Language Selection

சமூகவியலாளர்கள்

தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், தற்காலம் ஐகே நிர்வாக சபை முதலிய ஆதிக்கம் உள்ள பதவிகளிலும் மற்றும் அதிகாரம் உள்ள பதவிகளிலும் வக்கீல் முதலிய செல்வாக்குள்ள பதவிகளிலும் ஏகபோகமாய் அமர்ந்திருப்பதின் மமதையினாலும் பார்ப்பனரல்லாதாரில் சில பதர்கள், வயிற்றுக் கொடுமையாலும், பேராசையினாலும் சுயமரியாதையற்று பார்ப்பனர்கள் பாதம் வருடித் திரிவதினாலும் வேறு பல வழிகளிலும் பார்ப்பன மாய்கையில் பல உணர்ச்சியற்ற ஜமீன்தார் மிராஸ்தார் முதலிய செல்வந்த வாலிபர்கள் அவர்களுக்கு சர்வ சுவாதீனப்பட்டு கிடப்பதாலும், பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் அறிவீனத்தால் கட்சி, பிரதி கட்சி விவகார வில்லங்கங்கள் முதலியவைகளினால் பார்ப்பனர்களுக்கு அடிமைப் பட்டு கிடப்பதினாலும், பாமர மக்கள் உண்மை நிலையை அறியாதபடி பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சிப் பிரசாரங்களாலும் சமீப தேர்தல்களில் பார்ப்பனர்கள் தங்களுக்கு வெற்றி கிடைப்பதாய்ச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இவ்வெற்றி நிலையைத் தாங்க முடியாமல் நமது பார்ப்பனர்கள் தலைக்கு கொழுப்பேறி தலை கால் தெரியாமல் ஆடுவதை நாம் வரிசையாகப் பார்த்து வருகிறோம்.

 

உதாரணமாக, இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு அகந்தையும் ஆணவமும் கொண்ட செய்கைகள் பார்ப்பனர்களால் நடத்தப் பட்டிருக்கின்றன என்பதைக் கவனித்தவர்களுக்கு பார்ப்பனர்களின் தலை கொழுப்புத் தன்மை விளங்காமல் போகாது. கார்பொரேஷன் சென்னை கார்பொரேஷனில் கவுன்சிலர்கள் என்கிற பெயர் வைத்துக் கொண்டு கார்பொரேஷனில் நடத்தும் குறும்புத் தனத்திற்கு அளவே இல்லை. குழந்தை பாதுகாப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்று, அங்கு அவ்வாஸ்பத்திரியின் தலைவி இல்லை என்பதை அறிந்தும் அங்குள்ள மருத்துவப் பெண்களிடம் அடாபிடியாய் நடந்து கொண்டதும், அருவருக்கத் தகுந்த கேள்விகள் கேட்டு அப்பெண்களை அவமானப்படுத்தியதும் இவ்வளவும் செய்துவிட்டு பின்னும் அவ்வுதவியற்ற பெண்களை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்று கொடுமை செய்ததையும் பார்க்கிற போது சிறீமான் கோபதி நாராயணசாமி செட்டியார் என்கின்ற நாயுடு கார்பொரேஷன் பிரசிடெண்டாய் வந்து விட்டாரே என்கின்ற ஆத்திரத்தினாலும் தாங்கள் ஆட்டுகிறபடி ஆடக்கூடியவர் வரவில்லையே என்கின்ற ஆத்திரத் தினாலும் கார்பொரேஷனில் நடந்து கொள்ளும் யோக்கியதையும் மீன் கடை, கள்ளுக் கடை, குச்சுக்கார வீதி இதுகளில் நடப்பது போன்ற இழிவான வாக்கு வாதங்களும் மானங்கெட்ட வெளியேற்றங்களும் அதிகபிரசிங்கித்தனங்களும் அளவுக்கு மிஞ்சி நடப்பதும் பத்திரிகைகள் தங்கள் வசம் இருக்கின்றன என்கின்ற காரணத்தால் நடந்த விஷயங்களைத் திரித்தும் பொய்களைச் சேர்த்தும் ஜனங்கள் தப்பாய் நம்பும்படியாக பிரசுரித்து வருவதும் மற்றும் காங்கிரஸ் என்னும் பேரால் காலிகளையும், அன்னக் காவடிகளையும், பேராசைக்கார களிமண் தலைகளையும் சேர்த்துக்கொண்டு அவர்களை விட்டு ஈனத் தனமாய் பார்ப்பனரல்லாத தலைவர்களையும் தொண்டர்களையும் வையும்படி செய்வதும், அடிக்கும்படி செய்வதுமான காரியங்கள் செய்வதும் சகிக்க முடியாததாயுமிருப்பதும் பார்த்து வருகிறோம்.

 

சிறீமான் பக்கிரிசாமிப் பிள்ளை பொது ஜனங்கள் பனகால் ஆட்சியை மறுக்கிறார்களென்று கட்டி விடுவதற்காக பொது ஜனங்கள் பேரால் தங்களிலேயே சில காலிகளை விட்டு மீட்டிங்கு கூட்டச் செய்து அம் மீட்டிங்குகளில் தாங்களே போய் இருந்து கொண்டு இரணியனைப் போல் தன்னையே தலைவரென்று சொல்ல வேண்டுமென்று "சீனிவாசய்யங்காருக்கு ஜே" என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தினதும் அப்படிச் சொல்ல மறுத்ததும் சிறீமான் பக்கிரிசாமி என்கின்ற வாலிபரைப் பிடித்து போக்கிரிகளை விட்டு கடுமையாய் அடிக்கச் செய்ததும், அவர் தான் செத்தாலும் சரி யென்று சீனிவாசய்யங்காருக்கு ஜே! சொல்லாமல் அடிபட்டு ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப் பட்டதும், தமிழ் மகாநாடு என்கின்ற பெயரால் கோகலே ஹாலில் நடத்தப்பட்ட ஐயங்கார் கூட்டத்திற்குச் சென்றிருந்த சிறீமான் தண்டபாணி பிள்ளை அவர்களை அடித்து உதைத்து அவமானப்படுத்தி விட்டால் தமிழ் நாட்டிலுள்ள மற்ற பார்ப்பனரல்லாத வாலிபர்களும் பயந்து பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை வெளியிலெடுத்துச் சொல்லாமலிருக்கச் செய்துவிடலாமென்கிற எண்ணத்தின் பேரில் அவரை இப் பார்ப்பனர்கள் கூலிகளை விட்டு உபத்திரவித்ததைப் பார்க்கும் போதும் சுத்தமான பார்ப்பனரல்லாதார் ரத்த ஓட்டமுள்ள எந்த மனிதனுடைய ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.

 

சிறீமான் தண்டபாணி பிள்ளை சிறீமான் தண்டபாணி பிள்ளை ஆகஸ்டு 23 - யிலேயே 4 - அணா சந்தா கொடுத்து காங்கிரஸ் மெம்பராகச் சேர்ந்து 15,223 நெம்பர் ரசீது வாங்கியிருக்கிறார். சிறீமான் தண்டபாணி பிள்ளை உண்மையான சுயராஜ்யத்திற்கு ஒரு நாளும் எதிரியல்ல. ஆனால் பார்ப்பனர் ஆதிக்கம்தான் சுயராஜ்யம் என்று சொல்லப்படும் சுயராஜ்யத்திற்குத் தான் எதிரியாயிருக்கிறார். பார்ப்பன ஆதிக்க சுயராஜ்யத்தின் சூழ்ச்சிகளை தாராளமாய் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார். இதற்காகத்தான் அவரைப் பார்ப்பனர்கள் ஒழிக்கப் பார்க்கிறார்கள். அதற்கு அவர் பயப்படுவதில்லை. ஆதலால் தமிழ்நாடு மகாநாட்டிற்கும் ஒரு பிரதிநிதியாய்ப் போக ஆசைப்பட்டார். பிரதிநிதிப் பத்திரம் பெற்றார். பிரதிநிதிக் கட்டணம் ரூ 2 - ம் செலுத்தினார். காங்கிரஸ் கமிட்டி குமாஸ்தாவிடம் 61 - நெ பிரதிநிதி டிக்கெட்டும் பெற்றார். இதன் பயனாய் தாராளமாய் உள்ளே விடப்பட்டார். உள்ளே போய் தனது சகாக்களிடம் உட்கார்ந்தார். இதைப் பார்த்த பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

 

ஏனெனில் காங்கிரஸ் என்பதும் கான்பரன்ஸ்கள் என்பதும், நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் தாய் தகப்பன்மார்கள் தங்களது ஆதிக்கத்திற்குத் தேடிவைத்த சொத்துக்களாக நினைத்துக் கொண்டிருப்பதால் தங்கள் குண்டியைத் தாங்கி பூட்ஸைத் துடைத்து காலைக் கழுவி சாப்பிட சம்மதித்த ஆள்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது என்கின்ற ஆணவம் அவர்களுக்கு உண்டு. அதனால் சிறீமான் தண்டபாணி பிள்ளையைக் கண்டு ஆத்திரப்பட்டது ஆச்சரியமல்ல. வெளியாக்க சூழ்ச்சி ஆதலால் சிறீமான் பிள்ளையை வெளியாக்க எண்ணி சிறீமான் ரெங்கசாமி அய்யங்காரால் பாவலர் என்கின்ற ஒரு பார்ப்பனரல்லாதாரை ஏவி விடப்பட்டது. அவர் முதலாவதாக சட்டப்படி சிறீமான் பிள்ளை உள்ளே வந்தாரா? அல்லது சட்ட விரோதமாய் வந்தாரா? என்பதைக் கவனிப்பதற்காக பிரதிநிதி ரிஜிஸ்டரை பரிசோதித்தார்; அதில் 61 -வது நெம்பர் பிரதிநிதியாக பதிவு செய்யப்பட்டு கட்டணமும் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதின் மேல் ஒன்றும் செய்ய முடியாமல் சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளை யோசனை கேட்டார்.

 

சிறீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் ஒரு யுக்தி செய்தார். அதென்னவென்றால் சிறீமான் தண்டபாணி பிள்ளைக்கு பிரதிநிதி சீட்டுப்பெற பிரதிநிதி சர்டிபிகேட் கொடுத்த தஞ்சை காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியான சிறீமான் வெங்கிடகிருஷ்ணப் பிள்ளை என்கிற ஒரு பார்ப்பனரல்லா தாரைப் பிடித்து அவ்வுரிமைச் சீட்டை எப்படியாவது ரத்து செய்வித்து சிறீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட்டை மெல்ல ஏமாற்றி வாங்கிக் கொண்டு டிக்கெட்டில்லாமல் வந்தார் என்கிற பெயரை வைத்து வெளியிலனுப்பிவிட தோது சொல்லிக் கொடுத்தார். ஆனால் சிறீமான் வெங்கிடகிருஷ்ணப் பிள்ளை சிறீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட்டைப் பெற பல வழிகளில் முயன்றும் முடியாததால் சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் வேறு வழியில் சிறீமான் பிள்ளையை வெளியாக்க யோசனை செய்ய வேண்டியதாய் விட்டது.

 

மறுநாள் சம்பவம் இந்த நிலையில் அன்றைய மகாநாட்டின் விஷயம் முடிந்து விட்டதால் மகாநாடு கலைக்கப்பட்டு விட்டது. சிறீமான் பிள்ளையவர்கள் அதே டிக்கெட்டைக் கொண்டு மறுநாள் மகா நாட்டிற்கும் சென்றிருக்கிறார். டிக்கெட் பரிசோதகர்கள், சிறீமான் பிள்ளையின் டிக்கெட்டை பரிசோதித்து மறுநாளும் உள்ளே விட்டிருக்கிறார்கள். அப்படி இருக்க மறுபடியும் முதலாவதாக ஒரு பார்ப்பன வாலண்டியர் சிறீமான் பிள்ளையின் பக்கத்தில் போய் அவரை வெளியில் போகும்படி சொல்லச் செய்தார்கள். பிள்ளை மறுத்தார். டிக்கெட்டைப் பிடுங்கிக் கொள்ளும் நோக்கத்துடன் டெலிகேட் டிக்கெட்டை காட்டும்படி கேட்டார்கள் . சிறீமான் பிள்ளை மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்களையும் பரிசோதித்தால் நானும் காட்டுவேன் என்றார். பிறகு அவரை மேடை மீது உட்காரக் கூடாது என்று சொன்னார்கள். பிள்ளை அலட்சியமாயிருக்கவே சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் ஆகியவர்கள் சிறீமான் குழந்தை என்கிற ஒரு பார்ப்பனரல்லாதாரைக் கூப்பிட்டு சிறீமான் பிள்ளையை வெளியாக்கக் கட்டளையிட்டார்கள். அவர் பல பார்ப்பனத் தொண்டர்களை அழைத்து வந்து சிறீமான் பிள்ளையை தூக்கச் சொன்னார். தொண்டர்கள் அடியோடு தூக்கவே சிறீமான் பிள்ளை மேல் கிளம்பிய நிலையில் சபையோர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இந்த சமயத்தில் சிறீமான் எம்.கே. ஆச்சாரியார் தன் கைத்தடியால் குத்தினார். உடனே மற்ற பார்ப்பனர்களும் கிளம்பி இவரை வெளியாக்கும்படி சத்தம் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு பேரையும் உதறித் தள்ளிவிட்டு மறுபடியும் கொஞ்சம் முன்னேறி உட்கார்ந்து கொண்டார்.

 

இந்த சமயத்தில் சிறீமான் சத்தியமூர்த்தி அய்யர் எழுந்து அவனுக்கு இங்கு வேலையில்லை; வெளியில் பிடித்துத் தள்ளுங்கள் என்றும், சிறீமான் சீனிவாசய்யங்கார் எழுந்து என்னை வைதவனுக்கு இங்கு என்ன வேலை, வெளியில் தள்ளுங்கள்; முடியாவிட்டால் இவன் டெலிகேட் அல்லவென்று சொல்லி விடும் என்று சிறீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்காருக்கு உத்திரவு போடவும், சிறீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் எழுந்து "சிறீமான் தண்டபாணி பிள்ளை காங்கிரஸ் மெம்பரும் அல்ல டெலிகேட்டும் அல்ல" என்று விளம்பரம் (டிக்ளேர் ) செய்யவும், கூட்டத்தில் இருந்த பார்ப்பனர்கள் "அவனுக்கு (சிறீமான் பிள்ளைக்கு) சிறீமான் என்று சொல்லக் கூடாது" என்று கத்தியும் கடைசியாக தங்களால் சிறீமான் பிள்ளையை வெளியேற்ற முடியாமல் போனதால் சிறீமான் எ. ரெங்கசாமி அய்யங்கார் எழுந்து "கீழே விழுந்தும் மீசையில் மண் படவில்லை" என்பது போல் "சிறீமான் தண்டபாணி பிள்ளை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்" என்று சொல்லி தங்கள் பிகுவைக் காப்பாற்றிக் கொண்டார்கள். பின்னர் அக்கிராசனர் இதைக் கவனித்து சிறீமான் பிள்ளையைப் பக்கத்தில் அழைத்து விபரங்களைக் கேட்டு அவருக்கு அங்கிருக்க உரிமை உண்டென்று தனது பக்கத்தில் உட்காரச் செய்து கொண்டார். இவ்வளவையும் நடக்கும் போது பார்த்திருந்த பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு "தண்டபாணி பிள்ளை திருவிளையாடல்" என்று தலையங்கமிட்டு பொய்யும் புரட்டும் எழுதி இருக்கின்றன.

 

சிறீமான் குழந்தையினிடம் அபயம் மறுபடியும் சிறீமான் குழந்தை என்னும் ஒரு பார்ப்பனரல்லாத கிறிஸ்தவர் பேரால் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒரு கடிதம் பிரசுரித்திருக்கின்றன. இதை குழந்தைகள் நம்ப முடியாது. என்ன வென்றால் சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், சிறீமான் குழந்தையை அபயமடைந்து அவர் காலுக்குள் புகுந்து "எங்களப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் பார்ப்பனர்கள் இச்சம்பவத்திற்குப் பொறுப்பாளிகள் அல்ல என்று அவர் பேரால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாமலும் சிறீமான் தண்டபாணி பிள்ளை ஒழுங்கு முறைப்படி பிறப்பிக்கப்படாத டிக்கெட்டுடன் வந்தார் என்றும், தான் தான் அவரைத் தூக்கிச் செல்ல தொண்டர்களை ஏவினதாகவும் அவர் சரியானபடி டிக்கெட்டை வைத்துக் கொண்டிருந்ததாகவும் காங்கிரசுக்கு விரோதியானதாலும், மகாத்மா காந்தியை மோசக்காரர் என்று சொன்னதாலுமே பிள்ளை அங்கு இருக்கக் கூடாதென்று கருதி அம்மாதிரி செய்ததாகவும் வீரமாய் எழுதிவிட்டு இது போலவே மற்றவர்களுக்கும் நடக்கும் என்றும் ஒரு சிறீமான் குழந்தையின் பேரால் எழுதியிருக்கிறார்கள்.

 

இவைகளையெல்லாம் கவனிக்கும் போது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தலை கொழுத்திருக்கிறது? பார்ப்பனரல்லாதவர்கள் எவ்வளவு சுயமரியாதையற்று இருக்கிறார்கள்? சீர்காழி சிறீமான் சாமிநாத செட்டியார் தவிர அக்கூட்டத்திலிருந்த பார்ப்பனரல்லாத அம்மாஞ்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்தார்கள் என்றால் இதற்கு எதை சமாதானமாகச் சொல்லுவது. மானம், வெட்கம், சுயமரியாதை என்பது சிலருக்கு தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளை கையைப் பிடித்து இழுப்பதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. இச்சம்பவம் இதற்கு சமானம் அல்ல என்று நினைத்து விட்டார்கள் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஜனங்களுடைய சமூகம் சுயராஜ்யத்திற்கு லாயக்கா? என்று கேட்கிறோம். சுயமரியாதை இல்லாமல் சுயராஜ்யம் சம்பாதிப்பது சுயமரியாதை அற்றவன் கலியாணம் செய்து கொண்டால் அப் பெண்ணின் கதி என்னவோ அதுபோல்தான் முடியும். ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் முதல் முதல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும் அதிலேயே சுயராஜ்யமிருக்கிறது. ஆதலால் பார்ப்பனர்களுக்கு குலாமாகவும் கால் வருடிகளாகவும் இருந்து வயிறு வளர்ப்பதை விட மானக் கேடானதும் சுயமரியாதையற்றதுமான காரியம் உலகில் வேறொன்றுமில்லை என்பதாக உணர்ந்து ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாத சுயமரியாதைச் சங்கத்தை ஆதரித்து முதலில் சுயமரியாதையை அடைவார்களாக.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_07.html

"திராவிடன்" பத்திரிக்கை கோயில்களைப் பற்றி ஸ்ரீமான் சி. விஜயராகவாச்சாரியார் எழுதியதற்கு சமாதானம் எழுதுவதாவது :

 

ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் கடும் வர்ணாசிரமக்காரர். பிறவியில் உயர்வு, தாழ்வு உண்டு என்று கருதிக் கொண்டிருக்கிறவர். எனவே அவர் மகாத்மானவைக் கண்டிப்பதில் அதிசயமில்லை. அன்றியும் இவர் கோவில்களின் மூலம் பார்ப்பனர்களின் வாழ்வு இன்னது என்று தெரிந்தவர். இந்து மதம் என்கின்ற பெயர் இல்லாவிட்டால் இந்நாட்டில் பார்ப்பனருக்கு எவ்வித மரியாதையும் இல்லாததோடு குணத்தைப்பற்றி மக்களை வகுப்பதின் மூலம் பார்ப்பனர்கள் தீண்டாதவர்களாகி விடக் கூடும் என்பதையும் உணர்ந்தவர். ஆதலால் இவர் தன் சமூகத்தின் வாழ்வுக்காக அப்புக் கட்டுவதில் கவலை எடுத்துக் கொள்ள வேண்டியது இவர் கடமை. ஆனால் நாம் அக்கோவில்கள் விபச்சார விடுதிகள் என்பதை விளக்க இதை உபயோகித்துக் கொள்ள வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

 

மகாத்மா காந்தி இப்போதைய கோயில்களின் நிலைமையைப் பற்றித்தான் அவ்விதம் கூறுகிறார் போல் தோன்றுகிறது. ஆனால் நாம் ஆதியில் உள்ள கோயில்களைப்பற்றியும், அதிலுள்ள சுவாமிகளைப்பற்றியும் அங்கு நடக்கும் அக்கிரமங்களைப்பற்றியும், அவைகள் ஆதியில் எப்படி ஏற்பட்டது என்பதைப் பற்றியுமே கவனித்து அப்படிச் சொல்லுகிறோம். உதாரணமாக ஆரிய சமாஜத் தலைவர் அதாவது வேகத்தைக் கூட ஒப்புக் கொள்ளுகிறவரான சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் எழுதியிருக்கும் சத்தியார்த்தப் பிரகாசத்தில் இவ்விஷயத்தை நன்றாய் விளக்கி இருக்கிறார். மற்றும் சைவக் கடவுளைப்பற்றி இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும், வைணவர்களையும், வைணவக் கடவுள்களைப்பற்றி அதே இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் சைவர்களையும் கேட்டாலும் அல்லது அவரவர்கள் வேதசாஸ்திர புராண ஆதாரங்களைக் கொண்டு எழுதி முழங்கியிருக்கும் சைவ மத கண்டனம் என்னும் புஸ்தகங்களைப் பார்த்தாலும் தெரியவரும். அன்றியும் அந்தக் கடவுள்கள் அன்னிய ஸ்திரீகளிடம் தினமும் அக்கோவில்களில் படுப்பதும், அக்கடவுளுக்கு வைப்பாட்டிகளாக, விபச்சாரப் பெண்கள் ஏற்படுத்தப்படுவதும் அவர்கள் சுவாமிக்குத் தொண்டு செய்வது என்னும் பேரால் தங்களை அலங்கரித்துக் கொண்டு தினமும் கோவிலுக்கு வருவதும், அவர்களைப் பார்க்கவிட புருடர்கள் பக்தியின் பேரால் சாமி கும்பிட என்று அங்கு வந்து சம்மதம் ஏற்படுத்திக் கொள்ளுவதும், இவர்களைப் பார்த்து குல ஸ்திரீகளும் அலங்கரித்துக் கொண்டு வருவதும், அவர்களைப் பார்த்து நிஜமாகவே பக்திக்காக வந்த புருஷர்களும் பக்தி கெட்டு அக்குலப் பெண்களை சுவாதீனம் செய்ய முயற்சிப்பதும், ஒருவருக்கொருவர் காதல் ஏற்பட்டு தினப்படி முக தரிசனத்திலேயே ஒருவித காதல் திருப்தியை அடையக் கருதி இருவரும் பெரிய பக்தர்களாகி தினமும் கோவிலுக்குப் போக ஏற்பாடு செய்து கொள்ளுவதுமான காரியங்களை ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் தங்கள் தங்களுடைய வாலிப பருவத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டால் இவை கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும் என்றே சொல்லுவோம்.

 

இது தவிர, சுவாமி வீட்டுக்குப் போதல், வேறு பெண்களை சிறையெடுத்து வருதல், வேறு பெண்கள் மீது காதல் கொண்டு மாறு வேஷம் போட்டுக் கொண்டு போய் அப்பெண்களை கற்பழித்து விட்டு வருதல், ஆண்சாமிகளிலேயே ஒரு சாமிக்கு மற்றொரு சாமி மேல் மோகம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கலந்து பிள்ளை உண்டாக்குதல் முதலான இந்து மத வேத சாஸ்திர புராணங்களைக் கொண்டு கோவில்கள் கட்டி இம்மாதிரி சாமிகளை அவைகளில் வைத்திருத்தல், இம்மாதிரி நடவடிக்கைகளை உற்சவமூலம் நடத்தல் ஆகிய காரியங்களை கோவிலின் தத்துவங்களைப்பற்றி நாமும், மகாத்மாவும் கூறுவதை நன்றாய் ருஜீ செய்யும். அன்றியும் கோவில் யோக்கியதை இப்படியானால், உற்சவங்கள் என்பவைகள் எதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது என்று பார்த்தால் அதிலும் கோவில்கள் எவ்வளவு தூரம் விபசாரம் விடுதி என்பது புலப்படும்.

 

மேலே சொல்லப்பட்ட மாதிரியான கருத்துக்கள் கொண்ட உற்சவத்திற்குப் போகும் பெண்ணும், ஆணும் தங்களை அலங்கரித்துக் கொண்டு போவதும் ஒருவரை ஒருவர் நாடித் திரிவதும், அன்னிய ஸ்திரீகள் சினேகமும் அன்னிய புருஷர்கள் சினேகமும் கொண்ட ஆண், பெண்கள் கோவில்களையும், உற்சவங்களையும் சங்கேத ஸ்தலங்களாக உபயோகித்துக் கொண்டு போவதும் யாவரும் அறியாமலிருக்க முடியாது. சிற்சில ஊர்களில் உற்சவக் காலங்களில் கோவில்களுக்கு வெளியில் உள்ள சுற்று விடுதிகளுக்கு விபசாரத்தின் பொருட்டு வாடகைகள் அதிகம் ஏற்படுத்துவதும் யாவரும் அறிந்ததே. அதாவது சுகாதார வசதிக்கு ஆக ஏற்படுத்திக் கொள்ளப்படும் நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம் முதலிய இடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு எப்படி ஒரு வருஷத்திய வாடகை இரண்டு மாதங்களுக்கு வாங்கிக் கொள்ளப்படுகிறதோ அதுபோலவே ஒரு சிறு அறைக்கு ஒரு வாரத்திற்கு 10 - 15 ரூபாய் வீதம் குடக்கூலி ஏற்படுகிறது. இந்த வாடகைகள் கோவிலுக்கு வரும் ஆண் பெண் பக்தர்களாலேயே சரிகட்டப்பட்டும் 100 - 200 ரூபாய் சம்பாதித்துக் கொண்டும் போகப்படுகிறது.

 

உற்சவ காலங்களில் சுவாமி கோவில்கள் மாத்திரமல்லாமல் அர்ச்சகர்கள் வீடுகளிலும், சில விபசார வீடுகளாக ஆக்கப்பட்டுவிடுகின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. நல்ல அழகிய பெண்ணை மணந்த அர்ச்சகர்களிடமே அதிக யாத்திரைக்காரர்கள் போய்ச் சேருகிறார்கள். அதிக கட்டளைக்காரர்களும் ஏற்படுகிறார்கள். இதன் காரணம் என்ன? நமக்குத் தெரிய பல சமயங்களில் யாத்திரைக்காரர்களை தங்கள் வீட்டின் நடையில் படுக்க விட்டு விட்டு, பெண்களை கூப்பிட்டு "இன்று ராத்திரி எனக்கு கோவிலில் படுக்கை முறை, ஆதலால் காலையில் தான் வருவேன் வீதிக்கதவை ஜாக்கிரதையாக தாள் போட்டுக் கொள்! என்று சொல்லிப் போகிற அர்ச்சகர்களையும் நேரில் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். இவைகளில் எதை நமது ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் அவர்கள் மறுக்கிறார்கள் என்றும் கேட்கிறோம். இவர்களை கோவிலை விட்டுத் தள்ளுவதற்கு என்ன சட்டம் இருக்கிறது என்று கேட்கின்றோம். இவைகளை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால் அவர்களைப்பற்றி ஜனங்களுக்கு சாமி, பூதம், பேய், பிசாசு, கோயில், குளம் முதலியவைகளிடம் அதிலும் பாமர மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு நம்பிக்கையை ஆதாரமாய் உபயோகித்துக் கொண்டு "கோவிலைத் திட்டுகிறார்கள், நாஸ்திகம் கேசுகிறார்கள்" என்று தூற்றி மனதறிந்து அக்கிரமமாய்ப் பேசி பாமர மக்களை ஏமாற்றுகிறார்களே ஒழிய அவர்கள் இம்மாதிரியான அக்கிரமங்களை மறுக்க காரணம் காட்ட முடியுமா என்று மறுபடியும் கேட்கிறோம்.

 

கோவில்களில் கட்டளைகள் ஏற்படுத்துவதின் யோக்கியதைகள் அநேகமாய் என்ன என்று பாருங்கள்! கட்டளைக்காரன் பணம் கொடுப்பதும், வருஷத்திற்கு மும்முறை அர்ச்சகர் வீட்டில் சாப்பிட்டு விட்டு படுத்திருந்து போவதுமல்லாமல் மற்றபடி 100-க்கு 75 – கட்டளைகளின் கருத்தும், தத்துவமும் என்ன என்று கேட்கிறோம். கட்டளைக்காரன் நினைத்துக் கொண்டிருக்கிறபடி கட்டளை "பூஜை" நடக்கின்றதா? "அர்ச்சனை" நடக்கின்றதா? அஷ்டோத்திரம் நடக்கிறதா? மண்டல பூசை நடக்கின்றதா? என்றும் கேட்கின்றோம். கட்டளை அர்ச்சகர் ஊரெல்லாம் பணம் வசூலிக்கப்போவதும் அர்ச்சகர் வீட்டில் அவரது சம்சாரம் வீட்டுக்கு தூரமாகி அதாவது பகிஷ்டையாகி வேறு வேலை இல்லாமல் இருக்கும் காலத்தில் விபூதி, குங்குமம், வில்வம், மஞ்சள், நாமக்கட்டி, திருச்சூரணம், துளசி இலை இவைகளை தனித்தனி சிறுசிறு பொட்டலங்களாகக் கட்டி விலாசமெழுதி வைத்திருக்கும் காகிதத்துடன் போட்டு தபாலில் போடுவதுமல்லாமல் வேறு என்ன காரியம் நடக்கின்றது? இவ்வர்ச்சனைகளுக்கு பலன் என்ன என்றும் கேட்கின்றோம்?

 

இந்தக் கோவில், சாமி, உற்சவம், கட்டளை இவைகளுக்கு யாருடைய பணம் போகிறது? எவ்வளவு பணம் போகிறது? இவ்வளவு பணங்களும் எதற்கு உபயோகப்படுகிறது? என்று பகுத்தறிவைக் கொண்டு பார்ப்பதுடன் இதனால் சுவாமிக்காவது பக்தனுக்காவது என்ன காரியம் உண்டாகிறது என்பதையும், வாஸ்தவத்திலேயே கோவிலில் கடவுள் இருப்பாரானால் இவ்வக்கிரமங்கள் ஒரு இடத்திலாவது ஒருவராலாவது செய்ய இடம் ஏற்படுமா என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.இவைகள் தவிர கிராமக் கோவில்களில் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றியோவென்றால் அது சொல்லத் தொலையாது. அர்ச்சகர் குடி இருப்பு படுக்கை சாப்பாடு முதலியவைகள் கோவில்களிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூரமான பெண்களும் அங்கேயே படுக்கிறார்கள். சுவாமி பேரால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தங்கள் எல்லாவற்றிலும் இந்த தூரமான பெண்கள் துணிகள் துவைக்கப்படுகின்றன. ஸ்நானபானமும் செய்யப்படுகிறது. சுவாமிகள் தீர்த்தம் முதலிவைகளும் அதிலிருந்தே எடுத்து சாமிக்கு ஸ்நானமும் சமையலும் செய்யப்படுகின்றன.

 

இவைகளில் எதை ஸ்ரீமான் விஜயராகவாச்சாரியார் மறுக்கிறார் என்று கேட்கிறோம். இது விஷயத்தில் மாத்திரம் எங்கும் சுவாமி இருப்பதாக ஒப்புக்கொள்ளும் ஸ்ரீ விஜயராகவாச்சாரியார் அவர்கள் "தீண்டாதவர்கள்" கோவிலுக்குப் போக ஏன் சம்மதிப்பதில்லை என்று கேட்கின்றோம்? சிங்கம், கரடி, நாய், நரி, பன்றி, பாம்பு, தேள், பூச்சி, புழு, மலம் முதலியவைகள் மலிந்து கிடக்கும் மலைமேல் கூட ஏறக்கூடாது என்கிறார்களே! அது ஏன் என்று தான் கேட்கின்றோம்?

 

(09-10-1927 "குடி அரசு" இதழில் தந்தை பெரியார் எழுதியது. "பெரியார் களஞ்சியம்" தொகுதி:2…. பக்கம்:130)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_30.html

உண்மையான ஒரு பொதுத் தொண்டு உண்டு என்றால் அது மக்கள் சமூதாயத்தில் இருக்கின்ற குறைபாடுகளை நீக்கி மக்களை அறிவு வழி நடக்கச் செய்யப்படுவது தான். 2500 - ஆண்டுகளாக மக்கள் மடமையை ஒழிக்க, மக்கள் இழிவை ஒழிக்க, எவருமே முன்வரவே இல்லை. சரித்திரம் சம்பந்தமாக யாரையாவது கூற வேண்டுமானால் மக்களை மக்களாக மதிக்கச் செய்ய, இழிவு கொடுமைகளை ஒழிக்க முன்வந்தவர் புத்தர் தான்.அவர் அரச வாழ்வைத் துறந்தவர். அவரது போக்கில் சந்தேகம் இல்லாததனால் மக்கள் அவரது கொள்கையை எளிதில் ஏற்றுக் கொண்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவர் கொள்கை பரவி இருந்தது. ரோடு வசதி இல்லாத காலம், காடும் மேடுமாக இருந்த காலம், போக்குவரத்து வசதி இல்லாத காலம். அந்தக் காலத்தில் தோன்றிய அவனது அறிவுப் பிரச்சாரமானது நாடெங்கும் பரவி இருந்தது.

 

புத்தருடைய புரட்சிகரமான கொள்கை பரவி வருவது கண்டு பார்ப்னர்கள் நம் மடராஜாக்களை வசப்படுத்திக் கொண்டு அந்த அறிவுமார்க்கத்தை ஒழித்து (புத்த) ஸ்தாபனங்களை எல்லாம் தரை மட்டமாகி விட்டார்கள்.புத்தர் வேறு எதுவும் சொல்லவில்லை. உன் அறிவுப்படி சிந்தித்து அதன்படி நட! மகான் சொன்னார்! ரிஷி சொன்னார்! பெரியவர்கள், முன்னோர்கள் சொன்னார்கள் என்பதை நம்பாதே! உன் புத்தியின்படி நட! என்று தான் சொன்னார். புத்த மார்க்கத்தின் செல்வாக்கை வீழ்த்த முடியாதது கண்டு தான் பார்ப்பனர்கள் தந்திரமாக புத்த மார்க்கத்தில் பிட்சுக்களாக சேர்ந்து, அந்த மார்க்கத்தில் நச்சுக்கருத்துகளைப் புகுத்தி நாசப்படுத்தி விட்டார்கள். புத்த மடாலயங்கள், கோயில்கள் இருந்ததை எல்லாம் தரைமட்டமாக்கி அங்கெல்லாம் ஆரிய மதக் கடவுள்கள், கோயில்களை எழுப்பினார்கள்.

 

இராமன், கிருஷ்ணன் அவதாரங்களைக்,கூட எல்லாம் புத்தனுக்குப் பிறகு புத்த மார்க்கத்தை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட அவதாரங்களேயாகும். இராமாயணம் விஷ்ணு புராணம் முதலியவைகளில் புத்தனைப் பற்றிய சங்கதிகள் வருகின்றன. நம் மக்களுக்கு எல்லோருக்கும் பாகவதம் தெரியும், இராமாயணம் மற்ற புராணங்கள் தெரியும், இந்த சங்கதிகள் அதில் உள்ளதை எவன் கவலையோடு சிந்தித்துப் பார்க்கிறான்? இந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர். இந்து என்று கூறிக் கொள்ளும் எந்த ஆளுக்கு வேதம் தெரியும்? சங்கராச்சாரியே சொல்லுகிறார் இந்து என்பது தப்பு. "வேதமதம்" என்று சொல்லுவது தான் சரி என்கிறார்.

 

வேதமே தெரியாத நமது முண்டங்கள் நான் இந்து என்று கூறிக் கொள்ளுகின்றார்களே? முஸ்லிம் இருக்கிறான் உன் மதம் எது என்றால் இஸ்லாம் மதம்…. அதற்கு வேதம் குரான் என்கிறான். எப்போது எற்பட்டது? 1400 - ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது என்கிறான்.கிறிஸ்தவன் என் மதம் கிருஸ்தவம் எனது வேதம் பைபிள் என்கிறான். ஏற்பட்டு 1962 - ஆண்டுகள் ஆகிறது என்கின்றான். இந்து என்கின்ற உன் மதத்துக்கு ஆதாரம் எது? எப்போது ஏற்பட்டது? வேதம் என்றால் நீதான் வேதத்தைக் காதால் கேட்கக் கூடாது என்று எழுதி வைத்திருக்கிறாயே இப்படி இருக்க நீ ஏன் இந்து என்று கூறிக் கொள்கின்றாய்? இப்படிக் கேட்டு அறிவுப்படி சொந்தப் புத்திப்படி நட என்று கூறுகின்றவர்களை எல்லாம் பார்ப்பான் நாஸ்திகர்கள் என்று எழுதி வைத்து விட்டார்கள்.

 

"சைவன்" எல்லாரும் சிவன் தென்னாட்டுக் கடவுள், தென்நாடு உடைய சிவன் தான் எந்நாட்டுக்கும் கடவுள் ஆனான் என்று பீற்றிக் கொள்ளுகின்றனர். இந்த சிவன் இந்நாட்டுக் கடவுளும் அல்ல. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளைக்கார நாட்டான் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்படுத்திய கடவுளாகும். மேல்நாட்டுக்காரன் காட்டுமிராண்டிக் காலத்தில் உண்டாக்கிய கடவுளை மாட்டு மேல் ஏற்றி வைத்துக் கொண்டு காண்பித்தான். இதற்குப் பேர் (Father God) என்று அழைத்தான். அதுபோலவே தான் மாட்டு மேல் ஏற்றி வணங்குகின்றோம். நாம் சிவன் மனைவி காளி என்கிறோம். இந்தப் பெண் பிள்ளைக் கடவுளைத் தான் வெள்ளையன் (Mother God) என்று அழைத்தான். சிங்கத்தின் மேல் ஏற்றி அதன் கையில் சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறான். அதைத்தான் நம் நாட்டில் காளி என்று பெயர் இட்டு சிங்கத்தில் ஏற்றி சூலாயுதத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். வெள்ளையன் "Father God, Mother God" என்று அழைத்ததைத் தான் நமது சைவன் அம்மையே! அப்பனே! என்று பாடித் திரிகிறான். வெள்ளையன் காட்டுமிராண்டிக் காலத்திய கடவுள்களை எல்லாம் விட்டு விட்டு இன்று ஒரே கடவுள் என்ற நிலைக்கு வந்து விட்டான். நாசமாப் போன நம் நாட்டவர்கள் தான் இந்தக் காட்டுமிராண்டிக் காலத்துகடவுள்களையெல்லாம் கட்டிக் கொண்டு அழுகிறார்கள்.

 

ஒரு கடவுள் இரண்டு கடவுளா? ஆயிரக்கணக்கான கடவுள்கள். பல உருவங்கள் கழுகு, குரங்கு, பன்றி, பாம்பு, இவை எல்லாம் கடவுள்.முஸ்லிமும் கிறிஸ்தவனும் ஒரே கடவுள் ஒன்றும் வேண்டாதவர். உருவமற்றவர். அருளானவர்! அன்பானவர்! என்கின்றான். உன் கடவுள் அப்படியா? 6 - வேளை சோறு! வருஷா வருஷம் கல்யாணம்!கருமாதி, வைப்பாட்டி இவை எல்லாம் செய்து கொடுக்கின்றானே! அன்பே சிவம் வெங்காயம் என்று கூறிக் கொண்டு கடவுள் கையில் அரிவாள் கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், கொட்டாபுளி, சக்கரம்,இவற்றைத் தானே கொடுத்து இருக்கின்றாய்? அருளும் அன்புமானகடவுளுக்கு இவை ஏன்? கடவுளுடைய அருமை என்னடா என்றால், எங்கள் கடவுள் 1000 - பேரைக் கொன்றது 2000 - பேரைக் கொன்றது என்று கூறுவது தான்.

 

(19-07-1962 அன்று நெல்லை மாவட்டம் களக்காட்டில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு."விடுதலை"- 26-07-1962)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_31.html

"கிறிஸ்தவ மதப் பிரசாரமா?" என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 05-07-1926-ல் குறிப்பொன்றெழுதி, சென்னைக் கடற்கரையில் சிறீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும், குறிப்பாக விக்ரஹ ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத்தகைய கிறிஸ்தவ மதப் பிரசாரம் செய்ய சிறீமான் ஆரியா தங்களோடு காங்கிரசிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ளவில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்குமுகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான். இக்குறிப்பில் அயோக்கியத்தனமும், சூழ்ச்சியும் ததும்பி வடிகிறது.

 

யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி "தூட்சித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்?" என்று எழுதி பொதுவாகக் கிறிஸ்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொதுமக்க ளிடையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்யத்தனமும், சூழ்ச்சியுமானதென்று கவனியுங்கள். மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரஹங்களிலும் அடங்கிக்கிடக்கவில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறிஸ்துவ மதமோங்கிவிடாது.

 

இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறையனாயிருக்கும் கோவிந்தனை பக்கத்தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோசஸ் ஆகிவிட்டால் கைலாகு கொடுப்பான். ஆகவே கிறிஸ்தவ மதத்தை இப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது சிறீமான் ஆரியா ஆதரிக்கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பனனுடைய வாய் வேதாந்தத் தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களை ஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.

 

(குடிஅரசு 11.07.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_08.html

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

பொதுவாகத் திராவிடர் கழகத்தார் தேர்தலைப் பற்றிக் கவலைப்படுபவர்களும் அல்ல. அரசியலில் தலையிடுபவர்களும் அல்ல. தேர்தலில் நிற்கக்கூடாது என்பது எங்கள் கொள்கையாகும். எங்கள் கொள்கை மக்கள் சமூதாயத்தில் இருக்கும் காட்டுமிராண்டித்தனம், இழிவு, மடமையைப் போக்கி விழிப்பு அடையச் செய்ய வேண்டும் என்பதுதான்.

 

முதலாவது நமக்கு நெடுநாள்களாகக் கல்வி இல்லை. நம் மூவேந்தர்கள் காலம் முதல் இந்த நிலை. நாம் சாதியிலோ இழிமக்கள் - காட்டுமிராண்டிகள் நமக்கோ புத்தி இல்லை, மடையர்களாக இருக்கின்றோம். இவைபற்றி எவனும் கவலைப்படுவது இல்லை. எடுத்து விளக்குவதும் இல்லை. இப்படி நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம் என்றால் இது பார்ப்பானுடைய அயோக்கியத்தனம் மட்டும் அல்ல -நமது மடத்தனமும் கூட ஆகும். இந்த விஷயங்களில் எங்களுக்கு ஏற்பட்ட கவலை, வெட்கம், ரோஷம் இவற்றின் காரணமாக இந்தக் கொடுமைகள் எல்லாம் ஒழிக்கவே இப்படிப் பாடுபடுகிறோம்.

 

எங்களால் மற்றவர்கள் மாதிரி சட்டசபைக்கு நின்று வெற்றி பெற்று மந்திரி பதவிக்கோ, பார்லிமென்டுக்கோ போகத்தெரியாதா? நாங்கள் உட்கார்ந்தால் சட்டசபை நாற்காலி முள்ளு மேல் முள்ளு குத்துமா? நாங்கள் மற்றவர்கள் மாதிரி சம்பளம் வாங்கித் தின்றால் கசக்குமா? நான் மட்டும் தொடர்ந்து அரசியலில் இருந்தால் நான் தின்ற மிச்சம்தானே இன்று மற்றவர்களுக்கு. நண்பர் வீரமணி கூறியதுபோல நான் காந்தியுடனேயே சட்டசபைக்குப் போகக் கூடாது என்று வாதாடியவன். சட்டசபை என் காலடியில் வந்து வலிய விழுந்த காலமும் உண்டு. நண்பர் ஆச்சாரியார் அவர்கள் வந்து வலிய விழுந்த காலமும் உண்டு.

 

நண்பர் ஆச்சாரியார் இன்று உயிருடன்தான் இருக்கின்றார். நான் காங்கிரசை விட்டு வெளிவந்த பிறகும்கூட எங்கள் வீடு தேடி வந்து அவர் கூறினார் நாயக்கரே நீங்கள் இல்லாமல் சட்டசபைக்குச் செல்லுவது எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. நீங்கள் எவ்வளவோ கஷ்ட நஷ்டப் (துன்பமும் - இழப்பும்) பட்டவர் காங்கிரசில் சேர வேண்டாம். கதர் போட வேண்டாம். நீங்கள் பாட்டிலே கையொப்பம் போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருங்கள். உங்களுக்குச் சட்டசபை மெம்பர் வேலை பண்ணி வைத்து விடுகின்றோம் என்றார். நான் மிகவும் அவர் மீது அனதாபப்பட்டு உங்கள் அழைப்புக்கு மிகவும் தலைவணங்குகின்றேன். என்னால் ஒத்துக் கொள்ள இயலாது என்று மறுத்து விட்டேன். நான்கு நாள் அவகாசம் கொடுத்து யோசனை பண்ணிச் சொல்லுங்கள் என்றார். அப்பவும் மறுத்துவிட்டேன். அவருடன் நண்பர் அவினாசிலிங்கம் செட்டியார் எங்கள் ஊர் காங்கிரஸ்காரர். நண்பர் ஈஸ்வரன் அவர்களும் வந்து இருந்தார். அவர்களுக்கும் நான் கூறுவது பொய் அல்ல என்று தெரியும். இருவரும் இன்றும் இருக்கின்றார்கள்.

 

அடுத்து ஆச்சாரியார் 1937 - இல் மந்திரி பதவிக்கு வந்தாரே அந்த சமயத்திலேயே எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பார்ப்பனரையே எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பார்ப்பனரையே என்னிடம் அனுப்பி மேல்சபை நாமிநேஷன் இரண்டு காலியாக வைத்துள்ளேன். அது உங்களை உத்தேசித்தே நீங்கள் எப்படியும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தூது அனுப்பினார். நான் மறுத்துவிட்டேன். பிறகு அவர் நான் வெளியில் இருந்து ரகளை பண்ணுவேன் என்று எங்கள் கூட இருந்த இராமநாதனைக் கூப்பிட்டு மந்திரி பதவி கொடுத்தார். ஆச்சாரியார் அவர்கள் மந்திரிப் பதவி ஏற்றவுடன் இந்தியைக் கட்டாயமாக ஆக்கியபோது நாங்கள் எதிர்த்துப் போராடினோம்.

 

அப்போது தான் நம் தமிழ் மக்களிடையே தமிழ் உணர்ச்சி வந்தது. நமது தமிழ்ப் புலவர்களுக்கு எல்லாம் உணர்ச்சி வந்தது. புத்தகக் கடைக்காரர்கள் எல்லாம் தனித்தமிழ் புத்தகம் போட ஆரம்பித்தார்கள். 2000 - பேர்களுக்கு மேல் சிறைக்கு அனுப்பினார். என்னை மூன்று வருஷம் தண்டித்தார். இதன் காரணமாக எதிர்ப்புகள் உண்டாகி சமாளிக்க முடியாமல் அவர் மந்திரி பதவியை விட்டுப் போகும்படி நேர்ந்தது. அப்போததான் என்னைக் கூப்பிட்டு மந்திரிசபை அமைக்கும்படி இரண்டு கவர்னர் மட்டும் அல்ல - கவர்னர் ஜெனரலே சொன்னார். நண்பர்களை எல்லாம் விட்டுக் கூறச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். இந்த இராஜா சர் முத்தையா செட்டியார் எவ்வளவோ வற்புறுத்தினாரே!

 

ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல காலம் வருவதைத் தவற விட்டுவிடாதீர்கள் என்று வற்புறுத்தினார். எனக்கு எவ்வளவோ உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் எல்லாம் இதன் காரணமாக என் மீது கோபித்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியையே விட்டுவிட்டுப் போய்விட்டார்களயே! இந்த இராஜாஜியே என்னிடம் வந்து கெஞ்சினார் நாயக்கரே மந்திரி பதவியை ஒத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ்காரனால் தொல்லை வராமல் நான் பார்த்துக் கொள்ளுகின்றேன். காந்தியிடம் வேண்டுமானாலும் சம்மதம் பெற்று வருகின்றேன். நீங்கள் இஷ்டப்பட்டால் எனக்கும் ஒரு மந்திரியாக இடம் கொடுங்கள். உங்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து உதவுகின்றேன் என்றார். அப்போது இந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி யாரும் இருந்தார். நாங்கள் இரகசியம் பேச ஆரம்பித்ததம் நடைக்குப் போய்விட்டார். நான் ஒரு வாரத்தில் பதில் சொல்லுவதாகத் தட்டிக் கழித்து ஒரு வாரம் ஆனதும் மறுத்துவிட்டேன்.

 

தோழர்களே! நாங்களே (திராவிடர் கழகத்தின்) நின்றால் எங்களால் வெற்றி பெற முடியாது என்று உங்களால் சொல்ல முடியாது. 1952 - இல் காங்கிரஸ் ஆட்சியை ஆறவுன்ஸ் அரசாங்கம் அராஜக அரசாங்கம் என்று எல்லாம் கூறித் தோற்கடித்தேனே. 375 - சட்டசபை ஸ்தாபனத்தில் 175- பேர்களே காங்கிரசும் பாக்கி 200 - எதிர்கட்சியும் வரும்படியாகச் செய்தேனே!

 

இப்படி நாங்கள் ஜெயிக்க வைத்து இருக்கும் போது நாங்கள் நின்றால் 6-7 பேராவது ஜெயிக்கமாட்டோமா? இந்த கம்யூனிஸ்ட்கள் எங்கள் வீட்டு வாசலில் அல்லவா காத்துக் கொண்டு கிடந்தார்கள்? இப்படி மெஜாரிட்டியாக வந்ததும் என்னை அல்லவா மந்திரி சபை அமைக்கும்படி இவர்கள் எல்லாரும் கூறினார்கள். நான் கூறினேன், மந்திரிசபை அழைப்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் என்ன திட்டம் என்று வகுத்துக் கொள்ள வேண்டும் என்றேன். அதற்கு இந்தக் கம்யூனிஸ்ட்கள் பார்ப்பனர்களுடன் சேர்ந்த கொண்டு முதலில் மந்திரி சபையை ஏற்றுக் கொள்வோம். பிறகு திட்டங்கள் வகுக்கலாம் என்றார்கள். நான் கூடாது முதலில் தான் திட்டம் வகுக்க வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க இடம் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வற்புறுத்தினேன்.

 

இந்தக் கம்யூனிஸ்ட்கள் தந்திரமாகப் பார்ப்பனர்களுடன் உறவு கொண்டு கொலைகாரப் பார்ப்பான்களான பிரகாசத்தை முதன் மந்திரியாகவும் அடுத்த மந்திரியாகவும் அடுத்த மந்திரியாக தென்னேட்டி விஸ்வநாதம் ஆகியவர்களைக் கொண்டு வர முயற்சித்தார்கள். நான் உடனே பத்திரிகையில் எழுதினேன். வெற்றி பெற்ற இந்த அய்க்கிய முன்னணிகள் மந்திரிசபை அமைப்பைதைவிட தோற்றுப்போன காங்கிரஸ் பதவிக்கு வந்தாலும் பரவாயில்லை என்று எழுதினேன். உடனே இராஜாஜி தாம் முன்னுக்கு வந்து கவர்னரிடம் தம்மை நாமிஷேனில் மெம்பராக ஆக்குங்கள். என்னிடம் பொறுப்பைக் கொடுங்கள். நான் எப்படியும் சரி பண்ணி மந்திரிசபை அமைத்த விடுகிறேன் என்று கேட்டார். பிரகாசா என்ற கவர்னரும் காங்கிரஸ் எதிர்ப்பாளர்களைப் பார்த்து மெஜாரிட்டியாக நீங்கள் வந்தபோதும் நீங்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். உங்களிடம் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம் குறைவாக இருந்தாலம் ஒரே கட்சிக்காரர்கள் என்று கூறி ஆச்சாரியாரைக் கூப்பிட்டு அவரை மேல்சபை மெம்பராக நாமிநேஷன் செய்து மந்திரிசபை அமைக்க அவருக்கு அனுமதி அளித்தார்.

 

இராஜாஜி (மந்திரி சபை) பொறுப்பை ஏற்றுக் கொண்டு படையாச்சிக்கு ஒரு மந்திரி தருகின்றேன் என்றார். அவர்கள் 10-12 பேர்கள் வந்து சேர்ந்தார்கள். வெள்ளாளருக்கு ஒரு மந்திரி என்றார். வெள்ளாளர்கள் எல்லாம் அவருடன் போய்ச் சேர்ந்தனர். மற்றும் பர்மிட் லைசென்ஸ் இப்படிக் கூறிப் பலரைச் சேர்த்து மந்திரிசபை அமைத்துவிட்டார். பதவிக்கு வந்தவுடனே நாம் எந்த உணவுக் கன்ட்ரோலையே காரணம் காட்டி காங்கிரசை எதிர்த்தோமா அந்த உணவுக் கண்டிரோலை எடுத்தார். நாங்கள் இராஜாஜியைப் பாராட்டி எழுதினோம். பிறகு பலமாக அமர்ந்து கொண்டோம் என்ற கருத்தில் பேயாட்டம் ஆட ஆரம்பித்தார். நமது கல்வியில் கைவைத்து 6000- பள்ளிகளை ஒரு நேரம் தான் படிக்க வேண்டும் - பாக்கி நேரம் அவன் சாதித் தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

 

பிறகு நாங்கள் தான் (திராவிடர் கழகத்தினர்) பலாத்காரத்தில் இறங்குவோம் என்று அச்சுறுத்தி ஒழித்தோம். கண்ணீர்த்துளிகள் நாளை ஆட்சிக்கு வந்தார்கள் என்றால் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என்பதற்கு கார்ப்பரேஷனே (மாநகராட்சி) போதுமே. கார்ப்பரேஷன் இன்று கழுதை பரண்ட களமாக அல்லவா உள்ளது? இவர்கள் நாளை பதவிக்கு வந்தால் எவ்வளவு விபரீதமாகப் போய்விடும்இ ஆச்சாரியார் அவர்கள் கூறுகின்றார். தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும். வர்ணாசிரமத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கின்றார்.

 

இப்படிப்பட்டவர்களை உள்ளே விட்டால் ஆபத்து நம்மை முன்னேறாமல் மட்டம் தட்டுவார் என்று எதிர்க்கின்றோம். இந்தக் கண்ணீர்த் துளிகள் யோக்கியமானவர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்னிடமல்லவா வர வேண்டும். நீங்கள் ஆச்சாரியார் ஆட்சி ஒழிய வேண்டும் என்று கூறும் காரணம் எல்லாம் சரி. எங்களுக்கு 5-6 பேர்களுக்கு எப்படியாவது வகை செய்து கொடுங்கள். நாங்களும் உங்களோட கூடிக் கொண்டு ஆச்சாரியாரை எதிர்கின்றோம் என்று அல்லவா வரவேண்டும்? அதனை விடுத்து நமக்குக் ( தமிழர்களுக்கு) கேடு செய்வதே தொழிலாகக் கொண்ட ஆச்சாரியாரிடமா சென்று அவர் காலடியில் விழுவது?

 

ஆச்சாரியார் வருணசிரம தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்கின்றார். அவன் அவன் சாதித் தொழில் செய்ய வேண்டும் என்று பொம்மை போட்டுக் காட்டி இருக்கின்றார். நீ போய் அவரை (இராஜாஜியை) ஆதரிக்கின்றாய் என்றால் என்ன நியாயம்? ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தால் தவில் அடிக்க வேண்டியவன் தவில் அடிக்கவும், தாளம் போட வேண்டியவன் தாளம் போடவும், பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பவர்கள் பொட்டுக் கட்டிக் கொள்ளவும், பரியாரி (முடிதிருத்துநர்) சிரைக்கவும், வண்ணான் வெளுக்கவும் வேண்டும் என்று தானே சட்டம் போடுவார்?

 

எவன் எவன் என்ன சாதித் தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பரவாயில்லை. நமக்குப் பதவி கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்த நீங்கள் (கண்ணீர்த்துளிகள்) பின் எதைச் செய்யத் துணியமாட்டீர்கள்? நேற்று சொன்னாரே பறையன் இனத்தில் வந்த திரு.சண்முகம் பிள்ளை எங்கள் நிழல் பட்டாலே குளிக்க வேண்டும். இத்தனை அடி தூரத்தில் இருக்க வேண்டும் என்று ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்த நிலை மாறி நாங்கள் நாற்காலியில் (பதவியில்) உட்காரும் வாழ்வு பெற்றோம் என்கின்றாரே? பறையருக்கே அந்த நிலை என்றால் மற்ற நமது (மற்ற தமிழர்) நிலை எப்படி உயர்ந்துள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

 

இப்படிப்பட்ட பாதகர்களை இந்த சென்னைவாசிகளான பைத்தியக்காரர்கள் தானே ஓட்டுப் போட்டுத் தேர்ந்து எடுத்துள்ளீர்கள். மற்றப்படி கிராமத்தில் உள்ள மக்கள் எல்லாம் கூட இவர்கள் வண்டவாளங்களை எல்லாம் உணர்ந்து உள்ளார்கள். இந்தப் பட்டணத்து மக்கள்தானே உணர்ந்து கொள்ள முடியாத நிலை. மற்ற ஊர்க்காரன் இந்த கண்ணீர்த்துளிகள் போய் ஓட்டு கேட்டால் என்ன கூறுகின்றார்கள்? என்ன எங்களை பட்டணத்துக்காரர்கள் என்றா நினைத்துக் கொண்டு பேசுகின்றாய் என்றல்லவா கேட்கின்றார்கள்? நீ பதவிக்குப் போய் நாசமாய்ப் போவதற்கு மூன்று கோடி தமிழ் மக்களையும் அல்லவா காட்டிக் கொடுக்கின்றாய். நீ சொந்தத்தில் தயாரான அண்ணா துரையாக இருந்து செய்தாயானால் எனக்குக் கவலை இல்லை.

 

எங்களிடம் (திராவிடர் கழகத்திடம்) இருந்து தயாரான அண்ணதுரை என்று கூறிக்கொண்டல்லவா இப்படிப்பட்ட பாதகத்தை நீ செய்கின்றாய்? வேறு நாடாக இருந்தால் இவர்களைத் தூக்கில் அல்லவா போடுவார்கள்? பர்மாவில் எட்டு மந்திரிகளை சுட்டுக் கொன்றது போலக் கொன்று போடாமல்) இந்த நாட்டில் இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணுகிறவர்களுக்கு அல்லவா இங்கு மரியாதை நடைபெறுகின்றது?

 

(16-11-1961 அன்று சென்னை - இராயபுரத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு விடுதலை 18-11-1961) பெரியார் களஞ்சியம் பொகுதி : 9 பக்கம் : 85)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_09.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE