Language Selection

சமூகவியலாளர்கள்

தாய்மார்களே! தோழர்களே!

சாதாரணமாக, மனிதருக்குப் பெயர் என்பது ஒவ்வொரு நபருக்கும், அந்தந்த நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகும். மனித சமுதாயத்தில் இம்மாதிரியான ஒரு குறியீட்டுச் சொல் அவரவர்களுக்கு அடையாளஞ் சொல்லக்கூடிய சொல் என்பது சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது.

பெயர் சூட்டுவதில்....சாதாரணமாக, மனிதர்களுக்கு ஒரு குறியீடு என்கிற தன்மையில் சூட்டப்படுகிற பெயர் என்கிற போதிலும், பெயர் சூட்டுவது என்பதில் ஒரு கொள்கை, தத்துவம் உள்ளே இருந்து வந்திருக்கிறது.

முதலாவது, சாதாரணமாக மக்களுக்குள் இன்றைய தினம் இருந்துவரும் பெயர்ளைப் பார்த்தால் பெரும்பாலும் மதத்தின் அடிப்படையிலேயே இருந்து வருகின்றன. சாதாரணமாக, உலகத்தில் மதத்திற்குச் செல்வாக்கு ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு மதத்தாருக்கும் அந்தந்த மதத்தின் பெயரால் அந்தந்த மதத் தத்துவம் மதக் குறிப்பின் படியாகப் பெயர்கள் இருந்து வருகின்றன.

கிறித்தவர்களுக்கு கிறித்துவ மத சம்பந்தமான பெயர்களும், முஸ்லீம்களுக்கு முஸ்லிம் மார்க்க படியான பெயர்களும், பவுத்தர்களுக்கு பவுத்த தன்மைப்படியான பெயர்களும், இந்துக்கள் என்பவர்களுக்கு இந்துமதம் என்பவைகளின் சாஸ்திர சம்பிரதாயப்படியும் பெயர்கள் இருந்து வருகின்றன. இதற்குக் காரணம் என்னவென்றால், மத ஸ்தாபனங்களுக்கு ஏற்பட்ட செல்வாக்கும் மதத்தின் தன்மைப்படி பெயர் வைத்துக்கொள்வது என்பது புண்ணியம், பெருமைக்கு உகந்தது, உயர்ந்தது என்கிறதான கருத்தும் மக்கள் உள்ளத்திலே ஏற்பட்டதுதான் ஆகும்.

நம்மைப் பொறுத்தவரையில் - தமிழர்களைப் பொறுத்தவரையில் நம்முடைய பெயர்கள் என்பவைகள் எப்படி இருந்து வந்தன என்றால், மதச்சார்பு அற்றவையாக, மதத்திற்கு முற்பட்டு வெறும் பெயரீட்டுக் குறிச்சொல் என்கிற முறையில்தான் இருந்து வந்திருக்கின்றன. மதச் சம்பிரதாயத்தின் அடிப்படையிலே தமிழர்களுக்குப் பெயர் இருந்ததில்லை. தமிழ்ப் பெயர்களைப் பார்த்தால் இது நன்றாகத் தெரியவரும்; இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் நூல்களில் - 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நூல்களில் மதம் அதிகம் இருக்காது. அது போலவே தமிழர்களின் சரித்திரப் பெயர்களை எடுத்துப் பார்த்தாலும் அதிலே மத, கடவுள் சார்புப் பெயர்கள் அதிகம் இல்லை. சேர, சோழ, பாண்டியர்கள் என்பவர்களிலும் முற்பட்ட மூவேந்தர்களிலும் மதப் பெயர்கள் அதிகம் இல்லை.

நாளாக ஆக மத ஆதிக்கம் வந்து குவிந்துவிட்டது. மத, புராண, கடவுள் சம்பந்தமான காரியங்களுக்குச் செல்வாக்கு ஏற்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் இந்த மத ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்கிற தன்மையில் இந்தப்படியான மதப் பெயர்களைப் புகுத்திவிட்டார்கள்.

அதுவும் குறைந்தது இந்த 50 ஆண்டு காலத்துக்குள்ளாக ரொம்பவும் புகுந்துவிட்டது. அதுவும் இந்த மத சம்பந்தமான பெயர்கள் அதிகமாக ஏராளமாகப் புகுந்ததெல்லாம் பெண்களிடத்தில்தான் ஆகும். எந்தப் பெண்களுக்கும் கடவுள் பெயர், மத சம்பந்தமான பெயர் என்று வந்து புகுந்துவிட்டது.

இந்தப்படியான, மனித நபரைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பது மதப் பெயர்களைக் கொண்டதாக ஏன் ஆகிவிட்டது என்றால், மதத்திற்கு, மத ஆதிக்கம் வளர்வதற்கு இதை இந்தப்படியான பெயர் சூட்டுவது என்பதை ஒரு பிரச்சார சாதனமாக வைத்துக் கொண்டார்கள்.

நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருக்கலாம். இந்தப் பெயர் சூட்டுவது என்பதிலே கூட இந்து மதத்தின் வருணாசிரமமுறை இருந்து வந்திருக்கிறது. அழகான பெயர்கள் எல்லாம் மேல் சாதிக்காரர்கள் என்பவர்கள் வைத்துக் கொள்ளுவதும் - அதாவது மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் கடவுள், மத சம்பந்தமான பெயர்களை மேல்சாதிக்காரர்கள் வைத்துக் கொள்வது என்றும், அந்த மேல் சாதித் தன்மையைக் குறிக்கும் பெயர்களைக் கீழ்ச்சாதி மக்கள் என்போர் - அதாவது சூத்திரர், பஞ்சமர் எனப்படுவோர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது, வைத்துக் கொள்வது பாவம் எனவும் கருதப்பட்டது. சாதாரணமாக, இந்த ராமன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்கிற பெயர்கள் மேல் சாதிக்காரர்கள் பெயராகவும்; கருப்பன், மூக்கன், வீரன், காட்டேரி, பாவாயி, கருப்பாயி என்பன போன்ற பெயர்கள் கீழ்ச்சாதி மக்கள் வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்கள் என்பவைகளாகவும் இருந்து வந்திருக்கின்றன.

வரவர மதத்திற்கும் மதத் தன்மைக்கும், எதிர்ப்பும் - தங்களுடைய இழிவைப் பற்றியதுமான உணர்ச்சியும் மக்களுக்கு ஏற்பட ஏற்பட, இந்தப்படியான எதிர்ப்பை ஒழிப்பது என்கிற முறையில் எல்லோரும் எல்லாப் பெயர்களையும் வைத்துக் கொள்ளலாம் என்கின்றதான நிலைமை வந்தது.

சாதாரணமாக, இந்த இழிசாதி மக்கள் என்பவர்களின் பெயர்களுக்குக் கடைசியில் சாமி, அப்பன் என்ற சொற்கள் வரக்கூடாது. ஏனென்றால் மேல்சாதிக்காரர்கள் என்பவர்கள், பெயர் சொல்லிக் கூப்பிடும் போது இழிசாதி மக்களை, ‘சாமி!’ என்றும் ‘அப்பன்!’ என்றும் கூப்பிடவேண்டியிருக்கிறது என்பதால் - அது மேல்சாதிக்காரர்களின் அந்தஸ்துக்கு மட்டம் என்பதால் அந்தப்படியான பெயர்களை இழிசாதி மக்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே வைத்துக் கொண்டாலும் அந்த ‘சாமி’ ‘அப்பன்’ என்ற சொல்லை விட்டுவிட்டு, மேல்சாதிக்காரர்கள் ‘ராமா’, ‘கந்தா’ என்றுதான் அழைப்பார்கள். இப்படியாகப் பெயர்கள் என்பவைகள் கடவுளின் பேராலும், மதசாஸ்திர சம்பிரதாயத்தின் பேராலும் அவற்றை வகுத்த வருணாசிரம மேல் - கீழ்சாதி முறைப்பிரகாரமே வழங்கி வந்து, மேற்கண்டவைகளுக்கு இவைகள் ஒரு பாதுகாப்பாகவும், ஆதாரமாகவும், அஸ்திவாரமாகவும், நின்று நிலவி வருகின்றன.

இன்னும் பல பெயர்களைப் பார்த்தால் மிக ஆபாசமாக இருக்கும். வைக்கப்படுகிற பெயர் கடவுள் பெயராக இருக்கிறதா என்றுதான் கவனிப்பார்களே தவிர, அப்படி வைக்கப்பட்டிருக்கிற பெயர்களுக்கு என்ன அர்த்தம், அது மிக ஆபாசமான அர்த்தமுடையதாக இருக்கிறதே என்று கவலைப்பட மாட்டார்கள்.

சாதாரணமாக, ஆதிகேசவலு, குஞ்சிதபாதம், குஜலாம்பாள், துரோபதை என்கிறதாகவெல்லாம் பெயர் வைக்கிறார்களே! அந்தப் பெயர்களின் பொருளை விரித்துப் பார்த்தால் அதில் எவ்வளவு ஆபாசமும் அறிவற்றதுமான காரியங்கள் இருக்கின்றன! ஆனால், மக்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் இம்மாதிரியான பெயர்களையே ஏற்றுக் கொண்டும் சூட்டிக் கொண்டும் ஏன் இருக்கிறார்கள் என்றால், நான் முன்னே சொன்னது போல், இந்தப்படியான பெயர்கள் என்பவைகள் கடவுள், மத சாஸ்திரங்களின் பேரால் ஏற்படுத்தப்பட்டுவிட்டன என்பதால் தான்.

இப்படியாக மத, சாஸ்திர, கடவுள் அடிப்படையிலேயே வளர்ந்து வந்த பெயர் முறைகள் இன்று கொஞ்சம் மறையத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் சமுதாயத்துக்குமான உணர்ச்சி யும், இந்தக் கடவுள், மத, சாஸ்திரங்கள் என்பவைகளின் பேரால் தாங்கள் அழுத்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும், இழிசாதி மக்களாக்கப்பட்டும் இருக்கிறதை - கடவுள், மத, சாஸ்திரத் துறையிலே இழிசாதி மக்கள்; பொருளாதாரத் துறையிலே ஏழை மக்கள்; அழிவுத் துறையிலே கீழ் மக்கள் என்பதாக இருக்கிற நிலை மையை உணர்ந்து - மக்கள் தங்கள் இழிவையும் ஏழ்மையையும் அடிமையையும் ஒழிக்க வேண்டும்; இவைகளிலிருந்து விடுதலைபெறவேண்டும் என்கிற மான உணர்ச்சி, பகுத்தறிவு உணர்ச்சி, ஏற்பட்டு வருவதால் இந்தப்படியான தங்கள் இழிவுக்கும், ஏழ்மைக்கும், கீழ்நிலைக்கும் காரணமான எந்தெந்த அமைப்பு முறைகள் இருக்கின்றனவோ அந்த அமைப்பு முறைகளை நம்முடைய விடுதலையைக் கோரி மாற்ற வேண்டும்; ஒழிக்க வேண்டும் என்கிற தன்மையில்தான் திருமணத் துறை, சாதித்துறை, கிரஹப்பிரவேசம் என்கிற புதுமனை புகுவிழா சங்கதி, திருவிழாத்துறை, சங்கீத - இலக்கியத்துறை போன்ற எல்லாத்துறைகளிலும் மாற்றம் ஏற்படுத்தும் முயற்சி, கிளர்ச்சி நடத்துவதுபோல இந்தப் பெயர்த் துறையிலும் இது மாதிரியான மாறுதல் உணர்ச்சியோடு காரியம் நடத்தப்படுகிறது.

இதற்குமுன் மக்களிடத்தில் இவ்வளவு உணர்ச்சி இருந்ததில்லை. வர, வர இப்போது மக்களிடத்தில் மான உணர்ச்சியும், பகுத்தறிவும் பெரும் அளவுக்கு வளர்ந்து வருகிறது; பலருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்தப்படியான உணர்ச்சி பெற்றவர்கள் செய்கிற காரியத்தில் எல்லாம் இம்மாதிரியான மாறுதல், அறிவுக்குப் பொருந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இன்றைக்கு ஏராளமாக இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த மாதிரித் தன்மையில்தான் இந்தப் பெயர் சூட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இதில் சூட்டப்படுகிற பெயர்கள் சாதாரணமாக மடமையான மதத்துக்கோ அறிவற்ற தன்மைக்கோ ஏற்றதாக இல்லாமல் பகுத்தறிவுத் தன்மைக்கேற்றதாகவே சூட்டப்படும்.

சாதாரணமாக, குழந்தைகள் பிறக்கும்போது இருந்தே இந்த மாதிரியான புதுமைப் பெயர் வைத்துவிட்டால் நல்லது. அதுவே பழக்கத்தில் வந்துவிடும். இப்போது என் பெயரையே எடுத்துக் கொள்ளுங்களேன். இது இந்துமதம் என்கிறதன் சார்புப் பெயர்தான். இவைகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிற எனக்கே இந்தப் பெயர் இருக்கிறது. இந்தப் பெயர் கூடாததுதான். ஆனால், இந்தப் பெயராலே 73 வருடம் இதையே என்னைக் குறிக்கும் குறியீடாகக் கொண்டு வந்தாகிவிட்டது. அது மட்டுமல்லாமல், இந்தப் பெயர் என்பது மிகவும் விளம்பரமாகி விட்டது; ‘யார் ராமசாமியா! அட! அதுதான் இந்த ஆள்!’ என்கிற மாதிரி ஒரு முக்கியமானதாகி விட்டது! இனி என் பெயரை மாற்றுவது என்றால் - இது ஏற்படுத்துகிற புதுப்பெயர் என்பது இந்தப் பெயர் அளவில் என்னைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாக இருக்க முடியாது. புதுப்பெயரால், பெயர் வைக்கிற தத்துவத்தின்படி இன்னாருக்கு இந்தப் பெயர் என்று புரிந்துகொள்ளுகின்ற மாதிரியில் இருக்க முடியாது. ஆகவேதான் சொல்லுகிறேன், குழந்தையாய் இருக்கும்போதே புதுமைப்பெயர், பகுத்தறிவு சான்ற பெயர் சூட்ட வேண்டும் என்பதாக. இனி வருங்கால சந்ததிகளை உலகத்துக்கு அறிமுகப்படுத்துவதே புதுமையான, பகுத்தறிவான பெயராக - ஆரியமத, சாஸ்திர, கடவுள் தன்மை கொண்ட பெயர் அற்றதான மாதிரியில் வைக்க வேண்டும்.

- உளுந்தூர் பேட்டையில், 15-3-1953-இல் ஆற்றிய சொற்பொழிவு - ‘விடுதலை’, 24-3-1953

http://www.keetru.com/rebel/periyar/71.php

பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.

இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறை வாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும்போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக்கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, “நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்” என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதிமுறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

http://www.keetru.com/rebel/periyar/72.php

அய்க்கோர்ட் நீதிப்போக்கே இவ்வாறு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிற அடிப்படையே தப்பாக இருப்பதுதான். இந்த நீதிபதிகள் எல்லாம் யார்? அத்தனை பேரும் வக்கீலாக இருந்து, வக்கீல் தொழிலில் பயிற்சி பெற்றுத் தேறிவந்தவர்கள். வக்கீல் வேலை என்பது என்ன? பொய்யை மெய்யாக்கி, மெய்யைப் பொய்யாக்கி, பணம் கொடுத்தவனுக்கு அனுகூலமாகத் தனது மனசாட்சி அறியப் பித்தலாட்டமாக வாழ்க்கை நடத்துவதும், பணம், பெருமை, கெட்டிக்காரத்தனம் மூலம் சம்பாதிப்பதும்தானே வக்கீல் வேலை என்பது? அதில் தேர்ச்சி பெற்றவர்தானே ஜட்ஜ் ஆகிறார்.

எவனாவது நீதிமான், நேர்மைவான், அநியாயத்துக்கு - பொய்க்கு - பித்தலாட்டத்திற்கு பயப்படுகிறவர் இவர்களில் யாராவது ஜட்ஜாக இருந்தால்தானே உண்மை நீதி கிடைக்கும்? ஆனால், இங்கே இந்நிலையோடு கூடவே பார்ப்பான் கிட்டேயே எல்லா ஆதிக்கமும் இருந்து வருகின்றன. வக்கீலாக இருந்துதான் சப்மாஜிஸ்திரேட், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜு, அய்கோர்ட் ஜட்ஜு, சீப் ஜட்ஜு என்று வருகிறார்கள். காசு கொடுத்தவர்களுக்காக வாதாடி மனசாட்சியைப் பழக்கிய வக்கீல்கள் இருந்தால், இவர்கள் நீதிபதியாய் இருந்தாலும் தங்கள் சுயகுணம் எப்படி மாறும்? ஆதலால்தான் ஜட்ஜ்கள் அடிப்படையே மோசம் என்று நான் சொல்கிறேன். சட்டத்தில் இவர்களை யோக்கியர்கள் - நீதிபதிகள் என்று கருத வேண்டும் என்று எழுதிக் கொண்டால், இவர்களிடம் எளிதில் மாற்றம் காண முடியுமா?

இன்றைக்கு நாட்டில் உள்ள அரசியல்வாதிகளால் நடத்தப் பெற்று வரும் இன்றைய சர்க்காருக்கு, உண்மையிலேயே நாணயமான கவலை, நாட்டு மக்கள் நலத்திலே அக்கறை இருக்குமானால், ஏதோ போக்கிரித்தனமாகக் கள்ளுக்கடை கூடாது, சூதாடக் கூடாது, தேவடியாள் கூடாது என்று சட்டம் போடுவதை விட்டுவிட்டு, இந்த வக்கீல்கள் ஸ்தாபனத்தை (Bar council) அல்லவா முதலாவது ஒழிக்க வேண்டும்.

சாதாரணமாக இந்த ஊரிலே நான் பிள்ளையார் உடைச்சதுக்காக ஓர் ஆள் என் மீது வழக்குப் போட்டார். அது முதலிலே மாஜிஸ்திரேட் கோர்ட்டிலே தள்ளுபடியாச்சு. அதற்குப் பிறகு அப்பீலில் மேல்முறையீட்டில் சப்ஜட்ஜ் கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு. பிறகு ஜில்லா கோர்ட்டிலும் தள்ளுபடி ஆச்சு, அய்க்கோர்ட்டிலும் இதை விசாரித்த நீதிபதி இதைத் தள்ளி விட்டார். இதற்கு அப்பீலுக்கும் அனுமதி மறுத்துவிட்டார். கடைசிக் கோர்ட்டான (டெல்லி) சுப்ரீம் கோர்ட்டுக்குப் போச்சு. அங்கே தீர்ப்பு சொல்லும் வாய்ப்பு பார்ப்பானுக்கு இருந்தது. உடனே கீழே 34 கோர்ட்டுகள் சொன்ன தீர்ப்புகள் தப்பு என்று சொல்லி, சட்டப்படிக் குற்றம் என்று தீர்ப்பு எழுதி விட்டானே!

இப்படி அவன் கிட்டே பலம் இருக்கிறது; அதனால் நீதி முறைக்கேட்டிற்கு இடம் இருக்கிறது. காரணம், நீதித்துறை அமைப்பிலேயே கோளாறு காணப்படுகிறது.

இந்த நாட்டுக்கு (தமிழகத்துக்கு) நீதிபதிகளாக இருப்பவர்களை, எதற்காக டெல்லியில் இருக்கிற ‘பிரசிடெண்டு' நியமிக்கும் அதிகாரத்தை வைத்திருக்க வேண்டும்? நாம் எதற்காக டெல்லிக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? பொதுவான பாதுகாப்பு, படை - அதுக்காக அவருக்கு அதிகாரம் என்றாலாவது ஓரளவு அர்த்தம் இருக்க முடியும். இந்த அதிகாரங்களை அங்கே கொடுத்துவிட்டு, நாம் பார்ப்பானிடம் சிக்கிக் கொண்டு எதற்காக அவஸ்தைப்பட வேணும்? ரொம்பக் கஷ்டப்பட்டுப் பெரிய கிளர்ச்சி பண்ணினால்தானே, நாம் இதிலிருந்து விடுபட முடியும்.

ஓர் அய்க்கோர்ட் ஜட்ஜ் என்றால், அவர் தீர்ப்பு எழுதுவதன் மூலம்தான் நம்மவர்களுக்குக் கேடு விளைவிக்க முடியும் என்பது அல்ல; இன்னும் பல வழிகளில் செய்ய முடியும். கீழே இருக்கிற நீதித் துறையில் (Subordinate Judges) உள்ள அத்தனை அதிகாரிகள், ஜில்லா மாஜிஸ்திரேட், ஜில்லா முன்சீப், சப்டிவிஷனல் மாஜிஸ்திரேட், சப்மாஜிஸ்திரேட் முதலிய பல உத்தியோகத்திலுள்ளவர்களின் வேலையைப் பற்றி விமர்சனம் செய்து தூக்கியும் விடலாம் - கீழே அழுத்தியும் விடமுடியும். தங்களுக்கு வேண்டாதவர்களை ஒழித்துக்கட்டி விடுவதற்கு முழுவாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு ஜட்ஜுக்கும் ஒவ்வொரு ஜில்லா என்று பிரித்துக் கொடுத்து, அந்த ஜில்லாவில் உள்ள நீதித் துறை அதிகாரிகளின் குடுமிகள் அவர் கையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பான் கையில் தமிழன் குடுமி சிக்கினால் அவ்வளவு தான். அவன் தலையெடுக்க வொட்டாமல் அழுத்திவிட முடியும்.

பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் (திராவிடருக்கும்) இப்போது நடைபெற்று வரும் மாபெரும் போராட்டத்தின் ஓர் அம்சம்தான் இந்த நிகழ்ச்சிகள் என்பதை, நம் மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அது எப்படி இருந்தபோதிலும், நாம் இந்த மாதிரி நீதிப்போக்கின் கொடுமையைக் கண்டிக்காமல் இருந்துவிட முடியாது. ஆகவே விளைவு என்னவானாலும் சந்தோஷத்தோடு அதை ஏற்பது என்ற முடிவோடு, இந்தக் கேட்டைக் கண்டித்து நாம் தீர்மானம் நிறைவேற்றியாக வேண்டும்.

(23.10.1960 அன்று திருச்சியில் ஆற்றிய உரை)

http://www.keetru.com/rebel/periyar/73.php

பொதுவாக, ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலையில்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) சீக்கிரத்தில் பிரிந்தால் நல்லது என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.

கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, சுயமரியாதையோ இல்லை; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை. மேலும், சென்னை மாகாணத்தில் 7ல் ஒரு பாகத்தினராக இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் - நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூட சொல்லவதற்கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் சீக்கிரம் பிரியட்டுமென்றே கருதி வந்தேன்; அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால், நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும், மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டுக் கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும், இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனியாக ஆகிவிட்டால், நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும், அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்குப் பலமும் ஆதரவும் இருக்காது என்றும் கருதுகிறேன்.

ஆனால், நாட்டினுடையவும், மொழியினுடையவும், இனத்தினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறதே என்கின்ற குறைபாடு எனக்கு இருக்கிறது. ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போனபின்பு கூட, மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' என்ற பெயர்கூட இருக்கக்கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் 'சென்னை நாடு' என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும்; எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது. இதைத் திருத்தத் தமிழ் நாட்டு அமைச்சர்களையும், சென்னை, டில்லி சட்டசபை - கீழ் மேல் சபை உறுப்பினர்களையும் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்?

('தனி அரசு', அறிக்கை 25-10-1955)

பெரியோர்களே! தோழர்களே!

திராவிட நாடு எது? இதற்கு முன் - 1956-க்கு முன் இருந்த சென்னை மாகாணத்தை நான் 'திராவிட நாடு' என்று சொன்னேன். அப்பொழுது மலையாளம், கன்னடம், ஆந்திரம் பிரிந்திருக்கவில்லை. வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விட்ட பிறகு வடநாட்டானும், இந்த நாட்டுப் பார்ப்பானும் சேர்ந்து கொண்டு இனிமேல் நமக்கு ஆபத்து என்று கருதி, நான்கு பிரிவுகளாக வெட்டி விட்டார்கள். இப்பொழுது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்த கள்ளிக்கோட்டை, மங்களூர் மாவட்டங்களும் மலையாளம், கன்னட நாடுகளுடன் சேரப்போகின்றன. இப்பொழுது நம்முடன் மலையாள, கன்னட நாடுகளின் சம்பந்தமில்லாமல் தனித் தமிழ்நாடாக ஆகவிட்டோம். ஆகவே இதை இப்பொழுது 'தமிழ்நாடு' என்று சொல்லலாம். முன்பு அவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னோம். ஆனால், அவர்கள் பிரிந்து தனியாகப் போவதிலேயே கவனத்தைச் செலுத்திப் பிரிந்து போய்விட்டார்கள்.

நாம் நிபந்தனையற்ற அடிமைகளாய் உள்ளோம். வெள்ளையர் ஆண்ட காலத்தில் பார்ப்பனரின் அக்கிரமங்களைச் சொல்ல வழி இருந்தது. அவர்களும் நாம் சொல்வதைக் கேட்டுச் சிலவற்றைக் கவனித்து வந்தார்கள். இப்பொழுது நம் நாடு வடநாட்டிற்கு நிபந்தனையில்லா அடிமை நாடாகிவிட்டது. நாங்கள் வெள்ளையரை அப்பொழுதே கேட்டோம்: 'நாங்கள், உங்களை யுத்த காலத்தில் ஆதரித்தோம். பார்ப்பனரும் வடநாட்டுக்காரரும் உங்களை எதிர்த்தார்கள்; எங்கள் இனம் வேறு; அவர்கள் கலை, பழக்க வழக்கங்கள் வேறு' என்று சொன்னோம். அதற்கு வெள்ளைக்காரர்கள், 'நீங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்று நினைத்து இருந்தோம். இதெல்லாம் உங்கள் குடும்பச் சண்டை; நாங்கள் சீக்கிரத்தில் இந்த நாட்டை விட்டுப் போய்விடப் போகிறோம்' என்று கூறி, முஸ்லிம்களுக்கு சிறு இராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, நம்மைப் பார்ப்பனருக்கும், வடநாட்டவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டனர்.

இப்பொழுது நாம் வடநாட்டு ஆட்சியில் இருந்து பிரிந்து தனிநாடு ஆகவேண்டுமென்று கூச்சல் போடுகிறோம். தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் இருக்குமா என்று கேட்கிறார்கள். இல்லாமல் காக்கை, கழுகு தூக்கிக்கொண்டா போய்விடும்? பக்கத்தில் இருக்கும் இலங்கையும், பர்மாவும் இருக்கும்பொழுது நாம் மட்டும் இருக்க முடியாதா? நமக்குப் போதுமான வசதி இங்கேயே இருக்கிறது. நமக்கு நாடு கிடைத்து வெள்ளையருடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் இந்த வடநாட்டான் ஓடிவிடுவானே!

(திருவண்ணாமலையில், 19-8-1956-ல் சொற்பொழிவு, 'விடுதலை' 29-8-1956)

http://www.keetru.com/rebel/periyar/74.php

நம் நாட்டில் இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது, பொருளாதார சமத்துவம் என்னும் பேரால் உச்ச வரம்பு என்னும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொருவனுக்கும் பூமி இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும், ரொக்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், தங்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து கொண்டு, அந்த அளவுக்கு மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்குக் கொடுக்கப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறது.

இன்றைய சமுதாய அமைப்பு நிலையில் இதற்கென்ன அவ்வளவு அவசியம், அவசரம் வந்தது? அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே! அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிரந்தரமானது அல்லவே!

இன்றைக்குப் பணக்காரனாக இருப்பவன் யாரும், அவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளாமலே நாளைக்கு ஏழையாக இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். அதுபோலவே, இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்குப் பணக்காரனாக ஆகிவிடுகின்றான்.

இதைவிட மோசமான பேத நிலைமை மக்களை வெட்கமும் வேதனையும் படத்தக்க நிலைமை; முட்டாள்தனமாகவும் மானங்கெட்டத்தனமாகவும்; அளவுக்கு அடங்காத அந்தஸ்தும் தேவையற்றதாக சுகபோகமும் உடைய நிலைமை, யாருக்கும் பயனற்ற தன்மையான சொத்து, செல்வம் உள்ள தன்மை ஏராளமாக ஒவ்வொரு மனிதனையும் பற்றிய தன்மை பல நம் நாட்டில் இருக்கின்றனவே! அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது? இதை மாற்றுவதை ஒழிப்பதை விடவா பணக்காரனை ஒழிப்பது இன்றைக்கு அவசரமாக ஆகிவிட்டது.

இது மாத்திரமா? தெருவில் உடைத்து எடுத்த கல்லைக் கொண்டு ஓர் உருவத்தை உருவாக்கிக் கொண்டு, ஒரு பிரத்யட்ச அடையாளமும் இல்லாமல் அதை மனிதன் அறிவிற்குப் புரியாதபடி கடவுள் என்ற சொல்லி அதற்குப் பெரிய கட்டடம் கட்டி அதைக் கோயில் என்று சொல்ல, அதற்கென்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி ரூபாய்கள் பெறுமானம் பெறும்படியான நிலங்களும், தங்கம், நவரத்தினம் மற்றும் பல உலோகங்களைக் கொண்ட பண்டங்கள் உடைய பல கடவுள்கள், பல கோயில்கள், பல நிர்வாகங்கள் இருந்து வருகின்றனவே அவற்றின் வாழ்விற்காக ஏராளமாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் சேர்க்கப்பட்டும், செலவழிக்கப்பட்டும் வருகின்றதே! அக்கிரமமான அந்தஸ்துக்கும், சுகபோகமான வாழ்விற்கும் இந்த அரசாங்கம் பரிகாரம் செய்கின்ற உச்சவரம்புத் திட்டம் ஏற்படச் செய்யாதது ஏன்? என்று கேட்கிறேன்.

சராசரி அந்தஸ்துக்கு மேற்பட்ட அந்தஸ்தும், சராசரி சுகபோக வாழ்க்கைக்கு மேற்பட்ட வாழ்வும், அனுபவமும், பலனும் பரவியும், இடையில் இருக்கும்படியான சோசலிசத்தை நமது அரசாங்கம் செய்ய உண்மையாய் யோக்கியமாய் கருதினால், முதலாவதாக நிலத்தினால், பணத்தினால், சொத்தினால் அல்லாமல் எவரும் பிறவியினால் உள்ள இழிவை ஏற்படுத்திக் கொண்டதும், அரசாங்கமும் சட்டமும் அனுமதித்து வருகிற அந்தஸ்தை, சுகபோகமாக (உழைக்காமல்) வாழ்கின்ற வாழ்வைக் கொண்ட அந்தஸ்தை ஒழித்து ஆக வேண்டும். அப்படி இல்லாமல் பணத்தினால் ஏற்பட்ட அந்தஸ்தை சுகபோக வாழ்வை ஒழித்துக் கட்டுவது என்பதற்காகச் சட்டம் செய்வதும், உச்சவரம்பு ஏற்படுத்துவதும் பிறவியினால் ஏற்படுத்திக் கொண்ட அந்தஸ்தையும் சுகபோக வாழ்வைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும்தான் இது பயன்படும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சி சமுதாயச் சீர்திருத்தம் என்பதை நாம் தொடங்கியதற்குப் பின்புதான் கம்யூனிசம் என்னும் பொதுவுடைமை முயற்சிக்கு ஒரு ஸ்தாபனம் தோன்றியது. அதுவும் பார்ப்பனராலேயே தொடங்கப்பட்டது. அதன் கருத்தும், காரணமும் மக்களைச் சமுதாயச் சீர்திருத்தம், ஜாதி ஒழிப்பு, கடவுள், மத, சாஸ்திர ஒழிப்புத்துறையில் பாமர மக்களுக்கு எண்ணம் போகாமல், அதை வேறு பக்கம் திருப்புவதற்கே ஆகும். விளக்கமாகக் கூறுவதானால், ஏராளமான பார்ப்பனர்கள்தான் இன்று பொதுவுடைமைக் கட்சியில், ஸ்தாபனத்தில் இருக்கிறார்களே ஒழிய, பாடுபட்டார்களே ஒழிய, தமிழர்கள் அவற்றில் தொண்டர்களாகத்தான் இருந்தார்கள்!

மக்களுக்கு ஏற்பட்ட பார்ப்பன வெறுப்பினால், நம் நாட்டில் பார்ப்பனர் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து விலகினாலும், அந்த இடத்திற்கு ஒரு மாற்றாளாகப் பூணூல் இல்லாத பார்ப்பனர் (சைவர்) தான் வர முடிந்தது. அப்படி வந்ததும் அந்தப் பொதுவுடைமை ஸ்தாபனத்தில் பகுத்தறிவோ, மூடநம்பிக்கை ஒழிப்போ தலைகாட்ட முடியாத ஸ்தாபனமாகத்தான் அமைந்து தொண்டாற்றி வருகின்றது. பிறவி அந்தஸ்தை ஒழிப்பதற்குப் பதிலாக அதை விட்டுவிட்டு, வாய்ப்பு அந்தஸ்தை ஒழிக்கப் பாடுபடுவது - பிறவி அந்தஸ்துக்காரரை நிரந்தர அந்தஸ்துக்கு - சுகபோக வாழ்வுக்காரராக ஆக்கத்தான் பயன்படுகிறது.

(28.9.1972 அன்று 'விடுதலை'யில் எழுதிய தலையங்கம்)

http://www.keetru.com/rebel/periyar/75.php

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE