Language Selection

சமூகவியலாளர்கள்

சென்னையில் தேர்தல் முழக்கம் தெருத்தெருவாய் முழங்குகிறது. பார்ப்பன ஆதிக்கத்திற்காக சிறீமான்கள் எஸ்.சீனிவாச அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகள், எ.ரெங்கசாமி அய்யங்கார், எம்.கே. ஆச்சாரியார் முதலியவர்கள் மடாதிபதிகள் பணத்தாலும், மகந்துகள் பணத்தாலும் தெருத்தெருவாய், ஜில்லா ஜில்லாவாய்ப் பார்ப்பனரல்லாத சில கயவர்களையும் சேர்த்துக் கொண்டு தேர்தல் முழக்கம் செய்கிறார்கள். அம்முழக்கத்தில் உபயோகிக்கும் தந்திரங்கள் என்னவென்று பார்ப்போமானால், பார்ப்பனரல்லாதார் முற்போக்குக்காக ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் இயக்கங்கள் மீது, பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி தூஷணை செய்வதும், தேசத்திற்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் உழைத்து வரும் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும், பொல்லாப்புகளையும், பழிகளையும் சொல்லி அவர்களிடம் பொது ஜனங்களுக்கு அதிருப்தி உண்டாகும்படி செய்வதுமாகவே இருக்கின்றன.

 

இதன் பயனாய்ப் பார்ப்பனரல்லாத பாமர மக்களை ஏமாற்றி அவர்கள் ஓட்டு பெற்று சென்னை சட்டசபை, இந்தியா சட்டசபை முதலிய ஸ்தானங்கள் பெற்று அவற்றின் மூலம் ஏற்பட்ட உத்தியோகங்கள் அதிகாரங்கள் முழுவதையும் தங்கள் இனத்தவர்களாகிய பார்ப்பனர்களுக்கே கிடைக்கும்படிச் செய்து பார்ப்பனரல்லாதாரை நுழையக் கூடாதவர்களாகவும் மற்றும் நிரந்தர ஈனஸ்திதியிலேயே இருக்கும்படியானவர்களாகவும் செய்தும் வரப்போகிறார்கள். குறிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கு உழைக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும், அதன் தலைவர்களில் பிரமுகர்களான சிறீமான்கள் பனகால் அரசர், ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களையும் தான் இப்போது நமது பார்ப்பனர்கள் முக்கிய விரோதிகளாய் நினைத்துக் கொண்டு அவர்களை எந்த வழியிலாவது ஒழிப்பதே தங்கள் தங்கள் கடனாய் வைத்து 'காங்கிரஸ்' 'தேசம்' 'சுயராஜ்யம்' என்கிற ஆயுதங்களை அதற்காக உபயோகித்து வருகிறார்கள்.

 

அதோடு மாத்திரமல்லாமல் சிறீமான் பனகால் அரசர் மீதும் ஏ. ராமசாமி முதலியார் மீதும் சில ஈனத்தனமான பழிகளையும் சுமத்தி வருகிறார்கள் என்றும் அறிகிறோம். அவைகள் என்ன வென்றால் தங்கள் அதிகாரத்தின் கீழ் உள்ள காரியங்களைச் செய்வதில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்லி வருவதோடு சில பார்ப்பனரல்லாத பதர்களையும் கொண்டு வெளியிடங்களிலும் வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன், ஓட்டல்காரப் பார்ப்பனன், பொதுப் பெண்களிடம் தூது செல்லும் பார்ப்பனன் முதலானவர்கள் உட்பட பிரசாரம் செய்யவும் இரகசிய சுற்றுத் திரவுகள் பறந்து திண்ணைப் பிரசாரங்கள் நடந்து வருகின்றன.

 

அதோடுமாத்திரமல்லாமல் தங்கள் சுயநலத்தை மனதில் வைத்து வெளிக்குப் பார்ப்பனரல்லாதார்க்கு உழைப்பதாக வேஷம் போட்டுக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து தங்கள் எண்ணம் ஈடேறாமல் ஏமாற்றமடைந்து வெளிவந்த சில பச்சோந்திகளும் இதற்குத் துணை புரிந்து வருகிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. யார் எப்படி கத்தினாலும் கத்தட்டும். இதைப் பற்றிப் பொதுஜனங்களுக்கு ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லுவோம். இவர்கள் சொல்லுகிற மாதிரி பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை சிறீமான் பனகால் அரசருக்கோ சிறீமான் ஏ. ராமசாமி முதலியாருக்கோ இருக்குமானால் மலையாளக் குடிவார மசோதாவினும் இந்துமத பரிபாலன மசோதாவினும் எவ்வளவு லட்ச ரூபாய் சம்பாதித்திருக்கக் கூடும் என்பதை பகுத்தறிவைக் கொண்டு யோசித்துப் பார்த்தால் தெரியவரும்.

 

உபயோகமில்லாத வெறும் பார்ப்பனர்களுக்கு பல மடாதிபதிகளும் மகந்துக்களும் மலையாள ஜமீன்களும் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்ததாகத் தெரிகிறது. இந்தப் பார்ப்பனர்களால் இந்தக் காரியமாகும் என்ற நம்பிக்கையே இல்லாமல் சூதாடுவது போல் இவ்வளவு பணம் செலவு செய்திருக்கிறார்கள். சிறீமான் பனகால் அரசரோ சிறீமான் ராமசாமி முதலியாரோ இந்து மத பரிபாலன சட்டத்தை முழுவதும் நிறுத்திக் கொள்ளத் தேவையில்லை; ஒரு கோவிலையும் நான்கு மடங்களையும் மாத்திரம் இச்சட்டத்திலிருந்து விலக்குவதானால் 7 - லட்ச ரூபாய் கொடுக்க ஆள்கள் இன்றைய தினமும் தயாராயிருக்கிறார்கள் என்றும், இதை முடித்துக் கொடுக்கும் தரகருக்கு பதினாயிரக்கணக்கான பொன்னும் பீதாம்பர சால்வையும் தயாராயிருக்கிறதென்றே நாம் கேள்விப்படுகிறோம்.

 

இதிலிருந்தே நூறு, இருநூறு, ஐந்நூறு வீதம் சிறு சிறு பதவிகளுக்கு பணம் வாங்குவது என்பது உண்மையானால் இந்த லட்சக்கணக்கான ரூபாயை வேண்டாம் என்று சொல்லுவார்களா? என்பதைப் பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கமாட்டார்களா என்கிற ஞானம் கூட இல்லாமலே இவ்வித இழிவான தன்மையில் பிரசாரங்கள் செய்கிறார்கள். அல்லாமலும் இவர்களுக்கு எதிரிடையாய் நிறுத்தப்பட்டிருக்கும் கனவான்களும் இவற்றையே வெளியில் பேசுகிறார்கள் என்றும் நமது காதுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து நமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்ய அஞ்ச மாட்டார்கள் என்பதுதான். ஜமீன்தாரர்கள் மத்தியிலும் செங்கல்பட்டு ஜில்லாவாசிகள் மத்தியிலும்தான் இவ்வித ஈனத்தனமான பிரசாரம் அதிகமாய் நடத்தப்பட்டு வருவதாகவே கேள்விப்படுகிறோம். பார்ப்பனரல்லாத மக்களுக்குள் கொஞ்சமாவது மூளை இருக்கிறது, பகுத்தறிவு இருக்கிறது என்பது வெளியாக வேண்டுமானால், அது முக்கியமாய் செங்கல்பட்டு ஜில்லாவாசிகளிடம் இருந்துதான் பார்ப்பனரல்லாதார் சமூகம் எதிர்பார்க்கிறதென்றே சொல்லுவோம்.

 

சென்னை சட்டசபைக்கு சிறீமான் ராமசாமி முதலியார் வரக்கூடாது என்கிற எண்ணங் கொண்டே நமது பார்ப்பனர்கள் செங்கல்பட்டு ஜில்லா தொகுதிக்குத் தங்கள் சார்பாகப் பார்ப்பனரல்லாதாரையே நிறுத்தி அவருக்கு எதிராய்ப் போட்டி போடச்செய்து தாங்கள் தங்கள் பணத்தைக் கொண்டும், மகந்துக்கள் பணத்தைக் கொண்டும் பிரசாரம் செய்து வருகிறார்கள். சென்னை சட்டசபையில் இப் பார்ப்பனர் போடும் கூச்சலுக்கும் அவர்கள் கிளப்பிவிடும் விவகாரங்களுக்கும், சட்ட சம்பந்தமான சிக்கல்களுக்கும் ஆப்படித்த மாதிரி பதில் சொல்லி அவர்களை அடக்கி வைக்கத் தகுந்த சக்தி சிறீமான் ஏ. ராமசாமி முதலியார் அவர்களிடம் இருப்பதினால் தான் நமது பார்ப்பனருக்கு அவர் எதிரியாய்த் தோன்றுகிறார்.

 

உதாரணமாக, சென்னை சட்டசபையில் கொஞ்ச நாளைக்கு முன் ஒரு பார்ப்பன சட்டசபை மெம்பர் ஒரு பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தரைக் கெடுக்க எண்ணங் கொண்டு அவர் பேரில் ஒரு பழியைச் சுமத்தி அதாவது குறிப்பிட்ட பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் தேர்தல் விஷயத்தில் பிரவேசித்திருக்கிறார்; அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும்; ஆதலால் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.

 

இதைப்பற்றி பிரமாதமாய்ப் பேசி அந்த உத்தியோகஸ்தரைப் பற்றி கெட்ட அபிப்பிராயம் உண்டாகும்படி செய்தும் அவரை ஒழிக்க சட்ட மெம்பருக்கு அதிகாரம் கொடுக்கப்போகும் சமயத்தில் சிறீமான் ஏ.ராமசாமி முதலியார் சட்டசபைக்கு வந்து விஷயம் இன்னதென்று தெரிந்ததும் உடனே ஆம், ஆம் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளவேண்டும்; இன்னும் இரண்டொரு உத்தியோகஸ்தர்களைப் பற்றியும் நான் கேள்விப்பட்டேன் அவரையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஒரு பார்ப்பன ஜில்லா கலெக்டர் பெயரையும் ஒரு பார்ப்பன சப் ஜட்ஜி பெயரையும் சூசனை காட்டினார். உடனே பார்ப்பன சட்ட மெம்பரே பார்ப்பன சட்டசபை மெம்பரை கெஞ்சிக் கேட்டுக் கொண்டு தன்னுடைய பிரேரேபணையை வாபீசு வாங்கிக் கொள்ளவே வெகு பாடுபடும்படி செய்து விட்டார்.

 

இம்மாதிரி அவர் ஒருவர் அங்கிருந்து கொண்டு பார்ப்பனரல்லாதார் விஷயத்திலும் பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் விஷயத்திலும் எவ்வளவோ பாடுபட்டு வருவது பார்ப்பனர் கண்களில் ஊசி குத்துவது போல் இருப்பதால் அவருக்கு எதிரிடையாய் செங்கல்பட்டு ஜில்லா தொகுதி ஒரு பார்ப்பனரல் லாதாரையே நிறுத்தி முன் சொன்னது போல் மகந்துக்கள் பணத்தை செலவு செய்து சில பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே பிரசாரம் செய்கிறார்கள். சிறீமான் எஸ். சீனிவாசய்யங்காரும் தான் தூங்கும் போதும் சாப்பிடும் போதும் மற்றும் ஒவ்வொரு சமயத்திலும் சிறீமான் ஏ.ராமசாமி முதலியார் உருவமே தம் முன் தோன்றுவதாகவும் அவரை ஒழிப்பதே தமது வெற்றி என்றும் அந்த விஷயத்திலேயே தமது முழுக் கவனத்தையும் பலத்தையும் செலுத்தப் போவதாகவும் சொல்லியிருக்கிறார். இதற்காகவே இஜ்ஜில்லா மிராசுதாரர்களையும், ஜமீன்தாரர்களையும் சுவாதீனப்படுத்திக் கொண்டு உள்நாட்டு சண்டைகளையும், கட்சிகளையும் கிளப்பி விட்டுக் கொண்டும் வருகிறார்.

 

ஆதலால் செங்கல்பட்டு ஜில்லாவாசிகள் இந்த சமயம் தங்கள் புத்திகளையும் மனசாட்சிகளையும் பார்ப்பனர் சூழ்ச்சிக்கும் தந்திரத்திற்கும் பறி கொடுத்து விடாமல் நமது நாட்டு நிலைமையும் நமது பார்ப்பனரல்லாதார் வகுப்பு நிலைமையையும் கவனித்து புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா ஜமீன்தாரர்கள் தங்களை எவ்வளவு பெரிய ஜாதியார் என்று சொல்லிக் கொண்டாலும் தாங்கள் எவ்வளவு பெரிய வர்ணாசிரம தர்மி என்று சொல்லிக் கொண்டாலும், பார்ப்பனர் அகராதியில் அவர்களை சூத்திரர்கள் என்றுதான் குறிக்கப்பட்டிருக்கிறதே அல்லா மல், ஜமீன்தார்கள் வேறு பிறவி என்று இல்லவே இல்லை. ஆகையால் உள்நாட்டு கட்சி விவகாரத்தின் பலனாய் பார்ப்பனர்களின் கையாளாயிருக்கக் கூடாது என்று ஜமீன்தாரர்களையும் மிராசுதாரர்களையும் மறுமுறை வேண்டிக் கொள்ளுகிறோம்.

 

(குடிஅரசு 19.09.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_11.html

நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் சூழ்ச்சிகளாலும், தந்திரங்களினாலும் ஒருவரையொருவர் இழிவுப் படுத்தியும், அடிமைப்படுத்தியும், கொடுமைச் செய்து வருவதின் பலனாய், அந்நிய அரசாங்கத்தின் கீழ் ஆளப்பட்டு துன்பமடைந்து வருகிறோம். இத்துன்பம் நமக்கு ஒழிய வேண்டுமானால் நாம் பிறரைச் செய்யும் துன்பம் ஒழிய வேண்டும். அந்நிய அரசாங்கத்தார் நம்மைச் செய்யும் கொடுமையை ஒரு தட்டில் வைத்து, நம் நாட்டில் சிலர் நமக்குச் செய்யும் கொடுமையையும் நம்மைக் கொண்டு மற்றவர்களைச் செய்யச் செய்யும் கொடுமையையும் ஒரு தட்டில் வைத்துத் தூக்கிப் பார்த்தால் அரசாங்கத்தின் கொடுமையை விட நம்மவர்களின் கொடுமையே பெரிய பளுவானதாயிருக்கும்.

 

நமது நாட்டில் சில வேஷக்காரர்கள் சுயராஜ்யம் என்கிற பதமும், சுதந்திரம் என்கிற பதமும், உரிமை என்கிற பதமும், வாழ்க்கையை உத்தேசித்து வாயளவில் பேசி, பொது ஜனங்களை ஏமாற்றி, நகத்தில் அழுக்குப்படாமல் காலங்கழிக்கப் பார்க்கின்றார் களேயல்லாமல், அதற்காகச் செய்யவேண்டிய காரியங்களில் தங்களுக் குச் செய்ய யோக்கியதை இல்லாவிட்டாலும் வேறு யாராவது செய்தாலும் தங்களுக்கு யோக்கியதை குறைந்து போகுமேயென்கிற பயத்தால் அதற்கு வேண்டிய முட்டுக் கட்டைகளைப் போட்டு தாங்களே முன்னணியிலிருக்க வேண்டிய மாதிரியில் ராஜீயவாதி களென்னும் பேரால் வாழ்ந்து வருகின்றார்கள்.

 

நமது நாட்டுக்கு முக்கியமாக வேண்டியது சுயராஜ்யமா? சுயமரியாதையா? சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கின்ற அநேகர், சுயராஜ்யம் இன்னதென்பதைப் பற்றி ஒரு வார்த்தையாவது சொன்னவர்களல்ல. அதை ஜனங்கள் அறியாதிருக்கும்படி எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து வருகின்றார்கள். மகாத்மா காந்தி அவர்கள் சுமார் ஐந்து வருஷங்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்திருந்த சமயம் ஓர் கூட்டத்தில் பேசும் போது, "என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள யோக்கியதை இல்லாமல் இருக்குமானால், நான் சுயராஜ்யத்தை விரும்புவதில் அர்த்தமே இல்லை" யென்று சொல்லியிருக்கிறார்.

 

மனிதனுக்கு அவனுடைய சுயமரியாதை என்னும் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதுதான் பிறப்புரிமையேயல்லாமல், அரசியலான ராஜீயமென்னும் சுயராஜ்யம் ஒருக்காலும் பிறப்புரிமை ஆகமாட்டாது. ராஜீயபாரமானது ஒரு தொண்டு. வீதி கூட்டுவதும், விளக்கு போடுவதும், காவல் காப்பதும் எப்படி சேவையாயிருக்கின்றதோ, அதுபோலவே, ராஜீய பாரமென்பதும் ஒரு சேவைதான். தேசத்தில் அவனவனது வாழ்க்கைக்கும் அல்லது பொது நன்மைக்கும் எப்படி பல தொழில்கள் இருக்கின்றனவோ, அதுபோல ராஜீய பாரமென்பதும் ஒரு தொழில்தான். இத் தொழிலை இன்னார்தான் செய்ய வேண்டுமென்றாவது, இன்னார்க்குத் தான் உரிமை என்றாவது 'கடவுள் என்பவரால்' யாருக்கும் பிரித்துக் கொடுக்கவே இல்லை. மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் ஊமை, கூன், குருடு, செவிடு உட்பட இதற்கு அருகர்கள்தான். ஆதலால், இவ்வுரிமையை எல்லோரும் சமமாய் அடைய வேண்டியதுதான். ஆனபோதிலும், மனித ஜென்மத்திற்கு இக்கேவல ஆட்சி பிறப்புரிமை என்று சொல்ல முடியாது.

 

மனிதனுக்கு உண்மையான பிறப்புரிமை என்று சொல்வது அவனது சுயமரியாதையும் பரோபகார மென்பதுமேதான். சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்கு சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும் கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதை அற்றவனைப் பிணமென்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் பார்க்கின்றபோது நமது தேசத்தில் சுயமரியாதை அற்று பூச்சி புழுக்கள் போலும், நாய்கள் பன்றிகள் போலும், பிசாசுகள் அரக்கர்கள் போலும் வாழும் ஜனங்கள் கோடிக் கணக்காய் இருக்கின்றனர். லட்சக்கணக்காய் தினம் பிறக்கின்றனர். இச்சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு?

 

உதாரணமாக, மனித உடல் தாங்கிய ஒருவன் அவனுடைய தெய்வத்தைக் காண, தரிசிக்க உரிமையற்ற ஒருவன் எப்படி சுயமரியாதையுள்ளவனாவான். அந்த சமூகத்திற்கு சுயராஜ்யம் எதற்கு? எந்த ராஜ்யமிருந்தால்தான் அவர்களுக்கு கவலையென்ன? இம்மாதிரி ஒரு சமூகத்தாரை சுயமரியாதை அற்று ஒடுக்கி வைத்திருக்கும் ஒரு ராட்சஸ சமூகத்தார் சுயராஜ்யமடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மை தருமா? அல்லது ஒடுக்கப்பட்ட வகுப்பாருக்கும் சேர்ந்துதான் சுயராஜ்யம் தேடுவது என்று சொல்லுவோமானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாத படியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாதபடியும் வைத்து இருப்பதற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா? அந்நிய ராஜ்யம் நமது ஜனங்களை இம்மாதிரி கொடுமையாக நடத்தும்படி நமக்குச் சொல்லவேயில்லை.

 

எந்தக் காரணத்தைக் கொண்டோ அந்நிய ராஜீயபாரங்கள் நமது நாட்டிற்கு ஏற்படாமலிருக்குமேயானால், இந்த சுயமரியாதை இன்னதென்று உணர்வதற்குக் கூட நமக்குச் செளகரியம் கிடைத்திருக்காது. நமது நாட்டு மக்களின் சுயமரியாதைக்கு விரோதமாயிருப்பது, நம் நாட்டார் சிலரின் ஆதிக்கத் தினாலேயல்லாமல், அந்நிய அரசாங்கத்தின் ஆதிக்கத்தினாலல்ல. ஆனால், நமது நாட்டில் பெரும்பாலோர் சுயமரியாதை அற்றிருக்கும் தன்மை, அந்நிய அரசாங்கத்தாருக்கு அநுகூலமாயிருப்பதினால் இக் கொடுமைகளைப் போக்க அவர்களுக்கு அதிகக் கவலையில்லை. ஆனபோதிலும், அவர்களுடைய தத்துவம் ஒரு நாளும் இவ்வித சுயமரியாதைக் கேடுக்கு அநுகூலமாய் இருப்பதில்லை. ஒரு தேசம் சுதந்திரமடைய வேண்டும் என்ற உண்மையான கவலை இருக்குமானால், அக்கவலைக்கு அவர்கள் அருகர்களா? இல்லையா வென்பதை பரீட்சிக்க வேண்டுமானால், அவர்கள் சுயமரியாதை உள்ளவர்களா? இல்லையா வென்பதிலிருந்துதான் அவர்களுடைய அருகதை வெளிப்படும். அஃதில்லாமல் சுதந்திரத்திற்காக செய்யப்படும் எவ்விதி முயற்சிகளும் தனிப்பட்டவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலத்திற்கும், சுயமரியாதை இல்லாத நிலைமையை பலப்படுத்தவும்தான் ஆகுமேயல்லாமல் வேறொன்றுக்கும் உதவாது. அதை உத்தேசித்தேதான் மகாத்மா காந்தியும், சுதந்திரம் பெறுவதற்காக ஏற்பட்ட திட்டங்களே சுயமரியாதை அடைவதற்கான திட்டங்களாகப் போட்டுவிட்டார்.

 

தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதும் கதர் அணிய வேண்டும் என்று சொல்லுவதும் நம் நாட்டு மக்களின் சுயமரியாதையின் ஜீவ நாடிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தெருவில் நடக்கவும், பக்கத்தில் வரவும், கண்ணில் தென்படவும், அவனது தெய்வத்தைக் கண்டு தரிசிக்கவும் முடியாமற்படி வைத்திருக்கிற வரையில் சுயமரியாதை இல்லையென்றும், அப்படிப்பட்டவனுக்கு சுதந்திரமென்பது ஒரு மனிதன் தன் உடலிற் போதிய சக்தியிருந்தாலும், ஜீவனத்துக்கு வேண்டிய அளவு தொழிலில்லாமல் வைத்திருப்பதினால், அவன் எந்த விதத்திலும் சுயமரியாதையோடு வாழ முடியாதென்றும், ஜீவனத் திற்காக எப்படியாவது தன்னுடைய சுயமரியாதையை இழக்கத்தான் நேரிடுமென்றும் கருதியே, பெரும்பான்மையான ஏழைகளுக்கு ஜீவனோபாயத்திற்கு ஆதாரமான கதரையும் வற்புறுத்தி வந்தார். மற்றவர்களை அடிமைப்படுத்தி வைப்பதினாலேயே வாழ முடியும் என்கிற நிலைமையடைந்து நமது நாட்டில் உள்ள ஒரு சமூகத்தார், இத்திட்டத்தை அடியோடு ஒழிக்க பழயபடி தங்களுடைய ஆதிக் கத்தைப் பலப்படுத்திக் கொள்ளத்தகுந்த மாதிரியில் ஜெயம் பெற்று வருகிறார்கள்.

 

இந்நிலைமையில் 'சுதந்திரம்' 'சுயராஜ்யம்' 'உரிமை' என்கிற வார்த்தைகள் தேச ஜனங்களுக்குப் பெரிய இழிவுக்கும் கொடுமைக் கும், ஆதாரமானதுதான். ஆதலால், நமது தேசம் உண்மையான உரிமை அடைய பாடுபட வேண்டுமானால் மக்களின் சுயமரியாதைக் காகத்தான் முதலில் பாடுபடவேண்டும்.

 

(குடிஅரசு-24.01.1926)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_12.html

வரப்போகும் தேர்தலில் பார்ப்பனர்களின் வெற்றியும், தோல்வியும் சிறீமான்கள் பனகால் ராஜா, ஏ.ராமசாமி முதலியார் ஆகிய இருவர்களின் வெற்றியையும் தோல்வியையும் பொறுத்திருப்பதாகவே நமது பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கனவு கண்டு கொண்டு லட்சக்கணக்கான ரூபாய்களையும் சர்வப் பிரயத்தனத்தையும் இதற்காகவே செலவழித்து வருவதோடு பஞ்சதந்திரங்களையும் செய்து வருகிறார்கள். அல்லாமலும், மற்ற இடங்களிலும் தங்கள் கட்சி ஆட்களே வெற்றி பெறுவதற்காக ஓட்டர்களை ஏமாற்றும் பொருட்டு பனகால் ராஜா தேர்தலில் தோற்றுவிட்டாரென்றும், சிறீமான் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வெற்றி பெற்றுவிட்டாரென்றும், மற்றும் பல விடங்களில் பார்ப்பனக் கட்சியே வெற்றிபெறுமென்றும், ஆதலால் அல்லாடி அவர்களே அடுத்த தடவைக்கு முதல் மந்திரியாக நியமிக்கப்படப் போகிறாரென்றும் பொய்க் கட்டுகள் கட்டிவிட்டுப் பஞ்சாங்கப் பார்ப்பனர், காபி ஓட்டல் பார்ப்பனர், வக்கீல் குமாஸ்தா பார்ப்பனர், பரிசாரகப் பார்ப்பனர் முதல் கொண்டு எல்லா பார்ப்ப னர்களும் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இவ்வித திண்ணைப் பிரசாரங்களுக்கெல்லாம் பார்ப்பனரல்லாத ஓட்டர்கள் மாறிவிடுவார்கள் என்று நினைப்பது கனவாகவே முடியும்.

தற்காலம் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் சென்ற தேர்தலில் அதாவது சென்ற மூன்று வருஷ காலமும் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு எவ்வளவு பலமிருந்ததோ அதைவிட அதிகமாகவே குறிப்பிடத்தக்க பலமிருக்குமென்றே சொல்லத்தகுந்த மாதிரிக்கே வெற்றி கிடைக்குமென்றே சொல்லலாம். உதாரணமாக, ஆந்திர மாகாணத்தில் எவ்வளவு குறைந்தாலும் சென்ற வருஷத்தை விட சுமார் 10 -ஸ்தானங்களுக்குக் குறையாமலே ஜஸ்டிஸ் கட்சிக்கு முன்னிலும் அதிகமான நபர்கள் வெற்றி பெறுவார்கள் என்கிற உறுதி ஏற்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலும் ஆந்திர நாட்டைப் போல் அவ்வளவு அதிகமான நபர்கள் முன்னிலும் அதிகமாய் வெற்றிபெறுவது சந்தேகமேயானாலும், குறைந்தது 3, 4 நபர்களாவது அதிகமாக வெற்றி பெறுவதில் ஆட்சேபனையில்லை. உதாரணமாக, கோயமுத்தூர் ஜில்லாவில் சென்ற தேர்தலில் சுயராஜ்யக் கட்சிக்கு 3 - மெம்பர்கள் அநுகூலமாய் வெற்றி பெற்றார்கள். இவ்வருஷமோ சிறீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்கார் ஒருவர்தான் பார்ப்பனக் கட்சியின் சார்பாக நிற்கிறார். அவருக்கு வெற்றி கிடைப்பது இப்போது பெரிய சந்தேகத்தில் வந்துவிட்டது. மீதி இரு ஸ்தானங்களில் வெற்றி பெறுகிறவர்களில் ஒருவர் கண்டிப்பாய் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர். மற்றவரும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கையையே உடையவர். எப்படியானாலும், சுயராஜ்யக் கட்சி என்கிற பார்ப்பனக் கட்சிக்கு 2 - ஸ்தானம் இழக்கப்பட்டுப் போய்விட்டது என்பதும், ஒன்று கஷ்டத்தில் இருக்கிறது என்பதும், ஜஸ்டிஸ் கட்சி என்கிற பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு 2 ஸ்தானம் கூடுதல் என்பதும் உறுதியாகி விட்டதென்றே சொல்லலாம்.

இதுபோலவே தஞ்சை ஜில்லாவிலும் சென்ற தேர்தலில் பார்ப்பனக் கட்சிக்கே மூன்று ஸ்தானங்களும் அநுகூலமாக வெற்றி பெற்றிருந்தன. இவ்வருஷம் ஒரு ஸ்தானமாவது கிடைக்குமா வென்பதே சந்தேகமாயிருக்கிறது. அந்த ஜில்லாவிலுள்ள மூன்று ஸ்தானங்களுக்கு பார்ப்பனக் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கனவான்களுமே தங்களுக்குக் கிடைப்பது சந்தேகம் என்பதாய் கருதி தனித்தனியாய் கட்சியின் பெயரை விட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சிறீமான் முத்தையா முதலியாரவர்கள் தேர்தல் அறிக்கையில், காங்கிரசைப் பற்றியாவது சுயராஜ்யக் கட்சியைப் பற்றியாவது ஒரு வார்த்தைகூட குறிப்பிடவேயில்லை. தவிர பார்ப்பனக் கட்சித் தலைவர்களான சிறீமான்கள் எ. ரெங்கசாமி அய்யங்கார், சிறீநிவாச அய்யங்கார் அவர்களும், சிறீமான் முத்தையா முதலியார் அவர்களின் பேரில் சந்தேகப்பட்டுக் கொண்டு சிறீமான்கள் சிவசுப்பிரமணிய அய்யருக்கும் மருதவானம் பிள்ளைக்குமே ஓட்டுப் போடும்படிக் கேட்டு வருகிறார்கள்.

சிறீமான் முத்தையா முதலியாரும் தனக்குக் கட்டுப்பட்ட இடத்தில் தனி ஓட்டுகளே கிடைக்கும் படியாகவும் மற்றவிடத்தில் தனக்கு ஒரு ஓட்டு போட்டு விட்டு மற்றவைகளை வேறு யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் வேலைசெய்து வருகிறார். அவர் வெற்றி பெற்றாலும் கண்டிப்பாய் பார்ப்பனர் கட்சியுடன் சேருவதில்லையென்றே சொல்லிவிட்டார். மற்ற இருவர்களோ சிறீமான் குன்னியூர் அய்யர் என்கிற கனவான் தனக்கு ஆனாலும் சரி , ஆகாவிட்டாலும் சரி என்கிற கவலையற்று இருக்கிறார். சிறீமான் மருதவானம் பிள்ளையோ சென்ற வருஷத்தில் செலவு செய்ததில் 4-ல் ஒரு பாகம் கூட இவ்வருஷம் செலவழிக்க மனமில்லாதவராய் நடக்கிறபடி நடக்கட்டும் என்றிருக்கிறார். மற்றபடி பார்ப்பனரல்லாத கட்சியைச் சேர்ந்த இரண்டு கனவான்களும், அதாவது சிறீமான்கள் பூண்டி வாண்டையார், நெடும்பலம் முதலியார் ஆகிய இருவர்கள் ஒற்றுமையாகவே வேலை செய்கிறார்கள். எவ்விதத்திலும் இவ்விரு வருக்கும் வெற்றிக் குறிகள் வெளிப்படையாயிருக்கின்றன. ஏனெனில் இவ்விருவர்களும் மற்ற அபேட்சகர்களைவிட பணக்காரர்கள்.

அதாவது ஒருவருக்கு சுமார் 1000 - வேலியும் மற்றவருக்கு சுமார் 500 -வேலியும் நிலம் உண்டு. அல்லாமலும் சென்ற தேர்தலில் செலவு செய்து சலிப்படையாதவர்கள் தங்கள் தங்களுக்கு கட்டுப்பட்டது என்று சொல்லும் படியாகவும் தனித்தனியாய் 2, 3 - தாலுக்காக்களில் செல்வாக்குள்ளவர்கள். தனி வோட்டுகள் வேண்டுமானால் 10,000 - கணக்கான ஓட்டுகள் பெறக் கூடியவர்கள். அல்லாமலும் நமது பார்ப்பனர்களின் வார்த்தையைக் கேட்டு அரசியல் கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கொண்டு இதுவரை எவ்வித நாணயக்குறைவான பெயர்களும் அடைந்தவர்களல்ல. தஞ்சை ஜில்லாவிலுள்ள பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்த ஜில்லா போர்டு பிரசிடெண்டு நான்கைந்து தாலுக்கா போர்டு பிரசிடெண்டுகள் மற்றும் பல பெரிய கனவான்கள் ஆகியவர் கள் எல்லாம் இவ்விருவர்களுக்கே வேலை செய்கின்றார்கள். ஆதலால் இவர்களுக்கே வெற்றி கிடைப்பது உறுதியென்றே சொல்லி விடலாம். அதிலும், சிறீமான் வாண்டையாருக்கு இப்பொழுதே எழுதி வைத்து விடலாம். சுயேச்சைவாதியென்று சொல்லப்பட்ட சிறீமான் நாடிமுத்துப் பிள்ளை அவர்களுக்கும் வெற்றிக் குறிகள் பலமாகக் காணப் படுகின்றன. பார்ப்பனரல்லாதார் கட்சி அபேட்சகர்களும் தங்களுக்கு இரண்டு ஓட்டுப் போக பாக்கியை சிறீமான் நாடிமுத்துப் பிள்ளைக்கே போடும்படி பிரசாரம் செய்கிறார்கள். சிறீமான்கள் மருதவானம் பிள்ளை, குன்னியூர் அய்யர் ஆகிய இருவர்களும் தங்களுக்கு இரண்டு ஓட்டுப்போட்டு, மீதியை சிறீமான் நாடிமுத்துப் பிள்ளை அவர்களுக்கே போடும்படி சொல்லுகிறார்கள். சிறீமான் முத்தையா முதலியாரும் சிறீமான் நாடிமுத்து பிள்ளைக்கு அநுகூலமாயிருப்பதன் மூலம் அவருடைய சகாயமும் பெறலாமென்று கருதி அவருக்கு அநுகூலமாயிருக்கிறார்.

ஆகவே, பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு இரண்டு ஸ்தானமும், சுயேச்சைக் கட்சி என்கிற சிறீமான் நாடிமுத்து பிள்ளைக்கு ஒரு ஸ்தானமும்தான் கிடைக்கும். இதில் ஏதாவது தவறும் பட்சத்தில் ஒரே ஒரு ஸ்தானம் தான் மாறலாம். அதுவும் இப்போது சுயராஜ்யக் கட்சி என்னும் பார்ப்பனக் கட்சியிலிருந்து பிரிந்திருக்கும் சிறீமான் முத்தையா முதலியாருக்குத்தான் கிடைக்கலாம். அது தவறும் பட்சம் சிறீமான் மருதவானம் பிள்ளைக்கு கிடைக்குமேயல்லாமல் கண்டிப்பாய் அய்யருக்கு கிடைக்காது. அந்த ஜில்லாவைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாதார் என்கிற வகுப்பு உணர்ச்சி அவ்வளவு நன்றாக விளங்குகிறது. ஆதலால் சென்ற வருஷத்தைவிடப் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு அதிக ஸ்தானங்களே கிடைக்கும். இதுபோலவே மற்ற ஜில்லாக்களிலும் இதை அநுசரித்தே தான் இருக்கிறது. அல்லாமலும் சென்ற இரண்டு தேர்தல்களிலும் பார்ப்பனர்கள் வார்த்தையை நம்பி ஏமாந்து போனவர்களும், தங்கள் நன்மையையும் நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்ட பலருக்கு இவ்வருஷம் புத்தி வந்துமிருக்கிறது. ஆதலால் எவ்வகையிலும் பார்ப்பனக் கட்சி தலையெடுப்பதற்கு இடமில்லாமல் இருப்பதோடு பார்ப்பனரல்லாதார் கட்சி மேலும் மேலும் உரம் பெற்று வருகிறது. தவிர, பனகால் ராஜா விஷயத்தில் வெற்றிக்கு எவ்விதத்திலும் சந்தேகமேயில்லை.

இதுவரை பதிவுசெய்து அனுப்பியிருக்கும் ஓட்டுக்களிலேயே மெஜாரிட்டி ஏற்பட்டிருப்பதாகவே தக்க ஆதாரத்தின் மீது நம்பத் தகுந்த இடத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சிறீமான் ஏ. ராமசாமி முதலியாரைப் பற்றியோவென்றால் வெற்றியைப் பற்றி எவ்விதத்திலும் ஆட்சேபனை சொல்வதற்கே சிறிதுமிடமில்லை. ஆனால் பார்ப்பனர்களுக்கு சூழ்ச்சியும், தந்திரமும் , வஞ்சகமும் கூடிய பிரசாரங்கள் செய்வதற்கு பல வழிகளில் சவுகரியமிருந்தது. அதுபோன்ற சவுகரியங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு இல்லை.

உதாரணமாக, பார்ப்பனர் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்று தெரிந்தாலும் பனகால் ராஜா, சிறீமான் ராமசாமி முதலியார் போன்ற வர்கள் வெளியிடங்களுக்குப் போய் பிரசாரம் செய்வதற்கில்லாமல் அவர்கள் தொகுதிகளில் எதிர் அபேட்சகர்களை நிறுத்தி இவ்விருவர் களையும் அவரவர்கள் தொகுதியிலேயே கட்டிப்போட்டு விட்டார்கள். ஆனால் தாங்கள் மாத்திரம், அதாவது சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்க சாமி அய்யங்கார் இருவரும் தங்களது சூழ்ச்சிகளால் போட்டியின்றி தெரிந்தெடுக்கத்தக்க மாதிரி ஏற்பாடு செய்து கொண்டு மற்றத் தொகுதிகளில் பார்ப்பனரல்லாதாருக்கு எதிராய்ப் பிரசாரம் செய்யத்தக்க இடம் செய்து கொண்டார்கள். அல்லாமலும், தேர்தலுக்கு சவுகரியமாய் தங்கள் ஆதிக்கத்தில் உள்ள இலாக்கா உத்தியோகஸ்தர்களை ஆங்காங்கு மாற்றி பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் இரகசிய பிரசாரம் செய்ய சவுகரியம் செய்து கொண்டார்கள். தவிர செலவு செய்யவும், காங்கிரஸ் பணம், மடாதிபதிகள் பணம், மகந்துகள் பணம் முதலிய பல பொதுப் பணங்கள் லட்சக்கணக்காய் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. செல்வாக்கு பெற்று விட்ட பத்திரிகைகளாகிய 'இந்து', 'சுதேசமித்திரன்', 'சுயராஜ்யா' முதலிய பத்திரிகைகளும் அவர்கள் சுவாதீ னத்தில் இருக்கின்றன. மற்றும் ஒவ்வொரு ஜில்லாவிலும் ஒவ்வொரு பார்ப்பனப் பத்திரிகையும் இருக்கிறது.

பார்ப்பனரல்லாத பல பத்திரிகைகளையும் விலை கொடுத்தும், மிரட்டியும், கட்டிப் போட்டு விட்டார்கள். இவ்விரண்டிலும் கட்டுப்படாத பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளிலும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு பார்ப்பன ஒற்றர்களை அனுப்பித் தங்களுக்கு அநுகூலமாய் திருப்பி விட்டார்கள். மிகுதியும் பார்ப்பனரல்லாதார் கஷ்ட நஷ்டங்களாலும், தியாகத்தாலும் செல்வாக்கு பெற்றுவிட்ட காங்கிரஸ் முதலிய தேசீய இயக்கங்கள் என்பனவற் றையும் கைப்பற்றி மற்றவர்கள் உள்ளே நுழையாதபடி முற்றுகை போட்டுக்கொண்டார்கள். காங்கிரசின் மூலம் பொது ஜனங்களுக்கு அறிமுகமான தொண்டர்களையும் அவர்களது வயிற்றுக் கொடுமையின் காரணமாக பலவழிகளிலும் தங்களுடைய அடிமைகளாக்கிக் கொண்டார்கள். இனியும் இதில் எழுதத் தகாத பல வழிகளிலும் செல்வாக்குள்ளவர்கள் பிரபலஸ்தர்கள் என்கிற பேர் வழிகளையும் உள் சட்டப்பையில் போட்டிருக்கிறார்கள். இவ்வளவு சவுகரியங்கள் பார்ப்பனர்களுக்கு இருந்தும் ஒரு மயிர்க்காலாவது தங்கள் தங்களது நிலையை இருப்பிடத்தை விட்டு அசைக்க முடியாமல் போய் விட்டதோடு பார்ப்பனரல்லாதார் எவ்வளவோ முன்னுக்கு வர சவுகரியமும் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும்போது நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட்டு விட்டதென்றேதான் சொல்ல வேண்டும். ஆதலால், பார்ப்பனர்களின் திண்ணைப் பிரசாரத்தை யாரும் நம்பி மோசம் போக வேண்டாம் என்று வேண்டிக் கொள்வதோடு எவ்விதத்திலும் பார்ப்பனர் தங்கள் கட்சி வெற்றி பெறுமென்று காணும் அவர்களது கனவு பலிக்காதென்றே உறுதி கூறுவோம்.

(குடி அரசு 31.10.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_13.html

மலையாளக் குடிவார மசோதாவை ஒழித்து விட்டார்கள். இனி தேவஸ்தான மசோதாவை ஒழிப்பதுதான் பாக்கி. இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர்களானால் நமது கதி அதோ கதி தான். மலையாளக் குடிவார மசோதா சட்டசபையில் நிறைவேற்றக் கொண்டுவந்த காலத்தில் பார்ப்பன சட்ட மெம்பரான சர். சி.பி.ராமசாமி ஐயரவர்கள் ஆணவத்தோடு மிரட்டி இச்சட்டத்தை கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து அமுலுக்குவராமல் செய்து விடுவேன் என்று வீரம் கூறியது வாசகர்கள் அறிந்திருக்கலாம். இப்போது அவர் சொன்னது போலவே சட்டசபையில் பெரும்பான்மையோரால் நிறைவேறின இச்சட்டத்தை ஏதோ சில நொண்டிச் சாக்குகளுடன் கவர்னர் பிரபு நிராகரித்து விட்டார். நமது நாட்டில் வெள்ளைக்கார அதிகார வர்க்க ஆட்சி, பார்ப்பன ஆதிக்க வர்க்க ஆட்சி என இரண்டு கொடுமையான ஆட்சிகளின் கீழ் நாம் பாசாணத்தில் புழு இருப்பது போல் காலந்தள்ள வேண்டியவர் களாயிருக்கிறோம். நம்முடைய மேன்மைகளும் முன்னேற்றங்களும் வெள்ளைக்காரருக்கோ பார்ப்பனருக்கோ தங்களது ஆதிக்கத்திற்குக் கடுகளவு இடைஞ்சல் செய்வதாயிருந்தாலும் கொஞ்சமும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடியோடு நசுக்கி விடுகிறார்கள். அரசாங்கத்தார் எந்தக் கட்சி ஜெயிக்குதோ அந்தக் கட்சியைத்தான் ஆதரிப்பார்களேயல்லாமல் நியாயம் சத்தியம் என்பவைகளைக் கொஞ்சமும் கவனிக்க மாட்டார்கள். ஆதலால் அடுத்த சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் கட்சி வெற்றி பெறாமல் போய் பார்ப்பனர் வெற்றிபெற ஏற்படுமானால் பாக்கி இருக்கும் தேவஸ்தான மசோதாவையும் கண்டிப்பாய் ஒழித்து விடுவார்கள். இதை உத்தேசித்தாவது இனியும் பார்ப்பனர்களுக்காவது அவர்களால் நிறுத்தப்பட்ட ஆட்களுக்காவது சட்டசபைக்கு ஓட்டுக் கொடுப்பீர் களானால் நமது கதி அதோ கதிதான்.
(குடிஅரசு 07.11.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_14.html

இன்று அரசியல் துறையில் நமக்கு என்ன குறை உள்ளது? எழுதப் படிக்கத் தெரியாத, 21 வயது வந்த, தற்குறிகளுக்கு எல்லாம் ஓட்டு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இவன்கள் எல்லாரும் தமிழ் நாட்டில் மந்திரியாகவும், சட்டசபை மெம்பராக வரவும் உரிமை அளிக்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டும் அல்ல, இன்று பறையர், சக்கிலிகள் என்று இழிவுபடுத்தப்பட்டவர் எல்லாரும் கூட கலெக்டராக, ஜட்ஜாக, மந்திரியாக வர வாய்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. பெண்கள் எல்லாரும் சட்டசபை மெம்பராகலாம், மந்திரியாகலாம். இதைவிட வேறு என்ன வேண்டும்? இவ்வளவு உரிமைகள் இருந்தாலும் கூட, நாம் இவற்றால் எந்தவித நன்மையும் அடையாததோடு தொல்லைகள் தானே அடைந்து வருகிறோம்?

 

தோழர்களே! 100 - க்கு 97 - நபர்கள் நாம். நாம் தான் இழிமக்களாக, சூத்திரர்களாக, பெரிய உத்தியோகம் பார்க்காதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். உழுவது, சிரைப்பது, வெளுப்பது, நெய்வது, கக்கூஸ் எடுப்பது முதலிய எல்லா அத்தியாவசியமான தொழிலும் செய்வது நாம் தான். இப்படிப்பட்ட நாம் இழிமக்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றோம். இந்த நிலை ஏன்? என்னையா! இன்றைய அரசியல் உரிமையைவிட இந்தக் கட்சிக்காரர்கள் வேறு என்ன வேண்டும் என்கின்றார்கள்? கழுதைக்கு, மாட்டுக்கு, குதிரைக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்கின்றார்களா? இந்த நாட்டில் அரசியல் என்பதாக ஒன்று என்றுமே இருந்ததில்லை. புராண காலம் தொட்டு நான் கூறுகின்றேன். எவன், என்ன கொள்கைப் பேரில் மக்களுக்கு நன்மை ஏற்படும் முறையில் ஆட்சி செய்தான் என்று கூற முடியுமா? எல்லாம், அசுரன் ஆள்வதா? தேவர் (பார்ப்பான்) ஆள்வதா? என்ற போட்டிதானே இருந்தது?அடுத்து, சேரன், சோழன், பாண்டியன், வெங்காயம் என்பவர்கள் ஆண்டதாகக் கூறப்படுகின்றதே! இந்தப் பசங்களாவது மக்களுக்கு என்று ஏதாவது நன்மை ஏற்படும்படி ஆண்டு இருக்கிறார்களா? இந்தப் பசங்கள் வெளிநாட்டுக்குப் போய் வென்றார்கள், அது பண்ணினார்கள், இது பண்ணினார்கள் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்களே! இந்த ராஜாக்களில் எவனாவது மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று ஒரு பள்ளிக்கூடம் கட்டினார்கள் என்று கூற முடியுமா? இந்த முட்டாள் பசங்கள், பார்ப்பான் படிக்க வேத பாடசாலை, சமஸ்கிருதப் பள்ளிகள் ஏற்படுத்தி, ஓசிச் சோறும் போட ஏற்பாடு செய்து இருப்பார்களே ஒழிய, நமது சமுதாயத்திற்காக என்று எந்த காதொடிந்த ஊசி அளவாவது நன்மை செய்தார்களா?

 

நான் ஒன்றும் விளையாட்டுக்கு ஆகவோ, இவர்களைத் திட்ட வேண்டும் என்பதற்காவோ இப்படிக் கூறவில்லை. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் என்ற ஊர்க் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண பாண்டியன் என்ற ராஜா, தன் மனைவியை, தான் மோட்சம் அடைவதற்காகப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாக கோயில் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது! இவனது சிவ பக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே - வரகுண மகாராஜன் தன் மனைவியினைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததைப் புகழ்ந்து பாடியுள்ளார். இந்தப் பாண்டியன், சேர, சோழர்களை எல்லாம் வென்ற பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்டவன்தான் இப்படிக் கேவலமாக மானமற்று நடந்து கொண்டான். இந்த அரசர்கள் எல்லாரும் பார்ப்பான் சுகவாழ்வு வாழவும், நாம் என்றென்றைக்கும் இழி மக்களாக இருக்கவுமே, மனு (அநீதி) முறைப்படி ஆட்சி செலுத்தி இருக்கின்றனர். இவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது எல்லாம் ‘இவன் மனு முறை தவறாது ஆண்டவன்' என்றும் புகழ்ந்து கூறப்படுகின்றது!

 

அடுத்து நாயக்கனோ, மராட்டியனோ, முஸ்லிமோ ஆட்சி செலுத்தினார்கள் என்றாலும், இவர்களும் மக்களுடைய குறைபாடுகள் மற்றும் தேவைகள் என்ன என்று ஆய்ந்து அதற்காகப் பரிகாரம் தேடியவர்கள் அல்ல. நமது தற்குறி நிலைமையைப் போக்கவும், நம் இழிவுகள் போக்கவும் பாடுபடவே இல்லை. அடுத்து வெள்ளைக்காரன் ஆண்டான். இவனாவது நமது இழி நிலையினைப் போக்கவும், நமது தற்குறித் தன்மையினையும் போக்க வேண்டும் என்ற கருத்தை வைத்து ஆண்டார்களா? இல்லையே! அடுத்து சுதந்திரம் - வெங்காயம் வந்தது என்று கூறிக் கொண்டார்களே - நடந்ததா? காமராசர் முதலமைச்சர் பதவிக்கு வரும்வரை 10, 12 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ததே, இவர்களாவது நமது தற்குறித் தன்மையினைப் போக்க முயன்றார்களா? இல்லையே! ஆனால், பார்ப்பான் மட்டும் எந்தக் காலத்திலும் 100 - க்கு 100 - படித்தவர்களாகவே ஆதிக்கக்காரர்களாகவே இருந்து இருக்கின்றனர். எனவே, இந்த நாட்டு மக்களின் குறைபாடுகளைப் போக்க வேண்டும்; இழிவினைத் துடைக்க வேண்டும் என்ற கொள்கையின் பேரில் எந்தக் காலத்திலும் அரசியல் நடைபெறவே இல்லை.

 

(வட ஆற்காடு மாவட்டம் பேரணாம்பட்டில் 07.04.1961 அன்று தந்தை பெரியார் ஆற்றிய உரை)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_3096.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE