Language Selection

சமூகவியலாளர்கள்

 இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில்தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவதுதான் இந்தியின் தத்துவம். எனவேதான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு போர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி ஏன் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய ‘இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. ‘கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? ‘மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு ‘திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் - ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட. நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம்.

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு

http://www.keetru.com/rebel/periyar/22.php

 இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்' மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்.

அதுபோலவே, நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி வருகிறேன். அவை, அம்முட்டுக் கட்டைகள்: 1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும். 2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும் 3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும். இவை, ‘முட்டுக்கட்டைகள்' என்று சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னார் என்றாலும், அதற்குப் பிறகு, இன்று இந்த ‘இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக' விளங்கும் கருஞ்சட்டைக்காரர்கள்தாம் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும் ‘பிரபல' பார்ப்பனத் தலைவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திரு. ராசகோபாலாச்சாரியார், கே.எம். முன்ஷி, சங்கராச்சாரியார் போன்றவர்கள் எங்கு எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம்முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி அதாவது ‘நாம் எக்காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்க வேண்டும்' என்று பேசி வருகிறார்கள்.

இப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக்காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் ‘சர்வரோக நிவாரணி' தயாரித்து வைத்துள்ளதைப் போன்று சொல்லி வருகிறார்கள். மக்களுக்குச் சிந்தனா சக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான், இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும். ‘முன்னோர்கள், பெரியவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்' என்று கேட்டால் "ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள் தாம்' என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.

இவர்களெல்லாம் யார்? எப்போதிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அதற்கென்ன ஆதாரம்? சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு - அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும். இந்த ரிஷிகள், தெய்வீகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் - புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கறையான் பிடித்த சிலவற்றைக் காட்டக் கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலுள்ளவைகள் எல்லாம், ‘பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன'வென்று. இப்படி முன்னோர்கள் சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும் வாயினால் மாத்திரம் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. இந்நாட்டில் 100க்கு 84 போராக உள்ள ‘இந்துக்களுக்கு' உரிய சட்டமாகிய இந்து ‘லா'விலும் நுழைத்துப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்து ‘லா'வின் அடிப்படைகளில் ஒன்று, சுமார் 20 ரிஷிகள் (ஸ்மிருதிக்காரர்கள்) சொன்னதாகும். நாரதர், பராசரர், யாக்ஞவல்கியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், மனு போன்றவர்கள் என்ன கருத்துக் கொண்டார்களோ அதைக் காட்டித்தான் இன்று அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் போன்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப் பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக் களஞ்சியங்களாகவே இருக்கின்றன.

இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி ‘மகிமைகள்' புரிந்திருந்துங்கூட, நாம் இன்றைக்கும் வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக் கொள்ளவில்லையே, ஏன் என்றால் என்ன பதில் கூறமுடியும்? எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகிய பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய வேறில்லை.

ஆகவே, இம்மூன்று முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய, நாம் முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில், தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும் அதில் புரண்டு இன்பங் காணும் பன்றிகளாக நம் மக்களும் இருக்க வேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக் கட்டைகளை ஒழிக்க வேண்டியது, தமிழ் மக்களின் முக்கிய முதற் பணியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

விடுதலை' தலையங்கம் - 22.5.1959

http://www.keetru.com/rebel/periyar/23.php

 

மக்கள் சமூக வாழ்க்கைத் திட்டத்தின் பயனாய் ஒருவரை ஒருவர் எவ்வளவு கொடுமைப்படுத்துகிறார்கள், எவ்வளவு கொடுமைக்கும் துக்கத்துக்கும் ஆளாக்குகிறார்கள் என்று பார்த்தால், நடைமுறையிலுள்ள ஜீவகாருண்யங்கள் முட்டாள்தனமானவையென்றே சொல்லலாம். நான், ஏன் இங்கு இந்த ஜீவகாருண்யக் கூட்டத்திற்கு வந்தேன் என்று சிலர் கேட்கலாம். உண்மையிலேயே இங்கு கடலாடியில் நடக்கும் யாகத்தில் ஏதோ சில அய்ந்தோ, பத்தோ ஆடுகள் கொல்லப்படுவதை நான் பிரமாதமாகக் கருதி இங்கு வரவில்லை. லட்சக்கணக்கான ஆடுகள், மாடுகள் மற்றும் சில ஜீவன்கள் தினமும் கொல்லப்படுவது எனக்குத் தெரியும்.

அப்படி இருக்க பின் ஏன் நான் இங்கு வந்தேன் என்றால், யாகத்தின் புரட்டையும், அது செய்யப்படுவதன் உள் எண்ணத்தையும், அதனால் ஏற்படும் பலன்களையும், ‘உயர்ந்த சாதியார் - அகிம்சா தர்மமுள்ள அந்தணர்' என்று கர்வமுடன் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களின் யோக்கியதையையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டவும், கொல்லப்படும் பிராணிகள் யாகத்தின் போரால் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பதையும் ஜனங்களுக்கு அறிவித்து, இப்படிப்பட்ட கொடுமையான சித்திரவதை இனி நிகழாமல் இருக்கும்படி செய்ய, சர்க்காரைத் தூண்டுவதற்காகவுமே வந்திருக்கிறேன்.

முதலில், கொலைக் கொடுமைகளைப் பற்றிச் சொல்லுகிறேன். யாகத்தில் கொல்லப்படும் ஆடுகள் எப்படிக் கொல்லப்படுகின்றன என்பது தங்களுக்குச் சிலருக்காவது தெரிந்திருக்குமென நினைக்கிறேன். நான் அறிந்தமட்டில், ஆட்டைக் கால்களைக் கட்டிக் கீழே தள்ளி, கொம்பைப் பிடித்து ஒருவர் அமிழ்த்திக் கொண்டு, வாய்க்குள் மாவைத் திணித்துக் கொண்டிருக்க - ஒருவர் நன்றாகக் கட்டி மூச்சுவிடாமல் சப்தம் போடாமல் செய்து, ஒருவர் விதர்களைக் கிட்டிபோட்டு நசுக்க - மற்றவர் வயிற்றில் ஆயுதங்களால் இடித்துக் கிழித்து அதன் சிற்சில உறுப்புகளைத் தனித் தனியாய் அறுத்து எடுப்பதன் மூலம் கொல்லப்படுகிறது. இது, சகிக்கக் கூடியதா? உயிர்களிடத்தில் அன்பு காட்டக் கூடிய சாதியார் செய்யக் கூடியதா? அகிம்சைக்காரர்களுக்கு ஏற்றதா? இப்படிப்பட்டவர்கள், மேல் சாதிக்காரர்களா? இவர்களுக்கு பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுண்டா? யோசித்துப் பாருங்கள்! ஆடு, கோழிகளைத் தலைகீழாகப் பிடிப்பதையும், தரதரவென்று இழுப்பதையும் ஜீவ இம்சை என்று சட்டஞ் செய்து அம்மனிதர்களைத் தண்டிக்கும் சர்க்கார் இவர்களை என்ன செய்ய வேண்டும்? ஆலையிலிட்டு நசுக்கும்படி சட்டம் செய்தால் அதைத் தப்பு என்று சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள்!

இந்த யாகம் ஆட்டுக்கு மாத்திரமில்லையாம். மாடு, மனிதர், குதிரை முதலியவைகளுக்கும் உண்டாம். இப்படியே விட்டுவிட்டால் நாளைக்கு இந்த ஆடுகளின் கதியேதான் மனிதர்களுக்கும் ஏற்படும். மத சம்பந்தத்தில் அரசாங்கம் நுழைவதில்லை என்று சொல்லி, அரசாங்கம் சுலபமாய்த் தப்பித்துப் கொள்ளலாம். ஆனால், நாளைக்கு நாமே யாகம் செய்து 10, 20 மனிதர்களை இந்தப்படி சித்திரவதையான கொலைபாதகம் செய்தால், மதத்தில் பிரவேசிக்காமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டு இருக்குமா? அதுபோலவே இப்போது கருதி, இப்படிப்பட்ட மூர்க்கத்தனமான சித்திரவதைக் கொலைகளையும், இம்சைகளையும் அரசாங்கம் ஏன் நிறுத்தக் கூடாது?

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும்போது, ராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. ராவணனையும் அவன் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி, அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்! ராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்ததற்காகத்தானே கொல்லப்பட்டிருக்கிறாள்? இந்த மாதிரிக் கொலைபாதக யாகத்தை யார்தான் கெடுக்கத் துணியமாட்டார்கள்? யாகத்தைக் கண்டு மனம் வருந்தி, பரிதாபப்பட்டு, அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?

இது நிற்க; இந்த யாகங்கள் புண்ணிய காரியங்களாம்! சொர்க்கத்திற்குக் காரணமானவைகளாம்! புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள்! ஜீவன்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும், சொர்க்க லபிதமாகவும் இருந்தால் - இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம், சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்துக் கால் கைகளைக் கட்டிப்போட்டு, வாயில் மண்ணை அடைத்து, விதரைப்பிடித்து நசுக்கிக் கொன்றுபோட்டால் புண்ணியமும் சொர்க்கமும் கிடைத்து விடும்போல் இருக்கிறது. சொர்க்கம், நரகம் என்பவைகள் சோம்போறிகளின் வயிற்றுப் பிழைப்புச் சாதனங்கள் என்று பல தடவைகள் நான் சொல்லி வந்திருக்கிறேன். பாடுபட்டு உழைத்தவன் பொருளை, கையைத் திருக்கிப் பிடுங்கிக் கொள்வதற்குப் பதிலாக, சொர்க்க நரகங்கள் எனும் பூச்சாண்டிகளைக் காட்டிப் பயப்படுத்திப் பிடுங்கிக் கொள்ளப்படுகின்றது. இப்படிப்பட்ட சொர்க்க, நரகத்திற்கு உண்மையான அர்த்தம் நல்ல விதத்தில் செய்ய வேண்டுமானால், மனிதனின் மூர்க்க சுபாவமும், பழிவாங்கும் தன்மையும் சொர்க்கம், நரகம் என்னும் வார்த்தைகளால் கற்பனைகளாகப் பிரதிபலிக்கின்றன என்பதாகும்.

சென்னையில் 3.6.1934இல் ஆற்றிய உரை. ‘புரட்சி' 10.6.1934
http://www.keetru.com/rebel/periyar/24.php

எல்லாத் துறைகளிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் விமோசனமில்லை. பெண்கள், சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றமேயல்லாமல், மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்களென்பேன்.

நாமும் அவர்களை சிசு, குழந்தைப் பருவம் முதல் ஓடி ஆடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்தும் பேத உணர்ச்சியற்று ஒன்றுபோலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன், அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரம் அல்லாமல், அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை, அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாகச் செய்து கொண்டு, அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஒரு அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.

இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு, ஒரு பெண்ணாக அமைவது. அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு கருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஒரு ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப் புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது, ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்! இந்த இழிநிலையில் பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.

நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன், பெண்களுக்குங்கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழைஅடித்துப் பாடமந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசிப் பற்றுப் போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதியல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழப்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல் மருந்து) போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி! அழுத்திப் பிடித்துக் கண்டித்து, அதட்டி அறுத்துத் தீர வேண்டியதாகும்.

நம் பெண்கள் உலகம், பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்ணை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தியடைகிறார்கள்; பெருமையடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பொம்மைகளாக (பதுமைகளாக) ஆக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

நம் பெண்கள் நாட்டுக்கு சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன, ஒழுக்கமற்ற சினிமாப் படங்களையும், சினிமா நட்சத்திரங்களையும் பார்த்து தினம் ஒரு ‘பேஷன்' நகை, துணிக்கட்டு, வெட்டு சாயல் ஏற்பட்டதுவே என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? இவை எல்லாவற்றையும் நம்குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றால் கீர்த்தி பெற்ற ஆண்களைப்போல் தாங்களும் ஆகவேண்டும் என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது, பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகின்றேன்.

எனவே, பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்போல் கட்டுவித்தல் வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும் கீர்த்தி புகழ் பெறும் பெண்மணியாகவும் ஆக்க வேண்டும். பெண்ணும், தன்னைப் பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும், நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு - தாழ்வு என்ற எண்ணம் எழவேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படக்கூடாது. அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.


‘வாழ்க்கைத் துணை நலம்' நூலிலிருந்து. (1958 ஆம் ஆண்டுப் பதிப்பு)
http://www.keetru.com/rebel/periyar/25.php

நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.

இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்.

"உலக உத்தமர்' என்ற காந்தியாரே சூத்திரன்தான். அவரும் தன்னை அடிக்கடி "நான் சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வார். அப்படிப்பட்ட "மகாத்மாவே' ஜாதியைப் பற்றிச் சிந்தித்தாரா? அதை ஒழிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பச்சையாகவே “நான் வர்ணாசிரமத்தைக் காப்பாற்றவே வந்தேன்; ராமராஜ்யத்தை நிலைநாட்டுவதே என் நோக்கம்'' என்று கூறினார். அதற்கென்று மக்களை எல்லாம் ராமபஜனை செய்யச் சொன்னார். அதனால்தான் பார்ப்பனர் எல்லாரும் கூடி, அவருக்கு "மகாத்மா' பட்டம் கொடுத்தனர். இல்லையேல், அவர் இதுவரையாவது உயிர் வாழ்ந்திருக்க முடியாது.

நானும் "மகாத்மா' ஆக முடியும். இன்றைக்கே “பார்ப்பனர் எல்லாரும் சாட்ஷாத் பூதேவர்கள்; மதம் அவசியம் வேண்டும், கடவுள் இல்லாமல் ஒன்றும் நடக்காது. அவசியம் பார்ப்பனர்கள் எல்லாக் கோயிலுக்கும் மணியாட்டத்தான் வேண்டும். இல்லையேல் உலகமே நாசமாய்ப் போய்விடும்'' என்று, இன்றைக்கு இக்கூட்டத்திலேயே பேசினால் போதுமே! உடனே தந்திமேல் தந்தி பறக்கும்; இங்குள்ள பார்ப்பனர் எல்லாரும் உடனே திரு. காமராசருக்குத் தந்தி கொடுப்பார்கள்; உடனே அவர் மத்திய அரசாங்கத்துக்கு "இங்கு இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ. ராமசாமி பக்தராகிவிட்டார். அதுவும் என்னுடைய ஆட்சியில் அவர் கொள்கைகள் மாற்றப்பட்டன'' என்று ஒரு வரி அதிகம் கொடுத்தால், உடனே எனக்கு மறுகணமே "மகாத்மா ராமசாமி' என்று கூப்பிட உத்தரவிடுவார்கள்! அங்கிருந்து “ராமசாமிக்கு ஒரு மந்திரி வேலை வேண்டுமா? இரண்டு மந்திரி வேலை வேண்டுமா? என்று கேள்!'' என்று பதில் வரும்.

ஆனால், நான் மற்றவர்களைப் போல் எண்ணமில்லாதவனாகையால், என்னுடைய வாழ்நாளில் ஏதும் பொதுத் தொண்டினைச் செய்தாக வேண்டும் என்று, நம் திராவிட மக்களுக்கென்று இக்காரியத்தில் ஈடுபட்டு, கடந்த 30 ண்டுகளாகப் பற்பல எதிர்ப்புகளுக்கிடையிலும் கஷ்டங்களுக்கிடையிலும் துணிந்து செய்து வருகிறேன்.

ஒரு பிள்ளை பெற்றவள் 10 பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பதைப் போல், எனக்கு யோசனை கூறுகிறது கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிசத்தின் கொள்கையே தெரியாதவர்கள், கம்யூனிசத்தின் கொள்கையைப் பாழ்படுத்துகின்றனர். "பணக்காரன் ஒழிந்தால் ஜாதி ஒழியும்'' என்கின்றனர். ஆனால், ஜாதி இருப்பதால்தானே அவனிடம் பணம் போய்ச் சேருகிறது என்பதை உணருவதில்லை. தனக்குத் தெரியுமானாலும், அக்கட்சியின் தலைவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், அதுபற்றிக் கூறுவதே கிடையாது. ஏதாவது உதாரணம் சொல்ல லெனின் சொல்லவில்லையே, மார்க்ஸ் சொல்லவில்லையே? என்றால், லெனின் இருந்த நாட்டில் பார்ப்பான் பறையன் இருந்தானா? இவர்கள் இருக்கவுமில்லை; அதைப்பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், இங்கு நேரிலேயே பார்க்கிறோமே பார்ப்பானையும் பறையனையும்! அதுமட்டுமா? சாஸ்திரத்தில் பார்க்கிறோம், சட்டத்தில் பார்க்கிறோம். ஆகவேதான் இங்கு இவைகளை ஒழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

எனவேதான், நாங்கள் கோருவது எல்லாம் மக்களுக்குச் சோற்றுக்கும், உத்தியோகத்திற்கும் மாத்திரமின்றி, பரம்பரை இழிவு நீங்க வேண்டும் என்பதேதான். அந்நியன் இந்நாட்டைச் சுரண்டாது, வேறு இங்குள்ள எவராவது ஆட்சி செய்தாலும் போதும். பார்ப்பனர்களின் அட்டூழியம், ஜாதி முறையும் ஒழிந்து, ராமாயணத்தில் ஒரு ஜதை செருப்பு ஆண்டதாகக் கூறப்படுகிறதைப் போல் எங்களை ஒரு ஜதை செருப்பு ஆட்சிபுரிந்தாலும் சரியே. மக்கள் சுயமரியாதை கொண்டவர்களாக, மனிதத் தன்மையுடன் வாழ வேண்டும். மனித ஜாதி என்ற ஒரு ஜாதிதான் இருக்க வேண்டும்.


13.4.1955 அன்று, திருச்செங்கோட்டில் ஆற்றிய உரை. "விடுதலை' 20.4.1955
http://www.keetru.com/rebel/periyar/27.php

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE