Language Selection

சமூகவியலாளர்கள்

“இந்த இயக்கம் எந்தத் தனிப்பட்ட மனிதனும் வீரனாவதற்கும் வீர சொர்க்கம் போய்ச் சேரவும் ஏற்பட்டதல்ல. எனக்கு வீர சொர்க்கத்தில் நம்பிக்கை கிடையாது. வீரனாவதில் பயன் உண்டு என்று நம்பிக்கை கிடையாது. காந்திக்குமேல் ஒருவன் வீரனாகவோ மகாத்மாவாகவோ விளம்பரம் பெற முடியாது. ஆனால் அவரால் மனித சமூகத்துக்கு ஒரு காதொடிந்த ஊசி அளவு பயனும் ஏற்படவில்லை. ஏற்படப் போவதில்லை. வேண்டுமானால் அவருக்கும் அவர் சந்ததிக்கும் பெரிய மதிப்பு ஏற்பட்டு விடும். கோவிலும் ஏற்படும்.

ஆனால் நான் அப்படிப்பட்ட புகழை விரும்பவில்லை. எனக்குப் புகழ் வேண்டியதில்லை. புகழ் பெறுவதற்கு எவ்வளவு அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமென்பது நான் நன்றாய் அறிவேன். எத்துறையிலும் நான் இருந்து பார்த்து விட்டுத்தான் இந்த “இழிவு” பெறும் வேலைக்கு மனப்பூர்த்தி யாகவே வந்தேன். ஆதலால் நான் புகழ் பெறும் மார்க்கமோ வீரப்பட்டம் பெறும் மார்க்கமோ அறியாதவனல்ல.

நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்ட விரோதம் என்று சொன்னால் அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்கமில்லாமலும் உடனே பதில் சொல்லுகிறேன். என்ன பதில் என்றால் உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேல் கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடனும் பொறுப்புள்ள தோழர்களுடனும் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால் அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகமனுபவிப்பேன். வீரப்பட்டமும் பெறுவேன்.

சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் “புகழை”யும், “வீர”ப் பட்டத்தையும் தியாகம் செய்துவிட்டு பயங்காளி, கோழை, அடிமை என்கின்ற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்று தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வீம்புக்கும் போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன்.

- ‘குடி அரசு’ 29.3.1936 ‘பெரியார்’

http://karuppupaiyan.blogspot.com/2008/01/117.html

தத்துவக் காட்சி, தத்துவ உணர்வு என்பன உண்மை. அதாவது, உள்ளதை உள்ளபடி காண்பதும், அறிவதுமாகும். இயற்கை ஞானம் என்றும் சொல்லலாம்.

நாம் தத்துவத்தையும், இயற்கையையும் வேறுபடுத்திய காட்சியையும், குணத்தையும், உணர்வையும் கொண்டவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நமக்கு வெறும் பச்சை உண்மை - தத்துவம் என்பது சங்கடமான காட்சியாகவும் கேள்வியாகவும்தான் இருக்கும் உதாரணம் வேண்டுமானால் ஒன்று சொல்லுகிறேன்.

ஒரு மனிதனைக் காண்பது என்பது இயற்கையை மறைத்துச் சாயலை வேறுபடுத்திய தோற்றத்தைக் காண்பது என்பதாகும். ஆனால் அதே மனிதனை இயற்கையாய் உள்ளபடி காண்பது என்பது, அவனை நிர்வாணமாக, எவ்வித மறைவும் மாற்றமும் இல்லாமல் காண்பது என்பதாகும். இந்தக் காட்சி இன்றைய உலகுக்குப் பிடிக்காது; வெறுப்பையும், சங்கடத்தையும் உண்டு பண்ணக்கூடியதாகும். இப்படியே இன்றைய ஒவ்வொரு தன்மையையும் நிலைமையையும் நிர்வாணமாய், உண்மையாய்க் காண்பது என்பது இன்றைய உலகுக்கு வெறுப்பாகவும் அசூசையாகவும் அதிருப்தியாகவுமிருக்கும். அதனால்தான் தத்துவ விசாரணைக்கும், தத்துவம் அறிவதற்கும் மனிதன் சில பக்குவத்தை அடைந்திருக்க வேண்டும் என்பார்கள்.

அதனால்தான் நானும் உண்மைத் தத்துவத்தைச் சொல்வது என்பது பலருக்கு அதிருப்திகரமானதாக இருக்கும் என்று சொன்னேன். பொதுவாகவே நாட்டில் ஒரு பழமொழி உண்டு. யதார்த்தவாதி வெஹுஜன விரோதி’ என்று சொல்வதுண்டு. இதன் கருத்து மக்கள் யாவரும் பொய்யர்களாய் இருக்கவேண்டும் என்பதல்ல. எது உண்மையோ, எது தத்துவமோ அது மக்களிடையில் மாற்றுருவம், மாற்றுப் பெயர், மாற்றுக் குணம் பெற்று இருக்கிறது.

ஆதலால், உண்மை விளக்கம் திருப்தி அற்றதாகக் காணப்படும். எனவே, தத்துவ விசாரணை விளக்கம் என்பதற்கு இயற்கையிலேயே மக்களுக்கு எடுத்துச் சொல்லுவதில் சங்கடமிருந்தாலும் நான், அதாவது ஒரு சாதாரண மனிதனும், தலைவர் என்னைப் பற்றி எடுத்துச் சொன்னதுபோல் நாஸ்திகன், மதத்துவேஷ அரசியல் எதிரி என்கின்ற தன்மையில் பேர்வாங்கி இருக்கிறவனும் தத்துவத்தைப் பற்றிப் பேசுவதென்றால், அது மிக மிகச் சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகும்.

என்றாலும் என்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு - குறைகளுக்குச் சமாதானம் சொல்லும் முறையிலேயே என் தகுதிக்கு ஏற்ற அளவு தத்துவத்தைப் பற்றிச் சொல்ல முயலுகிறேன்.

ஏனெனில், இந்த இப்படிப்பட்ட ஒரு அவையில் நான் எதைப்பற்றிப் பேசுவது என்பதாக எனக்குள் எழுந்த பிரச்னை முடிவு பெறுவதற்கு முன்னதாகவே, தலைவர் அவர்கள் என்னை அறிமுகப்படுத்துவதில், இந்த மேற்கண்ட சொற்களும் உச்சரிக்கப்பட்டதால், அவைகளே போதுமென்று கருதி, அவைகளைப் பற்றிப் பேசலாம் என்றே நினைக்கிறேன்.

தோழர்களே, விஷயம் அற்பமானதாகவும் கருதப்படலாம், பிரமாதமானதாகவும் கருதப்படலாம். எப்படியெனில், சாதாரண மக்களுக்குக் கடவுள், மதம், அரசியல் விஷயங்களின் தத்துவம் மிகவும் அலட்சியமானதாகும்; பெரிய அறிஞர்களுக்கு இந்த விஷயங்கள் அபாரமானதும் மிக நுணுக்கமாக அறிந்து பேசத் தகுந்ததுமாகும்.

ஒரு பாட்டுக்காரன் பாடும்போது, பாமர மக்களும் வித்வதன்மை உள்ளவர்களும் கலந்திருந்து கேட்பார்களானாலும் பாமர மக்கள் பாட்டின் வாசகங்களை சொற்களைப் பொறுத்த வரையில் கவனித்துவிட்டு, “இது ஏதோ சாமிமீதுப் பாடினான்,’’ “இது ஏதோ பெண்களைப் பற்றிப் பாடினான்’’ என்று அந்த வார்த்தைகளின் அளவோடு அவர்கள் பாட்டுக் கச்சேரிக்குப் போன தன்மையை முடித்துக் கொள்ளுவர்.

அதே பாட்டுக்காரனிடம் பண்டிதத் தன்மை உடையவர்கள் கேட்ட அளவில், சங்கீதக் கலைஞானத்தைக் கொண்டு மிக நுணுக்கமாகக் காது கொடுப்பார்கள். ஆதலால் பாடுகிறவன் பாடுகிற வேலையை மிகப் பிரமாதமாகக்கொண்டு மிகக் கஷ்டத்தோடு கவலையோடு பாடவேண்டியிருக்கும். அதனால்தான் நான் பேச, எடுத்துக் கொண்ட விஷயங்கள் அலட்சியமானதும் அபாரமானதும் என்று சொன்னேன்.

தோழர்களே, தலைவர் கடவுளைக் குறிக்கும்போது, “எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவையும் செய்கிற தன்மை உள்ளவர்’’ என்று சொன்னார். அதோடு கூடவே தலைவர் மதத்தைப் பற்றிக் குறிக்கும்போது “மனிதனுக்கும் கடவுளுக்கும் சம்பந்தத்தை உண்டாக்குவதற்கு மதம்’’ என்று சொன்னார். இது மதபக்திக் கூட்டமல்ல; புராணப் பிரசங்க கூட்டமுமல்ல. ‘தத்துவ விளக்கம்’ என்னும் தலைப்பில் பேசுவதைக் கேட்க வந்திருக்கும் கூட்டம். ஆனதால், கடவுளுடையவும், மதத்தினுடையவும் தத்துவம், உண்மைத் தத்துவம் அதுவும் பச்சை உண்மையாம் பட்டாங்கமாய் உள்ள தத்துவம் பேசப்பட வேண்டியதாகும். ஆதலால், அந்தப்படி பேசுகிற முறையில் நான் பேசுகிறேன்.

உண்மையிலேயே என்னை நாஸ்திகன் என்றும், மதத்துவேஷி என்றும் பலர் சொல்லுகிறார்கள்; பலர் கருதியுமிருக்கிறார்கள். இந்தப்படி நாஸ்திகர்கள் என்பவர்கள் யாராவது கருதி இருப்பார்களானால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆஸ்திகர்கள் என்பவர்கள் கருதி இருப்பார்களானால் அவர்களுக்காகப் பரிதாபப்படுவதுடன், இந்த மாதிரி மக்களிடையில் இருக்க வேண்டி இருக்கிறதே என்று என்னையே நான் வருந்திக் கொள்ளுகிறேன்.

தத்துவ வாசகத்துக்காகக் கூட்டப்பட்ட கூட்டத்தில் கூட, எனது தத்துவத்தை எடுத்துச் சொல்ல நான் பயப்பட்டால், அல்லது பித்தலாட்டம் செய்தால், நான் என்னையே வெறுத்துக்கொள்ள வேண்டியவனாவேன். ஆகவே, என்னை நாஸ்திகன், மதத்துவேஷி என்று ஆஸ்திகன் சொல்லுவது மகாமகா அறியாமையும் அலட்சிய புத்தியும் ஆகும்.
இதை ஒரு உதாரணம் காட்டி விளக்குகிறேன்.

ஒரு ஊரில் ஒரு பிச்சைப் பிழைப்பு பார்ப்பனன் ஒரு நல்ல காரியம் நடந்ததற்காகப் பிச்சைக் கொடுக்கும் ஒரு வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டான். அவ்வீட்டுக்காரர் மற்றவர்களுக்கு கொடுத்ததுபோல் இவனுக்கும் நான்கணா கொடுத்தார். அதற்கு அந்தப் பிச்சைக்காரப் பார்ப்பனன் அந்த வீட்டுக்காரனைப் பார்த்துக் கோபித்துக்கொண்டு, “ஏ ஓய்! தற்பெருமை, அன்னியர்களைக் குறைகூறுதல், பணத்தாசை ஆகிய மூன்றையும் துறந்து, நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெண் புராணம். தர்க்கம், மீமாம்சை, தத்துவ ஞானம் ஆகியவைகளைக் கற்று மிக மேதாவியும், மகாபண்டிதனுமான எனக்கும் நாலு அணாவா? இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் கழுதைக்கும் நாலு அணாவா? வெகுயோக்கியமாய் இருக்கிறதே உம்முடைய தர்மம் என்று கேட்டானாம்.
அதுபோல் இருக்கிறது, ஒரு ஆஸ்திகன் என்பவன் ஒருவனைப் பார்த்து நாஸ்திகன் என்று சொல்லுவது என்கிறேன்.

ஏன் எனில், இந்த ஆஸ்திகன் கடவுளை எப்படி அறிந்திருக்கிறான் என்றால்,
“கடவுள் சர்வ வல்லமை உள்ளவர், சர்வ வியாபி (எங்கும் நிறைந்தவர்) சர்வத்தையும் (எல்லா காரியங்களையும்) நடத்துகிறவர், அவருக்கு மேம்பட்டவர் எவரும் இல்லை, அவர் அன்றி (அவர் அனுமதியாமல்) ஒரு காரியமும் நடைபெறுவதில்லல்’’ என்பதாக அறிந்திருப்பதாகச் சொல்லிவிட்டு, அப்படிப்பட்ட கடவுளை நான் இல்லை என்பதாகவோ, மறுப்பதாகவோ சொல்லுகிறார் என்றால், இது அந்தப் பார்ப்பனன் சொன்னதற்கே சமாதானமாகும்.

அந்தப் பார்ப்பனன் முதலில் தன்னிடம் ஆத்மஸ்துதி, பரநிந்தை, திரவிய சுபேட்சை இல்லை என்றும், தான் அவைகளை வெறுத்து விட்டவன் என்றும் சொல்லி விட்டு உடனே நான் நாலு வேதம், ஆறு சாஸ்திரம் முதலியவைகளைப் படித்துக் கரைகண்ட மேதாவியாகிய மகாபண்டிதன் என்கிறான். இதில் அவன் தற்பெருமை வெறுத்த யோக்கியதை தெரிகிறது.

அதுபோலவே பரநிந்தை - அன்னியனை இழிவாக்குவது - வைவது தன்னிடம் இல்லை என்று சொல்லிவிட்டு, “இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் மடையனுக்குமா நாலணா?’’ என்கிறான்.

அடுத்தபடியாக தனக்குப் பண ஆசையே இல்லை என்று சொல்லிவிட்டு, “இந்த நாலு அணாதானா எனக்குக் கொடுப்பது?’’ என்கிறான். எனவே தன்னைப்பற்றி அவன் சொன்னது அத்தனையும் பொய் என்பதும், கற்பனை என்பதும், அவன் பின்னால் சொல்லியதிலிருந்து வெளியாகிவிட்டன.

அதுபோலவே எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, யாவற்றையும் செய்விக்கிற கடவுளை ஒரு மனிதன் இல்லை என்று சொல்லுகிறான் என்று சொன்னால், ஒன்று அந்த ஆஸ்திகன் கடவுளுக்கு மேல்கண்ட குணங்கள் இருப்பதாகச் சொன்னது பொய்யாகவும், கற்பனையாகவும் இருக்க வேண்டும் அல்லது மற்ற மனிதரைப் பார்த்து, நாஸ்திகன் கடவுள் இல்லை என்று சொன்னது தவறாக, அறியாமையாக யோசனையற்றதாக இருக்கவேண்டும்.

இருக்கிற கடவுளை இல்லை என்று சொல்லுவதில் சொல்லுபவனுக்கு என்ன லாபம்? அல்லது சர்வத்தையும் செய்விக்கிற, சொல்லச் செய்கிற ஒரு கடவுள் இப்படியாக ஒரு வரைச் சொல்லவும் நினைக்கவும் செய்வதில், கடவுளுக்குத் தானாகட்டும் என்ன லாபம் வரும்? ஆகவே, ஒரு மனிதன் இப்படி முட்டாள்தனமான காரியத்தைச் செய்வானா? அல்லது ஒரு கடவுள் இப்படிப் பைத்தியக்காரத்தனமான காரியத்தைச் செய்விப்பாரா என்பதையாவது, ஒருவன் கடுகளவு நினைத்தாலும், சிந்திக்கும் சக்தி இருந்தாலும் மற்றவனை ‘நாஸ்திகன், கடவுளை மறுக்கிறவன்’ என்று குறைவோ, குற்றமோ சொல்ல மாட்டான்.

ஒருவனை ஒருவன் நாஸ்திகன், கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் என்று சொல்லுவதே நாஸ்திகமாகும், கடவுளைச் சரியாக அறியாததேயாகும். அந்த வார்த்தையை உண்டாக்கினவர்களே நல்ல நாஸ்திகர்களாவர். கடவுள் இருந்தால், ஒரு மனிதன் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது ஒருவன் இல்லை என்று சொல்லுகிறான் என்று மற்றவன் நினைக்காவது முடியுமா? ஆகவே, நாஸ்திகம் நாஸ்திகன் என்பன கடவுள் வியாபாரக்காரர்கள் தங்கள் வியாபாரத்துக்கு ஆதரவாகக் கண்டுபிடித்த உப கருவிகளே ஆகும். கடவுள் வியாபாரக்காரனுக்கு அல்லாமல் மற்றவனுக்கு இந்த கவலையே இருக்க நியாயமில்லை.

கடவுள் பற்றிய தத்துவ விளக்கம் என்றால், கடவுள் நிர்வாணமாய், பட்டாங்கமாய் காணப்படும் வரையில் ஆராய்ச்சி செய்வது என்பதாகும். ஒரு விஷயத்தைத் தத்துவ விசாரணை செய்ய, முதலில் என்ன, ஏன் எதற்காக, எப்படி, எங்கே, எப்போது என்பன போன்ற கேள்விகளைப் போட்டு திருப்தியான பதில் பெற வேண்டும். தயவு தாட்சண்யமற்ற கேள்வி போட வேண்டும். தத்துவ விசாரணை என்பதும் தர்க்க வாதம் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையதாகும். ஆகையால், சர்வ சக்தி, சர்வ வியாபகம், சர்வத்தையும் நடத்துதல் ஆகிய அபாரகுணங்களைக் கொண்ட ஒரு பரம்பொருளைப் பற்றித் தத்துவவிசாரணை செய்கிறவர்கள் இந்த 6, 7 கேள்வி மாத்திரமல்லாமல் இன்னும் 60, 70 சோதனைகளை செய்து பார்க்கவேண்டும்.

பக்தனுக்கு இது தேவை இருக்காது. தத்துவ விசாரணைக்காரனுக்கு இது அவசியமாகும். கடவுள் மூடபக்தியால், குருட்டு நம்பிக்கையால் விளங்குபவராக இருக்கக்கூடாது. வேறு யாருக்காகிலும் அப்படி விளங்கினாலும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு அதிலும் தத்துவ விசாரணைக்காரனுக்கு அப்படிக் குருட்டு நம்பிக்கையால் விளங்கக்கூடாது என்பேன்.

எதற்காகக் கடவுள்? ஏன் கடவுள்? எது கடவுள்? என்கிற விளக்கம் அவசியம் ஒவ்வொரு தத்துவ விசாரணைக்காரனுக்கும் விளங்கி ஆகவேண்டும். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர, கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தொல்லைக்குப் பரிகாரமாகக் கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான். அரசன் ஏன்? குடிகள் ஏன்? ஏழை, பணக்காரன் ஏன்? மேல் ஜாதி, கீழ் ஜாதி ஏன்? உழைப்பாளி அடிமையும் சோம்பேறி எஜமானனும் ஏன்? பிச்சைக்காரன், பிரபு ஏன்?

இந்தத் தன்மைகளை ஏற்படுத்தவும் நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் அல்லாமல் கடவுளால் கண்ட பயன் என்ன? அவர் செய்த நல்ல காரியம் என்ன? இந்த வேலைகளுக்கு ஒரு கடவுள் வேண்டுமா?

பகுத்தறிவு கொண்ட மனிதன் சாந்தி, அன்பு, திருப்தி இல்லாமல் கவலையில், அதிருப்தியில் குறையோடு சாவதற்குக் காரணம் கடவுள் அல்லாமல் வேறு என்னவாய் இருக்கக்கூடும்?

அவனவன் முட்டாள்தனம் காரணம் என்றால் பகுத்தறிவு இருப்பது எதற்காக? முட்டாள் தனத்தை உண்டாக்கவா? பகுத்தறிவு இல்லாத ஜீவன்களுக்கு இல்லாத கெட்ட குணங்கள், கவலைகள், குறைபாடுகள் இனவெறுப்புகள், துரோகங்கள் பகுத்தறிவுள்ள ஜீவனான மனிதனுக்கு ஏற்படுவானேன்? பகுத்தறிவுற்ற துஷ்ட ஜந்துக்களிடமும் இல்லாத கெட்ட குணங்கள் பகுத்தறிவு உடைய மனிதனிடத்தில் இருப்பானேன்? கடவுளைக் கண்டதாலா? கடவுளைக் கற்பித்துக் கொண்டதாலா? கடவுள் தன்மையை, கடவுள் சக்தியைத் தவறாகக் கொண்டதாலா? எதனால் என்பது பகுத்தறிவுக்குக்கூட எப்படிப் பரிகாரம் செய்து கொள்வது என்பது முடியவில்லையானால், பகுத்தறிவின் பயன்தான் என்ன? கடவுளின் தன்மைதான் என்ன?

 

http://karuppupaiyan.blogspot.com/2007/10/116.html

இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு விலகப்போகிறதா, இல்லையா என்பது நமக்குத் தெரியாது. சீக்கிரத்தில் நாடு கழுதை புரண்ட களம் என்பது போல் சீரழியப் போகிறது என்பதுதான் காணக்கூடியதாக இருக்கிறது. தூது கோஷ்டி தோல்வி அடையப் போகிறது; அடைந்து விட்டது என்கிறார்கள் -பத்திரிகை செய்திக்காரர்கள். காங்கிரசார் பதவி ஏற்ற இந்தக் காலத்துக்குள்ளாகவே மக்களுக்கிடையே ஒரு சமரச முடிவு இல்லையானால், நாடு சீரழியப் போவது நிச்சயம்.

இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு நஷ்டமில்லை. அவர்கள் ஆதிக்கம் இன்னும் பல நாளைக்குப் பலப்படத்தான் இடமாகும். ஆரியர்களுக்கும் கஷ்டமில்லை. ஆரியர் பிரிட்டிஷாருடன் இன்னும் பலமான ஒப்பந்தம் செய்து கொள்ளுவர். காந்தியாருக்கும் குறைவு வராது. அவர் அவதாரக் கடவுள் தன்மை மாறி உண்மைக் கடவுளாகி விடுவார். தொல்லைப்படப் போவது நாம்தான் : முஸ்லிம், திராவிடர், ஷெட்யூல்டு வகுப்பார் ஆகியவர்களும் இக்கூட்டத்தில் உள்ள ஏழை, எளியவர், தொழிலாளர் கூலியாட்கள் ஆகிய பாட்டாளி மக்களும்தான்.

அதோடு மாத்திரமல்ல. கண்டிப்பாக இந்து -முஸ்லிம் ரத்தம் சிந்துதலும், மேல் ஜாதி, கீழ் ஜாதி ரத்தம் சிந்துதலும், சோம்பேறி பாட்டாளி ரத்தம் சிந்துதலும், முதலாளி, தொழிலாளி ரத்தம் சிந்துதலும் நடந்துதான் தீரும். இந்த முப்பது வருஷ காலமாக நம் மக்கள், நான் முதல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பொது நலனுக்கு என்று பாடுபட்ட, கஷ்ட நஷ்டமனுபவித்த தியாகம் என்பதற்கு இதுதானா பலன் என்று பாருங்கள். இந்த சந்தர்ப்பத்தில் பார்ப்பனப் பத்திரிகையில் செய்து வரும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல. அவை இந்து முஸ்லிம் கலகத்தையும், கீழ் ஜாதி மேல் ஜாதி கலகத்தையும், திராவிடர்களுக்குள் ஒருவருக்கொருவர் குத்து, வெட்டு, அடி, உதை, கொளுத்து ஆகிய போராட்டங்களையும் வளர்த்து விடுகின்றன.

இன்றைய அரசியல் போராட்டம் என்பது என்ன? இந்தியன் வெள்ளையன் போராட்டமா? இல்லையே. இன்றைய இந்தியப் பிரச்சினை, சுயராஜ்யப் பிரச்சினை அல்லவே; சுதந்திரப் பிரச்சினை அல்லவே, ஆங்கிலேயே அந்நியன் பிரச்சினை அல்லவே. இந்து, முஸ்லிம் பிரச்சினையாகத்தானே காணப்படுகின்றன. இந்து முஸ்லிம் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதும், இந்து மதம் காப்பாற்றப்படுவதும், இஸ்லாம் காப்பாற்றப்படுவதுதானே இன்று சுதந்திரப் போராக ஆகிவிட்டது. இதே நிலையில்தானே ஆரியம், திராவிடம் என்கின்ற பிரச்சினையும் இருக்கிறது. திராவிடன் ஆரிய ஆதிக்கத்தில் இருந்து மீண்டு தனித்தன்மை பெறுவதை சுயராஜ்யம் என்கிறான். ஆரியன் திராவிடரை அடக்கி அழுத்தி வைப்பதை, மனு ஆட்சி புரிவதை சுயராஜ்யம், தர்மராஜ்யம், ராமராஜ்யம் என்கின்றான்.

தோழர்களே! தூது கோஷ்டி வெற்றி பெற்றாலும் நாம் சூத்திரர், பறையர், 4ஆவது 5ஆவது ஜாதியாகத்தான் இருப்போம். தூது கோஷ்டி தோல்வியுற்றாலும் நாம் 4ஆவது 5ஆவது ஜாதிதான். காங்கிரசுக்கும் நமக்கும் என்ன பேதம்? காங்கிரஸ் அந்நியன் ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்கின்றது. நாமும், ஆம் அது சரி அதுதான் முதல் வேலை என்கிறோம். ஆனால் அந்நியர் என்கின்ற பட்டியில் திராவிடனல்லாதவன் எவனும் அந்நியன் என்று விளக்கம் எழுதிக்கொள் என்கின்றோம். ஒப்புக் கொள்ளுகிறதா காங்கிரஸ்? ஆங்கிலேயன் தவிர மற்றபடி இந்தியன் என்ற பெயரால் எவன் பிழைத்தாலும், எவன் திராவிட நாட்டைக் கொள்ளை கொண்டாலும் சரி என்கிறது காங்கிரஸ்.

நாம் திராவிட நாட்டை திராவிடத்தில் நிரந்தரமாய் வாழும் திராவிட நாட்டுக் குடிகள் தவிர, பிர்லா, பஜாஜ், காந்தி, நேரு, பட்டேல், பட்டானி, குஜராத்தி, மார்வாரி, பனியா, சிந்தி, காஷ்மீரி, பட்டான், மேமன் எல்லைப்புறக்காரன் எவரும் சுரண்டக்கூடாது என்கின்றோம். இந்தியன் மட்ட ஜாதியல்ல; வெள்ளையன் உயர்ந்த ஜாதி அல்ல. இருவருக்கும் மாத்திரமல்ல. மூவருக்கும் அதாவது திராவிடன், ஆரியன், வெள்ளையன் ஆகிய மூவருக்கும் சம உரிமை வேண்டும். திராவிடன் சூத்திரனல்ல; பறையன் அல்ல; தீண்டப்படாதவன் அல்ல; ஆரியன் பிராமணன் அல்ல, மேல் ஜாதி அல்ல; பூதேவன் அல்ல.

சம உரிமையில் சம விகிதாசாரத்தில் சம போக போக்கியத்தில், சம உழைப்பில் இருக்க வேண்டிய மக்கள் என்கின்றது திராவிடர் கழகம். இந்தியா முழுமைக்கும் ஒரு சுயராஜ்யம் போதும் என்கிறது காங்கிரஸ். பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி சுயராஜ்யம் வேண்டும். ஜின்னா பிரிவினை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி. அம்பேத்கர் மனிதத்தன்மை, சம உரிமை கேட்டால் -அவர் தேசத்துரோகி, முட்டுக் கட்டைவாதி; கம்யூனிஸ்டுகாரர்கள் கேட்டால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டிய இழிமக்கள்; திராவிடர்கள் பாதுகாப்பு சமுதாய உரிமை கேட்டால் -அவர்கள் தேசத்துரோகி! தோழர்களே! கலகத்தில் காலித்தனத்தில் ஆரியன் எவனாவது சிக்கிக் கொள்கிறானா? திராவிடன் கையில் சாணி உருண்டையும் கல்லையும் கொடுத்து திராவிடன் மீதே எறியச் சொல்லிவிட்டு, மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறானே! இதுவா விடுதலை முயற்சி?

(பள்ளிகொண்டாவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரை - 'விடுதலை' 15.6.1946)

http://karuppupaiyan.blogspot.com/2007/10/115.html

ஆதிதிராவிடர்கள் என்கிற பெயரால் எனக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் அளித்துக் கொடுத்திருப்பதற்கு, இரண்டொரு வார்த்தை சொல்லுகிறேன். நீங்கள் ஆதிதிராவிடர்கள் என்ற ஒரு பெயர் பெற்று இருப்பது, உங்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட இழிவை மாற்றிக் கொள்வதற்கு அனுகூலமானதென்று நினைத்திருக்கிறீர்கள். உங்களைக் கொஞ்ச காலத்திற்கு முன்பு பறையர்கள், சக்கிலியர்கள், பள்ளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், அவ்வார்த்தைகளுக்கு என்ன பொருளும், தத்துவமும் இருந்தனவோ, அதே பொருள்தான் ‘ஆதிதிராவிடர்' என்ற வார்த்தையிலும் இருக்கிறதேயல்லாமல், எந்த விதத்திலாவது அது மறைவு பட்டதாகக் காணவில்லை.

அதுபோலவே, பறையர் என்கிற பெயர் மாறி, ஆதிதிராவிடர் என்கிற பெயர் வந்ததனால், ‘பறையருக்குண்டான' இழிவுத் தத்துவம் ஒரு சிறிதும் மாறாமல், ஆதிதிராவிடர் என்றால், பறையன் - இழிந்த மகன் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதோடு, தேசத்தின் யோக்கியதையையும் இழிவு படுத்தத்தக்கதான பொருளும் அதில் அடங்கி இருக்கிறது. இதைவிடப் பழைய பெயரே மேலானதென்பது எனது அபிப்பிராயம். சமூகத்திற்கோ, சங்கத்திற்கோ ஒரு பெயர் வைக்க வேண்டுமானால், எந்தக் குற்றத்தை நீக்குவதற்காகவோ அல்லது எவ்வித இழிவை விலக்குவதற்காகவோ, எம்மாதிரி முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்பதற்காக நாம் கருதி இருக்கிறோமோ, அந்தக் கருத்தைக் கொண்டதான பெயரை ஒரு பிரச்சாரத்திற்கோ, இயக்கத்திற்கோ இடுவதுதான் அறிவுடைமையாகும்.

எத்தனையோ சமூகத்தார், தங்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்று கருதி, எவ்வளவோ பெயர்களை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த இழிவை மறைக்க நினைத்தார்களோ, அது ஒரு சிறிதும் மறைக்கப்படாமலும், அந்தப் பெயர் ஏற்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ - அது போலவேதான் இருந்து வருகின்றார்களே தவிர, புது மாதிரியான மாறுதல் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.

உதாரணமாக, ஆசாரிமார்கள், தேவாங்க சமூகத்தார்கள் முதலியவர்கள் தங்களுக்கு விஸ்வ பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டதாலும், நாயக்கர்மார்கள், படையாச்சிமார்கள், நாடார்மார்கள் தங்களுக்குப் பல்ஜிய சத்திரியர்கள், வன்னிய சத்திரியர்கள், அக்னி குலச் சத்திரியர்கள் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், நாட்டுக்கோட்டை நகரத்தார், நகரத்துச் செட்டியார், கோமுட்டிச் செட்டியார், வேளாளர் முதலியோர் தங்களுக்கு முறையே தன வைசியர், நகரத்து வைசியர், ஆரிய வைசியர், வாணிய வைசியர், பூவைசியர் என்பதாகப் பெயர் வைத்துக் கொண்டாலும், புராணங்கள் மூலமாக இதற்கு ஆதாரம் கண்டுபிடித்தாலும் மற்றும் எத்தனையோ வகுப்பார் எத்தனையோ மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், இந்தப் பெயர்களல்லாத ‘சூத்திரர்கள்' என்கிற பெயருக்குண்டான பொருளும், தத்துவமும், உண்மையும் கிரகிக்கப்படுகின்றனவே அல்லாமல், சிறிதாவது மாற்றம் ஏற்படாததோடு - எந்தக் கொள்கையை உத்தேசித்து இந்தப் பெயரை வைத்துக் கொள்கிறோமோ, அந்தக் கொள்கைகளின் மூலமாகவே நாம் நம்மைவிட மற்றொரு கூட்டத்தார் உயர்வு என்பதையும், மற்றொரு கூட்டத்தாரைவிட நாம் தாழ்ந்தவர்கள் என்பதையும் ஒப்புக் கொண்டதோடு, அதை நிலைநிறுத்தவும் பாடுபட்டவர்கள் ஆகிறோம்.

ஆகவே, இம்மாதிரிப் பெயர்களை வைத்துக் கொள்வது ‘சப்தம்' மாத்திரத்தில் உயர்வாகத் தோன்றினாலும், தத்துவத்தின் மூலமாக அதில் தாழ்மையே இருக்கிறது. ஆதிதிராவிடர் என்று சொல்லிக் கொள்பவர்களாகிய நீங்கள் உங்களை யார் தாழ்ந்தவர்கள் என்று சொல்லுகிறார்களோ, யார் கொடுமைப்படுத்துகிறார்களோ, யார் அதற்கு ஆதாரமாய் இருக்கிறார்களோ ‘அவர்கள்' பெயரை வைத்து ‘அவர்கள் அல்லாதார்' என்பதாக வைத்துக் கொண்டால் - அந்தப் பெயரும், கொடுமையும் ஞாபகத்தில் இருப்பதோடு, அதிலிருந்து விலகுவதற்கு உண்டான அறிவும், சக்தியும் அதிலிருந்து ஏற்படும். இந்தக் கூட்டத்திலேயே ஒரு கனவான் உங்களை ‘ஒடுக்கப்பட்÷டார்' என்றழைக்கலாம் என்பதாகச் சொல்கிறார். எனக்கு அதுகூட அவ்வளவு சரியான பெயர் என்பதாகத் தோன்றவில்லை.

வேண்டுமானால், ‘ஒடுக்கினவர்கள் அல்லாதார்', ‘கொடுமைக்காரர்கள் அல்லாதார்', ‘அயோக்கியர்கள் அல்லாதார்' என்று பெயர் வைத்துக் கொண்டால், அவர்களையும் உங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் சீக்கிரத்தில் இக்கொடுமை நீங்கவும் மார்க்கம் ஏற்படும். அப்படி ஏற்பட்டதுடன், இந்தப் பெயர் மறைந்து விடுவதற்கும் அனுகூலம் ஏற்படும். அப்படிக்கில்லாமல் சத்திரியர், வைசியர், அருந்ததியர், ஆதிதிராவிடர், இந்திரகுலத்தார், நீலகண்டனார், பார்க்கவனார் என்று, இம்மாதிரிப் பெயர் வைத்துக் கொள்வதால் - நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, கற்ப கோடிக்காலம் இந்த இழிவிலேயே இருக்க வேண்டியதுதானே ஒழிய, நாம் கோரும் பலன் ஒரு சிறிதும் அதனால் உண்டாகாது.

(20.7.1927 அன்று சிறுவயலில் ஆதிதிராவிட வணிகர் சங்கத்தில் ஆற்றிய உரை)

http://karuppupaiyan.blogspot.com/2007/10/114.html

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?

நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன்என் றவனை அறைகின் றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?

இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்

பன்னு கின்றனர் என்பது பொய்யா?

இவைக ளைநாம் எண்ண வேண்டும்.

எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது

படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?

வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்

கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.

ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்

தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!

'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்

நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?

என்றுகேட் பவனை, 'ஏனடா குழந்தாய்!

உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று

கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை

ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.

தீவா வளியும் மானத் துக்குத்

தீபாவாளி ஆயின் சீஎன்று விடுவிரே!



- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்-

 

http://karuppupaiyan.blogspot.com/2007/10/blog-post_225.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE