Language Selection

சமூகவியலாளர்கள்

இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைத்து வேற்றுமையை அதிகரித்தது எது?

சுயநலம் கொண்ட பிராமணீயமே.

இந்து முஸ்லீம் கலகங்களை விளைவிப்பதெது?

சுயநலக் கூட்டத்தாரின் ஆதிக்கம் கொண்ட பிராமணீயமே.

இக்காலத்தில் பார்ப்பன -பார்ப்பனரல்லாதார் கட்சி உண்டாகக் காரண பூதமாய் நிலவுவதெது?

பாழான பிராமணீயமே.

எனவே என்ன செய்தல் வேண்டும்?

பிராமணீயத்தைச் சுட்டெரித்து சுடுகாட்டுக்கனுப்ப வேண்டும்.

தமிழர்களே! ஒன்று படுக! ஒருங்கு சேருக!

பிராமணீயத்துடன் போர் தொடங்குக! வீரர்கள் நம்மவரே!

ஆதலால் வெற்றியும் நம்முடையதே!

காகம் உறவு கலந்துண்ணக் காண்கிறீர்.

ஆதலால் சேரவாரும் ஜெகத்தீரே!

(குடிஅரசு 25.07.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_21.html

(தற்கால காங்கிரஸால் பிராமணரல்லாதாருக்கு வந்த கெடுதி)

சகோதரர்களே!

இன்று கூட்டப்பட்ட கூட்டமானது பிராமணரல்லாதார் என்கிற ஒரு வகுப்பு சம்பந்தமான கூட்டம். இக்கூட்டத்தில் நான் இன்று பிராமணரல்லாதார் வகுப்பு முன்னேற்றம் என்கிற விஷயத்தைப் பற்றி பேசப் போகிறேன். மாறுதல் வேண்டாதார் வகுப்பைப் பற்றி பேசலாமா? மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை காங்கிரஸ்காரன், அதிலும் வைதீக ஒத்துழையாதாரன், மாறுதல் வேண்டாதவன் என்று சொல்லப்பட்ட ஒருவன் வகுப்பைப் பற்றி பேசுவது பொருந்துமா? என்று சிலருக்குத் தோன்றலாம்.

வைதீக ஒத்துழையாமைக்காரன் என்றால், ஒருவன் கழுத்தை ஒருவன் அறுக்கும்போது பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பவனல்ல, ஒருவன் சொத்தை ஒருவன் கொள்ளை அடித்துக்கொண்டு போனால் வழியைத் திறந்துவிட்டு வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்பவனல்ல என்பதை முதலில் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அல்லாமலும் மகாத்மாவின் காங்கிரஸும் அவரது ஒத்துழையாமையும் நிர்மாணத் திட்டமும் காங்கிரஸிலிருந்து வெளிப்பட்டு மறைந்து கொண்டு வருகிறது. நிர்மாணத் திட்டங்கொண்ட ஒத்துழையாமைக் காங்கிரஸின் போது வகுப்பு விஷயத்தைப் பற்றி எவரும் யோசிக்கவேயில்லை. அதில் உயர்வு-தாழ்வு என்கிற வித்தியாசமேயில்லாமல் எல்லா வகுப்புக்கும் சமத்துவமும், சுயமரியாதையும், ஏழை - பணக்காரர் என்கிற வித்தியாசமேயில்லாமல் எல்லோருக்கும் ஆங்கிலம் படித்தவன்-படியாதவன் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் சம யோக்கியதையும் உண்டாக செளகரியமிருந்ததால் என் போன்றவர்கள் வகுப்பு என்பதை மறந்து மகாத்மா காங்கிரஸிலும் ஒத்துழையாமையிலும் நிர்மாணத் திட்டத்திலும் உழைத்து வந்தோம்.

ஒத்துழையாமைக்கு முன்னும் வகுப்பிற்கே உழைத்தேன் மகாத்மா காங்கிரஸுக்கு முன்பே நான், வகுப்பு முன்னேற்றத் தில் கவலை உள்ளவனாகத்தான் இருந்தேன். அதாவது பிராமணரல் லாதாருக்காக இப்பொழுது உள்ள தென் இந்திய நல உரிமைச் சங்கம் என்பது போன்ற ஏறக்குறைய இதே கொள்கை உடைய சென்னை மாகாணச் சங்கம் என்கிற ஒரு சங்கம் இருந்ததும், அதில் என் போன்றவர்கள் முக்கியப் பங்கெடுத்து உழைத்ததும் உங்களுக்குத் தெரியும். அது எதற்காகயிருந்தது? பிராமணரல்லாதார் முன்னேற்றத் திற்கு காங்கிரஸ் போதாது என்றும், நமக்கென்று ஒரு தனியான இயக்கம் இருக்க வேண்டுமென்றும், இப்பொழுது காங்கிரஸிலுள்ள பிராமணரல்லாதார் எல்லோரும் ஒன்று கூடித்தான் அச்சங்கத்தின் மூலம் பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்குழைத்ததும், நமது முன்னேற்றத்திற்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முதலியவைகளை நாம் வலியுறுத்தி வந்ததும் உங்களுக்குத் தெரியும். காங்கிரஸினால் ஏற்பட்ட தீவினை இன்னும் என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் நமது நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒரு இயக்கம் இல்லாவிட்டால் நமக்கு வகுப்பு முன்னேற்ற இயக்கமே தேவையில்லை என்றே சொல்லுவேன். நமது நாட்டில் என்று காங்கிரஸ் ஏற்பட்டதோ அன்றே பிராமணரல்லா தாருக்கு சனியன் பிடித்தது.

உதாரணமாக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் வருவதற்கு முன் பெரிய மனிதர்கள் என்போரும், படித்தவர்கள் என்போரும், தேசத் தலைவர்கள் என்போரும், தேச பக்தர்கள் என்போரும், பிராமணரல்லாதவர்களாகவேயிருந்தார்கள். ஜில்லா முனிசீபுகள், சிரஸ்தார்கள், தாசில்தார்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகிய இவ்வுத்தியோகங்கள்தான் அக்காலத்தில் இந்தியர்களுக்கு அதிகமாய் வழங்கப்பட்டன. காங்கிரஸூக்கு முன் உத்தியோக யோக்கியதை இவைகளில் நூற்றுக்கு 99 - பேர் நாயுடு, முதலியார், பிள்ளை, சாயபு ஆகிய இவர்கள்தான் இருப்பார்கள். இவர்கள் உத்தியோக கண்ணியமும் தர்பாரும் இக்காலத்திலுள்ள ஒரு கலெக்டருக்காவது நிர்வாகசபை மெம்பருக்காவது கிடையாது. எனக்குத் தெரிய ஒரு நாயுடு இந்த ஜில்லா சிரஸ்தாராயிருந்தார். அவரை "கலெக்டர் கூப்பிடுகிறார்" என்று யாராவது கூப்பிட்டால் "பத்து நிமிஷத்தில் வருகிறேன்" என்றுதான் சொல்லுவார். 15 - நிமிஷம் கழித்து மெத்தைக்குப் போவார்; காலில் ஜோடும், ஒரு கையில் தடியும், மற்றொரு கையில் சுருட்டுமாய் மெத்தை ஏறுவார். கலெக்டர் முன்னால் மேஜையின் மேல் சுருட்டையும் தடியையும் வைத்து விட்டு "என்னைக் கூப்பிட்ட விஷயம் என்ன?" என்று கேட்பார். காரியம் முடிந்தவுடன் சுருட்டும் தடியும் எடுத்துக்கொண்டு வருவார். போலிஸ் ஹெட்குவார்ட்டர் இன்ஸ்பெக்டராக நாயுடு ஒருவர் இருந்தார். அவர் கலெக்டர், சூப்பிரன்டெண்ட் முதலிய வெள்ளைக்கார அதிகாரிகளுடன் சிநேகிதர்கள் போல பேசுவார், உறவாடுவார். நாயுடுவைத் திடீரென்று கூப்பிட முடியாது. நாயுடுவின் சந்தர்ப்பந் தெரிந்துதான் கூப்பிடவேண்டும்.

இதுபோலவே அக்காலத்தில் தக்க குடும்ப பரம்பரையும், யோக்கியமும், அந்தஸ்தும், கண்ணி யமும் உள்ளவர்கள் பெரிய உத்தியோகம் வகிப்பார்கள். அப்போதைய உத்தியோகங்களுக்கு வேண்டிய யோக்கியதை இவைதான். காங்கிரஸுக்குப் பின் உத்தியோக யோக்கியதை காங்கிரஸ் ஏற்பட்ட பிறகு உத்தியோகத்தின் யோக்கியதை அடியோடு மாறிவிட்டது. முனிசிபாலிட்டி விளக்கு வெளிச்சத்தில் படித்தவனானாலும் சரி, பஞ்சாங்கம் சொல்லி பிச்சை எடுத்தவன் மகனானாலும் சரி, தூது சென்று பிழைப்பவன் மகனானாலும் சரி, உருப்போடத் தெரிந்து கிராமபோன் மிஷின் போல பார்த்ததை உருப் போட்டு எழுதத் தெரிந்து, மற்ற விதத்தில் எப்படிப்பட்டவனானாலும் சரி, அவன்தான் உத்தியோகத்திற்கு லாயக்குள்ளவனாகப் போய்விட்டான். இதனால் தெருப்பிச்சை யெடுப்போரெல்லாம் உத்தியோகத்திற்கு லாயக்குள்ளவர்களாகி விட்டார்கள்.

பரம்பரையாய் பெருங் குடும்பமாய், தேசத்தையே கோட்டைக் கொத்தளங்களோடு அரசாண்டவர்களாய், சுயமரியாதையோடு வாழ்ந்தவர்களாய் உள்ள பிராமணனல்லாத குடும்பங்கள் பின்னடைய ஏற்பட்டு விட்டன. இதன் பலனாய் உத்தியோகங்களுக்கும் மதிப்பு குறைந்துவிட்டன. பிராமணர் உத்தியோகம் பெற்ற வழி காங்கிரஸின் ஆதி சூழ்ச்சியே பிராமணர்கள் எப்படி உத்தி யோகம் சம்பாதிப்பது என்கிற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்பட்ட தாகும். அதற்கு ஏற்றாற்போல அந்த ஜாதிக்கு சுபாவமாய் உள்ள உருப்போடும் வித்தையையே உத்தியோகத்திற்கு யோக்கியதையாய் வைத்து, அதற்கேற்ற பள்ளிக்கூடங்களை விருத்தி செய்தார்கள். இதன் மூலம் உத்தியோகம் பெற்ற பிராமணர்களால் வெள்ளைக்காரர்களுக்குப் பல விதத்திலும் உபயோகமிருந்ததால் அவர்களும் இந்த பிராமணர்களுக்கு அநுகூலமான உத்தியோக யோக்கியதையையே பரப்பி விட்டார்கள்.

இப்போது வர வர மேற்படி உத்தியோகங்களின் யோக்கியதையும் குறைந்து விட்டது. பிராமண - பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்களுக்குள்ள பேதம் பெரும்பாலும் வெள்ளைக்கார அதிகாரிகளுக்குள்ள சகல தேவைகளையும் நிறைவேற்றி வைக்கக்கூடியவர்களும், சுயமரியாதை அற்றவர்களும், மனச்சாட்சியை இழந்தவர்களும்தான் நல்ல டிப்டி கலெக்டர், நல்ல முனிசீபு, நல்ல தாசில்தார், நல்ல மேஜிஸ்ட்ரேட், நல்ல இன்ஸ்பெக்டர்களாய் விளங்குகிறார்கள்.

இந்த உத்தியோகத்திற்கே இவ்வளவு யோக்கியதை வேண்டுமானால் இன்னும் பெரிய உத்தியோகத்திற்கு எவ்வளவு யோக்கியதை வேண்டும்? இந்த முறை யில் பிராமணரல்லாத வகுப்பார் உத்தியோகம் பெற அஞ்சுகிறார்கள். துணிந்து யாராவது ஒப்புக்கொண்டாலும் மேற்படி யோக்கியதையில்லாத காரணத்தால் நல்ல உத்தியோகஸ்தர்களாக ஆவதில்லை. தமிழரின் தாழ்வுக்கு காங்கிரஸே காரணம் இம்மாதிரி காங்கிரஸ் நமது நாட்டில் ஏற்படாமலிருந்தால் நமது ஜனங்களின் யோக்கியதை இவ்வளவு கேவலமாய்ப் போயி ருக்காது; உத்தியோகங்களின் யோக்கியதையும் இவ்வளவு இழிவான நிலைமைக்கு வந்திருக்காது; வெள்ளைக்காரரும் இவ்வளவு கொடு மையான முறையில் ஆளத் துணியமாட்டார்கள். ஆதலால் பிராமண ரல்லாதார் நிலைமையை இவ்வளவு கேவலத்திற்குக் கொண்டுவந்து விட்டதற்கு முக்கியக் காரணங்களில் இந்த காங்கிரஸும் பிரதான மானது. காங்கிரஸ் என்பதே உத்தியோகம் பெற ஏற்பட்டதுதான். அது நமது நாட்டு பிராமணர்களால் வளர்க்கப்பட்டு வந்ததால் பிராமணர்கள் உத்தியோகம் பெறத்தக்க வழியில் நிலை நின்று விட்டது. எந்த அந்தஸ்தும், எந்த உத்தியோகமும், எந்தப் பதவியும், எந்தப் பெரிய உத்தியோகஸ்தனையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர் களானால் அப்பதவியும் உத்தியோகமும் காங்கிரஸின் பலனாக ஏற்பட்டதாகத்தானிருக்கும்.

தமிழர் முன்னேற தற்கால காங்கிரஸ் அழிய வேண்டும். இனி பிராமணரல்லாதார் சமூகத்திற்கு ஏதாவது யோக்கியதை உண்டாக வேண்டுமானால் இந்த காங்கிரஸ் ஒழிய வேண்டும். இது உள்ள வரை பிராமணரல்லாதார் உருப்படியாக முடியாது. மகாத்மா காங்கிரஸ் ஏற்படவேண்டும். ஆனால் சிலர் என்னை இப்படிப்பட்ட காங்கிரஸில் நீ ஏன் இன்னமும் இருக்கிறாய் என்று கேட்கலாம். இப்பொழுது பிராமண உத்தியோகத்திற்கு உழைத்து வரும் காங்கிரஸை மகாத்மா காங்கிரஸைப் போல் அதாவது இரண்டொரு வருஷத்திற்கு முன் மூன்று நான்கு வருஷ காலம் இருந்து வந்த காங்கிரஸைப் போல் சகல வகுப்பாருக்கும் சமமான நன்மை வரும்படியாக உண்மையான ஒத்துழையாமைக் காங்கிரஸாக மறுபடியும் மாற்ற வேண்டும் என்கிற ஒரு ஆசையால்தானேயல்லாமல் வேறல்ல. அப்படி மாறும் பட்சத்தில் இப்போதுள்ள சுயநலத் தலைவர்கள் மறைந்து விடுவார்கள். சிற்சில சமயங்களில் மகாத்மா பேசுவதைப் பார்த்தால் ஒரு சமயம் மறுபடியும் அந்த நிலைக்குப் பாடுபடலாம் என்கிற நம்பிக்கை கொஞ்சங் கொஞ்சம் இருந்து வருகிறது. அந்த நம்பிக்கை ஒழிந்துவிட்டால் காங்கிரஸில் நான் இருக்க மாட்டேன்.

ஆதலால் பிராமணரல்லாதார் வகுப்பு நன்மையைப் பற்றி பேசுவதும் காங்கிரஸின் குற்றங்களை எடுத்துச் சொல்லுவதும் காங்கிரஸிலிருப்பதற்கு யோக்கியதை குறைவாகமாட்டாது. கூக்குரல் போடுவது யாருக்கு ஆபத்து? தவிர சிறீமான் ஆரியா பேசும்போது சில பிராமணர்கள் சொந்த விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று கூச்சல் போட்டார்கள். அது ஒப்பத் தக்கதல்ல. பேசுவதைக் கேட்க வேண்டும்; பேசுவதில் குற்றமிருந்தால் அதற்கு சமாதானம் கேட்கலாம்; அப்படிக்கில்லாமல் கூச்சல்போட்டு கூட்டத்தைக் கலைக்கலாம் என்று எண்ணுவதுபயித்தியக்காரத்தனமாகவே முடியும். நான்கு நாளைக்கு முன் சிறீமான் சீனிவாசய்யங்காரும் அவரது கோஷ்டியும் இதே இடத்தில் அளந்து கொட்டின வசையும், திட்டும் கணக்கா? வழக்கா? பிராமணரல்லா தார்கள் பொறுமையுடன் அவ்வளவையும் சகித்துக்கொண்டிருக்கவில்லையா? அவர்களுக்கு இந்த சில பிராமணர்களைப் போல் கூச்சல் போடத் தெரியாமல் போய்விட்டது என்று நினைக்கிறீர்களா? எப்பொழுதும் பிரசங்க கூட்டத்தில் கூச்சல் போடுவது கெட்ட வழக்கம். நான் அடிக்கடி இதை கண்டித்தே வருகிறேன். இந்த வழக்கம் மிஞ்சி விட்டால் யாருக்கு ஆபத்து என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஐயங்காருக்கும் எனக்கும் வித்தியாசம் நான் எவரைப் பற்றியும் குற்றஞ்சொல்ல வேண்டுமென்கிற ஆசையுடையவனல்ல. நேற்று இங்கு வந்த சிறீமான் சீனிவாசய்யங் காரும் என்னைப் போல் சமூக ஊழியர்தான். எனக்கு அவரிடத்தில் வெறுப்பில்லை. நான் ஏதாவது என் சொந்தத்திற்கு உயில் எழுதுவதா யிருந்தால் அவரைத்தான் யோசனை கேட்பேன் . அவரும் என்னைப் பற்றி தனியாய்ப் பேசினபோது தனது நண்பர்களிடம் என்னை மிகவும் நம்புவதாகவும், என்னிடம் சூது வாது இல்லையென்றும் பேசியிருக்கிறார். நான் எப்படி பிராமணரல்லாதார் சமூகம் முன்னேற்றமடைய வேண்டுமென்று பாடுபடுகிறேனோ, அதுபோலவே அவர் பிராமண சமூகம் முன்னேற வேண்டுமென்று பாடுபடுகிறார். ஆகவே இரண்டு பேருடைய நோக்கத்திலும் உழைப்பிலும் வித்தியாசமில்லை. ஆனால் நான் உண்மையைச் சொல்லிக்கொண்டு எனது சமூகத்திற்குப் பாடுபடுகிறேன். அவர் பொய்யைச் சொல்லிக்கொண்டு அவருடைய சமூகத்திற்குப் பாடுபடுகிறார்.

அதாவது, நான் பிராமண ரல்லாதார் பெயரைச் சொல்லுகிறேன்; அவர் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி, மகாத்மா, ஜெயிலுக்குப் போன தேசபக்தர்கள் என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டு பிராமணருக்குப் பாடுபடுகிறார். கொஞ்ச நாளைக்கு முன் சென்னைக்கு முனிசிபல் தேர்தலின் போது ஓட்டர்கள் விருப்பத்தின் பேரில் போயிருந்தேன். அங்கு நான் பேசிய இரண்டொரு கூட்டத்தில் " தேர்தலில் ஒரு பிரயோ ஜனமும் இல்லை அதனால் ஒரு பலனும் செய்ய முடியாது. அது ஒரு பதவி. அதில் உங்களுக்கு மோகமிருந்தால் பிராமணரல்லா தாருக்குக் கொடுங்கள்" என்று தைரியமாய்ச் சொல்லி வந்தேன். ஆனால் சிறீமான் சீனிவாசய்யங்கார் அப்படிச் செய்யவில்லை. ஒரு பிராமணரை நிறுத்தி, மறைமுகமாய் காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சி பெயரைச் சொல்லிக்கொண்டு முனிசிபாலிடியில் ஏழைகளுக்கு அப்படிச் செய்கிறோம்; இப்படிச் செய்கிறோம்; வரியைக் குறைக் கிறோம் என்று பொய் சொன்னதல்லாமல்; மகாத்மா ஜெயிலுக்குப் போனார், வரதராஜுலு நாயுடு இரண்டு முறை ஜெயிலுக்குப் போனார், இராமசாமி நாயக்கர் மூன்று முறை ஜெயிலுக்குப் போனார், ஆனதினால் சிறீமான் இ.எல். ஐயருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று விளம்பரம் போட்டு ஓட்டு வாங்கினார். அவர்கள் ஜெயிலுக்குப் போனதன் பலனை இவர்கள் அடைய என்ன வார்சு பாத்தியம்? இதுதான் எனக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம். சமூகம் அழிவதை பார்த்துக் கொண்டிருப்பதா? அவரவர்கள் சமூகத்திற்கு அவரவர்கள் பாடுபடுவதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் பொதுஜனங்களை - பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டும், சுயராஜ்யம், உரிமை என்று சொல்லிக் கொண்டும், பிராமணரல்லாத பிரமுகர்களை சர்க்கார் உத்தியோகம் பெறுகிறவர்கள் தேசத்துரோகிகள் என்று திட்டிக்கொண்டு வைவதற்கு பிராமணரல்லாதாரிலேயே வேறு வழியில் பிழைக்க முடியாத சில ஆளுகளுக்குப் பணம்கொடுத்து உத்தியோக ஆசைபிடித்த சில ஆள்களை ஆசை வார்த்தைச் சொல்லி தங்கள் வசப்படுத்திக்கொண்டு ஜஸ்டிஸ் கட்சி என்கிற பெயரால் பிராமணரல்லாத சமூகத்தையே அடிமையாக்க, தீண்டாதவர்களாக்கப் பார்த்தால் அதை எப்படி சகிக்க முடியும்? எந்த சமூகத்திலும் இப்படிப்பட்ட சுயநலக்கார ஆள்கள் இரண்டொருவர் இருக்கத்தான் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆள்களை இவர்கள் உபயோகித்துக் கொண்டு ஒரு பெரிய சமூகத்தையே அழிக்கப் பார்க்கிறார்கள். காங்கிரஸ் பெயரால் உத்தியோகம் பிராமணர்களுக்கோ அல்லது அவர்கள் கட்சியான காங்கிரஸ், சுயராஜ்யக் கட்சிக்கோ, எதற்கு உத்தியோக ஆசையில்லை? பிராமண ஐகோர்ட் ஜட்ஜுகள் எல்லாம் காங்கிரஸின் பெயரால் உத்தியோகம் சம்பாதித்தவர்கள்தான்.

நிர்வாகசபை மெம்பர்கள் சிறீமான்கள் கிருஷ்ணசாமி ஐயர், சர்.சி.பி.ராமசாமி ஐயர் ஆகியவர்கள் காங்கிரஸின் பெயரால் உத்தியோகம் சம்பாதித்தவர்களேயாகும். பிராமணரல்லா தார் கட்சியாரை மாத்திரம் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்பதற் குப் பொருளென்ன? ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் உத்தியோகம் சம்பாதித்துக் கொண்டார்கள் என்று பொறாமைப் பிரசாரம் செய்வதில் ஏதாவது அவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? கண்ணியமாய் சட்டசபை சென்ற ஜஸ்டிஸ் கட்சி ஜஸ்டிஸ் கட்சிக்காரர் சுயராஜ்யக் கட்சியாரைப் போல் ஏதாவது பொய் சொல்லி ஓட்டர்களை ஏமாற்றி சட்டசபைக்குப் போனார்களா? ஒருக்காலும் இல்லை. ஜஸ்டிஸ் கட்சியார் கண்ணியமாய் ஓட்டர் களிடம் சென்று "நாங்கள் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் அல்ல; காங்கிரஸ் பிராமணர்களின் நன்மையின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது; நாங்கள் பிராமணரல்லாதார் நன்மையின் பொருட்டு பாடுபடுகிறோம்; நாங்கள் பொய்யான ஒத்துழையாமைக்காரரல்ல; சீர்திருத்தத்தை ஏற்று சட்டசபைக்குச் சென்று சர்க்காரோடு ஒத்துழைத்து சர்க்கார் உத்தியோகங்களை ஏற்று, பிராமணரல்லாதாருக்கும் தேசத்துக்கும் எங்களால் கூடியதைச் செய்வோம்" என்று சொல்லி சட்டசபைக்குள் நுழைந்தார்கள். ஓட்டர்களும் அதை ஏற்றுக்கொண்டு அவர்களையே அனுப்பினார்கள். அப்படி இருக்க அவர்கள் அனைவரும் சம்பாதித்துக் கொண்டார்கள் என்று சொல்லிப் பொறாமைப்படுவதில் என்ன பிரயோஜனம். சுயராஜ்யக் கட்சியார் பிரயாணப்படி கூட வாங்குவதில்லை என்று சொல்லி சட்டசபைக்குப் போய் தினக்கூலி பெறக்கூடிய கமிட்டி பதவியும், மாதச் சம்பளம் பெறக்கூடிய உத்தியோகமும் பிரயாணப்படியும் பெற்று, சர்க்காருக்கு அநுகூலமாயிருந்து சர்க்கார் எதிர்பார்த்ததற்கு மேல் ஒத்துழைப்பதைப் பற்றி கொஞ்சம் வெட்கப் படாமல் மேடைக்கு வந்து பொது ஜனங்களை ஏமாற்றுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டமான காரியம்? அதிகச் சம்பளம் சுயராஜ்யக் கட்சி உபதலைவர் சிறீமான் பட்டேல் மாதம் 4000 - ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இது யாருடைய பணம்? இது பொது ஜனங்களின் பணமல்லவா?

காங்கிரஸையும் ஒத்துழையாமையையும் சுயராஜ்யக் கட்சியையும் சேர்ந்த 'தேசபக்தர்' பட்டேலுக்கு மாதம் 4000 - ரூபாய் எதற்காக வேண்டும்? அவர் உடுத்திக் கொள்ள 6 முழக் கதர் போதும், குடியிருக்க ஒரு குச்சு வீடு போதும். இப்படிப் பட்ட தேசத் தொண்டருக்கு மாதம் ரூ 11-4-0 இருந்தால் போதும். இவருக்கு மாதம் 4000 - ரூபாய் எதற்கு? இது உத்தியோகம் பெறுவ தில்லை என்று போனவர் பெறும் சம்பளம். இவருக்கே மாதம் 4000 - ரூபாய் வேண்டியதிருந்தால் உத்தியோகம் பெறப் போனவர், பெரிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாதம் 4000 - ரூபாய் என்றால் எது அதிகம்? யாருக்கு உத்தியோக ஆசை? இதில் யார் யோக்கியர்கள்? என்பதை நீங்களே யோசியுங்கள். சம்பளம் குறைத்துக் கொண்டது யார்? அல்லாமலும் நமது பிராமணரல்லாத மந்திரிகள் "பணத்தாசை பிடித்தவர்கள்" என்று சொல்லுபவர்கள், தாங்களாகவே மாதம் 5000 - ரூபாய் சம்பளத்தை 4000- மாக ஆக்கிக் கொண்டார்கள். வருஷம் ஒன்றுக்கு ஒரு லட்சத்துப் பதினெட்டாயிரம் ரூபாய் வேண்டாமென்று சொல்லி விட்டார்கள். 6 - வருஷத்திற்கு 7 - லட்ச ரூபாய் அவர்களுக்கு வருவதை வேண்டாமென்று காங்கிரஸ் காரியதரிசியாயிருந்தும் தேசத் தாருக்குப் பாடுபடுவதாய்ச் சொல்லியும், நமது ஓட்டுப் பெற்று சட்டசபைக்குப் போய் உத்தியோகம் பெற்ற பிராமணர் சர்.சி.பி.ராம சாமி ஐயர்...

பொது ஜனங்களுக்கு ஏழைகளுக்கு உழைப்பவர்கள் என்றும், தேச விடுதலைக்காக உழைப்பவர்கள் என்றும், பிரயாணப் படி வாங்குவதில்லை என்றும், சட்டசபைக்குப் போன சிறீமான் எம்.கே. ஆச்சாரியார் இவர்கள் எவ்வளவு படிப் பணமும் கமிட்டிப் பணமும் குறைத்துக் கொண்டார்கள்? பாமர ஜனங்கள் பயித்தியக்காரராய் இருப்பதால் இவர்கள் பிராமண ரல்லாதாரை கங்கணம் கட்டிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிகிறார்கள். இவர்கள் யார்? அல்லாமலும், ஜஸ்டிஸ் கட்சியார், தங்கள் இனத்தார்களுக்கு உத்தியோகம் கொடுப்பதாகவும் நாமிநேஷன் செய்வதாகவும் மந்திரி கள் பேரில் குற்றம் சுமத்துகிறார்கள். மந்திரிகள் பிராமணர்களுக்குக் கொடுக்கும் உத்தியோகத்தை இவர்கள் வெளியில் சொல்லுகிறார்களா? சிறீமான்கள் தணிகாசலம் செட்டியாருக்கும், சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியாருக்கும் நாமிநேஷன் செய்தால் அதிகாரத் துஷ்பிரயோகம் என்கிறார்கள். சிறீமான்கள் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு கோயமுத்தூர் ஜில்லா போர்டு மெம்பரும், டி.எம். நரசிம்மாச்சாரி யாருக்கு கடப்பை ஜில்லா போர்டு பிரசிடெண்ட்டும், சர்.டி.தேசிகாச் சாரியாருக்கு திருச்சி ஜில்லா போர்டு பிரசிடெண்டுமான பதவிகளுக்கு நாமிநேஷன் செய்தார்களே இவர்களெல்லாம் பிராமணரல்லாதார்களா? அல்லது பிராமணரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர்களா? இந்த பிராமணர்கள் மந்திரிகளிடம் உத்தியோகம் பெற்றுக் கொண்டதைப் பற்றி எந்த பிராமணர்களாவது, பிராமணப் பத்திரிகைகளாவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லுகின்றதா? எலெக்ஷன் நாணயம் தவிர, இந்தக் காலத்து எலெக்ஷன்களாவது யோக்கியமாய் நடக்கின்றதா? எலெக்ஷன்களுக்கு நிற்கிற ஆள்கள் ஓட்டர்களுக்குப் பணங்கொடுத்துப் பழக்கி அவர்களின் நாணயத்தைக் கெடுத்து விட்டதால் யோக்கியர்கள் எலெக்ஷனில் வர யோக்கியமில்லாமல் போய்விட்டது. அப்படியானால் ஒவ்வொருவருக்கும் இருபது, முப்பதாயிரம் ரூபாய் செலவாகக் காரணமென்ன? அல்லாமலும் சட்டசபையில் நடக்கும் காரியந்தான் என்ன? எப்படியிருக்கிறது? எப்படியாவது பிராமணரல்லாதார் கெட்டவர்கள்-புத்தியில்லாதவர்கள் என்கிற பெயரை தேசத்தில் பரப்பி, பாமர ஜனங்களை வஞ்சிக்க வேண்டும்; பிராமணரல்லாத உத்தியோகஸ்தர்களையும் கெடுக்க வேண்டும். இதுதான் சுயராஜ்யக் கட்சி என்கிற பிராமணர்களின் கட்சிக்கொள்கை.

திரு. இராமசாமி முதலியார் இல்லாவிட்டால் உதாரணமாக, ஒரு சமயம் சட்டசபையில் சிறீமான் எ.இராம சாமி முதலியார் இல்லாத சமயம் பார்த்து "சுதேசமித்திரன்" சிறீமான் சத்தியமூர்த்தி "வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள ஒரு பிராமணரல்லாத உத்தியோகஸ்தர் எலெக்ஷனில் பிராமணரல்லாதாருக்காகப் பிரயத்தனப்படுகிறார். அவரைப் பற்றி விசாரித்து அவரைத் தூக்கில் போட வேண்டும். இது மகா முக்கியமான காரியம். ஆதலால் சட்ட சபையின் மற்ற காரியங்களை கட்டி வைத்துவிட்டு இதைக் கவனிக்க வேண்டும்" என்று ஒரு பெரிய தீர்மானம் கொண்டு வந்தார். தட்டிப் பேச அதுசமயம் அங்கு ஆளில்லை. பிரசிடெண்ட் இந்த தீர்மானம் ஒழுங்கானதா என்று கேட்டார். இருபதாவது நூற்றாண்டின் 'மனு' வான சர்.சி.பி. ராமசாமி ஐயர், "ஆஹா! மிகவும் ஒழுங்கானது" என்று சொல்லி விட்டார். சரியென்று சத்தியமூர்த்தி ஐயர் வாதம் தொடங்கிவிட்டார். பிராமணரல்லாத உத்தியோகஸ்தருக்கு சுருக்கு மாட்டியாய் விட்டது; இழுப்பதுதான் தாமதம். இந்த சமயத்தில் சிறீமான் எ. இராமசாமி முதலியார் சட்ட சபைக்குள் நுழைந்தார். என்ன நடக்கிறது என்று பார்த்தார். நடக்கிற விஷயத்தைத் தெரிந்து கொண்டார். உடனே சிறீமான் முதலியார் எழுந்து, "அது நிரம்பவும் முக்கியமான காரியம். இதைச் செய்து விட்டுத்தான் மற்ற காரியங்களைக் கவனிக்க வேண்டும். நானும் இந்தத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்றுதான் இருந்தேன். எனது நண்பர் சத்தியமூர்த்தி கொண்டு வந்ததற்கு வந்தனம் செலுத்துகிறேன். சட்டமெம்பர் அநுமதித்ததற்கும் வந்தனம் செலுத்துகிறேன்" என்று சொல்லிவிட்டு "இன்னும் இரண்டொரு நபர்கள் பெயரையும் அந்த ஜாப்தாவில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, இரண்டொரு ஐயங்கார் ஜில்லா முனிசீப் பெயர்களையும், ஐயர் சப் ஜட்ஜு பெயர்களையும் சொன்னார். உடனே சட்ட மெம்பருக்கும் 'வீரருக்கும்' நாக்கு வறண்டுபோய் பேச வாய் வராமல் திக்குமுக்காடி 'வீரர்' சத்தியமூர்த்தி ஐயரை 'மனு' ராமசாமி ஐயர் பிரேரேபனையை வாபீஸ் வாங்கிக்கொள்ளும்படி பல்லைக் காட்டி கெஞ்ச ஆரம்பித்துவிட்டார். வீரரும் பின்வாங்கிக் கொண்டார். மற்ற பொம்மைக ளெல்லாம் சிரித்தனர்.

சிறீமான் எ. இராமசாமி முதலியார் அன்றையக் கூட்டத்தில் இல்லாதிருந்தால் அந்தப் பிராமணரல்லாதார் ஓலை 'மனு' ஐயரால் கிழிக்கப்பட்டே இருக்கும். இதுதான் சட்டசபை வேலை. மற்றொரு சமயம் அபிஷியல் ரெபரி (official reffery) என்கிற சுமார் மாதம் 1000 ரூபாய் சம்பளமுள்ள ஒரு உத்தியோகம் தற்கால சாந்தியாய் ஆக்கப்படும்போது, சுயராஜ்யக் கட்சி மெம்பர்கள் ஆட்சேபித்தார்கள். அது சர்க்கார் மெம்பர்கள் தயவில் நிறைவேறி கடைசியாய் ஒரு பிராமணருக்கு அந்த உத்தியோகம் கொடுக்கப்பட்டு மறுபடியும் அது காயமாக்க சட்டசபைக்கு வரும்போது சுயராஜ்யக் கட்சி மெம்பர்கள் தாராளமாய் நிறைவேறச் செய்தார்கள். ஏன்? அந்த உத்தியோகம் ஒரு பிராமணருக்குக் கிடைத்தது. சத்தியம் தவறிய திரு. சத்தியமூர்த்தி மற்றொரு சமயம் சிறீமான் சத்தியமூர்த்தியும் சிறீமான் எ.இராமசாமி முதலியாரும் சீமைக்குப் போயிருந்தபோது, சிறீமான் சத்தியமூர்த்தி, சிறீமான் இராமசாமி முதலியாரைப் பார்த்து "நம் நாட்டி லுள்ள பிராமணர் -பிராமணரல்லாதார் விஷயம் வெள்ளைக்காரர் களிடம் பேசக்கூடாது; அதைப்பற்றி நமது நாட்டில் பேசிக் கொள்ளலாம்; இங்கு பேசினால் எதிரிக்கு இளப்பமாய்ப் போய்விடும். நானும் ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி பேசுவதில்லை" என்று கேட்டுக் கொண்டாராம். சிறீமான் முதலியார் அதற்கிணங்கி அங்கு இருக்கும் வரை பிராமணரைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையாம்.

சிறீமான் முதலியார் சீமையை விட்டுப் புறப்பட்டு கப்பல் ஏறியவுடன் சத்தியமூர்த்தி ஐயர் தாங்கள் செய்துகொண்ட சத்தியத்தை மீறி மூட்டையை அவிழ்த்து விட்டாராம். இவற்றைப் பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இம்மாதிரி கூட்டத்துடன் போராடு வதென்றால் லேசான காரியமல்ல. ஆதலால் பிராமணரல்லாதார் இதுசமயம் சுயராஜ்யம், உரிமை, விடுதலை, முட்டுக்கட்டை என்கிற போலி வார்த்தைகளைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். சட்டசபையோ, முனிசிபாலிட்டியோ , இவைகளில் ஏதாவது தேசத்திற்கோ, சுயராஜ்யத்திற்கோ, ஏழை மக்களுக்கோ ஒரு பிரயோ ஜனமும் தராது. அது ஒரு பதவி. அல்லாமலும், தாழ்ந்து கிடக்கும், பிற்போக்கடைந்திருக்கும் வகுப்பார் உயர்ந்த வகுப்பார் என்பவர்கள் காலில் சிக்கி மிதிபடாமல் இருப்பதற்கு ஏதாவது வேண்டுமானால் உபயோகப்படலாம். அம்மாதிரி அதை உபயோகப்படுத்திக் கொள்ள நம்பிக்கையும் ஆசையும் உள்ளவர்கள், அப்பதவிகளை தங்கள் சமூகத் தில் அக்கறை உள்ள சமூகத்தார்களுக்கு கொடுக்க வேண்டுமேயல்லாமல் மற்றபடி சுயராஜ்யம், தேசம், உரிமை என்று எண்ணி ஏமாந்து சமூகக் கவலையில்லாதவர்களுக்கோ பிராமணர்களுக்கோ கொடுக்கக் கூடாது என்பதுதான் நீங்கள் கடைசியாக உணர வேண்டியது. சமூகமே பெரிது மெளலானாக்கள் மகமதலி, ஷவுகத்தலி, கிச்சிலு போன்ற வீரர்களின் அபிப்ராயமென்ன? அவர்களைப் பற்றி பிராமணப் பத்திரிகைகள் பலவாறு தூற்றினாலும் அவர்கள் பேரால் துவேஷம் உண்டாகும்படி எழுதினாலும் அவர்கள் தைரியமாய்ச் சொல்லுவது என்ன? நமது சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின் சுயமரியாதை தான் முக்கியமானது என்கிறார்கள். அதுபோலவே பிராமணரல்லா தாராகிய நமக்கு சுயராஜ்யத்தைவிட நமது சமூகத்தின் சுயமரியாதை தான் முக்கியமானது. உதாரணமாக, சட்டசபையில் பொதுத் தெருவில் மகாராஜா சக்கரவர்த்தியின் பிரஜைகள் எல்லோருக்கும் சம உரிமை உண்டு என்று தீர்மானம் நிறைவேறிற்று.

அடுத்த நாள் 'வேலை இருந்தால்தான் போகலாம்' என்று பிராமண சட்டமெம்பர் அத் தீர்மானத்திற்கு வியாக்கியானம் எழுதிவிட்டார். அந்த ஸ்தானத்தில் சிறீமான் ஆர். வீரய்யன் இருந்தால் இந்தப்படி வியாக்யானம் செய்திருப்பாரா என்று யோசித்துப் பாருங்கள். நமக்கு சுயராஜ்யம் வந்தாலும் இத்தகைய பிராமண சட்டமெம்பர்கள் இப்படித்தானே வியாக்கியானம் செய்வார்கள். ஆதலால் சுயராஜ்யம் இல்லா விட்டாலும் சிறீமான் வீரய்யன் போன்றவர்கள் இந்த உத்தியோகத் திற்கு வரும்படியான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருந்தால் சுயமரியாதை ஏற்படுமா? இல்லையா? சுயமரியாதை ஏற்படாமல், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் நம்பிக்கையும் ஏற்படாமல் நாம் எப்படி சுயராஜ்யத்தைப் பற்றி பேசமுடியும்? யார் சம்மதிப்பார்கள்? நம்மிடமே சகல அதிகாரங்களையும் சகல ராஜீயபாரத்தையும் யாராவது ஒப்புவித்து விடுவதாயிருந்தால் பெற்றுக்கொள்ள நாம் இப்போது தயாராயிருக்கிறோமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

உதாரணமாக, இந்த நாட்டிற்கே இப்பொழுது வைஸ்ராயாக இருக்கும் லார்டு இர்வின் துரை பட்டாள முத்திரையையும் , கஜானா சாவியை யும் கொண்டுவந்து கொடுத்து நம்மை எடுத்துக் கொள்ளச் சொன்னால், நம்மில் எடுத்துக்கொள்ள யார் சம்மதிப்பார்கள்? முதலாவது பிராம ணர்கள் வந்து எடுப்பார்கள். அதனை பிராமணரல்லாத ஹிந்துக்கள் -ஆதிதிராவிடர்கள், மகமதியர்கள், கிறிஸ்தவர்கள் முதலான வகுப்பார் சம்மதிப்பார்களா? பிராமணரல்லாத ஹிந்துக்கள் எடுத்துக் கொள்ளுவ தாயிருந்தால் பிராமணர்கள் சம்மதிப்பார்களா? பிராமணரும் பிராமண ரல்லாதவர்களுமாகிய ஹிந்துக்கள் ராஜியாய் எடுத்துக் கொள்ளுவ தானால் மகமதியர் சம்மதிப்பார்களா? இந்த மூவரும் சம்மதித்து ஒப்புக்கொண்டாலும் கிறிஸ்தவர்கள் சம்மதிப்பார்களா? இந்த நால்வரும் ராஜியாய் விட்ட தெருவில் நடக்கவும் குடிக்கத் தண்ணீர் மொள்ளவும் கூட பாத்தியமில்லாமல் வைத்திருக்கும் ஆதி திராவிடர் என்கிற கூட்டத்தார் சம்மதிப்பார்களா?

ஒவ்வொரு கூட்டத்தாரும் இர்வின் பிரபுவின் காலைப் பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர், "ஐயா! இந்தப் பாவிகளிடம் ஒப்புவித்துவிட்டுப் போனால் எங்கள் கதி என்னாவது என்றும் ஜாதி வித்தியாசமில்லாத ஜாதியாராகிய உங்கள் ராஜீய பாரத்திலே நாங்கள் 'மிலேச்சர்', நாங்கள் 'தாசி மக்கள்', நாங்கள் 'அஞ்ஞானி',நாங்கள் 'முரடர்கள்', நாங்கள் தெருவில் நடக்க- கண்ணில் பார்க்க - கிட்டவர - சுவாமியைக் கும்பிட முடியாத அவ்வளவு தாழ்ந்தவர்களாயிருக்கும் போது, ஜாதித் திமிர், கூட்டத் திமிர், ஒற்றுமைத் திமிர், அரசாங்கச் சலுகைத் திமிர் பிடித்த இவர் களிடத்தில் பட்டாளத்தையும், கஜானாச் சாவியையும் கொடுத்து விட்டுப்போனால் எங்களை நாய் பன்றிகளைவிட கேவலமாய் நடத்துவார்கள். கழுத்தில் கயிறு கட்டி சந்தையில் விற்பார்கள். ஆதலால், ஐயனே! நீங்கள் போய் விடாதீர்கள்" என்று ஒவ்வொரு வரும் குறுக்கே படுத்துக் கொள்வார்களா இல்லையா?

நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்களை ஏமாற்ற வாயில் சுயராஜ்யம், உரிமை, ஒற்றுமை என்று பேசுவதில் என்ன பிரயோஜனம்? மகாத்மா இதை அறியாமலா தன்னை ஒரு வைஸிராய் "சுயராஜ்யம் என்றால் என்ன? என்னதான் வேண்டும்?" என்று கேட்ட காலத்தில் "சுயராஜ் யம் அடைய என் ஜனங்கள் இன்னமும் தயாராக வேண்டும். அதற்குத்தான் நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். அந்தத் தயார்தான் என் நிர்மாணத் திட்டம்" என்று சொன்னார். நிர்மாணத் திட்டம் நிறைவேறாமல் மகாத்மாவினாலேயே பெறுவதற்குப் பாரமாயிருந்த சுயராஜ்யம், நிர்மாணத் திட்டத்தைப் புதைத்த நமது சீனிவாசய்யங்கார் கோஷ்டிக்கு மிக லேசாய்ப் போய் விட்டதென்றால் அதன் தத்துவத்தை நீங்களே யோசித்துப் பாருங்கள். சுயராஜ்யம் வந்தால் நமது நிலை என்ன? மகமதியர் நிலை என்ன? கிறிஸ்தவர் நிலை என்ன? என்பது தீர்மானமாகிவிட வேண்டும். இல்லாதவரை ஒருவரை ஒருவர் கொன்றுத் தின்பதுதான் நமது நாட்டில் நடைபெறும். உத்தியோகமும், அதிகாரமும், பதவியும் ஒருக்காலமும் சுயராஜ்யமாகாது.

சுயமரியாதையுடன் ஒற்றுமையால் தாங்கள் தங்கள் ஜீவனத்திற்காக தங்கள் தங்கள் மனசாட்சியையும் கற்பையும் விற்காமல் ஜீவனம் செய்வதுதான் சுயராஜ்யம்; இதற்கு நிர்மாணத் திட்டந்தான் முக்கியமானது. இவைகள் எல்லாவற்றிலும் கதரும், தீண்டாமை ஒழிப்பதும் மிகவும் முக்கியமானது. ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் கதர் உடுத்துங்கள்; தீண்டாமையை அறவே ஒழியுங்கள்; வகுப்புவாரி உரிமையை நிலைநாட்டி எல்லோருடைய நம்பிக்கையையும் பெறுங்கள். இல்லாதவரை துவேஷம் வளர்ந்து கொண்டுதான் வரும். இப்போது பாமர ஜனங்களை ஏமாற்றி சிலர் பதவிக்கு வந்துவிடுவதால் அதனால் ஏற்படும் பலன் பின்னால் அவர்கள் சந்ததியாருக்கு ஆபத்தாய் முடியும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஆதலால் எல்லோரும் ஒன்று கூடி ஒரு திட்டம் போட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக்கி பிற்கால வாழ்வை பயமற்றதாக்கிக் கொள்ளுங்கள்.

(கோயமுத்தூர் டவுன்ஹால் மைதானத்தில் தென் இந்திய நலஉரிமைச் சங்கத்தின் சார்பில் 30.05.1926 இல் நடத்தப்பட்ட மகாநாட்டில் சொற்பொழிவு) ( குடிஅரசு-13.06.1926 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_5123.html

தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமரணல்லாதார் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப் படுத்திக்கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல. சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற 10 - வருஷங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் சிறீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமாக சாட்சியம் சொல்லும்படி செய்ததுமில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாத வர்களுக்குப் பிரதிநிதிகளல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச்செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லாதாரை தங்களிஷ்டம் போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.

 

ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றுவது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது. பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே. இக்கொள்கைகளே தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்த தோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவேயிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்போது " மீக்கு பெப்பப்பே, நீவு தாத்தாக்கு பெப்பப்பே" என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு, இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனசாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள்.

 

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது. ஆனால், சென்னை மாகாண சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டவுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது. ஈரோட்டில், சென்னை மாகாண சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷயாலோசனைக் கமிட்டியில் சிறீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவாலும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார் செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் சிறீமான் வரதராஜுலு நாயுடுவாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.

 

சிறீமான்கள் முதலியாரும், நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர் ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணச் சங்கக் கட்சியில் சேர்ந்தது. பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். இப்படியிருக்க இன்றையதினம் இவர்களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது ஜாண் போனாலென்ன? என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது. சிறீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்க்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்கமுண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடிவாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத் தெரியும்.

 

நமது முதலியாரோ, துணிந்து " வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப்படியே கிடைத்தது. அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?" என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார். சிறீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகிவிட்டதுபோலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பதுபோலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலவும் உபதேசிக்கிறார். இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலை யுரிமையையும் அடைய உத்தேசங் கொண்டு ஆரம்பித்த "தேசபக்தன்" ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த "நவசக்தி" ஆசிரியருமான சிறீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா? இது தருமந்தானா? என்று கேட்கிறோம்.

 

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய்விட்டது! இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்? பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேபனைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது? இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்கிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும். சிறீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள் அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா? என்று முதலியாரை வணக்கத்துடன் கேட்கிறோம்.

 

இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு? துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்தி கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை - சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும், மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாகப் போய்விட்டது. இப்பொருள் கொண்ட சாதனங்களை சிறீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது. ஆனால், நமது கடமையை நினைக்கும்போது சும்மாயிருக்க முடியவில்லை.

 

( கட்டுரை : குடி அரசு 20.12.1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_22.html

திராவிடர் கழகத்தின் இலட்சியம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே இருந்து வரும் இழிவு, காட்டுமிராண்டித்தனம், தற்குறித்தன்மை இவற்றை நீக்கி மக்கள் மனிதத்தன்மை பெற்று வாழ வேண்டும் என்பது ஆகும். அதற்காகவே (திராவிடர் கழகம்) பாடுபடுகின்றது. இந்தத் தொண்டு செய்ய 2000 - ஆண்டுகளுக்கு மேலாக மட்டும் அன்று, இன்றும் கூட செய்ய வேறு ஆளோ, வேறு ஸ்தாபனங்களோ இல்லை. திராவிடர் கழகம் ஒன்றுதான் இந்தத் துறையில் இறங்கிப் பாடுபடுகின்றது. நம் தமிழ் மக்கள் எல்லாரும் இந்த நாட்டில் பரம்பரையாக வசித்து வருபவர்கள். இந்த நாட்டுக்குச் சொந்தமானவர்கள். உழைத்து மக்களுக்கு உதவுபவர்கள். இப்படிப்பட்ட நாம் 100 - க்கு 97 - பேராக உள்ள நாம் (தமிழர்கள்) இந்த நாட்டில் கீழ்ச் சாதி, பார்ப்பான் மேல் சாதி என்று ஆக்கி வைத்துள்ளார்கள். பாடுபடுகின்ற மக்கள் கீழ்சாதி என்பது உலகில் வேறு எங்குமே காண முடியாதது. இங்குதான் உள்ளது அதேபோலவே 100 -க்கு 3 -பேராக உள்ள பார்ப்பான் உடல் உழைக்காமல் ஊரார் உழைப்பிலேயே நோகாமல் உண்ணுபவன் மேல்சாதி என்று ஆக்கி வைத்து இருக்கின்றார்கள். இப்படியே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இருந்து வருகின்றது. இதனை மாற்ற எவனும் முன்வரவே இல்லை! இதுபற்றி இந்த நாட்டில் தோன்றிய பெரியோர்களோ, அவதாரப் பருஷர்களோ, ஆழ்வார்களோ, நாயன்மார்களோ கவலைப்பட்டு எடுத்துச் சொன்னார்கள் - இவற்றை நீக்கப் பாடுபட்டார்கள் என்று சொல்லும்படியான ஆளைக் காட்டவே முடியாதே! தோன்றியவன் எல்லாரும் நமது இழிவை மாறிவிடாமல் ஆணி அடித்து நிலைக்கச் செய்தவர்களாகவே தானே இருந்தார்கள்?

100 - க்கு 97 - பேராக உள்ள தமிழ்மக்களை இழிமக்கள் - தாழ்ந்த சாதி மக்கள் என்று கூறிக் கொண்டு 100 - க்கு 3 - பேராக உள்ள பார்ப்பனர்கள் 1961 - லும் உயர்வாக வாழ்கின்றான் - மேல் நிலையில் இருக்கின்றான் என்றால் இது எதனைக் காட்டுகின்றது? நமது மான - ஈன நிலையைத்தானே காட்டுகின்றது? நமக்கு மானம் இருக்குமானால் நம்மை இழிமக்கள் என்று கூறுவதைப் பொறுத்துக் கொண்டு (நம் தமிழ் மக்கள்) இருப்பார்களா? 100 - க்கு 97 -பேராக உள்ள (தமிழர்களாகிய) நமக்குப் படிப்பு இல்லை காமராசர் பதவிக்கு வருவதற்கு முன் வரையில் 100 - க்கு 15 - பேர்களே படித்து இருந்தோம். இதில் பார்ப்பான் 3 - பேர் போனால் 12 - பேர்களே படித்து இருந்தோம். ஆனால் பார்ப்பானர் மட்டும் 100 - க்கு 100 - படித்து இருக்கின்றார்களே! இன்று ஏதோ காமராசர் ஆட்சியின் காரணமாக 100 - க்கு 32 - பேர்களாக உயர்ந்து உள்ளோம். இப்படி 100 - க்கு 97 - பேராக உள்ள தமிழ் மக்கள் மீது 3 பேராக உள்ளவன் (பார்ப்பான்) ஆதிக்கம் செலுத்திக் கொண்டு நம்மைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்து இருக்கின்றான் என்றால் நமக்குப் புத்தியும் இல்லை, மானமும் இல்லை. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட நிலையில் உள்ளோம். நம்மை (தமிழர்களை) அடிமைப்படுத்தும் பார்ப்பான் 100 - க்கு 3 -பேராக இருந்தாலும் 100 - க்கு 97 - பேராக உள்ள நாம் அடங்கிக் கிடக்கின்றோம் என்றால் காரணம் அவன் கையில் ஆயுதங்கள் உள்ளன. நாமோ நிராயுதபாணிகள் ஆவோம். எப்படி போலீஸ்காரர் நான்கு பேராக இருந்தாலும் அவர்கள் கையில் உள்ள துப்பாக்கி கண்டு பெரிய கூட்டமானாலும் பயந்து அவன் சொன்னவுடன் கலைந்து ஒடுகிறதோ, அதுபோல பார்ப்பான் கையில் உள்ள ஆயுதங்களான கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு முதலிய ஆயுதங்கள் இருக்கின்றன. இந்த ஆயுதங்களின் காரணமாக நாம் (தமிழர்கள்) அடங்கிக் கிடக்கிறோம்.

நாம் இவற்றில் இருந்து விலகி மனிதத் தன்மை அடைய வேண்டுமானால் பார்ப்பான் கையில் உள்ள இந்த ஆயுதங்களைப் பிடுங்கி எறிய வேண்டியவற்றை எறிந்தும் பிடுங்க முடியாதவற்றை முனை மழுங்கச் செய்தும் ஆக வேண்டும். கடவுள் என்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டு தமிழ் மக்களையே ஆட்டுகின்றான். (தமிழர்களாகிய) நாம் கோயில், குளம் கட்டியவர்களாக இருந்தாலும் நாம் உள்ளே புக யோக்கியதை அற்றவர்கள் என்று கூறி வெளியே நிறுத்தி வைத்து இருக்கின்றான். எல்லோருக்கும் கடவுள் பக்தி இருக்கிறதே ஒழிய ஒருவனுக்காவது கடவுள் என்றால் என்ன? என்று தெரியாது. கடவுளையும், கோயில், குளத்தையும் வளர்த்துக் கொண்டானே ஒழிய அறிவில் வளர்ச்சி அடையவேயில்லை. அதுபோலவே மதம் என்றால் என்ன? சாத்திரம் என்றால் என்ன? என்று எவனுக்காவது தெரியுமா? ஒருவனுக்காவது தெரியாது. ஆனால் அவ்வளவு பேரும் அவற்றைக் கட்டிக் கொண்டு அழுகின்றான். நம் ஆயுள் காலத்திலாவது இவற்றை ஒழித்துத் தீர வேண்டும். அப்போது தான் நாம் (தமிழர்) இழி மக்களாக இருந்தாலும் நாம் பிள்ளைக் குட்டிகளுக்காவது இழிபட்டம் இல்லாமல் முடியும்.

அரசாங்கம் என்றால் என்ன? என்று எவனக்காவது தெரியுமா? பார்ப்பான் தங்கள் வாழ்க்கை வசதிக்காகத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டது தான் இந்த அரசாங்கம் என்று நான் 30 - ஆண்டுகளுக்கு மேலாகவே கூறி வந்திருக்கின்றேன். என்னை எல்லோரும் எதிர்த்தார்கள். நான் கவலைப்படாமல் என்றைக்குக் காங்கிரஸ் பார்ப்பானுடைய நலனுக்கும் வாழ்வுக்கும் தான் உள்ளது என்பதைக் கண்டு வெளியேறினேனோ அன்று மதல் காங்கிரஸ் ஒழிக! பார்ப்பான் ஒழிக! என்று கூப்பாடு போட்டு வந்து இருக்கின்றேன். இப்படி நான் போட்ட கூப்பாடானது வீண் போகவில்லை. இன்று நிலை எப்படியாகிவிட்டது தெரியுமா? பார்ப்பனர்கள் எல்லாரும் காங்கிரசை விட்டு ஒடும்படியாகிவிட்டது. "காங்கிரசே" இன்று தமிழர்கள் கைக்க வரும்படியான நிலைமையை இன்றுதான் காண்கிறோம்.

தோழர்களே! காங்கிரசின் காரணமாக வாழ்வு பெற்றவர்கள் இந்த இராஜாஜியும் மற்ற மற்றப் பார்ப்பனர்களும் தான். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குக் காங்கிரசில் இடம் இல்லை தமிழர்களுக்குப் பயன்படும்படியாக இருக்கின்றதே என்ற ஆத்திரத்தின் காரணமாகவே இன்று பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்கின்றார்கள். தோழர்களே! என்றைக்குமே இல்லாத மாதிரி காங்கிரஸ் இன்றுதான் தமிழர்கள் கையில் வந்துள்ளது. தமிழர்களுக்குப் பயன்படும்படியான நிலையிலும் உள்ளது. இதை ஒழிக்கப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் முயற்சிக்கின்றார்கள். நம் மக்களின் கல்வி உத்தியோகம் பதவி முதலியவைகளிலும் மற்றும் விவசாயம் மின்சாரம் தொழில்துறை மற்ற மற்ற பல துறைகளிலும் காமராசர் ஆட்சி செய்துள்ள நன்மைகள் நிலைக்கவும் மேலும் வளரவும் வருகின்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டு அளிக்க வேண்டும்.

(03-11-1961 அன்று ஜெயங்கொண்டத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு - விடுதலை 23-11-1961)
(பெரியார் களஞ்சியம் ஜாதி - தீண்டாமை பாகம் -9 .... பக்கம் : 92)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_23.html

பார்ப்பனத் தோழர்களே!

நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறை வாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது. நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும்போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக்கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.எனக்கு, “நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்” என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதிமுறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 - ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை.

இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்?

நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_24.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE