Language Selection

சமூகவியலாளர்கள்

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!

குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் புதுமை கண்டதோ
என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிரிப்பு!

வாரீர்! அணைத்து மகிழவேண் டாமோ?
பாரீர்! அள்ளிப் பருகமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது. பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt248

தெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசை
சிறியதொரு நாற்காலி தவிர மற்றும்
இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,
எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்று
வருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;
மாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்தி
ஒருதடவை வௌியினிலே பார்த்தேன். அங்கே
ஒருபழைய நினைப்புவந்து சேர்ந்த தென்பால்!

நெஞ்சத்தில் `அவள்'வந்தாள்; கடைக்கண் ணால்என்
நிலைமைதனை மாற்றிவிட்டாள்; சிரித்தாள்; பின்னர்
கஞ்சமலர் முகத்தினையே திருப்பிக் கோபம்
காட்டினாள்! பூமலர்ந்த கூந்தல் தன்னில்
மிஞ்சும்எழில் காட்டினாள்! அவள்தன் கோபம்
மிகலாபம் விளைத்த தன்றோ என்றனுக்கே!
`அஞ்சுகமே வா'என்று கெஞ்சி னேன்நான்
அசைந்தாடிக் கைப்புறத்தில் வந்து சாய்ந்தாள்.

இவ்வுலகம் ஏகாந்தத் தின்வி ரோதி!
இதோபாராய் பிச்சைஎன ஒருத்தி வந்தாள்.
திவ்வியமாம் ஒருசேதி என்று சொல்லித்
தெருநண்பர் வருவார்கள் உயிரை வாங்க!
`வவ்வவ்'வென் றொருகிழவி வருவாள்; உன்றன்
மணநாளில் என்னைஅழை என்று சொல்வாள்!
ஒவ்வொன்றா? என்செயலாம்! நீயும் நானும்
உயர்வானில் ஏறிடுவோம் `பறப்பாய்' என்றேன்.

மல்லிகையின் அரும்புபோல் அலகும், நல்ல
மாணிக்கக் காலும்,மணி விழியும், பால்போல்
துல்லியவெண் சிறகும்உற்ற பெண்பு றாவாய்த்
துலங்கினாள். நானும்ஆண் புறாவாய்ப் போனேன்.
அல்லலற வான்வௌியில் இருவர் நாங்கள்;
அநாயாச முத்தங்கள் கணக்கே யில்லை;
இல்லையென்று சொல்லாமல் இதழ்கள் மாற்றி
அவைசாய்ந்த அமுதுண்போம்; இன்னும் போவோம்.

பொன்னிறத்துக் கதிர்பாயும்முகிலிற் பட்டுப்
புறஞ்சிதறும் கோடிவண்ண மணிக்கு லம்போல்
மின்னும்மணிக் குவியலெல்லாம் மேகம் மாய்த்து
விரிக்கும்இருள்! இருள்வானம் ஒளிவான் ஆகச்
சென்னியைஎன் சென்னியுடன் சேர்த்தாள். ஆங்கே
சிறகினொடு சிறகுதனைப் பின்னிக் கொண்டோம்!
என்னைஅறி யேன்!தன்னை அறியாள்! பின்னர்
இமைதிறந்தோம் ஆகாய வாணி வீட்டில்!

`பாரதநாட் டாரடிநாம் வாவா' என்றேன்.
பழஞ்சாமான் சிறுமேசைக் கூண்ட றைக்குள்,
ஓரண்டை நாற்காலி தன்னில் முன்போல்
உட்கார்ந்த படியிருந்தேன். பின்னும், உள்ளம்
நேர்ஓடிப் பறக்காமல் பெண்டு, பிள்ளை,
நெடியபல தொந்தரைகள், நியதி அற்ற
பாராளும் தலைவர்களின் செய்கை எல்லாம்
பதட்டமுடன் என்மனத்திற் பாய்ந்த தன்றே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt247

தொடங்குக பணியைத் தொடங்குக அறத்தை!
கடலிலும், வானிலும், கவினுறு நிலத்திலும்,
வாழ்வுயிர் அனைத்தும், மக்கள் கூட்டமும்,
வாழுமாறு அன்பு மணிக்குடை யின்கீழ்
உலகினை ஆண்டார் உயர்வுற நம்மவர்!

புலவர்கள் "உலகப் பொன்னி லக்கியம்"
ஆக்கினார்! மறவரோ, அறிவு-அறி யாமையைத்
தாக்குமாறு அமைதியைத் தாழாது காக்கக்
கண்கள் மூடாமல் எண்டிசை வைத்தும்
வண்கையை இடப்புறத்து வாளில் வைத்தும்
அறம்புரிந்து இன்ப அருவி ஆடினார்!

தொடங்குக பணியை! அடங்கல் உலகும்
இடும்நம தாணை ஏற்று நடக்கவும்
தடங்கற் சுவரும் சாய்ந்துதூ ளாகவும்
தொடங்குக! செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந் தோளால் தொடங்குக "பணியை!"

இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்!
சாதிக்குச் சாவுமணி அடிக்க! பழம்நிகர்
தமிழகம் வையத் தலையாய்
அமையத் தொடங்குக "அறம்இன்பம்" என்றே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt246

மார்புற அணத்து நாதன்
மங்கைக்குத் தந்த இன்பம்
சார்புறத் தேகம் தன்னை
மனத்தினைத் தழுவும் நேரம்
நேரினில் இருந்த நாதன்
மறைந்தனன் என்றால் நேயக்
கார்குழல் மங்கை கொள்ளும்
கடுந்துயர்க் களவு முண்டோ?

இறைந்தநற் றமிழர் தம்மை
இணைத்தசீர் இராம சாமி
அறைந்தநல் வழியே இந்தி
அரவினைக் கொன்றான் செல்வன்
நிறைந்தஅத் தேனை நாட்டார்
நினைந்துண்ணும் போதே அன்னோன்
மறைந்தனன் என்றால் யார்தாம்
மனம்துடி துடிக்க மாட்டார்?

எல்லையில் "தமிழர் நன்மை"
என்னுமோர் முத்துச் சோளக்
கொல்லையில் பார்ப்பா னென்ற
கொடுநரி உலவும் போது,
தொல்லைநீக் கிட எழுந்த
தூயரில் பன்னீர்ச் செல்வன்
இல்லையேல் படைத் தலைவன்
இல்லைஎம் தமிழ்வேந் துக்கே.

ஆங்கில நாட்டில் நல்ல
இந்திய அமைச்ச னுக்குத்
தீங்கிலாத் துணையாய்ச் சென்றான்
சர்.பன்னீர்ச் செல்வன் தான்மேல்
ஓங்கிய விண்வி மானம்
உடைந்ததோ ஒலிநீர் வெள்ளம்
தூங்கிய கடல்வீழ்ந் தானோ
துயர்க்கடல் வீழ்ந்தோம் நாங்கள்.

பண்கெட்டுப் போன தான
பாட்டுப்போல் தமிழர் வாழும்
மண்கெட்டுப் போமே என்னும்
மதிகெட்டு மானம் கெட்டும்
எண்கெட்ட தமிழர் பல்லோர்
பார்ப்பனர்க் கேவ லாகிக்
கண்கெட்டு வீழும் போதோ
கடல்பட்ட தெங்கள் செல்வம்?

சிங்கத்தை நரிய டிக்கும்
திறமில்லை எனினும் சிங்கம்
பொங்குற்றே இறந்த தென்றால்
நரிமனம் பூரிக் காதோ?
எங்குற்றான் செல்வன் என்றே
தமிழர்கள் ஏங்கும் காலை
இங்குற்ற பூணூல் காரர்
எண்ணம்பூ ரிக்கின் றார்கள்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt245

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt244

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE