Language Selection

சமூகவியலாளர்கள்

‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.

ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.

சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.

காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழியில்தான் பூர்த்தி செய்து கொள்ள நேரும்.

பருவ காலத்தில் விதவையான பெண்களைச் சாஸ்திரங்களின் மேலும், மதத்தின் மேலும் பழி சுமத்தி மணஞ்செய்து கொடாமல் வைத்திருப்பதனால் விளையும் விபச்சாரக் கொடுமையை அளவிட்டுக் கூற யாரால் முடியும்? இன்று குளங்களிலும், ஆறுகளிலும், கிணறுகளிலும், சாக்கடைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் எறிந்து கொல்லப்படும் குழந்தைகளெல்லாம் விபச்சாரிகளாலும் விதவைகளினாலும் பெற்ற குழந்தைகள் என்பதை யார் மறுக்க முடியும்? வீட்டுக்கு வீடு விதவைகள் குடி கொண்டிருக்கும் ஜாதியில்தான் விபச்சாரங்களும், சிசுக் கொலைகளும் அதிகம் என்று அறியாதார் எவர்?

ஆகவே, உண்மையில் விபச்சாரம் ஒழிய வேண்டுமானால், ஆண்களுடைய ஆணவத்தை அடக்குவதற்கும் பெண்கள் சுதந்திரமாகிய காதல் மண உரிமை, விவாக விடுதலை உரிமை, விதவை விவாக உரிமை, சொத்துரிமை முதலியவற்றிற்கும் சட்டங்களின் மூலம் பலவந்தமாக உதவி செய்ய வேண்டும். இப்பொழுது பல நாடுகளிலும் விபச்சாரத்தை ஒழிப்பதற்குச் சட்டங்கள் செய்யப்பட்டு அமுலிலும் இருந்து வருகின்றன. ஆனால், விபச்சாரத் தடைச் சட்டம் அமுலில் இருக்கும் எல்லா நாடுகளிலும் அது அடியோடு ஒழிந்து விட்டது என்று கூறத்தகாது. ஒருகால் இந்தியாவைத் தவிர, மற்ற தேசங்களில் விபசாரத்தடைச் சட்டத்தினால் அதை அடியோடு நிறுத்தி விடக்கூடும். ஏனெனில் இந்தியாவைத் தவிர, மற்ற இடங்களில் நடைபெறும் விபச்சாரம் வெளிப்படையானவை. வெளிப்படையாக வியாபாரம் போல் நடைபெறும் விபச்சாரத்தைத் தடுப்பது எளிது. ஆனால், நமது நாட்டில் நடைபெறுவது போன்ற மறைமுகமான விபச்சாரங்களைத் தடுப்பது முடியாது. விதவைகள் செய்யும் விபச்சாரத்தையும், விவாக விடுதலை செய்து கொள்ள முடியாமல் பேருக்குத் தம்பதிகளாக வாழும் குடும்பங்களில் நடைபெறும் விபச்சாரங்களையும் எப்படித் தடுக்க முடியும்?

மேல் நாடுகளில் ரஷிய தேசம் ஒன்றில்தான் அடியோடு விபச்சாரம் ஒழிந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூக வாழ்க்கையில் எத்தகைய வேற்றுமையும் இருப்பதற்கு இடமில்லாமல், சட்ட மூலம் ஏற்பட்டிருக்கும் சவுகரியமேயாகும்.

ஆகையால் மற்ற நாடுகளைப் போல், ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூக விஷயங்களில் எத்தகைய வித்தியாசமும் இல்லாமல் சம சுதந்திரம் ஏற்படுத்தி, அதை அனு÷பாகத்தில் கொண்டு வருவதன் மூலம்தான் விபச்சாரத்தை அடியோடு ஒழிக்க முடியும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.

மதப்புரட்டுகளையும் சாஸ்திரப் புரட்டுகளையும் நம்பி பெண்களைக் கொடுமைப்படுத்தி விபச்சாரத்தனத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் இந்த மடையர்களான வைதீகர்களும், பகுத்தறிவற்றவர்களும், நமது நாட்டில் அரசியல் விஷயங்களிலும் செல்வாக்குப் பெற்றிருக்கும் வரையிலும், விபச்சாரத்தை ஒழிப்பதற்கு எத்தகையச் சட்டங்கள் செய்யப்பட்டாலும் அவைகளுக்குத் தகுந்த முழுப்பலனும் கிடைக்க முடியாதென்றே கூறுவோம்.


‘குடி அரசு' இதழின் தலையங்கம் 29.5.1932

http://www.keetru.com/rebel/periyar/16.php

 பார்ப்பனரிடமிருந்து தமிழர்களைப் பற்றிக் கொண்டுள்ள நோய்கள் பல. கேழ்வரகு, சோளம், கம்பு முதலிய உணவுத் தானியங்களைவிட அரிசியை உணவாக்கி உண்பது, அதுவும் தவிடு போக்கிய வெண்மையான அரிசிச் சோற்றைக் கஞ்சி வடித்து உண்பதுதான் கீழ்ச்சாதியிலிருந்து உயர்ந்து செல்வதற்குரிய முறை என்று கருதிச் சத்தான உணவு வகைகளைக் கைவிட்டனர், தமிழர்கள்.

ஆனால், பார்ப்பனரிடமுள்ள இரண்டொரு நற்பண்புகளை மட்டும் தமிழர்கள் அறிந்து நடக்கத் தவறிவிட்டனர். அதிகாலையில் எழுதல், இனப்பற்றுக்காக எதையும் தியாகம் செய்தல், எல்லாவற்றையும் விட கல்வியைப் பெருஞ்செல்வமாகக் கருதுதல் ஆகிய சில பண்புகளை ஆரியர்களிடமிருந்து கற்றுணர்ந்து நடக்க வேண்டும். தமிழர்களிடம் இன்று அதிவேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற பெரு நோய் ஒன்றைப் பற்றி இன்று எழுதுகிறோம்.

நாமக்கல் வட்டம் கடகப்பாடி என்ற சிற்றூரைச் சேர்ந்த ஒரு தமிழ் மாணவன் வயது 16தான். கோவைக்குச் சென்று கல்வி பயில்வதற்காகத் தன் மாமனாரிடம் 150ரூபாய் கேட்டதாகவும், அவர் தர மறுத்ததாகவும், இந்த ஆத்திரத்தினால் தன் மனைவியின் தந்தையை நள்ளிரவில் பேனாக்கத்தியினால் கொலை செய்துவிட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்ட ஒரு வழக்கில் இந்தக் குற்றவாளிக்கு அய்ந்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

பெற்றோர்கள்தான் இதில் முன்னணிக் குற்றவாளிகளாயிருக்கின்றனர். தாங்கள் தம்மகனின் கல்விக்காகச் செலவழித்த பணம், தம் கடமையைச் சேர்ந்தது என்று கருதாதபடி, ஏதோ ஒரு வியாபாரத்தில் போட்ட முதலீடாகக் கருதிக் கொண்டு அந்த முதலீட்டையும், வட்டியையும் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலமாக வசூல் செய்துவிட வேண்டுமென்றே கருதுகின்றனர்.

இந்த நோய் ஆந்திரர்களிடையிலும், தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களிடையிலும் முற்றியிருக்கிறது. ஒரு லட்ச ரூபாய் சொத்துடைய ஒருவருக்கு மூன்று பெண்களிருந்தால் போதும், அவர்களின் திருமணம் முடிந்தவுடன், அவர் ஓட்டாண்டியாக வேண்டியதுதான். வரதட்சணை மூலம் அவர் சொத்தைக் கசக்கிப் பிழிந்து குடித்து விடுகிறார்கள் மாப்பிள்ளை வீட்டார்.

இந்த வரதட்சணை நோயைச் சட்டத்தின் மூலம் தடுத்து விடலாமென்று ஆட்சியாளர் முயன்று கொண்டிருக்கின்றனர். பொய்யையும் விபச்சாரத்தையும் சட்ட மூலமாக ஒழிப்பது எப்படியோ, அதுபோலத்தான் இம்முயற்சியும்.

சமுதாயத்தில் நல்ல முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான் இம்மாதிரித் தீமைகளை ஒழிக்க முடியும். தானே பாடுபட்டு உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம், தமிழ் நாட்டு இளைஞர்களிடையே வளர வேண்டும். பிறர் சொத்துக்கோ சூது மூலம் கிடைக்கும் திடீர் வருமானத்துக்கோ, யாரும் ஆசைப்படக்கூடாது. பெற்றோரின் சொத்தைக்கூட அவர்களுக்குப் பிறகுதான் அடைய வேண்டுமே தவிர, சம்பாதிக்கக்கூடிய வயதிலும்கூட பெற்றோர் சொத்தை அனுபவித்துக் கொண்டிருக்கக் கூடாது. பெற்றோர் சொத்தையே இப்படிக் கருத வேண்டுமென்றால், மாமனார் வீட்டுச் சொத்தைப் பற்றிக் கனவிலும் ஆசைப்படக்கூடாது.

பொருள் வசதியுள்ள மாமனார் எவரும் எத்தகைய கருமியும், தன் மகள் வறுமையினால் தொல்லைப்படுவதைக் கண்டு சகித்துக் கொண்டிருக்க மாட்டார். ஆதலால், திருமணத்தின்போது இத்தனை ஆயிரம் ரூபாய்க்கு நகையோடு இத்தனை ஆயிரம் ரூபாய் வரதட்சணை கொடு; மாப்பிள்ளைக்குக் கார் வாங்கித்தா! வீடு வாங்கித்தா! என்றெல்லாம் பையனின் பெற்றோர் கேட்பது, மகா மானக்கேடான செய்கையாகும். தன் மகளுக்கு மற்றவன் கேட்கிறானே என்று சமாதானம் கூறக்கூடாது. இரண்டும் தவறு என்பதைத் துணிந்து கூற வேண்டும்.

இந்தத் தீய சுரண்டல் முறையினாலேயே திறமையும், அழகும், ஒழுக்கமும் நிறைந்த பதினாயிரக்கணக்கான பெண்கள் திருமணம் ஆக முடியாமலேயே இருக்கின்றனர். இளைஞர்கள் மதவெறியையும், சாதி உணர்ச்சியையும் மறந்து கலப்புத் திருமணம் செய்ய முன்வராவிட்டாலும், அவரவர் சாதிக்குள்ளும் மதப் பிரிவுக்குள்ளுமாவது வரதட்சணை கேட்காதபடி மணம் புரிந்து கொள்ள முன்வரக்கூடாதா? நல்ல காரியம் செய்யத்தான் இளைஞர்களுக்குத் துணிவு வேண்டும். வழக்கம் என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வருவதற்குச் செக்கு மாடுகளே போதும். தமிழ் நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இருத்தல் வேண்டாம். பந்தயக் குதிரைகளாக இருக்க வேண்டும்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 1.4.1959

http://www.keetru.com/rebel/periyar/17.php

 

 தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.

அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்குப் போக மாட்டான் என்றும் சொல்லப்படுகிறது.
செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்த ஜீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால், அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்கு சிறிதுகூட இல்லாமல் தரித்திரம், பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய, மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

இந்தப்படி செய்வது முடியாத காரியம் என்று யாராவது சொல்லுவார்களானால், ரஷ்யாவில் லெனின் என்ற ஒரு மனிதன் இந்தப்படி உத்திரவு போட்டு பணக்காரரும், பிச்சைக்காரரும் இல்லாமல் செய்துவிட்டாரே! இவர் கடவுளுக்கும் பெரியவரா என்று கேட்கிறேன். ஆதலால் தர்மம் பிறத்தியானுக்கு பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவுவது என்கின்ற முறைகள் எல்லாம் பணக்காரத் தன்மைக்கு அனுகூலமானதே தவிர பணக்காரத் தன்மையைக் காப்பாற்ற ஏற்படுத்தப்பட்டதே தவிர, அவை ஒரு நாளும் ஏழைகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் அனுகூலமானதல்ல.
ஏனெனில் பிச்சை கொடுப்பது, மற்றவர்களுக்கு உதவி செய்வது என்கின்ற காரியங்களால்தான், இல்லாத ஏழை மக்களை தரித்திரவாசிகளான மக்களைப் பிரித்தாள முடியும். ஏழை மக்கள் பிரிந்திருந்தால்தான் பணக்காரர்கள் வாழ முடியும். அன்றியும் பணக்கார மக்கள் மீது ஏழைமார்களுக்கு குரோதமும் வெறுப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கின்ற காரியத்திற்காகவே தர்மம் என்பதும், ஜக்காத் என்பதும், பிச்சை என்பதும் கற்பிக்கப்பட்டதே ஒழிய, பிச்சைக்காரர்களுக்கு உதவி செய்வதற்கோ அவர்களைக் காப்பாற்றுவதற்கோ ஏற்பட்டதல்ல.

எது எப்படி இருந்த போதிலும், உலகத்தில் மனித சமூகம் தொல்லை இல்லாமல் வாழ வேண்டுமானால், பிச்சை கொடுப்பதும் பிச்சை எடுப்பதும் சட்ட விரோதமான காரியமாய்க் கருதப்பட வேண்டும். அப்படியானால்தான் மனிதன் சுயமரியாதையோடு வாழ முடியும். பிச்சை கொடுக்கும் வேலையை சர்க்காரே எற்றுக் கொண்டு அதற்குப் பணம் வேண்டுமானால், பணக்காரரிடம் இருந்து பிச்சை வரி என்று ஒரு வரியை கிறிஸ்து சொன்ன கணக்குப்படியோ, சர்க்கார் வசூலித்து, அதற்கு ஒரு இலாக்கா வைத்து விநியோகிக்க வேண்டும். அந்தப் பிச்சையை சர்க்கார் தொழிற்சாலைகள் வைத்து, அதன் மூலம் பிச்சைக்காரர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு விநியோகிக்க வேண்டும். இந்தக் காரியத்துக்காக சர்க்கார் எந்தத் தொழிற்சாலை வைக்கிறார்களோ, அந்த மாதிரி தொழிற்சாலையை மற்றவர்கள் வைக்காமல் தடுத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்தால் பணக்காரர்கள் ஏற்பட்டு நாசமாய்ப் போனாலும், பிச்சைக்காரர்கள் தொல்லையாவது இல்லாமல் போய்விடும். பணக்காரத் தன்மை ஆட்சியில்லாத தேசம் எதிலும் இந்தக் காரியம் சுலபமாய் நடத்தலாம். ஆகவே, தர்மம் செய்வது அக்கிரமம் என்றும் ஜன சமூகத்துக்குத் தொல்லை என்றும், பணக்காரர்களின் அயோக்கியத்தனங்களை மறைக்க ஒரு சூழ்ச்சி என்றும் சொல்லுகிறேன்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 21.4.1945
http://www.keetru.com/rebel/periyar/18.php

 பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டு சுமார் 15 வருட காலமே ஆகியிருந்தாலுங்கூட, அது ஏற்பட்ட பிறகு இந்த நாட்டுக்கு 100க்கு 97 பேர்களாய் உள்ள நம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும், சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் எவ்வளவு பயன் அளித்து வந்திருக்கின்றது என்பதை உணர்ந்தால், பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் அவர்களுக்கு உதவி செய்யும் மூடர்களுடையவும், கூலிகளுடையவும், குலத் துரோகிகளுடையவும், யோக்கியதையும் சிறிதாவது விளங்காமல் போகாது.

தென்னிந்தியாவில் போலிஸ் இலாக்காவிலும், முன்சீப் இலாக்காவிலும் (நிர்வாகம், நீதி என்கின்ற இரண்டு இலாக்காவிலும்) பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்திருக்குமானால், நேற்று நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவு இப்படி ஆகியிருக்காது என்பதற்கு அனேக ஆதாரங்கள் காட்ட நம்மால் முடியும். இது ஒருபுறமிருக்க, இந்த நாட்டுக்குப் பழம்பெரும் குடிமக்களாகிய பார்ப்பனரல்லாதார் நிலை இந்த இருபதாம் நூற்றாண்டிலும், சூத்திரராயும் சண்டாளர்களாயும் மதிக்கப்படவே முடியாது. ஆகவே, கப்பலுக்கு சுக்கான் எப்படி முக்கிய கருவியோ அதுபோல மக்களுக்கு மக்களை நடத்துவதற்கு போலிசும், முன்சீப்பும், சுக்கான் மாதிரியாய் இருந்து வருகின்ற அவ்வளவு முக்கியமானவையாகும்.

ஆனால், உத்தியோகம்தான் பெரிதா? தேசம் பெரிதா? என்று பார்ப்பனர்கள் நம்மைப் பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள்; பார்ப்பனர்களது கூலிகளும், அடிமைகளும் இதற்குப் பின்பாட்டும் பாடுவார்கள். உத்தியோகத்தை மனதில் வைத்தே தேசம், தேசாபிமானம் என்று பார்ப்பனர்கள் போசி வரும் ரகசியம் பார்ப்பனரல்லாத "தேசாபிமானிகள்' பலருக்குத் தெரியாது என்பதோடு, பலர் தெரிந்தும் தங்கள் பிழைப்புக்கு வேறு விதியில்லாமல் பின்பாட்டுப் பாடுகின்றார்கள் என்றே நினைக்கின்றோம்.

இன்று தமிழ் நாட்டிலுள்ள தேசபக்திப் பார்ப்பனர்களை எடுத்துக் கொண்டால், அவர்களது பிள்ளை குட்டிகள், போத்துப் பிதிர்கள் எல்லாம் எதை எதிர்பார்த்து இன்று வாழ்கின்றார்கள் வளர்க்கப்படுகின்றார்கள்? B.A., M.A, B.Com, IAS முதலிய படிப்புகள் படிக்க வைக்கிறார்கள் என்பவைகளைப் பார்த்தால், பார்ப்பனர்கள் தேசாபிமானத்தைப் பிரதானமாகக் கருதுகிறார்களா? அல்லது, உத்தியோகத்தைப் பெரிதாகக் கருதுகின்றார்களா? என்ற சூழ்ச்சி விளங்காமல் போகாது. பார்ப்பனர்கள், சர்க்கார் உத்தியோகத்தை எதிர்பார்க்காமலும் வெறும், புத்திக்காகவும் அறிவுக்காகவும், தேசபக்திக்காகவும் படிக்கின்றார்கள் என்று, இன்று எந்த முட்டாளாவது கருதியிருக்கின்றார்களா என்று கேட்கின்றோம்.

ஆகவே, உத்தியோகத்தையே நம்பி உயிர் வாழும் ஒரு கூட்டம் உத்தியோகத்திலேயே 100க்கு 70, 80, 90 கணக்கில் புகுந்து கொண்டும், நத்திக் கொண்டும் மற்றவர்களை உள்ளே விட ஒட்டாமலும் சூழ்ச்சி செய்து வயிறு பிழைக்கும் ஒரு கூட்டம் அதற்காகவே தங்கள் பிள்ளை குட்டி, போத்துப் பிதிர்களைத் தற்புத்தி செய்து கொண்டு அரசாங்க ஆதிக்கத்தைக் கைப்பற்ற எவ்வித இழி தொழிலையும் கையாளும் ஒரு கூட்டம், "உத்தியோகம் பெரிதா? தேசம் பெரிதா?' என்று உத்தியோகத்தில் 100க்கு 25 போர்கள்கூட இல்லாத நம்மைக் கேட்பதாயிருந்தால், இதில் யோக்கியப் பொறுப்போ, நாணயமோ, கடுகளவாவது இருக்க முடியுமா?

ஜஸ்டிஸ் இயக்கத்தின் பயனாய்ப் பார்ப்பனர்களின் ஏகபோக (உத்தியோக) அனுபவிப்பு குறைந்த பிறகுதான் பார்ப்பனர்கள் உத்தியோகம் வேறு, தேசாபிமானம் வேறு என்று சொல்ல ஆரம்பித்தார்களே தவிர, அதற்கு முன்பு வரை உத்தியோகங்களே தேசாபிமானமாய் இருந்து வந்தது யாரும் அறியாததல்ல. உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை, காங்கிரஸ் பிரசிடெண்டுகளும் காரியதரிசிகளும், அய்க்கோர்ட் ஜட்ஜுகளாகவும், நிர்வாக சபை மெம்பர்களாகவும் இருந்து வந்ததே போதுமானதாகும்.

ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்பு, தீண்டப்படாதார் நிலை எப்படியிருந்தது என்பது, இப்பொழுது கூலிக்கு மாரடிக்கும் பச்சோந்திகளுக்கும் தேசபக்தர்களுக்கும் "அரைடிக்கட்' தேச பக்தர்களுக்கும் தெரியாவிட்டாலும் ஒரு நாற்பது வயதிற்கு மேற்பட்ட பார்ப்பனர் - பார்ப்பனரல்லாத தேசபக்தர் எவரும் அறிந்ததேயாகும். ஆகவே, நமது பார்ப்பனரல்லாதார் சமூகம் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சாரம் உத்தியோகத்தில் பெறும் வரையிலும் அல்லது பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரத்துக்கு மேற்பட்ட விகித உத்தியோகம் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் வரையிலும் ஜஸ்டிஸ் கட்சி இருந்து தீர வேண்டியதே என்பதே நமது அபிப்பிராயம்.

அது தேசத் துரோகக் கட்சியாக ஆயினும் சரி, சர்க்கார் தாசர்கள் "குலாம்கள்' கட்சியாயினும் சரி, அதனுடைய பிறப்புரிமையைப் பெற்ற பிறகுதான் அது வேறு வேலையில் இறங்க வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டுப் பார்ப்பனர்களுக்குப் பயந்து கொண்டு "எங்களுக்கு வகுப்புவாரித் திட்டம் வேண்டியதில்லை, யாரோ ஒருவர் இருவருக்கு மந்திரிப் பதவியோ, பெரிய சர்க்கார் உத்தியோகப் பதவியோ மாத்திரம் இருந்தால் போதும். நாங்களும் பெரிய தேசபக்தர்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்கள்தாம்' என்றால், அதைவிட ஈனத் துரோகமான கட்சி உலகில் வேறு இல்லையென்றுதான் சொல்லுவோம்.

‘பகுத்தறிவு' இதழின் தலையங்கம் - 23.12.1934

http://www.keetru.com/rebel/periyar/19.php

 இந்தக் கூட்டம், ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்புப் படையை வரவேற்கும் கூட்டமாகும். உங்களுக்குத் தெரியும் நண்பர் ஆச்சாரியார் பதவிக்கு வந்ததும் நான் அவரைப் பாராட்டினேன்; மற்றவர்களைவிட ஆச்சாரியார் எவ்வளவோ மேல் என்று பேசினேன். கம்யூனிஸ்டுக்காரர்களைவிட, பிரகாசத்தைவிட, ஆச்சாரியார் பரவாயில்லை என்று துணிந்து எழுதினேன்; அவரை ஆதரித்தேன்.

நாம் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டியதில்லை. திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, சட்டசபைக்குப் போவதில்லை; மந்திரியாக முயல்வதில்லை; தேர்தலில் நிற்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ‘இதெல்லாம் இல்லாமல் உன்னால் என்ன முடியும்?' என்றார்கள். அதற்குப் பதில் சொன்னேன் ‘யார் வந்தாலும் நமக்கான காரியங்களைச் செய்யும்படி பார்த்துக் கொண்டாலே போதும்' என்று. ஆச்சாரியார் இந்தக் கல்வித் திட்டம் குறித்து மிகவும் பிடிவாதமாக இருந்தார். அதனால்தான் நானும் மிக உண்மையாகக் கண்டித்தேன். நானே வருந்தும்படியாக, அவர் பதவியை விட்டுப் போகும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டது.

இன்றைக்கு காமராசர் இந்நாட்டின் முதலமைச்சராக வந்துள்ளார். இனிப் பலரும் சொல்லப் போகின்றார்கள், ‘காமராசரும் பெரியாரும் ஏதோ ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துப் போசுகிறார்கள்' என்றெல்லாம் கூறுவார்கள். இன்றைய தினம் இக்கல்வித் திட்டம் எடுபடும்படியான செய்தி வந்தது குறித்து நாம் பெருமைப்பட வேண்டியதுதான். நாடு முழுவதும் பாராட்டுக் கூட்டம் போடவேண்டியுள்ளது. பெரும்பாலும் அந்தப் புகழ் எல்லாம் காமராசருக்கே போகும்.

நாமும் இந்தத் திட்டத்தை எதிர்த்தோம்; மற்ற எல்லாக் கட்சிக்காரர்களும் இத்திட்டத்தை எதிர்த்தார்கள்; இது குறித்து காமராசரும் எதிர்த்துச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொல்லிய அதே காமராசர், தான் பதவிக்கு வந்ததும் அதை எடுக்காமல் இருப்பாரானால் என்ன ஆகியிருக்கும்? அவரும் இந்த சுப்பிரமணியம், பக்தவத்சலம் முதலியவர்களுடன் சேர்ந்து கொண்டு கல்வித் திட்டத்தை ஆதரித்துக் கொண்டு இருந்தால், என்ன ஆகியிருக்குமோ, என்னால் சொல்லவே முடியாது.

நமக்கு மகிழ்ச்சிக்குக் காரணம், திராவிடன் முதல் மந்திரியாக வந்ததாகும். காமராசர் வந்ததும் ஆச்சாரியாரின் சீடர்களுக்கு எப்படியோ இருக்கும். அதோடு, இந்த நாட்டில் இருக்கிற பார்ப்பனப் பத்திரிகைகளுக்கும், பார்ப்பனக் கூலிகளுக்கும் எப்படியோ இருக்கும். அவர்களுக்கெல்லாம் இந்த மந்திரி சபையே பிடிக்காது. ஆகவே, நாம் காமராசர் மந்திரி சபையை ஆதரித்துத்தான் தீரவேண்டும். எப்போதுமே ஆதரிக்க வேண்டியதுதானா என்பது பற்றி இப்போது ஒன்றும் யோசிக்க வேண்டியதில்லை.

1924 முதல் 1954 வரை ஒரு தமிழன்கூட முதன் மந்திரியாக வர முடியவில்லை. சுப்பராயன், சுப்பராயலு ரெட்டியார், பிரகாசம், ஓமாந்தூர் ரெட்டியார், ராசகோபாலாச்சாரியார் இந்த மாதிரியாக பார்ப்பானும், ஆந்திராக்காரனும்தான் இருந்திருக்கின்றார்கள். அப்படிக்கில்லாமல், முதன் முதலாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழன், முதலமைச்சராக வந்திருக்கின்றார். இவர் மந்திரி சபையும் 15 நாளில் தீர்ந்து போகாத மாதிரி இவர் வாய்தா பூராவும் இருக்கிற மாதிரி இருக்க வேண்டும்.

இரண்டாவது, முதன்முறையாகப் பார்ப்பானே இல்லாத மந்திரி சபை இது. இந்தக் காரியம் மிகமிகப் பெருமையானது. இன்றைக்கே அக்கிரகாரம் பேசுகிறது, ‘நம்முடைய ஆச்சாரியார் எங்கே? இந்தச் சாதாரண காமராசர் எங்கே?' என்று. நான் சொல்லுகிறேன் ‘போய்ப் பாரேன்; இப்போது எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று! ‘காமராசர் இந்தத் திட்டத்தை எடுத்தால் அவரை எதிர்ப்போம்' என்று சில காங்கிரஸ்காரர்கள் பேசினார்களாம்! நாளைக்கு அவர்கள் யாரை எதிர்க்கின்றார்களோ பார்க்கலாம்.

சட்ட சபையில் இப்போதுள்ள ‘திராவிடப் பார்லிமென்டரி கட்சி'யில் 23 பேர் இருக்கின்றார்கள். நாளைக்கு அவர்கள்தாம் எதிர்க்கட்சியாய் இயங்கப் போகின்றார்கள். காமராசர் ஆட்சி, இந்தக் கம்யூனிஸ்டுகளுக்குத்தான் பெரிய மண்டைக் குடைச்சல்! இந்தக் கம்யூனிஸ்டுகள், ஆச்சாரியாரிடம் நல்ல முறையில் பல பலன்களை அடைந்து வந்தார்கள். இந்தக் கம்யூனிஸ்டுகள், இந்த மந்திரி சபை மாற்றத்தைப் பற்றிச் சொன்னார்களாம், ‘குடுமி போய், கிராப் வந்திருக்கிறது' என்று. ‘இதனால் என்ன லாபம்!' என்றார்களாம். இவர்களும்தானே இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்ப்பதுபோல் காட்டிக் கொண்டார்கள்? இப்போது, குடுமி போய் கிராப் வந்தால் என்ன செய்யும் என்று தெரிகிறதா?

ஆச்சாரியார் இப்போது அடிக்கடி எங்களை எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்வதன் அர்த்தம் அவர் ‘இந்து மகா சபை'க்கு அனுகூலமாக இருக்கிறார்; அது வடநாட்டில் தற்போது சற்று வளர்ந்து வருகின்றது. அதன் மூலம் ஏதாவது பதவி அடைய முயற்சிக்கிறார்.

இந்த நாட்டில் இருக்கும் பத்திரிகைக்காரர்களுக்குப் பெரிய வேதனை. எப்படி இந்தப் பார்ப்பான் இல்லாத மந்திரி சபையைக் கவிழ்ப்பது என்றுதான் யோசித்து வருகிறார்கள். ‘தினமணி' இன்னும் ஒரு மாதத்தில் எதிர்க்கும்; ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' எதிர்க்கும். எல்லாவற்றிற்கும் பிறகு, மெதுவாக ‘இந்து' எதிர்க்கும் என்பதாகக் கூறி, படையினருக்குப் பாராட்டுகள் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.


திருவல்லிக்கேணி கடற்கரையில் ஆற்றிய சொற்பொழிவு. ‘விடுதலை' 15.5.1954.

http://www.keetru.com/rebel/periyar/21.php

 

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE