Language Selection

சமூகவியலாளர்கள்

கேரளம் என்று பிரிப்பதுவும் - நாம்
கேடுற ஆந்திரம் புய்ப்பதுவும்
சேரும் திராவிடர் சேரா தழித்திடச்
செய்திடும் சூழ்ச்சி அண்ணே - அதைக்
கொய்திட வேண்டும் அண்ணே.

கேரளம் என்னல் திராவிடமே - ஒரு
கேடற்ற ஆந்திரம் அவ்வாறே
கேரளம் ஆந்திரம் சேர்ந்த மொழிகள்
திராவிடம் ஆகும் அண்ணே - வேறு
இராதெனல் உண்மை அண்ணே.

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னடம் என்பதுவும்
நந்தம் திராவிட நாடெனல் அல்லது
வந்தவர் நாடாமோ? - அவை
வடவர் நாடாமோ?

செந்தமிழ் கேரளம் ஆந்திரமும் - அவை
சேர்ந்திடும் கன்னட நன்மொழிகள்
அந்த மிகுந்த திராவிடம் அல்லது
ஆரியச் சொல்லாமோ? - அவர்
வேர்வந்த சொல்லாமோ?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt233

கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை
கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.
கோட்டை நாற்காலி...

கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை.
கோட்டை நாற்காலி...

காட்டை அழிப்பது கூடும் - அலை
கடலையும் தூர்ப்பது கூடும்
மேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும்
ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை
எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?
கோட்டை நாற்காலி...

அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர்
வொடுக்குதல் எவ்வாறு முடியும்?
திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத்
திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்?
கோட்டை நாற்காலி...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt232

மனவீட்டைத் திறப்பாய் - சாதி
மனக்கத வுடைத்து
மனவீட்டைத்...

இனமான திராவிடர் பண்பின்
எழில்காண உணர்வு விளக்கேற்று
மனவீட்டைத்...

புனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம்
புராண வழக்கங்கள் யாவும்?
இனிமேலும் விட்டுவைக் காதே
எடுதுடைப் பத்தைஇப் போதே
தனிஉலகை ஆண்டனை முன்னாள்
தன்மானம் இழந்திடாதே இந்நாள்
மனவீட்டைத்...

வடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த
வஞ்சங்கள் சிறிதல்ல தம்பி
இடைநாளில் மட்டுமா? சென்ற
இரண்டாயிரத் தாண்டு பார்த்தார்
விடுவாயாடா தன்ன லத்தை - உன்
விடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு.
மனவீட்டைத்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt231

1
"இனப்பெயர் ஏன்"என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
"நான்தான் திராவிடன்" என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!
"முன்னாள்" என்னும் பன்னெடுங் காலத்தின்
உச்சியில் "திராவிடன்" ஒளிசெய் கின்றான்.
அன்னோன் கால்வழி யாகிய தொடர்கயிற்று
மறுமுனை நான்!என் வாழ்வின் கால்வழி
யாகிய பொன்னிழை அளக்க ஒண்ணா
எதிர்கா லத்தின் கடைசியோ டியைந்தது.
சீர்த்தியால், அறத்தால், செழுமையால் வையப்
போர்த் திறத்தால் இயற்கை புனைந்த
ஓருயிர் நான்!என் உயிர்இனம் திராவிடம்
ஆரியன் அல்லேன் என்னும் போதில்
எத்தனை மகிழ்ச்சி! எத்தனை மகிழ்ச்சி!
விரிந்த வரலாற்றுப் பெருமரம் கொண்ட
"திராவிடன்" ஆலின் சிறிய வித்தே!
இந்நாள் வாழ்வுக் கினிதினி தாகிய
பொன்னேர் கருத்துக்கள் பொதிந்துள அதனில்!
உன்இனப் பெயர்தான் என்ன என்று
கேட்கக் கேட்க அதனால் எனக்கு
மீட்டும் மீட்டும் இன்பம் விளைவதாம்.

2
கடந்த காலப் படம் இது:
அடடே வடபெருங் குன்றமும் இல்லை!
அவ்விடம் நீர்ப்பரப்பு - ஆழ்கடல் உள்ளதே!
அப்பெருங் கடல்அலை, அழகிய விந்திய
வெற்பின் வடபுறத்து விளையா டினவே!
மேற்கு அரபிக்கடல் கிழக்கு வங்கக்கடல்
இல்லை! என்ன வியப்பு இது!
ஆபி ரிக்கமும், ஆத்திரே லியமும்
குமரி ஆறுபாய் குளிர்தென் மதுரையும்
இடையீ டின்றி நெடிது கிடந்த
"தொடித்தோள் வையம்" தோன்றக் கண்டேன்.
அங்குக் கண்டேன்:
தென்மது ரைத்தமி ழின்முதற் கழகம்!
அதன்பாற் கண்டேன்:
ஆன்ற முத்தமிழ் அறிஞர் பல்லோரை.
நான்ஓர் திராவிடன்; நனிமகிழ் வுடையேன்!

தொடித்தோள் வைய நெடிய வானில்,
உடுக்கள் போற்பல உயர்நா டுகளும்
அவற்றிடைத் திகழும் அழகு முழுமதித்
தென்மா மதுரையும் திகழ்வ தாகப் -
பெருஞா லத்தின் இருள்கெடத் தமிழறிவு -
திராவிடர் கொண்டு சேர்க்கின் றாரே.

3
என்னே! என்னே!
வடக்குக் கடல்நீர் தெற்கிற் பாய்ந்ததே!
தொடித்தோள் வையத் தூயநா டுகளில்
சிற்சில வற்றைச் சீறிவிழுங் கிற்றே!
அத்தென் பாங்கினர் அடைந்தனர் இங்கே
மீண்டும் தெற்கில் ஈண்டிற்று வெள்ளம்!
மற்றும் சிற்சில மண்ணகம் மறைந்தன.
என்னே கொடுமை!
அங்குளார் இங்கு வந்தனர் அலறியே.
`தெய்'என்று செப்பும் தீமுதல் ஐந்தில்
நீர்ஒன்று அடிக்கடி நெடுநிலம் விழுங்கலால்
சிதறி வந்த தென்புலத் தாரை
ஓம்பும்நாள் இடைவிடாது உளவா யிற்றே!

4
கடற்கீழ்க் கிடந்த வடபெரும் பனிமலை
மேற்றோன் றும்படி மிகுபெருங் கடல்நீர்
தென்பால் ஐயகோ சீறி வந்ததால்
தொடித்தோள் வையமே படிமிசை மறைந்ததே.
இன்று தென்கடலில் இலங்கை முதலால்
ஒன்று மில்லை.
மேற்கிடம் அரபிக் கடலும்
கிழக்கிடம் வங்கக் கடலும்
அன்றி வேறில்லை.
வடபெரும் பனிமலை மண்மேற் றோன்ற
அங்கிருந்து விந்தியம்ஆம் குன்ற மட்டும்
நிலப்பரப் பானது!
திகழ்விந் தியத்தின் தென்னாட்டுத் திராவிடர்
அங்கும் குடிபுகுந் தழகு செய்தனர்.
ஆரியர் கால்நடை அமைய வந்தவர்,
பனிவரை யடுத்த நனிபெரு நிலத்தில்
தங்கினர். தங்கித் தங்கள் வாழ்வையும்
மொழியையும் தமிழால் ஒழுங்கு செய்தனர்.
வடபால் இருந்துதென் குடபால் வந்த
ஆரியர் சிற்சிலர்
குடமலைச் சாரல் அடைந்தார் ஆதலின்
குடமலை தன்னைக் குடமுனி என்றனர்.
ஆரியர் இங்குச் சீரிய தமிழில்
அறிவு பெற்றனர் அதிகா ரத்தின்
விருப்பால் நாடொறும் விளைத்தனர் சூழ்ச்சிகள்.
இடைத்தமிழ்க் கழகம் கடைத்தமிழ்க் கழகம்
முதற்பெருங் கழகம் ஆகிய
எவற்றிலும் தம்பெயர் ஏற்றித் தம்மைத்
திராவிட இனத்திற் சேர்ந்தோர் போலக்
காட்ட முயன்றனர் அன்றோ!
திராவிடன் நான்! என் பெருமை
இராவிடம் இல்லை மகிழ்ச்சி பெரிதே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt230

ஒருநாள்நம் பாரதியார் நண்ப ரோடும்
உட்கார்ந்து நாடகம்பார்த் திருந்தார். அங்கே
ஒருமன்னன் விஷமருந்தி மயக்கத் தாலே
உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன்
இருந்தஇடந் தனிலிருந்தே எழுந்து லாவி
"என்றனுக்கோ ஒருவித மயக்கந் தானே
வருகுதையோ" எனும்பாட்டைப் பாட லானான்!
வாய்பதைத்துப் பாரதியார் கூவு கின்றார்:

"மயக்கம்வந்தால் படுத்துக்கொள் ளுவது தானே
வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா" என்றார்!
தயங்கிப்பின் சிரித்தார்கள் இருந்தோ ரெல்லாம்;
சரிதானே பாரதியார் சொன்ன வார்த்தை?
மயக்கம்வரும் மதுவருந்தி நடிக்க வந்தான்;
மயக்கவிஷம் உண்டதுபோல் நடிப்புக் காட்டும்
முயற்சியிலும் ஈடுபட்டான். தூங்கி விட்டால்
முடிவுநன்றா யிருந்திருக்கும் சிரம மும்போம்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt229

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE