Language Selection

சமூகவியலாளர்கள்

நம் நாட்டு பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிராமண நிரூபர்களும் செய்து வரும் அயோக்கியத்தனங்களைப் பற்றி நமது பத்திரிகையில் கடுகளவு சுத்த ரத்தம் உள்ளவர்களுக்கும் இனி இம்மாதிரி நடக்காமலிருக்கும்படியும், மானம், வெட்கம் வந்து தீரும்படியும் பல தடவைகளில் எழுதி வந்திருக்கிறோம். அநேகக் கூட்டங்களிலும் நன்றாய்ப்படும்படி பேசியும் வந்திருக்கிறோம். வேறொரு கூட்டத்தாராய் இருந்தால், ஒன்று யோக்கியர்களாகி இருப்பார்கள் அல்லது தற்கொலையாவது புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், என்ன சொன்னாலும் தங்கள் காரியமானால் போதும் என்கிற எண்ணத்தின் பேரில் மற்றவர்களை எப்படியாவது ஒழித்து வயிறு வளர்ப்பதற்கு மனுஷ சுபாவத்தையே உதறிவிட்டு மேலும் மேலும் அயோக்கியத்தனமான காரியங்களையே செய்து வருகிறார்கள். இந்த மானமற்ற, கூட்டத்தை நமது நாட்டில் இப்படியே வைத்துக் கொண்டு நாம் எப்படி விடுதலையடைய முடியும்?

 

சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் நாகை தொழிலாளர் கூட்டத்தில் பேசியவற்றைப் பற்றி 'இந்து','சுதேசமித்திரன்' பத்திரிகைகள் அதன் நிரூபர்கள் எழுதுகிறார்கள் என்று எழுதியிருப்பதானது வேண்டுமென்றே எழுதியிருக்கும் அயோக்கியத்தனமான எழுத்துக்களாகும். நல்ல ஜாதியான்களாயிருந்தால் நாயக்கர் பேசியவற்றை எழுதி அதற்கு தகுந்த மறுப்புகளை எழுதும். அப்படிக் கில்லாமல் பாமர ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கிற ஜாதியானதால் பேசியவைகளையும் விட்டு, நடந்த விஷயங்களையும் விட்டு, நடக்காததையும் எழுதி வயிறு வளர்க்க ஆசைப்படுகிறது. அக்கூட்டத்தின் முடிவில் சங்க உதவி அக்கிராசனர் எழுந்து சிறீமான் நாயக்கரின் அபிப்ராயந்தான் தனது அபிப்ராயமென்றும் இவ்வருஷம் சங்க ஆண்டு விழாவுக்கு ஒரு தொழிலாளரையே அக்கிராசனராய்த் தேர்ந்தெடுக்கப் போவதாயும், ஆனால் சங்கத்தில் உள்ள சில அங்கத்தினர் ராஜீய விஷயங்களில் பிரவேஷித்து சங்க நடவடிக்கையைக் கெடுக்கிறார்கள் என்றும், உதாரணமாக சங்கத்தின் சார்பாய் ஒரு கதர் டிப்போ வைப்பதை சங்கத்தில் உள்ள சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர் கெடுத்தார் என்றும், இன்னும் பலவிதமாய் ராஜீய அபிப்ராயங்களை சங்கத்தில் கொண்டு வந்துவிட்டு சங்கத்தை ஒழுங்காய் நடைபெற முடியாமல் சூழ்ச்சிகள் செய்கிறார்கள் என்றும், ஆதலால் தான் இதில் ஸ்தானம் வைப்பதில் பிரயோஜனமென்ன என்று சொல்லி ராஜிநாமா கடிதத்தை வாசித்தார். சங்க காரியதரிசியும் இதை ஒட்டியே சில வார்த்தைகள் சொன்னார். பின்னர், பலர் கேட்டுக் கொண்டதின் பேரில் அதைத் திருப்பி வாங்கிக் கொண்டார்.

 

இப்படி இருக்க சிறீமான் நாயக்கர் சொல்லுவதைத் தான் ஒப்புக் கொள்ளவில்லை என்றும், அந்நியர்கள்தான் சங்கத்திற்கு உதவி தலைவராயிருக்க வேண்டுமென்று சொல்லி அதற்காகவே தான் ராஜிநாமா செய்வதாக சொன்னாரென்றும் ' இந்து', 'சுதேசமித்திரன்' பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. இது யோக்கியமானதாகுமா? நாம் கடினமான பதம் உபயோகிப்பதாய்ச் சொல்லும் மிருதுவான பதக்காரர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? தொழிலாளர் சங்கத்தில் தொழிலாளி அல்லாதவர்கள் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்றால், இந்த ஐயர், ஐயங்கார் கூட்டங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வந்து, இவ்வளவு அல்பத்தனமான காரியம் செய்வானேன்? டாக்டர் வரதராஜூலு நாயுடு அவர்கள் கூட தொழிலாளர் நிர்வாகத்தில் அந்நியர் கூடாது என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். பாவம்! ஏழைத் தொழிலாளரான வாயில்லாப் பூச்சிகளை ஏமாற்றி தலைவர்களாகி அவர்களின் ஓட்டு வாங்கி பிராமணரல்லாதார் தலையில் கையை வைப்பதற்கு யாராவது விரோதமாயிருந்தால் அவர்களை அடியோடு ஒழிப்பதற்கு இவ்வளவு கொலை பாதகம் செய்யவேண்டுமா?

 

இதுபோலவே கொஞ்ச நாளைக்கு முன் சிறீமதி அலர்மேலு மங்கைத் தாயாரம்மாள் சொன்ன காலத்திலும் இந்தப் பிராமணப் புலிகள் சீறி விழுந்தனர். இந்த பிராமண சிகாமணிகளுக்கு தொழிலாளிகளிடம் அன்பு இருக்குமானால் வெளியிலிருந்து செய்யட்டுமே. முனிசிபல் எலெக்ஷனில் யாராவது ஒரு தொழிலாளியை நிறுத்தி ஓட்டு வாங்கிக்கொடுக்கட்டுமே. சட்டசபைக்கு யாரையாவது நிறுத்தி ஓட்டு வாங்கிக் கொடுக்கட்டுமே. சிறீமான் புர்றா, பாஷ்யம், மல்லய்யா, ஈ.எல்.ஐயர் ஆகிய இந்த பிராமணர்களுக்காக பணம் சிலவு செய்து கவுன்சிலராக்குகிறவர்கள் ஏன் இந்த தொழிலாளிகளில் ஒன்று இரண்டு ஆள்களுக்கு செய்யக்கூடாது. அதையெல்லாம் விட்டு விட்டு தொழிலாளிகளுக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாத சில பொறுப்பற்ற பிராமணர்கள் ஒன்று சேர்ந்து கொள்வதும், நாங்கள்தான் தொழிலாளிகளுக்கு தர்மகர்த்தா, எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள்.

 

உங்களுக்கு சாதித்து விடுகிறோம் என்று அவர்களை ஏமாற்றுவதும் அதற்கேற்றாற் போல் தொழிலாளிகள் கூட்டத்தில் ஏதாவது ஒன்று இரண்டு வாயாடிகளை ஏதேனும் கொடுத்து சுவாதீனம் செய்துக் கொண்டு அவர்கள் தயவில் உபசாரப் பத்திரம், மாலை, வண்டி சவாரி, 'ஜேய்' முதலியவைகள் அநுபவிப்பதுமான காரியங்களுக்கு மாத்திரம் தொழிலாளிகளின் தலைவர்களாக வேண்டுமானால் இது எப்படி நடக்கும்? இனியாவது நமது தொழிலாள சகோதரர்கள் இந்த பொய்யர்கள், வம்பர்கள், சுயநலப் புலிகள் ஆகிய கூட்டத்தாருக்கு இடம் கொடுக்காமல் தங்கள் காலிலேயே தாங்கள் நிற்கும்படியான யோக்கியதையை அடைய வேண்டுகிறோம். அதோடு கூடவே இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளையும் நம்பி மோசம் போகாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

 

(குடிஅரசு-06.06.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_03.html

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்;
பரப்பியவன் அயோக்கியன்;
வணங்குகிறவன் காட்டுமிராண்டி -

என்று நான் கூறிவருவது கண்டு பார்ப்பனர் நெருப்பின் மீது நிற்பது போல் துள்ளுகிறார்கள், துள்ளிக் குதிக்கின்றார்கள். அப்பாவிகளையும், கூலிகளையும் பிடித்து நம்மீது ஏவி விடுகிறார்கள். பெரும், பெரும் போராட்டங்கள் நடத்தப்போவதாகப் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதை நான் வரவேற்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன்; போராட்டம் துவங்கினால் எனது மேற்கண்ட பிரசார வேலைக்கு உதவியாகும் என்பதோடு மேலும் இத்தொண்டு செய்ய உற்சாகமூட்டி ஊக்கமளிக்கும் என்று கருதுவது தான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காகக் கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான் கடவுளை "உண்டாக்கியவன் முட்டாள்" என்றால் எதற்காக நீங்கள் கோபித்துக் கொள்ளவேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என்றால் உண்டாக்கியவன் யார்? அச்சொல் யாரைக் குறிக்கிறது? கோபிக்கிறவனே நீ கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்கிறாயா? உனது முட்டாள்தனத்தைக் காட்டத்தான் கோபிக்கிறாய். ஆத்திரப்படுகிறாய். நிற்க, உன் ஆத்திரத்திற்குக் காரணம், ஆதாரம் என்ன?

 

முண்டமே! நீ நினைக்கும் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, அது ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறாயா? அல்லது, கடவுள் யாராலும் உண்டாக்கப்படாமல், யாராலும் கண்டு பிடிக்கப்படாமல் தானாக, இயற்கையாக, கடவுள் இஷ்டப்படி கடவுளே தோன்றிற்று என்கிறாயா? நான் சொல்வதில் உனக்கு ஆத்திரம், கோபம் வருவதாயிருந்தால், எதற்காக வரும்? நான் சொல்வதைக் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று நீ கருதினால்தானே உண்டாக்கியவனை நான் முட்டாள் என்கிறேன் என்று நீ கோபிக்க வேண்டும்! மற்றும், கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்று கருதுகிறவனுக்குத்தானே கோபம், ஆத்திரம் வர வேண்டும்! நீ கோபிப்பதால் கடவுள் ஒருவனால் உண்டாக்கப்பட்டது என்பதை நீ ஒப்புக்கொள்கிறாய் என்று தானே அர்த்தம்! அது மாத்திரமல்லாமல், நீ கோபிப்பதால் கடவுளையும் அவமதிக்கிறாய் என்று தானே கருத்தாகிறது!

 

இப்போது நீ நினைத்துப்பார்! கடவுள் உண்டாக்கப்பட்டதா! (கிரியேஷனா? (Creation) அல்லது கடவுள் கண்டுபிடிக்கப்பட்டதா? (இன்வென்ஷனா? (Invention) அல்லது கடவுள் இயற்கையாய்த் தோன்றினதா? நேச்சரா? (Nature) இதை முதலில் முடிவு செய்து கொள். நான் சொல்வதன் கருத்து கடவுள் கண்டு பிடிக்கப்பட்டதுமல்ல. தானாகத் தோன்றியதுமல்ல, முட்டாளால் உண்டாக்கப்பட்டது என்பதாகும். அதை அதாவது கடவுளை ஒரு மனிதன் உண்டாக்கினான். என்பதாக நீ நினைத்தாலோ அல்லது அதை நீ ஒப்புக் கொண்டதாலோ தானே கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்றால் நீ கோபித்துக் கொள்ள வேண்டும்! நீ இருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் கடவுள் ஒருவராலும் உண்டாக்கப்பட்டதல்ல. "தானாக சுயம்புவாகத் தோன்றியிருக்கிறது" என்பது தான் இன்று கடவுள் நம்பிக்கைகாரர்களின் கருத்து ஆக இருக்கிறது.

 

ஆகையால் நான் கடவுளை உண்டாக்கியவனை முட்டாள் என்பதோடு அதற்காகக் கோபிப்பவனை இரட்டை முட்டாள் என்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இப்படி நான் சொல்வதால், கடவுளால் எவன் பெரிய ஜாதியாய் இருக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ, அவனுக்கும் கடவுள் பேரால் பொறுக்கித் தின்ன வேண்டுமென்று கருதிக் கொண்டிருக்கிறவனுக்கும், கடவுளால் தனது அயோக்கியத்தனங்களை மறைத்துக் கொள்ள வேண்டியவனுக்கும் தாம் கோபம் வரவேண்டும். அதை நான் சமாளித்துக் கொள்கிறேன்.

 

(தந்தை பெரியார் - "உண்மை" 14.-03-1970)

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்"

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள் தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிறவன்கள், செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை.

 

"கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்," "கருணையே வடிவானவர்," "அன்பு மயமானவர்," "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மைகளை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

 

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்ல முடியும்? இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு, உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள், நகைகள், சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர். " அன்பும் கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும், நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்குகிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன்.

 

இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர்களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும். சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 -கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. படித்த மக்களும், புலவர்கள், வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள்களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்? இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண், பெண் கடவுள்களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன். இப்படி நான் எழுதுவதில் சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம்.

 

அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! " கோவில்கள் கள்ளர் குகை" என்று கூறிய கிறிஸ்து கொல்லப்பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கள் "கடவுளுக்கு" மேலாகக் கருதுகிறார்கள்.

 

" கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள் மடையர்கள்" என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாக கருதுகிறார்கள், இவ்வளவு ஏன்?

 

நம் கண் முன்னால் " கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள். உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக்கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள் மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள். எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.

 

(தந்தை பெரியார் - "உண்மை" 14-04-1970)

"கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்" என்ற தலைப்பில் "உண்மை" மூன்றாவது இதழ் முதல் கட்டுரையில் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் "கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்" என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதியிருந்தேன் . இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுதப்படுகிறேன். பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு, தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்து கொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ, பொருத்தமோ, விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான். இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா?

 

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமே ஒழிய யோக்கியர்கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்லமுடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக்களாவது மக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? இது பொது விளக்கமாகும்.

 

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப் பற்றி விளக்குகிறேன். நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன். ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம் தலையும் அவைபோன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல், மிருகம், முதலிய உருவங்கள் கொண்டவைகளையும் வணங்குகின்றான் என்பதே.

 

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும், ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்று தான் கேட்கிறேன். மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன். மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை, ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால், நெய், தேன், தயிர், இளநீர், எண்ணெய், அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால், இந்த முட்டாள் தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கின்றேன். மேலும் இதற்காக ஏற்படும் பொருள் செலவு , நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

 

(தந்தை பெரியார் - உண்மை 14-05-1970 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_05.html

இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 - கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை.

நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்' மூன்று. அவை :
1. கடவுள், மதம், சாஸ்திரங்கள்
2. சாதி
3. ஜனநாயகம்

என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்:

1. பார்ப்பான்
2. பத்திரிகைகள்
3. அரசியல் கட்சிகள்
4. தேர்தல்கள்
5. சினிமா

ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன். அதுபோலவே, நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி வருகிறேன். அவை, அம்முட்டுக் கட்டைகள்:

1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.
2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும்.
3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும்.

இவை, ‘முட்டுக்கட்டைகள்' என்று சுமார் 2500 - ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னார் என்றாலும், அதற்குப் பிறகு, இன்று இந்த ‘இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக' விளங்கும் கருஞ்சட்டைக்காரர்கள்தாம் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும் ‘பிரபல' பார்ப்பனத் தலைவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திரு. ராசகோபாலாச்சாரியார், கே.எம். முன்ஷி, சங்கராச்சாரியார் போன்றவர்கள் எங்கு எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம்முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி அதாவது ‘நாம் எக்காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்க வேண்டும்' என்று பேசி வருகிறார்கள்.

இப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக்காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் ‘சர்வரோக நிவாரணி' தயாரித்து வைத்துள்ளதைப் போன்று சொல்லி வருகிறார்கள். மக்களுக்குச் சிந்தனா சக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான், இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும். ‘முன்னோர்கள், பெரியவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்' என்று கேட்டால் "ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள் தாம்' என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.இவர்களெல்லாம் யார்? எப்போதிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அதற்கென்ன ஆதாரம்? சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு - அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும்.

இந்த ரிஷிகள், தெய்வீகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் - புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கறையான் பிடித்த சிலவற்றைக் காட்டக் கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலுள்ளவைகள் எல்லாம், ‘பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன'வென்று. இப்படி முன்னோர்கள் சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும் வாயினால் மாத்திரம் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. இந்நாட்டில் 100- க்கு 84 - போராக உள்ள ‘இந்துக்களுக்கு' உரிய சட்டமாகிய இந்து ‘லா'விலும் நுழைத்துப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள்.இந்து ‘லா'வின் அடிப்படைகளில் ஒன்று, சுமார் 20 -ரிஷிகள் (ஸ்மிருதிக்காரர்கள்) சொன்னதாகும்.

நாரதர், பராசரர், யாக்ஞவல்கியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், மனு போன்றவர்கள் என்ன கருத்துக் கொண்டார்களோ அதைக் காட்டித்தான் இன்று அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் போன்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப் பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக் களஞ்சியங்களாகவே இருக்கின்றன. இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி ‘மகிமைகள்' புரிந்திருந்துங்கூட, நாம் இன்றைக்கும் வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக் கொள்ளவில்லையே, ஏன் என்றால் என்ன பதில் கூறமுடியும்? எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகிய பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய வேறில்லை.

ஆகவே, இம்மூன்று முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய, நாம் முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில், தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும் அதில் புரண்டு இன்பங் காணும் பன்றிகளாக நம் மக்களும் இருக்க வேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக் கட்டைகளை ஒழிக்க வேண்டியது, தமிழ் மக்களின் முக்கிய முதற் பணியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


(தந்தை பெரியார் "விடுதலை" தலையங்கம் - 22.05.1959 )

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_06.html

 

  பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

 

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.

 

அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

 

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

 

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

 

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

 

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.

 

முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

 

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

 

"Patriotism is the last refuge of a scoundrel'' -"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்

 

(கீழ்வெண்மணியில் 42 - தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை, ‘விடுதலை' 28.12.1968)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_09.html

சென்னையின் யோக்கியதையை அறிந்து போக வெளியிடங்களிலிருந்து யார் வந்தாலும் அவர்களை நமது பார்ப்பனர்கள் எப்படியாவது மயக்கி குல்லாய் போட்டு தங்கள் சுவாதீனம் செய்து கொள்ளும் தந்திரமும் செளகரியமும் நம்மவர்களிடத்தில் இல்லை என்பதை எல்லோரும் அறிந்த விஷயம். தேவஸ்தான சட்ட சம்மந்தமாய் இந்தியா நிர்வாக சபை மெம்பர் சிறீமான் எஸ்.ஆர். தாஸ் இங்கு வந்த பொழுது அவருக்குப் பார்ப்பனர்கள் செய்த விருந்தும், பெண்களைக் கொண்டு ஆடல் பாடல் கச்சேரிகள் செய்ததும், மடாதிபதி மகந்துகளையும் கூட்டி அறிமுகம் செய்து வைத்ததும் அந்த விருந்துக்கு ஒத்துழையாத பார்ப்பனர் என்பவர்கள் முட்டுக்கட்டை பார்ப்பனர் என்பவர்கள், பூரண சுயேச்சை பார்ப்பனர் என்பவர்களும், அரசாங்க உத்தியோகஸ்தர் வெள்ளைக்காரர்கள் ஆகியவர்களின் அரசாங்க சம்மந்தமான களியாட்டு காரியங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற பார்ப்பனர்களும், காந்தி குல்லாயும் தேசீயக் கொடியும் பிடித்து இரும்புச் சட்டத்தைத் துலைக்க வேண்டும் என்று சொல்லித் திரியும் பார்ப்பனரும், "அரசாங்கத்திற்கு குலாமல்லாத" பார்ப்பனர்களும் மற்றவர்களை நக்கிப் பொறுக்கி குலாம் சர்க்கார், பூஜாரி என்று சொல்லும் பார்ப்பனர்களும், சென்று நன்றாய் தின்று குடித்து களியாட்டத்தில் கலந்திருந்தது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அது போலவே இம்மாதத்திலும் இந்தியா நிர்வாக சபையில் இருந்து சர் அலெக்ஸாந்தர் முட்டிமென் என்கிற ஒரு துரை மகன் வெள்ளைக்காரர் வந்ததற்கு அதே சிறீமான் ரங்காச்சாரியார் கொடுத்த விருந்திற்கு ஒத்துழையாமை, முட்டுக்கட்டை, சர்க்கார் சம்மந்த விருந்து பஹிஷ்காரம், பூரண சுயேச்சை ஆகிய பல பார்ப்பனர்களின் தத்துவ தலைவருமான சிறீமான்கள் எஸ்.சீனிவாசய் யங்கார், எ. ரெங்கசாமி அய்யங்கார் முதலியவர்கள் போய் உண்டு, குடித்துக் களித்து புரண்டதோடு ஒன்றாய் உட்கார்ந்து படம் பிடித்துக் கொண்டார்கள் என்றால் இதன் அர்த்தமென்ன?

 

ஒரு ஊரில் ஒரு புராணப் பிரசங்கியார் ஒரு விதவா சிறீ ரத்தினத்தை வைப்பாக வைத்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் புராணப் பிரசங்கம் செய்யும் போது விதவா சம்மந்தம் கூடாது என்றும், அது இருவருக்கும் பாவமென்றும், மேல் லோகத்தில் நெருப்பில் காச்சிய இரும்புத் தூணைக் கட்டி பிடிக்கச் சொல்லுவார்கள் என்றும், அதனால் சிரேய்சு குறைந்து போகுமென்றும் இன்னமும் பலவிதமாக ஞானோபதேசம் செய்தார். சாஸ்திரியாரின் வைப்பாட்டியான விதவை அம்மாள் அவர்களும் அந்தப் பிரசங்கத்திற்குப் போயிருந்தார்கள். சாஸ்திரியார் வீட்டுக்கு வந்த உடன் நீர் இனிமேல் என்னைத் தொடாதீர்! இவ்வளவு பாவமும் தோஷமும் மேல் லோகத்தில் இவ்வளவு கஷ்டமும் இருக்கிற சங்கதி எனக்கு இது வரையில் தெரிவிக்காமல் சாஸ்திரிகள் சம்மந்தத்தால் மோட்சம் புண்ணியம் என்று சொல்லி என்னை ஏமாற்றி விட்டீர்! போதும், போதும் எட்டி நில்லும் என்று சொல்லி விட்டாள். சாஸ்திரியார் உடனே அம்மாள் காலில் விழுந்து நான் அது ஊரார்களை ஏய்த்து வயிறு வளர்க்கச் சொன்னதே தவிர நமக்கும் உனக்கும் அது கட்டுப்படுத்தாது. எங்காவது ஸ்திரீ எவ்வளவுதான் பதிவிரதை யானாலும் புருஷனில்லாமல் இருக்க முடியுமா? 'புருஷன்தானாகட்டும் எப்படிப்பட்டவனானாலும் ஸ்திரீ இல்லாமல் இருக்க முடியுமா? இயற்கைக்கு விரோதமாய் எங்காவது பாவமும் தோஷமும் ஏற்படுமா?" என்று சாஸ்திரியார் வேதாந்தம் போதித்தாராம்.

 

அது போல் நமது சென்னைப் பார்ப்பனர்கள் வெளியில் செய்யும் புராணப் பிரசங்கம் வேறு, தாங்கள் நடந்து கொள்ளும் இயற்கை வேதாந்தம் வேறு. இதை நமது பாமர ஜனங்கள் சரிவர உணராமல் ஏமாந்து போகிறார்கள். என்ன செய்வது? வயிற்றுக் கொடுமையும் பேராசையும் நம்மவர்களைப் போட்டு நசுக்கும் போது எப்படி யோக்கியமாகவும் ஏமாறாமலும் இருக்க முடியும்.

 

(குடி அரசு 26.12.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_306.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE