Language Selection

சமூகவியலாளர்கள்

எந்த ஒரு மனிதனும் திடீரென்று புனிதனாகி விடுவதுமில்லை, தீவிரவாதமுள்ள அரக்கனாகவும் மாறிவிடுவதுமில்லை. சமூகத்தில் நிகழும் சம்பவங்களும், வாழ்வில் அமையும் சூழ்நிலைகளுமே மனிதனின் வாழ்வில் திருப்பு முனைகளை ஏற்படுத்தி விடுகின்றன. இவைகள் ஊழ்வினையால் தான் ஏற்படுகின்றன என்று எடுத்துக்கொண்டால், அது ஒரு பகுத்தறிய வேண்டிய சிந்தனை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பகுத்தறிவுப் பகலவனான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அவரது வாழ்க்கை குறிப்பில் இவ்வாறு...

 

"கங்கை ஆற்றின் கரையில் உள்ள இந்துக்களின் புனித நகரமான காசி நகரை (வாரணாசி) இவர் அடைந்தார். அங்கோ அன்ன சத்திரங்களில் இந்து மதத்தின் மற்றச் சாதியினர்க்கு அனுமதி மறுக்கப்பட்டுப் பார்ப்பனர்க்கு மட்டுமே தனிமதிப்புடன் உணவு வழங்கப்பட்டதால், திராவிட இனத்தவரான இவரால் எளிதாகச் சத்திரத்து இலவச உணவைப் பெற முடியவில்லை.சில நாள்கள் மிகக் கடுமையாகப் பட்டினியால் வாடிய இந்த எழில் தோற்றம் உள்ள இளைஞர் இராமசாமி, வேறு எந்த நேரிய வழியும் தோன்றாத நிலையில், ஓர் அன்ன சத்திரத்தில் நுழைவதற்கு முயன்றார். ஆனால் இவரது கரிய மீசை காட்டிக் கொடுத்து விட்டது. எனவே, வாயில் காவலாளி சத்திரத்திற்குள் இவர் நுழைவதைத் தடுத்ததுடன், முரட்டுத்தனமாகத் தெருவிலே இவரைத் தள்ளிவிட்டான்.

 

அந்த நேரம், சத்திரத்தின் உள்ளே விருந்து முடிந்து விட்டதால், எஞ்சிய சோற்றுடன் எச்சில் இலைகள் தெருவிலே வீசி எறியப்பட்டன. கடந்த சில நாள்களாக வாட்டிய கடும் பட்டினியோ, அந்த எச்சில் இலைச் சோற்றைத் தெரு நாய்களுடன் போட்டியிட்டுத் தின்பதற்குக் கட்டாயப்படுத்தியது இராமசாமியை. அவ்வாறு அந்தச் சோற்றைத் தின்னும் பொழுதே சத்திரத்தின் வெளிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்ட எழுத்துகளை இவர் விழிகள் பார்த்தன. அவையோ இந்த உண்மையை வெளிப்படுத்தின:

 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்கார வணிகரான திராவிட இனத்தவரே அந்தச் சத்திரத்தைக் கட்டியவர். ஆயினும், மிக உயர்ந்த சாதியாரான பார்ப்பனர், தங்களுக்கு மட்டுமே தனி உரிமை கொண்டதாக அதில் குடியேறிவிட்டனர்; இலவச உணவு உண்டனர். திடீரென்று இந்த இளைஞரின் மனத்தில் சில கேள்விகள் தீப்பொறிகளாகத் தெறித்தன. “ஒரு திராவிட அறப்பணியாளர் பணத்தில் கட்டப்பட்ட சத்திரத்தில் திராவிட இனத்தவர் உணவு அருந்துவதைப் பார்ப்பனர் தடுப்பது ஏன்? திராவிடரைப் பட்டினிச் சாவுக்கே தள்ளும் அளவுக்குத் தங்களின் கொடுமையான சாதி முறையை விடாப்பிடியாகக் கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வளவு இரக்கம் இல்லாமலும் மதவெறியோடும் பார்ப்பனர் நடந்து கொள்ள வேண்டுமா?”இந்த வினாக்களுக்கு உரிய நியாயமான விடைகள் பெரியாரின் அறிவுக் கூர்மையான சிந்தனைக்குக் கிடைக்கவில்லை.

 

காசியில் துளி அளவும் இரக்கம் அற்றுப் பார்ப்பனர் இழைத்த அவமானம் பெரியார் உள்ளத்தில் ஆழமான காயத்தை உண்டாக்கிற்று. அதுவே ஆரிய இனத்தின் மீதும் அவர்களின் படைப்புகளான கணக்கற்ற கடவுள்கள் மீதும் அழுத்தமான வெறுப்பு நெருப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. மிக உயர்ந்த ‘புனித நகரம்’ ஆகப் பார்ப்பனரால் போற்றப்படுவதுதான் காசி என்னும் வாரணாசி. ஆயினும் அங்கே காணப்பட்ட மிகமிக அருவருப்பான ஒழுக்கக்கேடான நடவடிக்கைக் காட்சிகளும், பரத்தைத் தொழிலும் (விபச்சாரமும்), ஏமாற்றுதலும், பகற்கொள்ளையும், கெஞ்சிப் பிச்சை கேட்கும் கூட்டங்களும், கங்கை ஆற்றில் மிதந்து செல்லும் பிணங்களும் புனித நகரம் என அழைக்கப்படும் அந்தக் காசியை வெறுக்கும்படியாகவே பெரியாரைத் தூண்டின. அதன் விளைவாக, தமது துறவு வாழ்க்கை பற்றி எழுந்த மறு சிந்தனை, இவர் தமது குடும்ப வாழ்க்கைக்கே திரும்பிச் செல்வதற்கு வழி கோலிவிட்டது.

 

இவர் ஈரோடு திரும்பியதும், இவர்தம் தந்தையார் தமக்குள்ள வணிக உரிமைகள் அனைத்தையும் இரண்டாவது மகனான இவருக்கே ஒப்படைத்தார். தமது மிகப்பெரிய நிறுவனத்திற்கும் ‘ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி’ என மறுபெயர் சூட்டிவிட்டார்." காசி சத்திரத்தில் நடந்த இச்சம்பவம், ஈ.வெ.ரா.என்ற நாயக்கனை சரித்திர நாயகனாக மாற்றியது எனலாம். அன்று தாழ்த்தப்படத் தொடங்கிய தாழ்த்தப்பட்ட சமுதாயக் கொடுமைகள் இன்று வரை தாழ்த்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் எண்ணிப் பார்க்க வேண்டியது பெரியார் என்ற அன்றைய இளைஞனின் அறிவொளியைத் தான். இனி சாதிகள் சாகட்டும். சமத்துவம் பெருகட்டும்.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_18.html

சிறீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் கும்பகோணத்தில் பேசிய பேச்சைப் பற்றி 18.08.1926- இல் 'சுதேசமித்திரன்' தனது உப தலையங்கத்தில் 'அபத்தப் பஞ்சாங்கம்' என்ற தலைப்பின் கீழ் சிறீமான் இராமசாமி நாயக்கர் எழுத்தும், பிரசங்கங்களும் வரவர விபரீதமாயிருக்கிறது என்றும், நாயக்கருக்கு சீக்கிரத்தில் கவர்ன்மெண்டு அடிமை முத்திரை போடப்பட்டுவிடும் என்றும், நாயக்கர் பேசுகையில் எவ்வித காரணமில்லாமல் சிறை சென்றதற்கு விசனப்படுகிறேன் என்றும், பிராமண சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்றும் சொன்னதாக எழுதி, இதன் மூலம் நாயக்கருக்கு அசட்டுப் பட்டம் ஏற்பட்டு விட்டதாகவும், நாயக்கரை ஒரு பிராமணனும் ஏமாற்றி சிறைக்கனுப்பவில்லை என்றும் காங்கிரசினால்தான் பனகால் ராஜாவுக்கு மந்திரியானதென்றும் நாயக்கருக்கு ராஜீய உலகில் ஒரு முக்கிய ஸ்தானம் கிடைத்ததென்றும் அப்படி இருக்க, காங்கிரசை இகழ்வது மாதுரு துரோகமென்றும் எழுதுகிறான்.

 

இவற்றை நன்றாய் ஆராய்ந்து நாயக்கர் மாதுரு துரோகியா அல்லது 'மித்திரன்' கூட்டத்தார் மாதுரு காமியா என்பதை கவனிப்போம். இப்பார்ப்பன 'மித்திரன்' யோக்கியனாயும் பயங்காளியாயில்லாதவனாயுமிருந்தால் கும்பகோணத்தில் நாயக்கர் இரண்டரை மணி நேரம் பேசிய பேச்சை கொஞ்சமாவது எழுதியிருக்க வேண்டும். 'மித்திரனே' நாயக்கரைப் பற்றி எழுதுகையில் நாயக்கர் வெறும் ஆளல்ல, ராஜீய உலகத்தில் (எந்த விதத்திலோ) ஒரு முக்கிய ஸ்தானம் அடைந்தவர் என்று ஒப்புக் கொள்ளுகிறான். அப்படியிருக்க, அப்படிப்பட்டவர் பேசியதை பிரசுரிக்காமல் விட்டது எவ்வளவு அக்கிரமம் என்பதை வாசகர்களே உணர வேண்டும்.

 

நாயக்கர் ஜெயிலுக்குப் போனதைப் பற்றி சொன்ன வார்த்தைகள் என்னவென்றால் இந்த பார்ப்பனர்களை நம்பி சுயராஜ்யத்திற்கு என்று ஜெயிலுக்குப் போனது முட்டாள்தனமென்று உணருவதுடன் இப்படிப்பட்டவர்களை நம்பி ஜெயிலுக்குப் போனோமே, இப்போது அதன் பலன்கள் சுயராஜ்யத் திற்கு உதவாமல் பார்ப்பனராட்சிக்கு உதவுவதோடு பார்ப்பனரல்லா தாரின் அடிமைத்தனத்திற்கும் நிரந்தர தாழ்வுக்கும் உபயோகப்படும் படியாய் விட்டதே என்று வருத்தப்படுவதுடன் இக்காரியத்திற்கு நாமும் துணை நின்றோமே என்று நினைத்து வெட்கப்படவேண்டியதாயுமிருக்கிறது என்றே பேசினார்.

 

அல்லாமலும் இனியும் இந்த பார்ப்பன ஆதிக்கமிருக்கும் வரை சுயராஜ்யத்திற்கென்று ஜெயிலுக்குப் போவது பயித்தியக்காரத்தனமாய் முடியுமென்றே இன்னமும் சொல்லுகிறோம். ஏனெனில் சிறீமான்கள் நாயக்கர், நாயுடு முதலிய பல ஆயிரக் கணக்கான பேர்கள் நமது நாட்டில் ஜெயிலுக்குப் போனதை சொல்லிக்கொண்டு அதன் பலனை நமது பார்ப்பனரே அனுபவிக் கிறார்கள். தேச மக்களுக்கு அது கொஞ்சமும் உபயோகப்படாமலே செய்து விட்டார்கள். பார்ப்பன சூழ்ச்சி வலையில் அகப்பட்டுக் கொண்டேன் என்று சொல்ல வரவில்லை. பார்ப்பனர்களை நம்பினேன் அவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொன்னோம்.

 

சிறீமான்கள் சீனிவாசய்யங்காரையும், எ. ரெங்கசாமி அய்யங்காரையும், எஸ். சத்தியமூர்த்தி அய்யரையும் நாம் எப்பொழுதுமே நம்பவில்லை. அவர்களால் ஏமாந்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் சிறீமான் சி.இராஜகோபாலாச்சாரியாரை நம்பினோம்; அவர் மோசம் செய்து விட்டார். அவரை நம்பி மோசம் போனோமே என்றுதான் வருத்தப்பட்டோம். இதை மகாத்மா காந்தியிடமும் நேரில் சொன்னோம். இதற்காக 'மித்திரன்' நாயக்கர் ஏமாறுவதற்கு அவர் சிறு பிள்ளையா சிறுபிள்ளைத் தனமா? என்று எழுதியிருக்கிறான்.

 

நாயக்கர் சிறு பிள்ளையா? கிழவனா? என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாயக்கர் மாத்திரம் பார்ப்பனர்களால் ஏமாறவில்லை. கோடிக்கணக்கான பார்ப்பனரல்லாத ஜனங்கள் ஏமாந்து போனார்கள்; ஏமாந்து போகிறார்கள்; இன்னமும் பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் வருகிறார்கள். இவ்வளவும் போதாமல் மகாத்மா காந்தியே இப்பார்ப்பனர்களை நம்பி ஏமாந்து போய்விட்ட தோடு "படித்தவர்களை நான் நம்பினேன் நம்பின அளவு பலனடைய வில்லை" என்றே சொல்லியிருக்கிறார். படித்தவர்கள் யார் என்று கூட சொல்ல வேண்டுமா? நிற்க, ஜெயிலுக்குப் போவதில் இன்னமும் நமக்கு சலிப்பு ஏற்பட்டுப் போகவில்லை.

பார்ப்பன ஆதிக்கத்திற்காக ஜெயிலுக்குப் போவது தப்பு என்று மாத்திரம் எண்ணுகிறோமே ஒழிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு நாமும் நம் குடும்பமும் நண்பர்களும் இனியும் எத்தனை தடவையானாலும் ஜெயிலுக்குப் போகக் காத்துக் கொண்டுதானிருக்கிறோம். சட்டசபைத் தேர்தல்கள் முடிந்தவுடன் கண்டிப்பாய் அந்த பாக்கியம் கிடைக்குமென்றே மனைவியார் சகிதம் சந்தோஷத்துடன் காத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கு வேண்டிய காரியங்கள் நமது பார்ப்பனர்களால் வெகு நாளாகவே நடந்து வருவதையும் நாம் அறிவோம். தவிர காங்கிரசினால்தான் நமக்கு யோக்கியதை வந்ததாக 'மித்திரன்' எழுதுகிறான். காங்கிரசினால் நமக்கு யோக்கியதை வந்ததா?

 

நம் போன்றவர்களால் காங்கிரசுக்கும் 'மித்திரன்' கூட்டத்தாராய இப்பார்ப்பனர்களுக்கும் யோக்கியதை வந்ததா? என்பதை வாசகர்களே தான் அறிய வேண்டும். நாயக்கர் காங்கிரசுக்கு வரும்போது காங்கிரசுக்கு நாட்டில் இருந்த யோக்கியதை யாரும் அறியாததல்ல. யாரோ நான்கு படித்த பார்ப்பனர்களான அனாமதேயங்களும், அன்னக் காவடிகளும் அதில் சேர்ந்து பணம் சம்பாதித்து வந்தார்கள். அவைகளை வைத்துக்கொண்டு மாதம் 10 -ரூபாய்கூட தங்கள் வக்கீல் உத்தியோகத்தில் சம்பாதிக்க முடியாமலிருந்தவர்கள் காங்கிரசில் சேர்ந்து, பத்திரிகைகள் போட்டு, வெறும் அபத்தப் பஞ்சாங்கத்தையே எழுதி அதன் பேரால் மாதம் 1000,2000,5000 வீதம் நமது பொருளைக் கொள்ளை அடித்துக் கொண்டு வந்தார்கள். அதல்லாமலும் தாங்கள் காங்கிரசில் இருப்பதன் மூலம் சர்க்காருக்கு தேசத்தை காட்டிக் கொடுத்தும் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு உத்தியோகம் சம்பாதித்து கொடுத்துக் கொண்டும் வந்தார்கள்.

 

இந்த மாதிரி காங்கிரசைப் பற்றி 100-க்கு 99 - பேர் பார்ப்பனரல்லாதாருக்கு யாதொரு விஷயமும் தெரியாமலே இருந்தது. இந்த நிலையில் இந்தக் கூட்டத்தாரை ஒழிக்க சர்க்காரார் அடக்கு முறைச் சட்டங்கள் போட்டதற்கும் ஜஸ்டிஸ் கட்சியார் உதைபோட ஆரம்பித்ததற்கும் பயந்து கொண்டு மகாத்மாவையும், நம் போன்றவர்களையும் தஞ்சமடைந்து அதிலிருந்து தப்பினார்கள். இந்த நிலையில் நாயக்கர் போன்றவர்கள் காங்கிரசுக்குள் வரும்போது அவருடைய யோக்கியதையும் காங்கிரசுக்குப் போன பின்பு அவருடைய யோக்கியதையும் யோசித்துப் பார்த்தால் 'மித்திரனின்' கூட்டத்தாருக்கு யோக்கியதை கிடைத்ததா?

 

நாயக்கருக்கு யோக்கியதை கிடைத்ததா? என்பது விளங்காமல் போகாது. சிறீமான்கள் நாயக்கர் காங்கிரசுக்கு வருமுன் வருஷம் 1000 - ரூபாய் வருமானவரி செலுத்தி வந்தார். பல பெரிய மில்லுகளுக்கு ஏஜண்டாகயிருந்தார். சொந்தத்தில் யந்திரசாலைகள் வைத்து நடத்தி வந்தார். இப்போது அவருக்கு வியாபாரத்தில் ஒரு காசுகூட வருமானவரி இல்லை. அவர் இருந்த ஏஜெண்டு வேலைகளுக்கு அவருக்குப் பின்னால் வந்தவர்கள் 4 லட்சம் 5 லட்சக் கணக்கான பணம் சம்பாதிக்கிறார்கள்.

 

ஒத்துழையாமையின் போது பதினாயிரக்கணக்கான ரூபாய் பத்திரங்கள் ஆதாரங்கள் வாய்தா கடந்து நஷ்டமேற்பட்டது. உதாரணமாக ஒரு முப்பது ஆயிரம் ரூபாய் பத்திரம் சம்பந்தமான விவகாரத்தில் வழக்காடாமல் அப்படியே அடியோடு விட்டு விடப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் பிரசிடெண்டான சிறீமான் சி.விஜயராகவாச்சாரியாருக்கு இது நன்றாய் தெரியும். அதோடு அவர் எதிர் வழக்காடும்படியும், கண்டிப்பாய் ஜெயித்து 30 - ஆயிரம் ரூபாயை பெறலாம் என்றும், தானே பீசில்லாமல் வந்து பேசுவதாகவும் நாயக்கரை எவ்வளவோ கட்டாயப்படுத்தினார். சிறீமான் ஆச்சாரியார் இப்போது சேலத்தில் இருக்கிறார். யார் வேண்டுமானாலும் எழுதிக் கேட்டுக் கொள்ளலாம். இன்னும் நாயக்கர் காங்கிரசுக்கு வருமுன் முனிசிபல் சேர்மென், ஜில்லா தாலுக்கா போர்டு மெம்பர், ஆனரரி மேஜிட்ரேட்டு முதலிய சர்க்கார் சம்பந்தப்பட்ட பதவி வேலையிலும் இருந்து வந்ததோடு ஒரே தாளில் இவை அனைத்தையும் ராஜினாமா கொடுத்தார்.

 

ராஜினாமா செய்த பிறகும் இரட்டை முதல் வகுப்பு பிரயாணப்படியும், நாள் ஒன்றுக்கு 100- ரூபாய் வீதம் கெளரவப் படிப்பணமும் சர்க்கார் கொடுப்பதாகவும் தெரிவித்து, இன்கம்டாக்ஸ் அப்பீல் போர்ட்டில் கமிஷனராக இந்தியா கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டவராகவுமிருந்தார். சர்க்காரிலும் அசிஸ்டெண்ட் ரெக்ரு ட்டிங் ஆபீசர் வேலை கொடுக்கத்தக்க நம்பிக்கையுடையவராகவும் இருந்தார். (இது ராணுவ சம்மந்தமான உத்தியோகம்) இன்னும் பல வகைகள் இருந்தாலும் இவைகளைப் பற்றி எழுதுவது தற்பெருமைக்கு இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கருதப்படும் என்று அஞ்சுவதோடு இதையும் தற்பெருமைக்கு எழுதுவதாகவே சிலர் கருதுவார்கள் என்று பயப்படுகிறோம். ஆனாலும் இப்பார்ப்பனர்களின் அக்கிரமத்திற்குப் பதில் சொல்லாமலிருக்க முடிவதில்லை. இவ்வைந் தாறு வருஷ காலத்தில் வருஷம் பதினாயிரக்கணக்கான ரூபாய் சம்பார்த்தனையும் போய், கை முதலும் எவ்வளவோ நஷ்டப்பட்டுமிருக்கிறோம்.

 

சிறீமான்கள் சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கோ, எ.ரெங்கசாமி அய்யங்காருக்கோ, எஸ். சீனிவாசய்யங்காருக்கோ, வி.எஸ்.சீனிவாச சாஸ்திரிக்கோ பி.என். சர்மாவுக்கோ, எம்.கே.ஆச்சாரிக்கோ மற்றும் பல அய்யர், ஆச்சாரியார், சர்மாவுக்கோ காங்கிரசில் சேர்ந்து எவ்வளவு ரூபாய் எவ்வளவு கெளரவ நஷ்டம் ஏற்பட்டது? இவர்களிடம் இருந்து காங்கிரசைக் கழித்து விட்டால் மீதி என்ன என்பதை இவர்களே யோசித்துப் பார்க்கட்டும். இப்படி இருக்க நாம் காங்கிரசின் மூலம் யோக்கியதை அடைந்து விட்டதாக சொல்லுகிறார்கள். இவ்வளவும் போதாமல் நம்மிடம் பிராமணத் துவேஷமிருக்கிறது என்கிறார்கள். நம்மிடம் உண்மையில் துவேஷமிருக்கிறதா, இவர்களிடம் இருக்கிறதா? நம்மிடம் இருக்குமானால் குறைந்த அளவு அவர்கள் நம்மைச் சொல்லுவது போலவாவது நாமும் அவர்களைச் சொல்ல மாட்டோமா?

 

அவர்கள் நம்மை சூத்திரன் என்று கூப்பிடுவதோடு, சூத்திரன் என்றால் வைப்பாட்டி மகன், தாசி மகன் என்று எழுதியே வைத்துக் கொண்டிருக்கிறார்களே, நாமும் அவர்களை அந்த மாதிரி சொல்ல மாட்டோமா? சொன்னால் தலை போய்விடுமா? பார்ப்பனர் விஷயத்தில் அவர்கள் யோக்கியதையைப் பற்றி எவ்வளவோ உண்மை களைக்கூட நாம் சொல்லப் பயப்படுகிறோமே. இப்படியெல்லாம் நாம் பயப்படும்போதே இவர்கள் நம்மை இவ்வளவு தூரம் ஒழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் இவைகளை எதிர்பார்த்தே இக்கருமத்தில் இரங்கினோமானதால் இவைகளைப் பற்றி ஒரு சிறிதும் நாம் கவலைப்படாமல் இன்னும் இப் பார்ப்பனர்கள் வெடிகுண்டுக்கு மார்பைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதாக உறுதி கூறுகிறோம்.

 

(குடி அரசு 29.08.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_23.html

என்னைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றோ, இல்லையென்றோ சொல்ல முன் வரவில்லை. அதுபோலவே நீங்கள் அனைவரும் என் பேச்சைக் கேட்டுத்தான் ஆக வேண்டுமென்று கூறவில்லை. இன்னொன்றும் சொல்கிறேன், கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ள அறிவாளி தேவையில்லை. சாதாரணமாக ஒரு முட்டாள்கூட சொல்லிவிடலாம். ஆனால், கடவுள் இல்லையென்று மறுத்துக்கூற ஒரு அறிவாளியால்தான் முடியும். மறுப்பதற்கான பல ஆதாரங்களைச் சொல்ல வேண்டும்; சிந்தித்து அதற்கான காரணங்களைக் கூற வேண்டும்.

 

உலகில் இன்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சுமார் 100 -கோடி மக்கள் இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சற்றுக் கூடுதலாக இருப்பார்கள். நாம் எல்லோரும் கடவுள் நம்பிக்கை உடையவர்களா? அப்படியானால் முகம்மதியர், கிறித்தவர் இவர்கள் நிலை என்ன? கிறித்தவர், முகம்மதியர்களுக்கு கடவுள் ஒன்று தானே! கிறித்தவர், முகம்மதியர்களை, உங்கள் கடவுள் எப்படியிருக்கிறார் என்று கேட்டால், யோக்கியமான கடவுள் என்கிறான்; அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லுகிறான்.

 

ஒழுக்கமே உருவானவர், கருணையை உடையவர், அவருக்கு ஒன்றும் தேவையில்லை என்று வேறு சொல்லுகிறான். ஏன் அப்படிப்பட்ட கடவுள் உங்களுக்கு இருக்கக்கூடாது என்று கேட்கிறேன். அவனுக்கு ஒரே ஒரு கடவுள் என்றால் நமக்கு எத்தனை ஆயிரம் கடவுள்கள்? அவர்களின் பெயர்களை எழுத வேண்டுமென்று ஆரம்பித்தால் மைதான் தீர்ந்துவிடுமே தவிர பெயர்கள் முடிவடையாதே! அதற்கெல்லாம் என்ன ஆதாரம்? யாராவது ஒரு பார்ப்பானைக் கேளுங்கள் எப்படி அந்தக் கடவுள்கள் ஏற்பட்டன, எப்போது, எங்கே என்று கோடிக்கணக்கிலா நமக்குக் கடவுள்கள் இருப்பது? நாங்கள் தலையெடுத்து இதையெல்லாம் கேட்காமல் விட்டிருந்தால் மைல் கற்கள், பர்லாங்குக் கற்கள் எல்லாம் கடவுள்களாகி இருக்குமே. படுத்திருக்கிற அம்மிக்கல்லை எடுத்து நிறுத்திவைத்து குங்குமம் மஞ்சள் பூசி விட்டுவிட்டால் அதுவும் ஒரு கடவுள். இதையெல்லாம் யார் கேட்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் சிறிதளவாவது சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

 

யானை, பன்றி, மீன், காக்கை, எருமை, பாம்பு இந்த உருவமுள்ளது எல்லாம் நமக்குக் கடவுள்கள், இவை எல்லாம் எதற்காக? புற்றைக் கண்டால் பால் ஊற்றுகிறான்; கழுகு ஆகாயத்தில் பறந்தால் கன்னத்தில் அடித்துக் கொள்கிறான்; மாட்டைப் பார்த்தால் கும்பிடுகிறான். ஒரு கடவுளுக்கு யானை முகம், மூன்று முகம் அய்ந்து முகம், 10 - முகம், பானை வயிறு; இன்னொரு கடவுள் ஆயிரம் தலையுடையாள், இரண்டாயிரம் கையுடையாள். இந்த கடவுள்களுக்கெல்லாம் என்ன வேலை? எதற்காக கடவுள் அம்சங்களைக் குறைவாக அவமானமாக நம்மிடையே புகுத்த வேண்டும்? இதைப்பற்றி யார் சிந்தித்தார்கள்?

 

1,500 - வருடங்களுக்கு முன்பு புத்தர்தான் கேட்டார். முதலில் அறிவுக்கு வேலை கொடு, சுதந்திரமாக இருக்கவிடு, எதையும் ஏன்? எப்பொழுது? எப்படி? என்று கேள் என்றார்; மகான் சொன்னார்; ரிஷி சொன்னார், கடவுள் சொன்னாரென்று எதையும் நம்பிவிடாதே என்றார். அவர் பேச்சை யார் கேட்டார்கள்? புத்தர்களை நாட்டை விட்டே ஓட்டினார்கள். அவர்கள் பெண்களை கற்பழித்தார்கள். வீடுகளைக் கொளுத்திப் போட்டார்கள். கொன்று விடுவேன் என்று அவரது சீடர்களைப் பயமுறுத்தினார்கள். ஏன் புத்தர் பிறந்த இடத்தில் அவர் கொள்கைகள் இல்லை? வெளிநாடுகளில் எப்படி பரவியது? பரவியதற்குக் காரணம் என்ன? அதற்குப் பிறகு வள்ளுவர் சொன்னார், எதிலும் உன் அறிவுக்கு வேலை கொடு என்று. அவர் சொன்னது எங்கே போயிற்று? எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டார்கள்.

 

பரம முட்டாள்தனமான மனுதர்மம், பகவத்கீதை, இராமாயணம், பாரதம் இவற்றைத்தானே மக்கள் கையாண்டார்கள்? எத்தனை பேருக்குத் தெரியும் இப்படித் தானே மகான் சொன்னார். ரிஷி சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார், வெங்காயம் சொன்னார் என்று நம் எல்லோரையும் படுகுழியில் தள்ளிவிட்டார்கள். அமெரிக்கா, துருக்கியில் இராமாயணக் கதையைச் சொன்னால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சிரிக்க மாட்டார்களா? சங்கராச்சாரியார் ஒரு மாத காலமாகச் சுற்றினார். அவரைப்பற்றி நம்மவனே அருள்வாக்கு என்று எழுதுகிறான். சங்கராச்சாரியாருக்கு அத்வைத மதம், இரண்டு கடவுள் கிடையாது. ஒரே ஒரு கடவுள் அதுவும் நான்தான் என்பார். உண்மையிலேயே சங்கராச்சாரியாருக்கு கடவுள் கிடையாது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள். அவர் கடைப்பிடிப்பது மாயாவாதம், பூசுவது திருநீறு, பூசை செய்வது ஒரு பெண் கடவுள். இதுபோல்தான் தவிர வேறு என்ன? கடவுளுக்கு பிறப்பேது இறப்பேது?

 

நம் கடவுள்களை எடுத்துக் கொள்ளுங்களேன். இராமன் நவமியில் பிறந்திருக்கிறான். சுப்ரமணியன் சஷ்டியில் பிறந்திருக்கிறான். கிருஷ்ணன் அஷ்டமியில் பிறந்தான் என்கிறான். இறப்பு பிறப்பு கொண்டவர்கள் எல்லாம் கடவுள்களா? இதையெல்லாம் இந்த 1958 - ஆம் வருடத்திலேகூட ஏன், எதற்கு என்று கேட்க ஆள் இல்லையே இதற்கெல்லாம் நாம்தானே பணம் கொடுக்கிறோம். எதற்காக கடவுளுக்குப் பூசை போட வேண்டும், உணவைப் படைக்க வேண்டும்? நம்முடைய ஆள் பணம் கொடுத்தால் பார்ப்பான் கடவுள் சிலையைச் சிங்காரிக்கிறானே தவிர அந்தப் பார்ப்பான் ஒரு நாளைக்காவது கடவுளைச் சிங்காரித்ததுண்டா? இவ்வளவு செய்தும் நாம் எல்லோரும் தாசிமகன், வேசிமகன், சூத்திரன்தானே?கடவுளுக்கு எதற்காக மனைவி? அப்படித்தான் ஒரு பெண்டாட்டியோடு விடுகிறாயா? பூதேவி ஒருத்தி, சீதேவி ஒருத்தி இரண்டு பெண்டாட்டி பற்றாமல் தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். எதற்காக கடவுளை துலுக்க நாச்சியார் என்கிற தாசி வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும்?

 

இங்கிருக்கின்ற முகமதியர்கள் மைனாரிட்டிகள் மெஜாரிட்டியாக இருந்திருந்தால், எங்கள் ஜாதிப் பெண் உங்கள் கடவுளுக்குத் தாசியா என்று உதைப்பான், ஒரு தடவை தான் திருமணம் கடவுளுக்கு செய்கிறாயே, பிறகு வருடா வருடம் வேறு எதற்கு? முன் வருடம் செய்த மனைவியை யார் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்? செய்து வைத்த திருமணம் ரத்தாகி விட்டதா? அப்படியானால் எந்தக் கோர்ட்டில் தீர்ப்பு நடந்தது? இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் செய்து நீங்கள் ஜாதித்தது என்ன? கிறிஸ்துவரையும் முகமதியரையும் உங்கள் கடவுள் எப்படிப்பட்டவர் என்று கேட்டுப் பாருங்கள். அன்பாலும் அருளாலும் ஆனவன் ஆண்டவன் என்று கூறுவார்கள். நம் கடவுள்களைப் பாருங்கள்; ஒரு கடவுளிடம் கோடரி இருக்கும், மற்றொரு கடவுளிடம் வில், அம்பு இருக்கும். இப்படித்தானே சூலாயுதம் மழு, அரிவாள், சக்கரம் என்று கசாப்புக் கடையில் இருப்பது போல இருக்கிறது? எதற்காக இந்தக் கருவிகள்? அன்பே உருவான கடவுளுக்கு - கருணையே வடிவான கடவுளுக்கு எதற்கு இதெல்லாம்? ஆச்சாரியார், ஒரே கடவுள்தான் நம்மையெல்லாம் படைத்தார்; நடுவில் யாரோ இப்படிச் செய்துவிட்டார்கள். அதற்கு நாங்கள் என்ன செய்வது? என்று சொல்லுகிறார். அப்படியானால் அவர்கள் செய்துவிட்டுப் போய்விட்டால் உனக்கு எங்கே போய்விட்டது புத்தி? ஏன் இதையெல்லாம் சீர்திருத்தக்கூடாது?

 

அன்புமிக்க தோழர்களே! இதுமாதிரியான கேடான காரியங்களைப்பற்றி எனக்குமேல் நிறைய அநேகருக்குத் தெரியும். ரொம்பப் பேர் படித்திருக்கிறார்கள். ஆனால் என் போல் வெளியே சொல்ல முடியவில்லை. எங்கே தங்கள் வயிற்றில் மண்விழுந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள். ஏன் ஒவ்வொருவனும் எதற்கெடுத்தாலும் கடவுள் கடவுள் என்கிறான்? சதிரானால், பாட்டுப்பாடினால் எல்லாக் காரியங்களுக்கும் கடவுள் பெயராலேயே செய்கிறார்கள். இது மாதிரியான கொடுமைகளை நீக்க நாட்டில் ஆள் இல்லையே, 1000, 2000 - வருடமாக சூத்திரன், வேசிமகன் என்று இருக்கும் பட்டத்தை நீக்க இந்த நாட்டில் இருக்கிற கட்சிகள் என்ன பரிகாரம் செய்தன? மனிதர்களுள் பிரிக்கும் சக்தியை எதிர்த்து எந்தக் கட்சி என்ன செய்தது?

 

(தந்தை பெரியார் -"விடுதலை" -25-12-1958)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_29.html

 

 

நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒருவித பக்தியும், மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசியத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய் விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத் தூண் போன்றவர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத்திற்கும் இந்தியக் குடி மக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்று தான் அவர்களைச் சொல்லவேண்டும். அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்து நாதருடைய கட்டளைப்படி நடக்கக் கூடியவர்களோ, நடக்க வேண்டும் என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம்.

 

நாம் நமது கண்ணுக்குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம். ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால், எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடுவதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலை விட்டு பார்ப்பானோ, அதுபோல் பாதிரிமார்களை அதாவது மதக் குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது என்பது ஒருவித தந்திரம். உதாரணமாக, நமது நாட்டில் பிராமணர்கள் எப்படி தங்கள் மதத்தைக் காக்க -பரப்ப - தங்களுக்குள்ளாகவே ஒருவரை லோககுரு என்றும், ஆச்சாரியார் என்றும், மடாதிபதிகள் என்றும், மகந்துகள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து பயந்து பக்தி கொள்ளும் வண்ணம் அணிவிடை பணிவிடைகள் செய்வதும் கை வாய் பொத்திப் பேசுவதும், சுவாமிகள், சுவாமிகள் என்று கூப்பிடுவதும், அடியேன், அடியேன் என்று சொல்லிக் கொள்ளுவதுமான தந்திரங்களைச் செய்து தங்கள் மதப் பிரசாரம் செய்து (மதப் பிரசாரம் என்பது பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தன்னைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் படும்படியான மனப்பான்மையை உண்டாக்கி விடுவது) தங்கள் உயர் வாழ்க்கையை நிலைநிறுத்த ஆக்கந்தேடிக் கொள்ளுகிறார்களோ, அதுபோல் ஐரோப்பியர்களும் தங்களுக்குள் ஒருவரை மதக்குரு என்பதாக பேர் வைத்து நமது நாட்டுக்கு அனுப்புவதும், அவர் நமது நாட்டின் இரகசியங்களையும் இங்குள்ள ஜனங்களின் யோக்கியதைகளையும் அறிய மதப் பிரசாரம் செய்வதுபோல் ஏழை மக்களிடையும் பாமர மக்களிடையும் இடம் பொருள், ஏவல் என்கிற செளகரியங்களால் திரிந்து பழகி அவர்களை தங்கள் மதத்திலும் சேர்த்துக் கொண்டு தங்கள் சுவாதீனமும் செய்து கொண்டு நம் நாட்டு இரகசியங்களை அறிந்து, பிறகு நாட்டையே சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் செய்வதுமாயிருக்கிறது.

 

இந்தப் பாதிரிகள் பெரும்பாலும் நமது குருக்களைப் போலவே பார்வைக்கு கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்பவர்களா யிருந்தாலும், அந்தரங்கத்தில் இவர்களும் அவர்களைப் போலவே பெரிய ராஜதந்திரிகளாய்த்தான் இருப்பார்கள். (ராஜதந்திரம் என்றால்தான் தெரியுமே! அதாவது, பொய் சொல்லலாம்; உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசலாம்; மோசம் செய்யலாம்; நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்; அதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் எதையும் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இதற்கு ஒரு விலக்குண்டு.

 

அதாவது இவ்வளவும் தனது சுயநலத்திற்காகச் செய்யக்கூடாது; பொது நன்மைக்காக என்று செய்யலாம் என்றும் இதற்காதாரமாகவும் தாராளமாகவும் "பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனில்" என்கிற குறளையும் சொல்லி விடுவார்கள். இதை நமது லோகமான்யர்களில் அநேகர் ஒப்புக் கொண்டாலும் நமது ராஜீய வாதிகளில் 100 - க்கு 69 முக்கால் பேர் ஒப்புக்கொண்டாலும் - காரியத்தில் செய்து வந்தாலும் மகாத்மா காந்தியடிகள் மாத்திரம் இதைக் கண்டிப்பாய் ஒப்புக்கொள்வது இல்லை. இம்மாதிரி ராஜ தந்திரத்தில் அவருக்கு நம்பிக்கையுமில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் தாட்சண்யத்தாலும், வாத்சல்லியத்தாலும், கருணையினாலும் சில சமயங்களில் ஏமாந்து போய்விடுகிறார் என்று பலர் சந்தேகப்பட சொல்லிக் கொள்ளக்கூடும். ஆனால் அவரது சிஷ்யர்கள் வெகு பேருக்கு ராஜதந்திரத்தில் நம்பிக்கையுண்டு)

 

ஒவ்வொரு ஊரிலும் பிராமணர்கள் எப்படி கட்சி, பிரதி கட்சி உண்டாக்கி ஆளைத்தூக்கி ஆள்மேல் போட்டு ஒரு கட்சியில் தாங்கள் சேர்ந்துக் கொண்டு பீசில்லாமல் பேசுவதும், விலையில்லாமல் கூட தீர்ப்புக் கொடுப்பதுமாயிருக்கிறார்களோ, அது போலவே ஆங்காங்கு உள்ள பாதிரிமார்களும், தங்களுக்கு அநுகூலமாக ஒரு கட்சியில் சேர்ந்துக் கொள்ளுவதும் வழியில்லா வழியில் அவர்களது அக்கிரமங்களுக்கு அநுகூலம் செய்வதுமான காரியங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள்.

 

ராஜீய விஷயங்களிலும் யார் பேரைச் சொன்னால் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தை வைத்துக்கொண்டு எப்படி நமது பிராமணர்களில் பலர் இரவும் பகலும் உள்ளத்தில் மகாத்மாவை திட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை அழிக்க பிரயத்தனப்பட்டாலும் வெளியில் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுகிறார்களோ அது போலும் ஒத்துழையாமைத் தத்துவத்திற்கு யோக்கியதை இருக்கிற காலத்தில் மனதில் ஒத்துழைத்து பதவியும் பணமும் சம்பாதிக்க ஆசை இருந்தாலும் ஒத்துழையாமையின் பெயரைச் சொல்லிக் கொண்டு, எப்படி தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்களோ, அது போலவே இப்பாதிரிமார்களும் மகாத்மாவின் கொள்கை உண்மையில் தங்கள் உத்தேசத்திற்கு விரோதமாயிருந்தாலும் மகாத்மா பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியத்திற்கு ஆக்கம் தேடுவதும் சுயராஜ்யக் கட்சியில் உள்ள புரட்டுகளும் பித்தலாட்டங்களும் அதை நடத்துவோரின் நாணயக் குறைவுகளும் தங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தாலும் இக்கட்சிக்கு யோக்கியதை ஏற்பட்டால் தங்கள் காரியங்களை தாராளமாய் நடத்தலாம் என்றும், இக்கட்சியின் பலனால் தங்கள் நாட்டுக்கும் தங்கள் கவர்மெண்ட்டுக்கும் நிம்மதி ஏற்பட்டு தாராளமாய் தங்கள் காரியம் நடந்தேறுமென்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அக்கட்சியையும் கட்சியாளர்களையும் பாராட்டுவதும் அநுபோகத்தில் பார்த்து வருகிறோம்.

 

அப்படிக் கில்லாமல் இருந்தால் அஹிம்சை, சத்தியம் முதலியது கொண்ட ஒத்துழையாமையைப் பற்றி குற்றம் சொல்லி இந்தியர்களுக்கு புத்தியில்லை என்று சொன்ன பாதிரிகள் பொய்யும் புரட்டும் மோசமும் கொண்ட சுயராஜ்யக் கட்சி ஏற்பட்ட பிறகு இப்போதுதான் இந்தியர்களுக்கு புத்தி வந்திருக்கிறது என்று சொல்லுவார்களா? ஆதரிப்பார்களா? என்பதை நுட்பமாய் கவனிப்பவர்களுக்குத் தெரியாமற் போகாது. இந்தியர்களுக்கு சுவாமியார், குரு, சன்யாசி, துறவி என்கிற பதங்கள் மிகுதியும் மரியாதை செய்யத்தக்கதாகி விட்டதால், நம்மை ஏய்க்க வேண்டியவர்கள் இந்த வேஷத்தைப் போட்டுக்கொண்டு நம்மை ஏய்த்துத் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள். அப்படிக்கில்லாமலிருக்கும் பட்சத்தில் நம்மை ஏமாற்றி நம்மை இழிவுபடுத்தி நமது இரத்தத்தை உறிஞ்ச வந்த பாதிரி மார்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும், லோக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துகளுக்கும் நாம் இவ்வளவு குருட்டு பக்தி வைப்போமா?

 

(குடிஅரசு-07.03.1926)

அக்கிராசனாதிபதியவர்களே! சகோதரர்களே! நேற்று நான் இங்கு வந்து பிரசங்கம் செய்தேன். இன்றும் என்னை வரும்படி சிலர் அழைத்தார்கள். நான் இன்று ஊருக்குப் போகிறபடியால் என்னால் அதிக நேரம் பேசமுடியாது. இன்றைய மாநாட்டில் சில தீர்மானங்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். அதில் முதல் தீர்மானம் “ஆறரைக்கோடி ஆதிதிராவிட மக்களை இந்து மதஸ்தர்கள் என்று அரசாங்கத்தில் பதிவு செய்திருப்பதால் எங்களுக்கு இந்து மதத்தில் சமத்துவமில்லாததால் எங்களை இந்து மதத்திலிருந்து நீக்கிவிடும்படி சட்டசபை அங்கத்தினர்களை வேண்டிக் கொள்ளுகிறது.”

இத்தீர்மானத்தை நானும் ஆதரிக்கிறேன், எனக்கும் சம்மதம்தான். ஆதிதிராவிடர்களுக்கு சுதந்திரமும் சமத்துவமும் கொடுக்கவேண்டும் என்றால், ஒரு கூட்டத்தார் எங்களை நாஸ்திகர்கள் என்றும், மதத்துரோகிகள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் சொல்கின்றனர். அதோடல்லாமல் இரத்தக் குறியிட்ட சிவப்புக் கடிதங்களும் எங்களுக்கு வருகின்றது. அக்கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறதென்றால், “ஏ! ராமசாமி நாயக்கரே! நீ மதத்தை அடியோடு அழிக்க வேண்டுமென்று பார்க்கிறாய். ஆகையால், உன்னைக் கொல்லப் போகிறோம்” என்று எழுதியிருக்கிறது. (வெட்கம், வெட்கம்) இப்பேர்ப்பட்ட கடிதங்கள் அனுப்பியும் வருகிறார்கள்; அனுப்பிக் கொண்டும் வருகிறார்கள். அதைப்பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. நான் ஒருவன் போய்விட்டால் ‘பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேடனுக்கு சிறிது பாரம் குறையும்’ என்றுதான் நினைக்கிறேன்!

நாம், தேசத்திற்கு நன்மை செய்வதற்காகவே இந்த இயக்கத்தைத் தோற்றியுள்ளோம். ஆகையால், இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் சுயமரியாதைக்காரர்கள் பயந்தவர்களுமல்லோம், சிறிதும் இளைத்தவர்களுமல்லோம், தேசியத் தலைவர்கள் நமக்குச் சம்பாதித்துக் கொடுக்கும் பெருமையையோ, உரிமையையோ விட சுயமரியாதைக்காரர்கள் ஒன்றும் செய்துவிட முடியாதென்று நினைக்கிறார்கள். நாம் இதுவரை சுயமரியாதை என்னும் பெயரால் ஒரு கெடுதியும் ஜனங்களுக்குச் செய்ததாகத் தெரியவில்லை. ஜாதி வித்தியாசம் ஓட்டலிலும், ரயில்வே ஸ்டேசன்களிலும், மற்றும் ஒவ்வொன்றிலும் இருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்று கேட்டால், அவன் மதத்துரோகி, நாஸ்திகன் என்கிறார்கள்.

தற்காலம் வெள்ளையர்கள் ஆண்டு வரும் பொழுதுகூட நம் இந்துக்களில் உயர்ந்த ஜாதியெனப்படுபவர்கள் சிலர் வீதிகளில் நடக்கக் கூடாதென்று சொல்லிவரும் பொழுது, வெள்ளையர்கள் நமக்கு சுய ஆட்சி கொடுத்துவிட்டுப் போய்விட்டால் நாம் என்ன கதியாகுவோமென்பதையறிந்து கொள்ளுங்கள் (கரகோஷம்). வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை விட்டு அவர்கள் நாளைப் போகட்டுமென்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால், நான் இன்றே போகட்டும் என்று சொல்லுகிறேன். அதுவும் எனக்கு சம்மதம் (கரகோஷம்).

வெள்ளையருக்கு நாங்கள் உள்ளாளாக இருப்பதாகச் சிலர் சொல்லுகிறார்கள். நாங்கள் உள் ஆளா? அவர்கள் உள் ஆளா? என்று கேட்கிறேன். நாங்கள் பிற மதஸ்தர்களுக்கனுகூலமாகப் பிரசாரம் செய்வதாகவும் சொல்கிறார்கள். நமக்கு நம் மதத்திலேயே சுயமரியாதையில்லையே. அப்படியிருக்க, அம்மதம் நமக்கு எதற்கு? ஒரு அப்துல் ரகிமானோ, ஜோசப்போ வந்துவிட்டால் தொலைந்துபோ என்கிறார்கள். எங்களுக்கு உங்கள் இந்து மதத்தில் உரிமை கொடு என்றால், மதத்துரோகி, தேசத்துரோகி என்கிறார்கள்.துரோகிகள் யார்? நாமா? அவர்களா? இந்து மதம் என்றால் பொருளும் ஆதாரமுமில்லையே! அப்படியிருக்க, இந்து மதம் எங்கிருந்துண்டானது?

ஒரு கிறிஸ்துவனை ஒரு அனுகூலம் செய்து கொடுக்கும்படி கேட்டால், அதை அவன் செலவிலே செய்து வைப்பான். அதுபோலவே, மகமதியனும் (கரகோஷம்). இதைக் கேட்டால் நாஸ்திகர்கள் என்கிறார்கள். இந்துமதம் என்பதற்கே ஆதாரமுமில்லை; இந்துக்கள் என்று ஒரு சாதியுமில்லை. திருவண்ணாமலைக் கோயிலுக்குள் திரு. கண்ணப்பர் சென்று வழக்கு நடக்கும் போதுகூட ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர் நீதிமன்றத்தில் இந்து மதம் என்று ஒரு மதம் இல்லை என்றும், இந்து மதத்தை நம்புகிறவர்கள் இந்துக்கள் என்றும், ஆதிதிராவிடர்களும் இந்துக்களே என்றும், அவர்களும் கோயிலுக்குள் போக அனுமதியுண்டு என்றும் சாட்சியம் கொடுத்திருக்கிறார். அதற்கும் தேசியப் பார்ப்பனர்கள் அவரைத் தூற்றினார்கள்.

வேதங்கள் அநாநிக் கடவுளால் சொல்லப்பட்டவைகளே என்றும், அதில் சொல்லியிருக்கும் சட்டங்கள் நியாயமானது என்றும், அவர்கள் கேட்டால் இனி பெண்களை சிறு வயதில் மணம் செய்து கொடுத்தல் கூடாது என்றும், 15 வயதிற்கு மேல்தான் மணம் செய்வித்தல் வேண்டுமென்றும், அதற்காக ஓர் கமிட்டியும் ஏற்படுத்தி விசாரணை புரிந்து வந்தனர். அக்கமிட்டியில் திரு. ஏ. ராமசாமி முதலியாரும் ஓர் அங்கத்தினராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பொழுது சில வருணாசிரம தர்மப் பார்ப்பனர்களும், தேசியப் பார்ப்பனர்களும் மதம் போச்சு; கடவுள் போச்சு; இது மத சம்பந்தமானது; இதில் அரசாங்கம் தலையிடக்கூடாது என்று கூக்குரலிட்டனர். இதை நீங்கள் யோசித்து இம்மணத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் சுத்தமில்லாததாலும், மதுபானம், மாமிசம் முதலியவைகள் சாப்பிடுவதினாலும், அவர்களைத் தீண்டக் கூடாதென்று சொல்லுகிறார்கள். அப்படிப் பார்த்தாலும் மயிலாப்பூரும் உங்களோடு சேர வேண்டியதுதான். மயிலாப்பூரிலுள்ள பெரும்பான்மையான பார்ப்பனர்கள் மது, மாமிசம் உண்ணாமலில்லை.

சமீபத்தில் கும்பகோணத்தில் யாகம் ஒன்று நடத்தினார்கள்; பத்திரிகையிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் ஆடு, மாடுகளின் பீஜத்தை நசுக்கி யாகத்தின் பேரால் சாப்பிட்டார்கள். அதைப்பற்றி பத்திரிகையில் எழுதினோம். அதற்காக நம்மை நாஸ்திகர்களென்றும், மதத்துரோகிகளென்றும் தூற்ற ஆரம்பித்து விட்டார்கள். இது என்ன அறிவீனம் பாருங்கள்.

(13-7-1929 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற ஆதிதிராவிடர்கள் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 16-07-1929 “திராவிடன்” நாளிதழில் வெளியானது)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_08.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE