்கத் தொடங்கியிருந்தார். மாறுபட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட, மாறுபட்ட சமூகப் பார்வை கொண்டவர்கள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மூலம் புளொட் வளர்ச்சியடையத் தொடங்கியது. சுந்தரத்தின் கடின உழைப்பின் மூலம் வெளிவந்த "புதிய பாதை" பத்திரிகையும் இராணுவத் தாக்குதல்களும், சந்ததியாரால் காந்தீயம் அமைப்புக்கூடாக மக்கள் மத்தியில் மேற்கொண்ட பணிகளும் புளொட்டின் வளர்ச்சியை மிகவும் வேகமாக முன்நோக்கி கொண்டு சென்றது.

புளொட் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வந்ததோடு இராணுவத்தாக்குதல்களிலும் வெற்றிபெற்று வருவதை உன்னிப்பாகவும் காழ்ப்புணர்ச்சியுடனும் அவதானித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழவிடுதலைப் போராட்டம் தனது கைகளிலிருந்து விலகிச் செல்வதை உணர்ந்து கொண்டார். இப்பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் பார்வை இலங்கை இனவாத அரசின் மீதல்ல, புளொட்டின் மீது விழுந்திருந்தது. ஜனவரி 2, 1982 "புதிய பாதை" பத்திரிகை ஆசிரியரும், புளொட் என்ற இயக்கத்தை உருவாக்க மூலகாரணமாய் விளங்கியதுடன் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான சுந்தரம், "புதிய பாதை" பத்திரிகையை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை சித்திரா அச்சகத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சி பதவிக்கு வந்த காலத்திலிருந்தே தொடர்ச்சியாக தமிழர்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களையும், அவர்களின் நியாயபூர்வமான போராட்டங்களையும் அரசபடைகளை ஏவிவிட்டு அடக்கிவந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டிருந்தது. மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி விடுதலையான நவாலியைச் சேர்ந்த இன்பம்(இரத்தினம் விஸ்வஜோதி), செல்வம் ஆகியோர் அவர்களது வீடுகளிலிருந்து இரவுவேளை அரசபடைகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின் அவர்களது சடலங்கள் அல்லைப்பிட்டி வீதியில் இலந்தையடி என்னுமிடத்தில் வீசப்பட்டிருந்தன.

தமிழீழ விடுதலை இயக்கத்தைச்(TELO)சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் எதிர்பாராத வகையில் பருத்தித்துறைக்கருகே மணற்காடு என்ற இடத்தில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாண நூல்நிலையமும், யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களும் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசநாயக்கா போன்றோரின் நேரடி மேற்பார்வையில் தீக்கிரையாக்கப்பட்டன. 1977 பாராளுமன்றத் தேர்தலில் - "துரோகிகள்" துப்பாக்கி முனையில் ஒழித்துக்கட்டப்பட்ட தேர்தலில் - "தமிழீழமே ஒரே தீர்வு" என மக்களின் "ஆணை" பெற்று பாராளுமன்றம் சென்ற அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் மாவட்ட சபைகள் குறித்த கனவில் மூழ்கியவர்களாக தமது பாராளுமன்றப் பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசின் பேரினவாதப் போக்கையும், அரசபடைகளால் இளைஞர்கள் கைது செய்யப்படுவதையும், இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதையும், அமைச்சர்களின் மேற்பார்வையில் திட்டமிடப்பட்டு ஏவிவிடப்படும் வன்முறைகளையும் சுந்தரம் தனது "புதிய பாதை" பத்திரிகைக்கூடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றதுடன் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாது, ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் கூடி உறவாடி தேனிலவில் திளைப்பதையும், தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு தமிழ் மக்களின் நலன் அல்ல, பாராளுமன்ற ஆசனங்களே அவர்களது ஒரே குறிக்கோள் என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். தமிழ் மக்கள் பேரினவாத அரசுக்கெதிராக மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் பேரால் பிழைப்பு நடாத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கும் அவர்களது தவறான போக்குகளுக்கெதிராகவும் போராடவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார்.

ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளோ, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இன அழிப்பு நடவடிக்கைகளையோ, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழ்மக்களின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்ததையோ புரிந்து கொள்ள முடியாதவர்களாக காணப்பட்டதோடு, "அண்ணன்" அமிர்தலிங்கத்தின் அரவணைப்பில் வளர்ந்த "தம்பி" பிரபாகரன் சுந்தரத்தை அழித்தொழித்ததன் மூலம் அண்ணன் மீதான தம்பியின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் தன்னுடன் ஒன்றாகப் படுத்துறங்கிய மைக்கல், பற்குணம் போன்றவர்களை படுக்கையிலேயே சுட்டுக்கொலை செய்த, தமது இயக்கத்திலிருந்தவர்களை கொலை செய்வதற்கென குளிர்பானத்துக்குள் நஞ்சைக் கலந்து கொடுத்த கலாச்சாரத்தில் வளர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரினால் தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் சுந்தரத்தைப் படுகொலை செய்ததன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது கொலைக் கலாச்சாரத்தை மக்கள் முன் அரங்கேற்றியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து, அதிலிருந்து வெளியேறி வெளிப்படையாக தனது முற்போக்கு அரசியல் கருத்துக்களை முன்வைத்த சுந்தரத்தை படுகொலை செய்ததன் மூலம் யாருடைய நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் செயற்படுகின்றனர் என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். ஈழவிடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கெதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் மாத்திரம் அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூட தமது துப்பாக்கியை பகிரங்கமாக உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர்.

சுந்தரத்தின் படுகொலையை அடுத்து உமாமகேஸ்வரன், கண்ணன் (சோதீஸ்வரன்), உடுவில் சிவனேஸ்வரன், அரபாத் போன்றோர் இந்தியா சென்று விட்டிருந்தனர். சந்ததியாருடன் செயற்பட்டுவந்த பரந்தன் ராஜன், பாபுஜி, மாணிக்கம்தாசன் உட்பட பலர் ஏற்கனவே இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்ட நிலையிலும், சந்ததியார் தொடர்ச்சியாக காந்தீய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததோடு, காந்தீய அமைப்புக்கூடாக புளொட்டை வளர்க்கும் செயற்பாடுகளை செய்தவண்ணமிருந்தார். உமாமகேஸ்வரன் இந்தியாவில் தங்கிவிட்டிருந்த நிலையில் தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் புளொட்டுக்குள் பலரை உள்வாங்கிக் கொண்டு சந்ததியார் செயற்பட்டார். ஆனால் இக்கால கட்டத்தில் புளொட் ஒரு அமைப்பு வடிவத்தையோ, ஒரு அரசியல் கொள்கைத் திட்டத்தையோ, ஒரு வேலைத்திட்டத்தையோ கொண்டிருக்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தினரால் சுந்தரம் படுகொலை செய்யப்பட நிகழ்வானது புளொட் உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான உணர்வலைகளையும் ஏற்படுத்திவிட்டிருந்தது. ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட புளொட் உறப்பினர்கள் அரச படைகளின் தேடுதல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மட்டுமல்லாது ஈழ விடுதலைக்காகப் போராடுவதாக கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக் கரங்களில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புளொட்டின் முன்னணி உறுப்பினர்களை குறிவைத்து தமது கொலைத் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.

நியாயுதபாணியான சுந்தரத்தைக் கொலை செய்தும் அத்துடன் திருப்தியடையாத வேலுப்பிள்ளை பிரபாகரன் உமாமகேஸ்வரன் மீதான கொலை முயற்சியில் இறங்கினார், மே 19, 1982 சென்னை பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் துப்பாக்கி பிரயோகத்தில் இருந்து உயிர் தப்பிய உமாமகேஸ்வரனும் கண்ணனும் இந்தியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் உமாமகேஸ்வரன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனும் ராகவனும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட் உறுப்பினர்கள் மீது தொடர்ந்து வந்த கொலை முயற்சிகளால் ஏற்கனவே சுந்தரம் படுகொலையின் பின் கடுமையான உணர்வலைகளுக்கு உட்பட்டிருந்த புளொட் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவில் இருந்த அளவெட்டியைச் சேர்ந்த பரநிருபசிங்கம் இறைகுமாரன், சிவபாலசிங்கம் உமைகுமாரன் ஆகிய இருவரையும் கடத்திச் சென்று சுட்டுக் கொலை செய்திருந்தனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் பின் கருத்து முரண்பாடுகளையும், அரசியல் முரண்பாடுகளையும் ஜனநாயக முறையில் தீர்த்துக் கொள்வதற்கு மாறாக துப்பாக்கி முனையில் தீர்க்கப்படும் கொலைக் கலாச்சாரமாக ஈழ விடுதலைப் போராட்டம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

சுந்தரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது எப்படி நியாயப்படுத்த முடியாத ஒன்றோ அதேபோல் புளொட்டினால் இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை செய்யப்பட்டதும் எத்தகைய காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாததாகும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலை உணர்வுடன் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் இலங்கை அரசபடைகளால் மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு தமது தலைமையைக் காப்பதற்கான போட்டியிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34

35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது