Language Selection

சமூகவியலாளர்கள்

தோழர்களே!

இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழியவேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம், என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

 

தோழர்களே! இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா?அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும்.

 

ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மதவேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?

 

முன் பேசிய சிலர் பெண்கள் சுதந்திர விஷயம் முன்னமேயே முடிவு கட்டப்பட்டது என்று சொன்னார்கள். மற்றொருவர் நம் பெரியோர்கள் நன்றாய் யோசித்துச் செய்திருக்கிறதாகச் சொன்னார். ஆகையால் இம்மாதிரியான பெரியதொரு சீர்திருத்தவாதிகள் உண்மை சீர்திருத்தவாதிகளால் மேற்கண்ட பிரச்சனையை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நிற்க,ஆணும் பெண்ணும் மனிதர்கள் தான். உருவபேதம் மனிதத்தன்மையைப் பாதிக்கக் கூடியதல்ல. மனிதவர்க்கத்தில் புத்திக்குறைவு, பலக்குறைவு என்பது இயற்கையில் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருக்கும் ஓன்றுபோலவே தான் இருக்கிறது. அப்பியாசத்தால் இருபாலரும் ஒன்று போலவே தான் அடைகிறார்கள். ஆண்களில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு பலவீனமானவர்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு கெட்ட குணமுடையவர்கள் இருக்கிறார்களோ? அதுபோல் தான் பெண்களிலும் இருக்கலாம்.

 

மேல்கொண்டு ஏதாவது இருந்தால் அது செயற்கையால் அதாவது ஆண்களாகிய நாம் அவர்களைக் குழந்தைப்பிராய முதல் அடிமைப்படுத்தி கல்வியில்லாமல் உலக ஞானம் அறிய இடம் இல்லாமல் அடக்கி வைத்து விட்டதால் ஏற்பட்டதே ஒழியவேறில்லை. தாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வியாபாரத்தில் எவ்வளவு கெட்டிக்காரர்களாய் இருந்து எவ்வளவு ஆண்களை ஏமாற்றி எவ்வளவு பணம் சம்பாதித்து எப்படி நிர்வகித்து வருகிறார்கள் பாருங்கள். ஆண்களில் எழுத்து வாசனை அற்றவர்களுடையவும் சமத்துவமில்லாமல் அடக்கி வைத்திருக்கும் மிருகங்களுக்கு ஒப்பான சில தாழ்த்தப்பட்ட மக்களுடைய அறிவு வீரம் பராக்கிரமம் எல்லாம் எப்படி இருக்கிறது?

 

வியாபாரம் செய்யும் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் பெண்களும் இன்று அவரவர்கள் தொழில்களைச் சரியாய் செய்யவில்லையா? உபாத்தியார் பெண்கள் தங்கள் உத்தியோகத்தை சரியாய் செய்யவில்லையா? எந்த விதத்தில் அவர்கள் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்? ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஆண்களாக இருந்தும் ஜெயிலரையும் ஜெயில் சூப்ரண்டையும் கண்டால் நடுங்குகிறார்களே அவர்களுக்கு ஆண்மை, வீரம், பராக்கிரமம், சுயபுத்தி எல்லாம் எங்கு போய்விட்டது?

 

இந்தியாவில் கிருஸ்தவப் பெண்கள் முக்காடிட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லீம் பெண்கள் உறைபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துப் பெண்கள் கல்வி இல்லாமல் சொத்து இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுதந்திரம் கொடுத்தால் அதை வகிக்க அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். அதுபோலவே இன்று எல்லா ஆண்களுக்கும் நிர்வாக சபை மெம்பர் பதவி கொடுத்தால் ஆண்கள் அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். எல்லோருக்கும் படிப்பு கொடுக்க வேண்டும். உலக விஷயங்களைக் கற்க தாளாரமாய் வசதி அளிக்க வேண்டும். 18-வயது 20-வயது ஆன பிறகே கல்யாணம் செய்து வாழ்க்கையில் ஈடுபடச் செய்ய வேண்டும்.

 

ஒவ்வொரு பெண்ணும் தான் சுகமாய் வாழத்தகுந்த ஒரு தொழில் அல்லது ஒரு மார்க்கத்துக்குத் தயார் செய்யப்பட வேண்டும். தன் புருஷனை வயது வந்த பிறகு தானே தெரிந்தெடுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். இவை செய்து விட்டால் நீங்கள் எந்தப் பெண்ணையும் தேடிப் போய் சுதந்திரம் கொடுக்க அலைய வேண்டாம். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று இம்மாதிரி கூட்டம் போட்டு வாக்குவாதம் செய்ய வேண்டாம். தானாகவே பெற்று விடுவார்கள். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் வீட்டு வேலை யார் பார்ப்பது என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

 

இன்றைய வீட்டு வேலைகள் என்பது மக்களின் முட்டாள் தனத்தால் ஏற்பட்டதே ஒழிய அவை எல்லாம் இயற்கையாய் உள்ள வேலை அல்ல. இன்றைய வீட்டு வேலை இனி 20- வருஷத்துக்குள் முக்கால்வாசி குறைந்து போகும். உலக முற்போக்கு வீட்டு வேலைகளைக் குறைத்து வருகிறது. நம்முடைய அர்த்தமற்ற பேராசை சுயநலங்களே நமக்கு இவ்வளவு வீட்டு வேலைகளை ஏற்படுத்திக் கொண்டது. கற்பு கெட்டுப் போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை. பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்ததே ஒழிய, ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல. கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்ததாகும். கற்பு கெடுவதால் ஏற்பட்ட தெய்வத் தண்டனையை அவர்கள் அடைவார்கள். அதற்காக மற்றொருவர் அடையப்போவதில்லை. இது தானே மதவாதிகள் ஆஸ்திகர்கள் சித்தாந்தம். ஆதலால் பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம்.

 

பெண் அடிமையல்ல, அவளுக்கு நாம் எஜமானல்ல கார்டியன் அல்ல என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப்பற்றியும் காத்துக் கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய ஆண்காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும். கற்பு கெடுதலால் நோய் வரும் என்றால் இருவருக்கும் தான். ஒருவருக்கு மாத்திரம் வராது. ஆதலால் பெண்களைப் படிக்க வைத்து விட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக் கூடிய தன்மை வந்து விடும். ஆகவே தோழர்களான நீங்கள் நன்றாய் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள்.

 

(18.10.1935 - அன்று ஈரோடு லண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெய்னிங் பள்ளிக்கூட மாணவர் சங்க கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை, குடிஅரசு - 03.11.1935 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_02.html

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இந்த ஊருக்கு (மதுக்கூர்) வந்து பல ஆண்டுகள் ஆகின்றன் இந்த ஊரில் கழகம் சரிவர இயங்கவில்லை என்று விசுவநாதன் (பட்டுக் கோட்டை) கூறினார். இருந்து இருக்கலாம். இங்கு திராவிடர் கழகம் முயற்சி எடுத்துக் கொண்டாலும் மக்கள் ஆதரவு அவ்வளவாக ஏற்படுவது இல்லை. காரணம் கழகக் கொள்கைகள் அவ்வளவு கசப்பானவை. எங்களுடைய செய்திகளை இந்த நாட்டுப் பத்திரிகைகள் சரிவரவெளி இடுவதுமில்லை என்றார். சி.என். விசுவநாதன். இவர் பட்டுக்கோட்டையில் இருந்தார். தி.க. மாநில அமைப்பாளர் அது உண்மைதான். இந்த நாட்டுப் பத்திரிக்கைகளை நான் என்றைக்குமே மதித்தது இல்லை. எவனாக இருந்தாலும் அயோக்கியன் என்றே எண்ணிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் வருபவன் பத்திரிகைக்காரர்களின் தயவு இன்றி அவர்களை எதிர்த்துக் கொண்டு இயக்கம் நடத்துவதும் அதில் மிஞ்சியதும் நாங்கள் தான். மற்றக் கட்சிக்காரன்கள் எல்லாரும் பத்திரிக்கைக்காரன் தயவைச் சம்பாதிப்பதில் பெரிதும் ஈடுபடுவார்கள். காந்தியே பத்திரிக்கைக்காரனிடம் கெஞ்சியது எனக்குத் தெரியும்.

 

அன்று காங்கிரசிலே இரு பிரிவு. காந்தி ஒரு பக்கம் - திலகர் ஒரு பக்கம். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் காந்தியை எதிர்க்க ஆரம்பித்தன. திலகர் செத்த பிறகு கூட காந்தியை எதிர்த்துக் கொண்டே வந்தார்கள். இந்த இரு கட்சிகளில் சென்னையில் ஒரு கட்சிக்குக் கஸ்தூரி ரெங்க அய்யங்கார் தலைவர்! கஸ்தூரி ரெங்க அய்யங்கார் முதலிய பார்ப்பனர்களுக்கு இராஜாஜியைப் பிடிக்காது. அந்தக் கோபத்தில் காந்தியையே தாக்க ஆரம்பித்து விட்டனர். இந்து பத்திரிகை போன்றது காந்திக்கு விரோதமாக இருந்தது கண்டு காந்தியே பயந்து கஸ்தூரி ரெங்க அய்யரையே அணுகிக் கேட்க வேண்டியதாகிவிட்டது. நான் காந்தி சீடனாக இருந்த காரணத்தினால் இவை எல்லாம் நன்கு தெரியும். நான் மட்டும் காங்கிரசில் இருந்த காலம் கொண்டு பத்திரிகைகளைக் கண்டித்து வருகின்றேன். காந்தியார் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சரணாகதி அடைந்து அவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையே விட்டார். எனக்குச் சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு. நான் ஒரு இந்து. வருணா சிரமத்தில் நம்பிக்கை உடையவன். மோட்ச நரகத்திலும் முன்பின் ஜென்மத்திலும் (பிறப்பிலும்) நம்பிக்கை உடையவன் என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு கஸ்தூரி ரெங்க அய்யங்காரிடமும் தூது அனுப்பிச் சிநேகம் பண்ணிக் கொண்டார். பிறகு தான் பத்திரிக்கைகள் ஆதரிக்கத்தொடங்கின. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் பத்திரிகைக்காரர்கள் இப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தார்கள்.

 

நான் மட்டும் எனது பொது வாழ்வில் இத்தனையாண்டுகளாக இவர்களைச் சட்டைப் பண்ணுவது கிடையாது. இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்கள் எல்லாரும் கட்டுப்பாட்டாக எங்களைப் பற்றி எல்லாம் இருட்டடிப்பு செய்வதோடு மட்டும் அல்லாமல் எங்களைப் பற்றிக் கட்டுப்பாட்டாகவும் தவறாகவும் புளுகிக் கொண்டும் வருகின்றனர். ஒருத்தன் புளுகினால் எல்லோரும் ஒரேமாதிரியாகவே புளுகுவான். தோழர்களே! நான் தான் இவர்களை வன்மையாகக் கண்டித்து வருபவன் என்றேன். வன்மையாக என்றால் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கண்டித்து வருகின்றேன். இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களுக்கு மானமா? ஈனமா? எனவே சிரித்து கொண்டே போய் விடுவார்கள். பொப்பிலிராஜா ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக இருந்தாலும் கூடப் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டு இருந்தார். கஸ்தூரி ரெங்க அய்யங்காருக்கு உடம்புக்கு அசவுக்கியம் என்றால் போய்ப் பார்த்து வருவார். இது அன்பால் அல்ல- தங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்ற பயத்தால் ஆகும். நான் மற்றக் கட்சிக்காரன் மாதிரிப் பேசிப் போட்டு தங்கள் பேச்சு பத்திரிக்கையில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்ல. நான் தான் தினம் தினம் 10.000- க்கணக்கான மக்களை நேரில் சந்தித்து என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன் ஆயிற்றே!

 

நான் மக்களிடம் பேசும் போது கூட நான் சொல்லுகின்றேன். கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் நாசமாய் போங்கள் என்று போகின்றவன் ஆயிற்றே! எங்களுக்குப் பத்திரிகைக்காரர்கள் தயவில் ஆகக்கூடியதும் ஒன்றும் இல்லை.இந்த நாட்டில் மற்றக் கட்சிக்காரன்கள் எல்லோரும் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருப்பவர்கள். ஆகவே அவர்கள் இந்தப் பத்திரிகைக்காரர்களின் விளம்பரத்துக்கும் தயவுக்கும் பல்லைக் கெஞ்சுவார்கள். நாங்கள் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருக்கவில்லை.எங்கள் ஆள்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்த முயற்சியால் வாழ்பவர்களே ஒழிய பொதுவாழ்வு பேரால் வாழ்பவர்கள் அல்லர். இப்படிப்பட்ட நாங்கள் தான் இந்த நாட்டில் எந்தக் கருத்தையும் துணிந்து எடுத்துக்கூற முடிகின்றது. இப்படிப்பட்ட நாங்களா இந்த அன்னக்காவடிப் பத்திரிக்கைகளுக்கு அஞ்சப் போகிறோம்?

 

இந்தப் பத்திரிக்கைத் துறை அனைத்தும் பார்ப்பான் ஆதிக்கத்தில் தான் இருந்து வந்தன. தமிழன் தலை எடுக்கவே முடியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்கள் (திராவிடர்) நடத்த முன் வந்தவர்கள் எல்லாரும் ஒழிந்தே போனார்கள். ஜஸ்டிஸ் கட்சி பத்திரிகை நடத்தியது- மாதம் ரூ.5000- நஷ்டத்தில் நடத்தியது. நஷ்டத்தைச் சரிக்கட்டத் தலைவர்கள் எல்லாரும் பகிர்ந்து கொள்ளுவார்கள். கடைசியில் நஷ்டத்தை ஈடுபண்ண முடியாமல் பத்திரிக்கை ஆஃபீஸ் ஏலத்தில் போனது. நான் தான் அந்த மெஷினை (இயந்திரம்) ஏலத்தில் எடுத்தேன். அதுதான் இன்று விடுதலையில் (நாளிதழ்) ஒடுகிறது.பத்திரிக்கைத் துறையில் பார்ப்பானுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதலில் சுதேசமித்திரன் ஒன்று தான் இருந்தது. பிறகு தினமணி இந்தப் பத்திரிக்கைகள் தான் நல்ல மனிதனையும் பொதுவாழ்வில் அயோக்கியனாக ஆக்க உதவி வந்தன.காங்கிரசிலேயே சுதேசமித்திரன் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கையில் நம்பிக்கை இல்லாது தேசபக்தன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தது. நானும் ரூ.1000- கொடுத்து மேலும் 1000 -வசூல் பண்ணிக் கொடுத்தேன். திரு.வி. கல்யாண சுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு அது நடந்து வந்தது. அவருக்குச் சம்பளம் 80- ரூபாய் தான். பார்ப்பனர்கள் அதனை வளர விடவில்லை. ஒழிக்க முயன்றார்கள். கல்யாண சுந்தர முதலியாரை ஒழித்து விட்டு வ.வெ.சு. அய்யர் என்ற பார்ப்பானைக் கொண்டு வர பாடுபட்டார்கள். கடைசியில் அந்தப் பத்திரிக்கை ஒழிந்தே போயிற்று. பிறகு நானும் பத்திரிக்கை ஆரம்பித்தேன் - என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பிறகு நமது பிரச்சாரத்தின் காரணமாக ஒரு சிலர் தலை எடுக்கும் நிலை ஏற்பட்டது. நண்பர் ஆதித்தனார் தினத்தந்தி பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரும் மிகவும் கஷ்ட நஷ்டப்பட்டார். இன்று இந்த நாட்டிலேயே அதிகம் விற்பனை ஆவது அவரது பத்திரிக்கை தான்! அது தலை எடுக்க ஆரம்பித்த பிற்பாடு - பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிப் போட்டது. இன்று அவருக்கு 6 – 7 பத்திரிக்கை (என்று) ஆகிவிட்டன. சென்னையில் ஒரு தினத்தந்தி திருச்சியில் ஒரு தினத்தந்தி மதுரையில் ஒரு தினத்தந்தி நடக்கின்றன. இவை அல்லாமல் மாலைமுரசு என்ற பேரில் திரு நெல்வேலியில் ஒன்று கோவையில் ஒன்று நடைப்பெறுகின்றன. இந்தப் பத்திரிக்கையில் வரும் செய்திகளை எல்லாம் நான் ஆதரிக்கிறேன் என்பதல்ல.

 

தினத்தந்தி மிகவும் கீழ்த்தரமான பத்திரிக்கைத் தான் என்றாலும் அது பார்ப்பானுடைய பத்திரிக்கைகளின் செல்வாக்கை அடக்கிப் போட்டதே என்று தான் ஆதரிக்கிறேன். எவனை எடுத்தாலும் காலையில் எழுந்திருந்த உடனே தினத்தந்தியின் முகத்தில் தான் விழிக்கின்றான். எனவே இன்று ஆதித்னாருக்கு 7- பத்திரிக்கைகள், கோவையில் இராம கிருஷ்ணன் என்ற நாயுடுவுக்கு "நவ இந்தியா" என்று கோவையில் ஒன்றும் நடக்கின்றன. கருமுத்து தியாகராய செட்டியாருக்கு தழிழ் நாடு என்ற பத்தரிக்கை மதுரையில் ஒன்றும் சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் தனிஅரசு பத்திரிகையானது மதுரையில் ஒன்றும் சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. அடுத்து கோசல்ராமுக்கு தினச்செய்தி என்ற ஒரு பத்திரிக்கை கண்ணீர்த் துளிகளில் கருணாநிதிக்கு ஒரு பத்திரிக்கை சம்பத்துக் கட்சிக்கு விடிவெள்ளி என்ற பத்திரிக்கை. இப்படி 20- பத்திரிக்கைகளுக்கு மேல் இன்று பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கைகள் ( நாளிதழ்கள்) நடக்கின்றன. இவை போடுகின்ற போட்டியில் பார்ப்பான் பத்திரிக்கைகள் இன்று ஓங்க முடியவில்லை.இப்படிப் பார்ப்பனர் அல்லாதவர் பத்திரிகைகள் நடந்து வருகின்றன என்றாலும் இவைகளும் நம்மைப் பற்றிப் பார்ப்பானுக்குப் பயந்து நம் செய்திகளை இருட்டடிப்பு செய்வதும் கட்டுப்பாடாகத் தவறான செய்தியைப் போடுவதிலும் தான் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் இவை பற்றிக் கவலைப்படுவது இல்லை.

 

நாங்கள் மற்றக் கட்சிக்காரன்கள் மாதிரி மக்களிடத்தில் ஓட்டுக்கோ வேறு தயவுக்கோ எதிர் நோக்கி இருக்காத காரணத்திலும் எங்கள் சொந்த வாழ்வில் எவனும் குற்றம் (குறை) சொல்ல முடியாத அளவு (நாங்கள்) நடந்து வருவதனாலும் எங்கள் மீது எவனும் குற்றம் சொல்ல முடியவில்லை. மாறாக நாங்கள் தமிழ் காங்கிரசை ஆதரிக்கிறோம். காமராசரை ஆதரிக்கிறோம். காமராசரை ஆதரிக்கின்றோமே - இதனைப் பற்றி உங்களிடத்தில் தப்பான முறையில் செய்தி வெளியிட்டுக் காட்டுவான். நான் கழக ஆதரவாளர்கள் அனுதாபிகள் என்பவர்களை அவர்கள் வேண்டுமானால் அவர்கள் இஷ்டப்பட்டால் - காங்கிரசில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறியதை தான் திராவிடர் கழகத் தோழர்களிடையே காங்கிரசில் சேரச் சொன்னதாகப் பெரிய எழுத்தில் கட்டுப்பாடாக வெளியிட்டு உள்ளன.நம் தமிழர்கள் நடத்தும் பத்திரிகைகள் என்பவைகள் கூட உண்மைக்கு மாறாக வெளியிட்டு உள்ளன. நாங்கள் இவ்வளவு பெரிய கூட்டத்தில் எவ்வளவோ விஷயங்கள் பற்றிப் பேசுகின்றோம். இவற்றைப்பற்றி நான்கு வரி போடமாட்டான்.

 

வடநாட்டில் - பார்லிமெண்டில் ஓர் ஆள் நாங்கள் இராமனையும் சீதையையும் குறை கூறிப் பேசுவதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டித்துப் பேசியதைக் கொட்டை எழுத்துகளில் போட்டு இந்தியா எங்கும் உள்ள மக்கள் அறியும்படிச் செய்கின்றன. ஆனால் இராமன் சீதை விபச்சாரி என்பதற்கு நாங்கள் எடுத்துக்காட்டும் அநேக ஆதாரங்கள் பற்றி ஒரு பத்திரிக்கையில் கூடப் போடமாட்டார்கள். தோழர்களே! உலகத்தில் மற்ற நாட்டில் எல்லாம் அந்த நாட்டுப் பத்திரிகைகள் அந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் - அந்த நாட்டு மக்களை அறிவாளிகள் ஆக்கவும் நல்வழிப்பத்தவும் பயன்படுகின்றன. இந்த இந்திய நாட்டுப் பத்திரிக்கைகள் தான் மனிதனை மடையனாகக் காட்டுமிராண்டிகளாக ஆக்கப் பயன்படுகின்றன. இந்த நாட்டில் பொது வாழ்வின் பேராலும் மக்கள் மத்தியிலும் பொது ஒழுக்கக் கேட்டுக்குப் பெரிதும் இந்த நாட்டுப் பத்திரிக்கைகளே பயன்படுகின்றன. இந்த நாட்டுப் பத்திரிக்கை ஸ்தாபனங்கள் எல்லாம் தேசத்துரோக ஸ்தாபனங்கள் என்று கருத வேண்டியவைகள் ஆகும்.நான் கூறுவது உண்டு.

 

இந்த நாட்டினைப் பிடித்துள்ள 3 பேய் - அய்ந்து நோயில் இந்தப் பத்திரிக்கையும் ஒரு நோய் என்றே கூறி வந்திருக்கின்றேன்.பார்ப்பனர்கள் பம்பாய் டெல்லி (என்று) எங்கு எடுத்துக் கொண்டாலும் பத்திரிகைத் துறையையைத் தங்கள் கையிலேயே வைத்து இருப்பதைக் காணலாம். பார்ப்பனர்கள் பத்திரிகை என்ற ஆயதத்தைக் கொண்டே இந்த நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்துக் கொண்டே வந்து இருக்கின்றனர். எவனை எடுத்துக் கொண்டாலும் பொதுவாழ்வின் பேரால் ஈடுபடுபவர்கள் இவர்களுக்கு (பத்திரிக்கைகளுக்கு) அடக்கியே- அஞ்சியே வந்து இருக்கின்றனர்.தோழர்களே! நாங்கள் காமராசரை ஆதரிப்பது பற்றி இந்தப் பத்திரிகைகள் ஆத்திரப்படுகின்றன. மெயில் பத்திரிகை காமராசர் ஆட்சிக்கும் காங்கிரசிற்கும் நாட்டில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்தக் காமராசரைத் திராவிடர் கழகத்துக்காரர்கள் போன்ற வகுப்புவாதிகள் ஆதரிக்கிறார்கள். இதன் காரணமாகக் காங்கிரசுக்குச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசுச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசு தோற்கும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்? ஏன் இந்தக் காமராசர் திராவிடர் கழகத்துக்காரர்களைப் பார்த்து உங்கள் பிரச்சாரம் எங்களுக்குத் தேவை இல்லை. ஆதரிக்க வேண்டாம் என்று கூறக்கூடாது என்று எழுதியது.

 

இப்படி மெயில் ( ஆங்கில நாளிதழ்) பத்திரிக்கை எழுதிய உடனே இந்தப் பத்திரிகையினைக் கண்டித்து ஊர்வலம் நடத்திப் பீச்சில் (சென்னை – கடற்கரையில்) பெரிய கூட்டம் போட்டோம். இந்தச் சேதி தெரிந்து எனது வீடு தேடி அதன் ஆசிரியர் வந்து தவறாக எழுதி விட்டோம் - இனிமேல் அப்படி எல்லாம் ஏற்படாது என்று கேட்டுக் கொண்டார். இந்த நாட்டுப் பத்திரிகைகள் நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஏன் ஆதரிக்கின்றேன். காமராசர் ஆட்சியில் இன்ன இன்ன நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்றன என்று புள்ளிவிவரங்களுடன் எடுத்துப் போட்டுப் புத்தகம் போட்டு இருக்கின்றோம். இவற்றைப் பற்றி எல்லாம் எழுதமாட்டார்கள். அதுபோலவே ஆச்சாரியார் ஆட்சியில் அவர் பண்ணிய கேடுகள் பற்றி எல்லாம் புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டி எதிர்க்கின்றோம். இவற்றைப் பற்றியும் ஒருவரிகூடப் போடமாட்டார்கள். இந்தக் காங்கிரஸ்காரர்களுக்கும் தாங்கள் செய்த நன்மைகளை எடுத்துச் சொல்ல யோக்கியதை இல்லை.

 

நாங்கள் இன்ன காரியம் செய்து உள்ளோம் - கல்வியில் உத்தியோகத்தில் இன்ன இன்னபடித் தமிழர்களுக்குச் செய்து இருக்கின்றோம் என்று சொல்ல முடியாது. சொன்னால் அது பார்ப்பானுக்கு விரோதமாக ஆகிவிடும். எனவே அவர்களால் எடுத்துச் சொல்ல முடியாது. நாங்கள் தான் எடுத்துச் சொல்கின்றோம். காமராசருக்கு நாம் இவ்வளவு நன்மைகளி செய்து இருக்கிறோம்? என்று அதிசயமாக இருக்கும். ஆச்சாரியாரின் கொடுமைகள் பற்றியும் எடுத்து நாங்கள் தான் பேசுகின்றோம். ராஜாஜிக்கும் நாங்கள் எடுத்துக் காட்டுவதில் இருந்து நாம் இவ்வளவு கொடுமைகளா செய்து இருக்கின்றோம் என்று வருத்தப்படுவார்.

 

(06-09-1961 அன்று மதுக்கூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. விடுதலை 01-10-1961)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_03.html

சூத்திரர்களுக்குத் திருமணம் கிடையாது. எனவே சூத்திரனுக்குத் திருமணம் பார்ப்பான் செய்து வைக்க வேண்டுமானால் பூணூல் போட்டுத் தான் செய்து வைப்பான். காரணம் நான் முன் சொன்னபடி நாம் சூத்திரர்கள். நமக்கு சாஸ்திரப்படி திருமண உரிமை கிடையாது. கீழ்ச்சாதிக்காரனுக்குத் திருமணம் செய்து வைத்தால் பார்ப்பானுக்கு தோஷம் என்று வேறு எழுதி வைத்து இருக்கிறான். அதாவது உரிமை இல்லாதவனுக்கு உரிமை செய்து வைத்தால் பார்ப்பானுக்குத் தோஷம் ஆகும்.சூத்திரன் படிக்கக் கூடாது. சூத்திரனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் பார்ப்பான் நரகத்துக்குப் போவான் என்று மனுநீதி கூறுகின்றது.இடைக்காலத்தில் தான் நான்காம் சாதியாருக்கு திருமணச் சடங்கு புகுத்தப்பட்டது. முன்பு மேல் மூன்று வருணத்திற்கு மட்டும் தான் இருந்து வந்தது.தமிழனுக்கு பழைமையான நூல் என்று பெருமை பாராட்டுகின்றார்களே அந்தத் தொல்காப்பியத்திலேயே உள்ளது.பார்ப்பான் தனது வருமானத்தைப் உத்தேசித்தே நமக்குத் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொள்கிறான். நாமும் மேல் சாதிக்காரன் வந்து பண்ணினால் தான் பெருமை என்று எண்ணி அழைக்கின்றோம். இதன் மூலம் இழிந்த சாதி என்பதை ஒத்துக் கொள்ளுகின்றோம் என்பது தானே பொருள்.சமூதாயத்துறையில் நம் இழிநிலைக்குக் காரணமான கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டியது அவசியம். மணமக்கள் பகுத்தறிவுடனும், சிக்கனமாகவும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையுடனும்- வாழ வேண்டியது அவசியம்.

 

(16-09-1962- அன்று இராமநத்தம் திருமணத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு- “விடுதலை” – 26-09-1962

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_04.html

பேரன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! மணமக்களே!

நாம் ஏன் இப்படிப்பட்ட திருமணங்களை நடத்துகின்றோம்? முன்னோர்கள் முறையினை விலக்குகிறோம் என்றால் நம் ஜாதி இழிவு ஒழிக்கவும், கடவுள் மதம் சாஸ்திரங்கள் பேரால் கற்பிக்கப்பட்ட மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், பெண்ணடிமையினை நீக்கவும், ஆணுக்குப் பெண் அடிமை அல்ல, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை- நிலைநாட்டவுமே இத்தகைய திருமணமுறையைக் கையாளுகின்றோம். இவற்றிற்காகப் பாடுபட முன் வந்தவர்கள் நாங்கள் தான்.

 

திருமணம் என்பது நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதும் நடைப்பெறுகின்றது. இந்நிகழ்ச்சி சாதியையோ, மதத்தையோ, பாதுகாக்கவும் பெண்களை அடிமைகளாக ஆக்கி வைக்கவுமே நடத்துகின்றார்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் நடத்தினாலும் மதப்படிதான் திருமணம் நடத்துகிறார்கள். இந்துக்கள் என்று கூறப்படும் நம்மவர்கள் நடத்தினாலும் மதப்படிதான் நடத்துகின்றோம். இப்படி நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம் மதத்தைப் பாதுகாக்கவே நடத்தப்படுகின்றன. மற்றப்படி நம் தமிழ்நாட்டில் நடைப்பெறும் திருமணச் சடங்குகள் எல்லாம் சாதியைப் பாதுகாக்க சாதிக்கு ஒருமுறையாக ஏற்பட்டுள்ளது. தாழ்ந்த சாதிக்காரர்கள் என்று ஆக்கி வைக்கப்பட்டவர்கள் வரவர மேல்சாதிக்காரர்களைப் பார்த்து இப்படிப்பட்ட அர்த்தமற்ற சடங்குகளை எல்லாம் கைக்கொள்ளவும் முற்படுகின்றனர்.

 

இம்மாதிரியான திருமணங்கள் நடைபெற நாங்கள் முயற்சி எடுத்துக் கொள்ளாமலும் சுயமரியாதையைப் பிரச்சாரங்கள் நடத்தப்படாலும் இருந்து இருக்குமானால் பெண்கள் மிகமிகக் கேவலமான நிலையிலேயே வைக்கப்பட்டு இருப்பார்கள்.பெண்களுடைய இழிநிலை அடிமைத் தன்மை இவற்றைப் போக்க இந்த நாட்டில் எந்த மகானோ, மகாத்மாவோ, அவதார புருஷர்களோ- கவலை எடுத்துக் கொள்ளவே இல்லை. மாறாக இவற்றை நிலைக்க வைக்கவே பாடுபட்டு வந்து இருக்கிறார்கள்.நமது புராணங்கள் எல்லாம் கூட நமது மடமையையும், இழிவையும் பாதுகாக்கவே ஏற்பட்டவையாகும். நம் கடவுளின் அவதாரங்கள் எல்லாம் மக்கள் அறிவு பெற்று விழிப்படையாமல் மடைமையிலும், இழிவிலும், ஆழ்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்டனவாகும்.

 

இந்த நாட்டில் இந்தக் கடவுள் மதம் சாஸ்திரம் இவற்றை எல்லாம் எதிர்த்து ஒர் அளவு வெற்றி பெற்று இருக்கின்றது என்றால் எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு எங்கள் சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கம் ஒன்றே தான்.எங்கள் இயக்கம் தோன்றிய பிறகு நாங்கள் சமூதாயத்தில் என்ன என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று கூறினோமோ, எங்கள் செங்கள்பட்டு மாநாடு போன்றவற்றில் என்ன தீர்மானங்கள் எல்லாம் போட்டோமோ, அவற்றில் பகுதிக்கு மேல் இன்று சட்டமாக்கி அமலிலும் இருக்கின்றதைக் காண்கிறோம்.

 

பலதார மணம் இன்று சட்ட விரோதம் செல்லுபடியாகாது.ஒர் ஆண் ஒரு பெண்ணுடன் தான் குடும்பம் நடத்த வேண்டும் என்று அமலில் இருப்பதைக் காண்கிறோம்.பெண்களுக்கு தகப்பன் சொத்தில் ஆண்களைப் போல பங்கு இன்று இருப்பதைக் காண்கிறோம்.பெண்களும் ஆண்களைப் போல அரசியல், உத்தியோகம், முதலியவற்றில் பங்கு பெற்று வருவதை நாம் இன்று காண்கிறோம்.

 

(07-06-1962- அன்று மேலவாளாடி திருமணத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. (விடுதலை – 09-06-1962)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_5952.html

அவ்வாறு அவர்களை (தமிழர்களை) முட்டாள்களாக வைத்திருப்பது தான் தருமம் என்று பார்ப்பான் மனு தருமத்தில் எழுதி வைத்திருக்கிறான். உலகம் விஞ்ஞானத்தில் (அறிவியலில்) தலை சிறந்து அற்புத-அதிசயங்களைக் கண்டுப்பிடித்து போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுகிறது. ஆகாயத்திலே சந்திரமண்டலம் வரையில் மனிதன் பறந்துச் சென்று வருகிறான். தந்தி பறக்குது. அமெரிக்காவிலே பேசினால் இங்கே கேட்குது. கேட்பது மட்டுமல்ல. பேசுகின்ற மனிதனையும் நாம் நேரே பார்க்கலாம் டெலிவிஷன் மூலம்! இத்தகைய அதிசயங்களை எல்லாம் கண்டுப் பிடித்து ஆராய்ந்து முன்னேறும் போது நாம் என்னடாவென்றால் சுத்தக் காட்டு மிராண்டிகளாக மாட்டையும், கழுதையையும், குரங்கையும், கல்லையும், கடவுள் என்றும் அந்த சாமிக்கு கல்யாணம், எத்தனை பிள்ளை, அதற்கு இத்தனை பூசை செய்தால் மோட்சம் என்று ஆராயும் முட்டாள்தனமான காரியத்தில் உச்சநிலையில் இருக்கிறோம். குழவிக்கல் சாமி. அதற்கு தினம் ஆறு வேளை-12 வேளை சோறு. வருஷா வருஷம் கல்யாணம். இதுவும் பத்தாமல் வைப்பாட்டி வேறு. அதற்குக் கருமாதி வேறு! நகை, கோயில் இப்படி அனேகம் செய்கிறோம். இதைப் பற்றியெல்லாம் ஒருவராவது சிந்திப்பது இல்லை. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவை எவனும் உபயோகப்படுத்துவதே இல்லை.

மனித வாழ்க்கையில் இன்று நாம் மடமை நிறைந்தவர்களாக இருக்கிறோம். அப்படி இருக்கக் காரணம் நமக்கு நோய் வந்தது தான். பார்ப்பான் புகுத்திய இந்த நோய் நம்மை ஷயரோகக்காரனாக ஆக்கி விட்டது. எவனும் தைரியமாக வெளியில் வந்து கூறமுடியவில்லை. அப்படிப் பேசினாலும் உடனே அவனைப் பார்ப்பான் ஒழித்துக் கட்டி விடுகிறான். பார்ப்பானுடைய தயவிலே தான் வாழ வேண்டியுள்ளது. கலியாணம், கருமாதி என்று பிறப்பு முதல் இறப்பு வரை நடைப்பெறும் எல்லா நிகழ்ச்சிகளிலும் எல்லாத் துறைகளிலும் பார்ப்பான் புகுந்து விடுகிறான். பத்து வருடங்களாக நாங்கள் போர் நடத்தி வருகிறோம்.

நல்ல தமிழ் இருக்கையிலே தமிழ் நாட்டில் தெலுங்கு சங்கீதம் ஏன் இருக்க வேண்டும்? எதற்காக இருக்கணும் என்று கேட்டுப் போராட்டம் துவக்கினது நாங்கள் தான். நம்மிலேயே சில பேர் என்ன சங்கீதத்திலே கூடவா வகுப்பு வாதம் பேசுவது? என்று எங்களைக் கிண்டலும், கண்டிப்பும் செய்தார்கள். எப்படியோ நமக்கு நல்ல வளர்ச்சி ஏற்பட்டது. சமூதாயத் துறையிலும் நமக்கு இழிவு தேடும் மற்ற வகையிலும் கேடுகளும் இருக்கின்றன. அப்படியே தான் காலம் கடந்து போகிறதே தவிர ஏன் இப்படி என்று கேட்க ஆள் இல்லையே? நாங்கள் தான் எவனுடைய நிஷ்டுரம் (இடையூறு) தொல்லை வந்தாலும் சரி வரட்டும் என்று துணிந்து என்ன கஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து நாம் கூறுவோம். கேட்டால் கேட்கட்டும். விட்டால் விடட்டும் என்று கருதி பாடுபட்டு பிரச்சாரம் செய்து வருகிறோம்.

இந்த வேலைக்கு வேறு யாரும் முன் வராததற்கும் நாங்கள் ஒருவர் முன்வந்ததற்கும் காரணங்களை நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்கள் இந்த வேலைக்கு வராததோடு மட்டுமல்ல! எங்களை முன்னோர்கள் சொல்லுக்கு கட்டளைக்கு மாறானவர்கள் நாஸ்திகர்கள் என்று விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். தன்னையும் வேசி மகன், சூத்திரன் என்று கூறுகிறானே! என்று சிறிதும் கவலையில்லாமல் மானம், ஈனம் அற்றுப் போய் அவனும் பார்பானுடன் சேர்ந்து கொண்டு தன் வயிறு வயிறு கழுவ, பொறுக்கித் தின்ன, அவனது அடிமையாக ஆகி நமக்குத் தொல்லையும் தந்து வருகிறான். இப்படி 2000-3000 வருஷங்களாகவே இந்நிலை இருந்து வருவதால் தான் நாம் இன்னும் வளரவில்லை. நம் நாட்டில் நாம் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த ஒலிபெருக்கி ரயில் கப்பல் மின்சாரம் போன்றவற்றை தினமும் அனுபவிக்கிறோம். அவன் தினமும் ஒவ்வொன்றைப் புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் நம்மவன் குழவிக் கல்லைத் தவிர வேறு என்ன கண்டு பிடித்து இருக்கிறான்? ஏதாவது கண்டுப்பிடித்தான் என்று கூற முடியுமா?

காலையில் ஏறினால் மாலையில் பம்பாய், மறுநாள் லண்டன், அமெரிக்கா என்று செல்ல வழி கண்டுப் பிடித்து விட்டான். ஏழரை மணிநேரத்தில் 16 தடவைகள் உலகத்தைச் சுற்றுகிறான். சந்திரமண்டலம் வரை செல்கிறான். தனிப்பட்ட மனிதன் ஆகாயத்திலே பறக்கிறான். இந்த அளவுக்கான சாதனங்களை அவன் கண்டுப் பிடித்ததோடு அல்ல. மேன்மேலும் பல அற்புதங்களைக் கண்டுப் பிடிக்க ஆராய்ச்சியும் செய்து வருகிறான்.ஆனால் நம்மவனோ தகப்பனைக் கொன்று விட்டுத் தாயிடம் படுத்த பாவம் தீர எந்தக் குளத்தில் குளித்தால் பாவம் தீரும் என்று ஆராய்ந்து புராணம் எழுதுகிறான். எப்படியோ பார்ப்பான் நம் சமூதாயத்தை நாசம் செய்து விட்டான். சாஸ்திரப்படி நமக்கு திருமணம் கல்யாணம் கிடையாது. அது மாத்திரமில்லை. நாம் எல்லாரும் சூத்திரர்கள்- வேசி மகன். நம் தாய்மார்கள் எல்லாம் பார்ப்பானுடைய வைப்பாட்டிகள் என்று எழுதி வைத்திருக்கிறான்.

ஆதாரங்கள் இருக்கின்றன. கடவுள் புத்தகங்களை, அவதாரங்களை, புராணங்களை- எல்லாம் எடுத்தால் அசிங்கம் இல்லாதது ஒன்று கூட இல்லை. இவற்றை எல்லாம் எடுத்துக் கூற ஒரு புலவனும் முன் வரவில்லை. பார்ப்பான் காலைக் கழுவிக் குடிப்பவன் தான் பெரிய புலவனாக இருக்கிறான். "திரவுபதி" என்பவள் 5- பேருக்கு மனைவியாக இருந்தாளாம். அதுவும் பத்தாமல் ஆறாவதாக கர்ணன் என்பவன் மீது வேறு ஆசைப்பட்டாளாம். அவள் பதிவிரதையாம்! பார்ப்பான் கட்டுப்படாகக் கதை எழுதி வைத்திருக்கிறான். ஆனால் நம்மவன் அப்படி இருந்தால் "குச்சிக்காரி" என்று கூறுவான்.மற்றும் இராமன் சீதை இவர்களைப் பற்றி எவன் உண்மையைக் கூறியிருக்கிறான். இராமன் புரோகிதனுக்கு சினையாகிப் பிறந்தவன். அப்படித்தான் புராணத்திலே எழுதியிருக்கிறான். ஒழுக்கம் என்பதே அயோக்கியதனமும், நடத்தையில் பித்தலாட்டமும், புரட்டும் தான் உள்ளது. வால்மீகி இராமாயணத்திலே பார்த்தால் தெரியும். சீதை ஒரு பெரிய "காலாடி பொம்பளை" என்று கூறும் தன்மையில் தான் இருந்திருக்கிறாள்.இந்தச் சர்க்காருக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை என்றே கூறலாம். சிறிதாவது பொறுப்பு இருந்தால் இந்த மாதிரியான கதைகள் நாட்டில் நடமாடிக் கொண்டிருக்காமல் தடை செய்திருக்க வேண்டாமா? இந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் திருட்டுப் பசங்கள் தான். பார்ப்பானுக்கு நல்ல பிள்ளைகளாக இருந்து, வயிறு கழுவி, பெருமை சம்பாதிக்கணும் என்று கருதித் தான் அதற்கு ஏற்ப வாழ்ந்தர்களே! தவிர, மக்களின் உண்மையான நலன் கருதி மக்களுக்குள்ள இழிவு, கேடு ஒழிய வேண்டும் என்று ஒருவன் கூட நினைக்கக் கூட இல்லை.

இந்த "மாடாதிபதிகள்" என்பதே பார்ப்பான் என்பவனுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது தான். ஆனால் பார்ப்பான் காலில் கடைசியில் வீழ்ந்து விட்டான். தலை எடுக்கும் போது நம் பெயரால் தலை தூக்குவது பிறகு பார்ப்பான் காலில் விழ்ந்து விடுவதுமாகவே இருக்கிறார்கள்.கல்யாணம் என்ற வாத்தையே தமிழ் வார்த்தை அல்ல. விவாகம் என்றால் அதுவும் வடமொழி தான். ஏன் தமிழில் இல்லை என்றால் கல்யாணம் என்பது பார்ப்பானுக்குத் தானே ஒழிய தமிழனுக்கு சூத்திரனுக்குக் கிடையாது. அதனால் தான் அதற்கேற்ற வார்த்தையும் தமிழில் இல்லை. மிகவும் சிறப்பான முறையில் நடத்துபவர்கள் கன்னிகாதானம், விவாகோற்சவ பத்திரிக்கை, தாரா முகூர்த்தம் என்று போட்டு நடத்துவார்கள். இவை எல்லாம் வட மொழிதான்! தமிழ்ச் சொற்கள் இல்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு அவனுடைய இல்வாழ்க்கையில் இன்றியமையாது நடைப்பெறும் முக்கிய நிகழ்ச்சிக்கு அவனுடைய தாய்மொழியில் பெயர் இல்லை என்றால் என்றால் என்ன அர்த்தம்?

திருமணம் என்று கூறுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? அழகிய இடம் என்று தானே பொருள்படும்? நமக்குப் பார்ப்பான் வந்து கல்யாணம் செய்து விடுகிறான்- கருமாதி செய்து வைக்கிறான் காசுக்காக! நமக்கு செய்து விட்டுச் சென்ற பிறகு அதற்கு – அதாவது நமக்குச் செய்ததற்காக அவன் பிராயச்சித்தம் செய்து கொள்கிறான். சூத்திரனுக்கு இவையெல்லாம் கிடையாது. தமிழனுக்கு நடைபெறும் திருமணம் போன்ற இன்றியமையாத காரியங்களும் திவசம் சிரார்த்தம், கருமாதி போன்றவையும், வடமொழியில் இருப்பதன் காரணம் தமிழனுக்கு… சூத்திரனுக்கு இவை எல்லாம் கிடையாது என்பதையே ருசுப்படுத்தும். பார்ப்பான் வந்து தான் இவற்றை நம்மிடையே புகுத்தியுள்ளான். அவன் வந்து நமக்கு சடங்கு செய்ய வந்தவுடன் நம்மை முதலில் பார்ப்பனனாக ஆக்குவான். நமக்குப் பூணுலூம் மாட்டி அதற்கு மந்திரம் செய்து அதற்குப் பிறகு தான் நமக்குத் திருமணம் செய்து வைப்பான்! சடங்கு முடிந்ததும் பூணூலை அவிழ்த்து ஆற்றில் போட்டு விடு என்பான்.

மேலோர் மூவர்க்கும் அதாவது பார்ப்பனர்- சத்திரியர்- வைசியர் மூவர்க்கும் உள்ளவற்றை கீழோராகிய சூத்திரர்க்கும் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். எதற்காக என்றால் காசுக்காக. எப்படியோ திருமணம் என்று இருப்பதாக வைத்துக் கொண்டாலும் சரித்திர ஆதாரப்படி கூறட்டும். நான் படித்த புலவர்களையே கேட்கிறேன். அம்முறைக்கு நம்மிடம் என்ன பெயர் வழங்கி வந்தது? என்ன முறை இருந்தது? இருக்க வேண்டுமே ஒரு முறை. .. இருந்ததா? இருக்கிறதா? கூறுங்கள் பார்க்கலாம். தமிழர்களுக்குத் திருமண முறை எது என்ற ஆதாரம் சொல்ல முடியுமா? புலவர்களைக் கேட்டால் புராணத்தைக் காட்டுவார்கள். பரமசிவனுக்கும்- பார்வதிக்கும் நடந்தது, இராமனுக்கும்- சீதைக்கும் நடந்திருக்கிறது என்பார்கள். நேற்று நான் மாயவரத்தில் நடைப்பெற்ற திருமணத்தில் பேசிய போது இதைத் தான் கூறினேன். தமிழனுக்குத் திருமண முறை என்று இருந்ததா என்றால் எதிலேயும் தென்படவில்லையே என்று.

அடுத்துப் பேசிய தவத்திரு "குன்றக்குடி அடிகளார்" அவர்கள் திருமண முறை இருந்தது. அகநானூறு புறநானூற்றைப் பார்த்தால் தெரியும் ஒத்த காதல் நடந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலே கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடந்திருக்கிறது என்று கூறினார். இந்தப் புராணங்கள் எல்லாம் நமக்கு ஏது? அதுவும் எப்போது வந்தது? எப்படி வந்தது? 1000-2000-3000 ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட இலக்கியங்கள் தானே இவை? நாம் 10 - ஆயிரம் 20- ஆயிரம் வருஷத்திற்கு முந்திய மக்கள் ஆயிற்றே! நமக்கு இது இப்போது எப்படி பொறுந்தும்? 20 - ஆயிரம் வருஷங்களுக்கு முன் என்ன முறை நமக்கு இருந்தது என தெரிய வேண்டாமா? இம்முறைக்குக் கூறப்படும் வார்த்தைகளிலாவது சிறிதாவது மரியாதை இருக்க வேண்டாமா?

வாழ்க்கை ஒப்பந்தம் என்ற ஒரு வார்த்தையும், முறையும் ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை வேலைக்காரியாக அடிமையாக பிள்ளை பெறும் ஒரு ஜந்துவாக சேர்ப்பது என்பது தான். எல்லா முறைகளும் பெண்களை அடிமை ஆக்குகிற முறை தான். "கன்னிகாதானம்" என்பார்கள். கன்னிகாதானம் என்றால் கன்னியை அதாவது பெண்ணை ஓர் ஆணுக்குத் தானமாகக் கொடுத்து விடுவது ஆகும். இதை இப்போது மணமக்களாக இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?நாம் தமிழர்கள். இந்தத் தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகள். நமது மொழியான தமிழ் மொழிச் சொல்லை விட்டு விட்டு வேறு ஒருவனுடைய மொழிச் சொல்லை நாம் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அவ்வாறு அவன் சொல்லை ஏற்றுக் கொண்டால் நாம் எல்லோரும் வேசி மக்கள் என்று சொல்லுகின்ற அவனது சம்பிரதாயங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டவர்களாக ஆகிவிடுகிறோமே?

"கன்னிகாதானம்" என்ற சொல் வட மொழிக்காரனுடையது. அதனுடைய பொருள் பெண்களை ஜீவனற்ற ஒரு பொருளாக வைத்து தானமாக்கிக் கொடுப்பதாகும்.தாராமுகூர்த்தம் என்றால் பெண்களை ஆணுக்குத் தாரை வார்த்து தானமாக் தருவது என்பதாகும். தானம் என்ற சொல் தமிழிலேயே இருக்கிறதா என்றால் இல்லை. பிச்சை என்று தான் இருக்கிறது. தானம் வாங்கிய பொருளை தம் இஷ்டம் போல் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பெண்ணுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அதோடு மட்டுமல்ல. தாரை வார்த்து வாங்கியவன் வாங்கிய பெண்ணை யாருக்கு வேண்டுமானலும் கொடுத்து விடலாம். அடகு வைக்கலாம். அதற்கெல்லாம் அவனுக்கு உரிமை இருக்கிறது. ஏன் என்று யாரும் கேட்க முடியாது? இவ்வாறாக புராண இதிகாசங்களில் நடந்திருக்கிறது.

தருமன் திரவுபதியைப் பணயம் வைத்து சூதாடியிருக்கிறான். அரிச்சந்திரன் தன் மனைவியை வேறு ஒருவனிடம் விற்று இருக்கிறான்.இயற்கை நாயனார் என்பவர் தன்பெண்டாட்டியை ஒரு பரதேசியிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். மற்றும் பெண்களைக் கணவன் எந்தவிதக் கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம். பெற்றவனோ பெண்ணோ ஏன் என்று கேட்கக் கூடாது. திருமணம் நடக்கையிலேயே தாசியின் மேல் ஆசைப்பட்டு அவளுடன் போய் விட்டான் கோவலன். திரும்பி வரும் வரையில் கண்ணகி தன்னை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது. உப்பில்லாத உணவு உண்டு பாயில் படுக்காமல் இருக்க வேண்டும் என்று அப்படியே இருந்தாளாம்! அந்த ஸ்தானத்தில் ஓர் ஆணை வைத்துப் பார்த்தால் அப்படி நடக்குமா? மனைவியானவள் கணவனை விட்டு வேறு ஓர் ஆணுடன் போய் விட்டால் கணவன் அவள் வரும் வரையில் இப்படி உப்பில்லாத உணவு சாப்பிடுவானா? பகவான் பார்த்து நம்மிடம் நம் மனைவியைக் கொண்டு வந்து சேர்க்கும் வரை நமக்கு சுகம் தேவையில்லை என்று கவலையுடனிருப்பானா? இருக்க மாட்டான். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று சிலப்பதிகாரத்திலும் கூடக் கூறப்பட்டிருக்கின்றது.கண்ணகி கதையை உதாரணம் காட்டிப் பேசுகிறவர்களுக்காகத்தான் இதைக் கூற ஆசைப்பட்டேன்.

ஆண் உயர்வு – பெண் தாழ்வு என்று தானே ஆகிறது. பெண் ஆணுக்கு அடிமை. கணவனால் விரட்டப்பட்டு பிறகு ஜீவனாம்சம் என்று கோர்ட் மூலம் கேட்டால் கூட இவள் "அவுசாரியாக"ப் போய் விட்டாள். ஆதலால் இவளுக்கு வாழ்க்கைப்பணம் கிடையாது என்பான்.பெரிய இலட்சாதிபதி ஆனாலும் ஜீவனாம்சம் என்னும் போது விலைவாசி பார்த்து மாதச் செலவுக் கணக்குப் பார்த்து அதன்படி தான் தருவான். கல்யாணம் என்றால் சாதி பார்த்து, புராணம் பார்த்து, வகுப்பு பார்த்து, காலம் நேரம் பார்த்துத் தான் நடக்கும். நம்மை நிரந்தர அடிமையாக்கும் நிகழ்ச்சியின் தத்துவப்படி தான் நடக்கும்.

நாமே பார்ப்பானை உயர் சாதி என்று ஒத்துக் கொள்கிறோம். அவர் அய்யர் மேல்சாதி. அவர் நம் வீட்டில் சாப்பிட மாட்டார் என்று கூறி அதற்குப் பதிலாக நம் வீட்டில் திருமணம் திவசம் செய்ய வரும் அய்யருக்கு நாம் பச்சை அரிசி, பச்சை காய்கறி, நெய், பால், தயிர், இலை இவற்றையெல்லாம் தந்து உங்கள் வீட்டில் போய் நீங்கள் சமைத்துச் சாப்பிடுங்கள் என்று தருகிறோம். அவன் வந்து நெருப்பை மூட்டி ஓமம் என்று வளர்க்கிறான். அதோடு விடுகிறானா என்றால் இல்லை. அந்த நெருப்பிலே நெய்யை வார்க்க விடுகிறான். நமக்கு சாப்பாட்டிற்கு கலப்பட நெய் போடுவார்கள். ஓமத்தில் ஊற்ற பார்ப்பான் கேட்டால் அசல் நெய் தருவார்கள்!

அரசாங்கம் யோக்கியமான அரசாங்கமாக இருந்தால் இவர்களையெல்லாம் உணவுப் பொருள்களை – பண்டங்களை நாசம் செய்கிறார்கள் என்று பிராசிகியூஷன் (குற்ற வழக்கு) செய்து தண்டித்திருக்க வேண்டும். மற்றும் பானையைக் கொண்டு வந்து ஆள் உயரம் அடுக்குவது போன்ற பல மூடத்தனமான காரியங்களைச் செய்வான். புதிய முறையில் இவை எல்லாம் கிடையாது. எதற்காக நம்மில் சாதி தொடர்ந்து வரணும்? கல்யாணம், கருமாதி போன்ற சமூதாயத்துறையில் சாதியைப் புகுத்துகிறான். இந்த சாதி ஒழிய வேண்டுமானால் சாதி வளரும் துறைகளை நாம் ஒழித்தால் தானே சாதி ஓழிப்பு? சாதியை வளர்க்கும் கடவுள்- மதம்- சாஸ்திரம்- புராணம்- பார்ப்பான்- அரசாங்கம் எதுவுமே வேண்டாம் எங்களுக்கு (தமிழர்களுக்கு) போடா முட்டாளே! என்று தூக்கி எறிந்து உடைத்தால் தானே சாதி ஒழிப்பு? இந்தத் தமிழ்நாட்டில் இத்தனை ஆயிரம் கோயில்கள் இருக்கிறதே. இதை யார் கட்டியது? யார் வீட்டுப் பணம்? இவற்றிற்கு உள்ள நிலங்கள், நகைகள் எல்லாம் யார் வீட்டு உடைமை? நம்முடையது தானே! பார்ப்பான் காசு ஒரு செப்புகாசாவது இருக்கிறது என்று கூற முடியுமா? இவ்வளவும் செய்து வைத்த நம்மைப் பார்த்து பார்ப்பான் "பிள்ளைவாள் உள்ளே வராதேயும், வெளியிலேயே நில்லுங்கோ தீட்டுப் பட்டு விடும். இது கர்ப்பகிரகம்" என்று கூறுகிறான். பார்பான்கிட்டே இல்லாத "துர்நாற்றமா" நம்மிடையே இருக்கிறது? தினம் 6 - வேளை பூசை செய்து சோறு படைக்கிறாயே அது பகவானா தின்னுது? கடவுளா சோறு கேட்குது? பார்ப்பான் வயிறு தானே வெடிக்குது? உலகத்தையே பெரிதும் நாசம் செய்து விட்டான் பார்ப்பான்.

இந்தப் பார்ப்பானின் கொடுமையை எதிர்த்து புத்தர் ஒருவர் தான் 3000 -ஆண்டு காலத்தில் தோன்றினார். அவரையும் இந்தப் பார்ப்பனர்கள் ஒழித்துக் கட்டி விட்டனர். புத்தரை ஒழித்துக் கட்டி தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். இந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், சைவர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் தயவை நாடி அவர்களுக்கு ஆதரவாக இருந்து சென்றவர்கள் தான். புத்தருக்குப் பிறகு எங்களைத் தவீர ஒருவர் கூட இந்தப் பித்தலாட்டங்களை ஒழிக்கத் தோன்றவில்லை. அவர்களுடைய இழிவு பற்றி பேசக்கூட பயம். எங்கே பார்ப்பான் நம்மைக் கொன்று விடுவானோ? என்று!

காந்தியை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர் ஒரு சாதாரணமான அன்னக்காவடி. அவரைப் பயன் படுத்திக் கொண்டனர் பார்ப்பான். அவரும் பார்ப்பனருக்கு ஆதரவாகவே நடந்தார். உடனே பார்ப்பனர்கள் அவரை "மகாத்மா"வாக்கி நல்ல வண்ணம் விளம்பரப்படுத்தி விட்டனர். அவரும் சாதி இருக்க வேண்டும். விக்ரக ஆராதனை தேவை. நான் கடவுள் நம்பிக்கைக்காரன் என்றெல்லாம் பேசினார். நல்ல விளம்பரம் அதிலே மயங்கி அவரை எதிர்க்க ஆளே இல்லை. நாங்கள் தான் மகாத்மாவை "துர் ஆம்மா" என்றோம். மற்றும் பல காரியங்களை எல்லாம் செய்தோம். எப்படியோ அவருக்குப் புத்தி வந்தது. தான் முட்டாள்தனமாக பார்ப்பனருக்கு ஆதரவாக நடந்து இந்த மாதிரி நடந்து விட்டோமே என்றும், தான் பல தவறுகள் செய்து விட்டோம் என்பதையும் உணர்ந்தார். எல்லோரும் சமம், கீழ்ச்சாதி- மேல்சாதி என்பது கூடாது என்று பேச ஆரம்பித்தார். அவ்வளவு தான் பார்ப்பான் பார்த்தான். இனி இவரை விட்டால் ஆபத்து என்று கருதி எட்டே நாளில் சுட்டுக் கொன்று விட்டான். இந்த ஆள் கதியே இப்படி என்றால் பிறகு யார் வருவார்கள் பார்ப்பானை எதிர்த்து?ஆட்சி, சட்டம், கோர்ட், புராணம்- எல்லாம் அவன் கையிலே இருக்கிறது. யார் என்ன செய்ய முடியும்?

கோர்ட், கடவுள், மத, புராணம்- இவற்றை விளக்கணும். மோட்சம், நரகம் என்ற நம்பிக்கையை குப்பைத் தொட்டியில் போட வேண்டும். சிந்திக்க ஆரம்பிக்கணும். மக்கள் திருந்தி சிந்தித்துப் பார்த்து மாறினால் தான் முன்னேற முடியும். நாம் மாற்றம் அடைய வேண்டும். அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்து நடக்க ஆரம்பித்தால் பார்ப்பான் ஓடி விடுவான்.


(14-06-1962 அன்று வல்லம் படுகையில் நடைப்பெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 23-06-1962 , 24-06-1962 , 25-06-1962)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_05.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE