Language Selection

சமூகவியலாளர்கள்

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.

"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)

http://www.keetru.com/rebel/periyar/11.php

சகோதரர்களே! 69 ஆதிதிராவிடர்கள் முகமதியர்களாகி விட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்ச லோகம்' கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்' என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.

இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவபுண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும் ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை.

மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி' என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும்போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கியவேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க. சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும் அல்லவா?

ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும் ஒற்றுமையும் ஏற்படும்வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம் அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம். தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.


http://www.keetru.com/rebel/periyar/12.php

எங்களைப் பார்த்து முன்பு எல்லோரும் தேசத் துரோகிகள், நாசகாரர்கள் என்று சொன்னார்கள். இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. அவ்வளவு சேவை செய்திருக்கிறோம். இப்பொழுது நாங்கள் கேட்கிறோம்: பறையனுக்கும், சக்கிலிக்கும் எங்கிருக்கிறது சுயராஜ்யம்? ஆகவே முதலில் சாதி ஒழிய வேண்டும் என்று கூறி, சாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபடும் பொழுதுதான், எங்களை நாத்திகர் என்று கூறுகிறார்கள். இந்த வேலையை இப்பொழுது மந்திரிகள், நீதிபதிகள், பார்ப்பனப் பத்திரிகைகள் அனைவரும் செய்து வருகின்றனர். இதைப் பற்றிய கவலை எங்களுக்கில்லை. சாதியைக் காப்பாற்ற கடவுள் எதற்கு?

ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்க பணமில்லை என்று கூறுகிறார்கள். கோயில்களில் ஆயிரக்கணக்கில் நிலங்களும் நகைகளும் இருக்கின்றனவே, அதை யார் வயிற்றில் வைத்து அழுவது? இந்த நாட்டு மக்களின் கல்வியைப் பற்றிக் கவலையில்லாமல் சாதியைக் காப்பாற்ற கோயில் கட்ட வேண்டும் என்றும், கோயில்களை ‘ரிப்பேர்' செய்ய வேண்டுமென்றும் கூறுகிறாய். நேற்றுகூட பழனியாண்டவர் கோயிலுக்கு லட்சக்கணக்கில் செலவு செய்யப் போவதாகச் சொன்னார்கள். இந்தப் பணத்திற்கு எத்தனை கல்லூரிகள் கட்டலாம். வருடத்திற்கு கோயில்கள் மூலம் 45 லட்ச ரூபாய் வருகிறதே, எப்படி வருகிறது? 1956ஆம் வருடத்திலும் இந்த அக்கிரமமா?

யாராவது சொல்லட்டுமே, எனக்குக் கடவுள் பக்தி இருக்கிறதென்று! நான் கடவுள் யோக்கியதையைப் பார்த்துக் கொண்டுதானே வருகிறேன். நானும் கடவுள் பெயரைச் சொல்லி பல செயல்களைச் செய்தவன்தான். புராண காலட்சேபம் செய்து யார் ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? சங்கராச்சாரி வாழ்கிறாரா? சந்நிதானங்கள் யாராவது வாழ்கிறார்களா?

கடவுள் பக்தி வேண்டும் என்றும், ஆத்மா இருக்கிறதென்றும் நீதிபதி முதல் மந்திரிகள் வரையில் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த நாட்டில் பக்தி இல்லையா? எவராவது பக்தி இல்லையென்று சொல்ல முடியுமா? தமிழ் நாட்டில் ஏறக்குறைய இருபதினாயிரம் கைதிகளுக்குமேல் இருப்பார்கள். அவர்கள் காலையில் எழுந்த உடனே பட்டை பட்டையாக அடித்துக் கொள்வார்கள். ஏண்டா என்றால், சீக்கிரம் விடுதலையாக வேண்டும் சாமி என்று கூறுவான். யாராவது ராசா, மந்திரி சாகமாட்டானா, நான் விடுதலையாக மாட்டேனா என்று வேண்டிக் கொள்வான்.
இப்பொழுது திருடாமல், பொய் பேசாமல் யார் இருக்கிறார்கள்? இனிமேலாவது மக்கள் ஒழுக்கத்தை அனுசரிக்க வேண்டும்; அன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்படியே எல்லோரையும் ஏய்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தால் மிருகமாவது தவிர வேறு என்ன? உயர்தர நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதி எத்தனைக் கொலைகாரர்களைப் பார்க்கிறார்; எவ்வளவு திருடர்களைப் பார்க்கிறார். அவருக்குத் தெரியாதா, பக்தியில்லாமல் திருடுகிறானா, பக்தியிலிருந்து கொலை செய்கிறானா என்று?

அவர்களைப் பார்த்துவிட்ட பிறகு, மக்களிடம் பக்தியிருந்தும் ஒழுக்கமில்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? ஆகவே, மக்களை ஒழுக்கத்தின் பக்கம் திருப்ப வேண்டும். இன்னும் ஒழுங்கீனமாக நடக்கக் கூடாது. எவ்வளவு ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முடியுமோ அவ்வளவும் நடந்து விட்டோம். ஆகவே, கோயில் கட்டுவதானாலும், உற்சவம் கொண்டாடுவதானாலும் பயனில்லை. லாபமில்லை.

லட்சக்கணக்கான மக்கள் மாமாங்கத்திற்காகக் கூடினார்கள். அது, முட்டாள்தனத்தைக் காட்டுவதைத் தவிர வேறு என்ன? அங்கு போய் அழுக்குத் தண்ணீரில்தானே குளிக்கிறார்கள். குளத்தில் இருக்கும் மேல்தண்ணீரை இரைத்து விடுகிறார்கள். அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. எல்லோரும் இறங்கினால் தண்ணீர் உயரம் அதிகமாகிறது. யாரும் இல்லாதபொழுது கணுக்காலில் இருக்கும் தண்ணீர், எல்லோரும் இறங்கிய பிறகு கழுத்தளவுவரை வருவதில் ஆச்சரியமென்ன? குளத்தில் இறங்கி விட்ட பிறகு சிறுநீர் வந்தால் எங்கே போவது? அதைக் குளத்திலேயே ஒவ்வொருவரும் விட்டால் நுரை பொங்குகிறது. இதைப் பார்த்த நம் பைத்தியக்கார மக்கள் "பார் சிவன் தண்ணீர் விடுகிறான், நுரை பொங்குகிறது பார்' என்று சொல்லுகிறார்கள். சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அந்தத் தண்ணீரைத் தலையில் தடவிக் கொள்கிறார்கள்.

வட நாட்டில் கும்பமேளா நடந்தது. சுமார் எண்ணூறு சாமியார்கள் நிர்வாணமாக அங்கு வந்தார்களாம். அவர்களைப் பார்க்கப் போய் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். புண்ணிய ஷேத்திரத்திற்கு நிர்வாணமாகத்தான் போக வேண்டுமா? இதை வெளிநாட்டான் கேள்விப்பட்டால் என்ன நினைப்பான்? இன்னும் நீ இப்படியே நுரை பொங்குகிறதென்று சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாயா? எந்தப் பார்ப்பானாவது காவடி எடுத்து ஆடியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா? எந்தப் பார்ப்பனத்தியாவது திருப்பதி வெங்கடேசா, கோவிந்தா என்று தெருவில் புரண்டு பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறாயா? இதைக் கண்ட பிறகாவது திருந்த வேண்டாமா நம் மக்கள்?

26.8.1956இல் ஆம்பூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி ‘விடுதலை' 10.9.1956

http://www.keetru.com/rebel/periyar/13.php

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?

பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது
2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது
3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது
5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது
7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது
8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?

எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.

நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?

அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.

கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே 9.2.1959 அன்று நிகழ்ந்த உரையாடல்.

http://www.keetru.com/rebel/periyar/14.php

 

நமது "குடி அரசு'ப் பத்திரிகை ஆரம்பித்து ஆறு மாதங்களாகின்றது. அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய ‘மகாத்மா'வின் நிர்மாணத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது. இத்தொண்டில், ‘குடி அரசு' சிறிதுங் கள்ளங் கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது, தனது ‘ஆத்மா'வையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி தொண்டு செய்து வந்திருக்கின்றது வரவும் உத்தேசித்திருக்கின்றது.

‘குடி அரசு' குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரச்சாரப் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப்பதையோ தனது சுய வாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ, சுய நலத்திற்காக கீர்த்தி பெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும், வாசகர்களுக்கு போலி ஊக்கமும், பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றார்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர் வேடிக்கைப் பத்திரிகையுமன்று.

உண்மையில், ‘குடி அரசு'க்கு எந்தப் பார்ப்பனரிடத்திலும், குரோதமோ வெறுப்போ கிடையாதென்பதை உறுதியாகச் சொல்லுவோம். ஆனால், பார்ப்பான் உயர்ந்தவன் என எண்ணிக் கொண்டிருப்பதிலும், மற்றவர்கள் தீண்டத்தகாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள், ‘இழிவான' மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார்தான் முன்னணியிலிருக்க வேண்டும்; மேன்மையுடன் பிழைக்க வேண்டும்; மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அதற்காக மற்றவர்களை உபயோகித்துக் கொண்டும் செய்யும் கொடுமையான சூழ்ச்சிகளிடத்திலுந்தான், ‘குடி அரசு'க்கு வெறுப்பு இருப்பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டுமென்று ஆவல் கொண்டு உழைத்து வருகிறது.

பார்ப்பனர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும், பார்ப்பனரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப்படுவதாய்க் காணப்படுகிறது. இந்நிலையில், தேசத்தின் பெரிய சமூகத்தாரான, பார்ப்பனரல்லாதாரைப் பலி கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் தோன்ற மாட்டேனென்கிறது. அல்லாமல், இவற்றைப் பற்றிய கவலை எடுத்துக் கொள்ளாமல் எப்படியோ போகட்டும் என விட்டுவிடுவதற்கும் மனம் ஒருப்படுவதில்லை.

இதை ஆரம்பத்திலேயே ‘குடி அரசு' முதலாவது இதழ் தலையங்கத்தில் ‘மக்களுக்குள் தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்; உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும்; சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். ஆனது பற்றியே, ‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற் சென்றிடித்தற் பொருட்டு' எனும் தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் வாக்கைக் கடைப்பிடித்து, ‘நண்பரேயாயினுமாகுக, அவர்தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்' என நமது அபிப்பிராயத்தைத் தீர்க்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

பெரும்பாலும், பார்ப்பனர், செல்வந்தர், முதலாளிகள், வைதீகர் முதலியோருடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி வருவதால், அவர்கள் நமது பத்திரிகையை ஆதரிப்பார்களென்று எதிர்பார்ப்பது, பயித்தியக்காரத்தனமாகவே முடியும். ஆதலால், நமது பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது பார்ப்பனரல்லாதார், ஏழைகள், தொழிலாளிகள், தீண்டாதாரெனப்படுவோர் முதலிய ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்ட முக்கிய கடனாகும். அந்தப்படி இக்கூட்டத்தார், நமது ‘குடி அரசு'வை ஆதரிக்கவில்லையானால், ‘குடி அரசு' தானாகவே மறைந்து போக வேண்டியதுதான் அதனுடைய கடமையே அல்லாமல், முன் சொன்னது போல் சுய நலம் முதலியவைகளுக்கென்று இப்பத்திரிகையை நடத்துவதில் பிரயோஜனமில்லை.

ஏனெனில், ‘குடி அரசு'வானது தன்னுழைப்பினாலும், தனது தியாகத்தினாலும் மக்கள், சிறப்பாய் பார்ப்பனரல்லாதார், தீண்டாதார் முதலியோர் விடுதலை பெற்று சுயமதிப்புடன் வாழ்ந்து தேசம் உண்மையான சுயராஜ்யமடைய வேண்டுமானால், தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் சம நிலைக்கு வர வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றியமையாததெனக் கருதி, அதை எல்லா வகுப்பாரும் அடைய வேண்டுமென எதிர்பார்க்கிறதே ஒழிய, பொது மக்கள் வாழ்வால் ‘குடி அரசு' வாழ வேண்டுமென்று அது கருதவேயில்லை. ஆதலால், ‘குடி அரசு'வின் வாழ்வைக் கோருகிற ஒவ்வொருவரும் தங்களாலியன்ற அளவு போதிய சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும், மற்றும் தங்களால் கூடிய உதவி செய்தும் இதனை ஆதரிக்க வேண்டுகிறோம்.

‘குடி அரசு' இதழின் தலையங்கம் 1.11.1925

http://www.keetru.com/rebel/periyar/15.php

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE