Language Selection

சமூகவியலாளர்கள்

தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமரணல்லாதார் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல.

 

சரித்திர காலம் எப்படியிருந்தாலும், நம் கண்ணெதிராகவே சென்ற 10- வருஷங்களாக நடந்த காரியங்களைக் கவனிப்போம். பிராமணரல்லாதார் நன்மைக்கென்று சந்தேகமற்ற தேசபக்தரான டாக்டர் நாயர் போன்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட, ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க, சில பிராமணரல்லாதாரைக் கொண்டே சென்னை மாகாணச் சங்கமென ஒன்றை உண்டாக்கச் செய்து, அதற்கு வேண்டிய செலவுகளுக்குத் தாங்களே பணம் கொடுத்தும், இந்தியாவில் மாத்திரமல்லாமல், இங்கிலாந்திலும் போய் சிறீமான் டி.எம். நாயர் அவர்களுக்கு விரோதமாக பிராமணரல்லாதாரைக் கொண்டு எதிர்ப்பிரசாரம் செய்வித்தும் உண்மைக்கு விரோதமாக சாட்சியம் சொல்லும்படி செய்ததுமில்லாமல், ஜஸ்டிஸ் கட்சியார் பிராமணரல்லாத வர்களுக்குப் பிரதிநிதிகளல்லவென்றும் நாங்கள்தான் சரியான பிரதிநிதிகளென்றும் சொல்லச்செய்து பணத்திற்கும், விளம்பரத்திற்கும் ஆசைப்பட்ட பல பிராமணரல்லாதாரை தங்களிஷ்டம் போல் ஆட்டுவித்துவரும் சூழ்ச்சிகளையும் நாம் நேரிலேயே பார்க்கிறோம்.

 

ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாக ஏற்படுத்தப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திற்கு முக்கிய கொள்கைகள் மூன்று. அவை, ராஜீய விஷயங்களில் காங்கிரஸைப் பின்பற்றுவது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அடைவது. பிராமணரல்லாதாருடைய முற்போக்குக்கான காரியங்களைச் செய்வது ஆகியவைகளே!

 

இக்கொள்கைகளே தென்னாட்டு தேசீய பிராமணர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டு தாங்களும் பக்கத்திலிருந்து நிறைவேற்றி வைத்த தோடல்லாமல், தாங்களும் அதற்கு அனுகூலமாயிருப்பதாகச் சொல்லி நமது கூடவேயிருந்து ஜஸ்டிஸ் கட்சியின் செல்வாக்குக் குறைந்ததாக மதித்துக் கொண்டு, இப்போது " மீக்கு பெப்பப்பே, நீவு தாத்தாக்கு பெப்பப்பே" என்பது போல் அடியோடு பழைய சங்கதிகளை மறந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கெடுதியென்று, ஞானோபதேசம் செய்ய வந்துவிட்டதோடு, இதற்கும் சில பிராமணரல்லாத விபூஷணாழ்வார்களை சுவாதீனமாக்கிக் கொண்டு, அவர்களைக் கொண்டே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் தேசத்திற்குக் கேடு என்று சொல்வதோடல்லாமல், சத்தியத்தையும், மனசாட்சியையும் கூட மறக்கும்படி செய்து அவைகளைப் பலி கொடுத்து விட்டார்கள்.

 

ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டிய அவசியத்திற்காக சென்னை மாகாணச் சங்கத்தின் மூலம், பிராமணரல்லாதாருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது சிறீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் உட்பட பல தேசிய பிராமணர்களுக்கு அவசியமாயும் நாட்டுக்கு நன்மை பல பயப்பதாயும் பட்டது. ஆனால், சென்னை மாகாண சங்கத்தின் மூலமாய் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொண்டதாய் நினைத்துக் கொண்டவுடன், நமது பிராமண சகோதரர்களுக்கு, இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுப்பது நாட்டுக்குக் கேடு விளைவதாய்ப் போய்விட்டது.

 

ஈரோட்டில், சென்னை மாகாண சங்க மகாநாடு நடைபெற்ற காலத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் உட்பட சகல தீர்மானங்களும், விஷயாலோசனைக் கமிட்டியில் சிறீமான்கள் சேலம் சி.விஜயராகவாச்சாரியாரவர்களாலும், திரு.வி.கலியாண சுந்திர முதலியாராலும், டாக்டர் வரதராஜுலு நாயுடுவாலும், வி.ஓ. சிதம்பரம் பிள்ளையாலுமே முக்கியமாய் தயார் செய்யப்பட்டது. அடுத்த நாள் மகாநாட்டிலும் சிறீமான் வரதராஜுலு நாயுடுவாலேயே பிரேரேபிக்கப்பட்டு நிறைவேறியது.

 

சிறீமான்கள் முதலியாரும், நாயுடுவும்தான் சென்னை மாகாணச் சங்கத்தின் பிரமுகர்கள். இவர்களை நம்பித்தான் பிராமணரல்லாதாரில் பலர் ஜஸ்டிஸ் கட்சியை விடுத்து சென்னை மாகாணச் சங்கக் கட்சியில் சேர்ந்தது. பிராமணரல்லாத பாமர ஜனங்களும், தங்களது முன்னற்றத்திற்கு இவர்களைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள்.

 

இப்படியிருக்க இன்றையதினம் இவர்களின் நிலை என்னமாயிருக்கின்றதென்று யோசித்துப் பார்த்தால் எழுதவே கை நடுங்குகின்றது. தலைக்கு மேல் வெள்ளம் போகும்போது ஜாண் போனாலென்ன? என்கிற தைரியம் நமது முதலியாருக்கு வந்துவிட்டது. சிறீமான் நாயுடு அவர்களாவது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்க்காவிட்டாலும், அதை எதிர்க்காமல் சும்மாவாவது இருக்கிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது மார்க்கமுண்டாவென்று யோசிக்கிறார். வேறு மார்க்கம் கிடைக்கா விட்டால், முடிவாய் அவர் என்ன செய்வாரென்கிற விஷயம் நமக்குத் தெரியும்.

 

நமது முதலியாரோ, துணிந்து " வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் சென்னை மாகாணச் சங்கத்தார் தற்கால நிலைக்கென கேட்டார்கள்; அந்தப் படியே கிடைத்தது. அதன் பயனை நாடு அடைந்து வருகிறது; தற்கால நிலைக்கென கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை என்றும் கேட்டுக் கொண்டிருத்தல் நியாயமாகுமா?" என்று சிலம்பொலியில் தர்மநியாயம் பேசுகிறார். சிறீமான் முதலியார் சென்னை மாகாணச் சங்கத்தின் மூலமாய் கேட்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நமக்குக் கிடைத்துமாய் விட்டது போலும். நாம் அதை அனுபவித்தாய்விட்டதுபோலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் எதை உத்தேசித்துக் கேட்டோமோ, அவைகள் சரிப்பட்டாகிவிட்டதுபோலும், இன்னமும் அது இருந்தால் நாட்டுக்குக் கெடுதி விளைவிக்குமென்பதுபோலும், ஆதலால் அதைக் கேட்கக் கூடாதென்பது போலவும் உபதேசிக்கிறார்.

 

இவ்வுரைகள், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் விடுதலை யுரிமையையும் அடைய உத்தேசங் கொண்டு ஆரம்பித்த "தேசபக்தன்" ஆசிரியரும், தொழிலாளர் நன்மைக்கென்று ஆரம்பித்த "நவசக்தி" ஆசிரியருமான சிறீமான் திரு.வி.கலியாணசுந்திர முதலியாருக்குத் தகுமா? இது தருமந்தானா? என்று கேட்கிறோம். ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டியதற்கு மாத்திரம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டியிருந்தது. இப்போது வேண்டாமற் போய்விட்டது!

 

இவ்வித நம்பிக்கைத் துரோகத்தில் நமது திரு.வி.கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு ஏன் பங்கு இருக்க வேண்டும்? பிராமணர்கள் சம்மதித்தால் தனக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும். அவர்கள் சம்மதிக்காவிட்டால் தனக்கு வேண்டாம் என்கிற கொள்கை நமது முதலியாருடைய கொள்கையாகலாமா? வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதில் நமது முதலியாருக்கு இப்போது உள்ள ஆட்சேபனைகள் அதற்கெனவே ஓர் சங்கத்தை ஸ்தாபித்த காலத்தில் எங்கே மறைந்து கிடந்தது?

 

இவற்றையெல்லாம் கொஞ்சமும் நினைத்துப் பாராமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், உரிமைப் போருக்கு விரோதமென்று சொல்கிறார். அவனவன் உரிமை, அவனவனுக்கு வழங்கப்படாமல் வஞ்சித்துக் கையில் பலத்தவன் காரியமாக்குவதுதான் உரிமைப் போரின் தத்துவம் போலும். சிறீமான் முதலியாரவர்களே இந்துக்களுக்குள் இதுபோழ்து மூன்று பிரிவுகள் இருக்கிறதாகவும், அவை பிராமணர், பிராமணரல்லாதார், ஆதி திராவிடர் ஆகிய இவர்களென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவ்வகுப்புகள் அதனதன் உரிமையை ராஜரீகத்திலாவது, சமூக விஷயத்திலாவது, பிரஜா தர்மத்திலாவது சமமாய் அடைந்திருக்கிறதா? என்று முதலியாரை வணக்கத்துடன் கேட்கிறோம். இவைகளுக்கில்லாத உரிமைப்போர் வேறு எதற்கு? மற்றும் யாருக்கு?

 

துறவறத்திற்கு காவி வேஷ்டி உடுத்தி கொள்வது ஜனங்களை ஏமாற்ற எப்படி ஒரு சாதனமாயிருக்கிறதோ, அதுபோல் ராஜீயத்திலும் உரிமை - சுயராஜ்யம் என்கிற வார்த்தைகள் ஏழை மக்களை வஞ்சிக்கவும், மற்றும் பாமரர்களை ஏமாற்றவும் மற்றும் பல காரியங்களுக்கு உபயோகப்படுத்தக்கூடிய சாதனமாகப் போய்விட்டது. இப்பொருள் கொண்ட சாதனங்களை சிறீமான் முதலியார் ஏன் உபயோகப்படுத்த வேண்டும்? இவற்றை நினைக்கும் போது நமது நாட்டின் பிற்கால வாழ்விலும், பிராமணரல்லாத சமத்துவத்திலும் நம்பிக்கையைவிட அவநம்பிக்கையே வலுத்து வருகிறது. ஆனால், நமது கடமையை நினைக்கும்போது சும்மாயிருக்க முடியவில்லை.

 

("குடி அரசு" தந்தை பெரியார் : 20.12.1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_09.html

*
"இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கும் வேலையை ஒரு பெருமையெனக்கருதி நீங்கள் எனக்களித்திருந்தாலும் உண்மையில் எனக்கு அதைத் திறந்து வைக்கக் கொஞ்சமும் மனமில்லை. அல்லாமலும் இதை ஒரு சிறுமையாகவே மதித்து மிகுந்த சங்கடத்துடனேயே இந்த வைபவத்தில் கலந்து கொள்ளுகிறேன். ஆதி திராவிடர்களுக்கென்று தனிக் கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்ராயம். இவ்வாறு தனிக் கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத் தக்கவர்களல்லர் என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறியும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக் கிணறு வெட்டவேண்டும்?

 

சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதிதிராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அநுமதிக்கலாகாது? பட்சிகளும், மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்து சாப்பிட்டுவிடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்.

 

"நீங்கள் எனக்களித்த வரவேற்புப் பத்திரத்தில் உங்களுக்காக நான் அதிக வேலை செய்திருப்பதாகச் சொல்லிப் புகழ்ந்திருக்கிறீர்கள். அது கொஞ்சமும் உண்மையல்ல. உங்களை உத்தேசித்து நான் ஒரு காரியமும் செய்யவேயில்லை. ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும், ஆதி திராவிடர்களுக்கு உழைப்பதாய்ச் சொல்லுவதும் வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும் பேசுகிறவர்களுமாயிருப்பார்களென்பது எனது அபிப்பிராயம்.

 

அதாவது, இந்தியாவின் நன்மைக்காக ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பது போலத்தான் ஆகுமேயல்லாமல் வேறல்ல. நான் அப்படி நினைக்கவேயில்லை." 'பறையர்' என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருப்பதால் தான் பிசூத்திரர்' என்கிற ஒரு ஜாதிப் பெயர் நம் நாட்டிலிருக்கிறது. 'பறையர்' என்கிற ஜாதிப் பெயரை விட 'சூத்திரர்' என்கிற ஜாதிப் பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரீகளில் பதிவிரதைகளும், சரியான ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களுமிருக்கலாம். சூத்திரர்களில் அப்படி யிருக்க இடமேயில்லை.

 

ஏனென்றால் 'சூத்திரச்சி' என்றால் தாசி, வேசி என்றுதான் பொருள். 'சூத்திரன்' என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால் என் போன்ற 'சூத்திரன்' என்று சொல்லப்படுபவன் 'பறையர்கள்' என்று சொல்லப்படுவோர்களுக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம் 'சூத்திரர்கள்' என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறல்ல.

 

ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாய் கருதும் ஸ்திரீகளும், புருஷர்களும் தாங்கள் பிறரால் உங்களைவிடக் கேவலமாய் தாழ்மையாய்க் கருதுவதை அறிவதில்லை. அந்நியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கும் அறியாமையால், தங்களை மற்றவர்கள் தாழ்மையாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.

 

இந்த லட்சணத்தில் உங்களிடம் தப்பிதம் கண்டுபிடித்து, உங்கள் உடம்பில் துர்வாடை அடிக்கிறது, நீங்கள் ஸ்நானம் செய்வ தில்லை, துணி துவைப்பதில்லை, மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள், மதுவருந்துகிறீர்கள், இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேஷ்டி துவைக்காமலும், குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர்கள் உணருவதில்லை.

 

உங்களுக்குக் குடிக்கவே தண்ணீரில்லையென்றால் குளிப்பதெப்படி. வேஷ்டி துவைப்பதெப்படி? அழுக்கும், நாற்றமும் உங்கள் கூடவே பிறந்ததா என்று கேட்கிறேன். குளிக்கவும், வேஷ்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல் மகந்துகள் என்போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டிலடைத்து வைத்துவிட்டால் அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும், வாயும் நாற்றமடிக்காமலிருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

 

நாமே ஒருவனை பட்டினி போட்டுவைத்து, அவன் இறந்துபோன பிறகு பட்டினியினால் இறந்துபோய் விட்டான் பாவி என்று சொன்னால், யார் 'பாவி'யென்பதை நினைத்துப் பாருங்கள். அல்லாமலும், மாடு தின்பதும், மதுவருந்துவதும், நீங்கள் 'பறையர்'களாயிருப்பதற்குக் காரணமென்று சொல்லுவது கொஞ்சமும் யோக்கியமான காரியமல்ல. மாடு சாப்பிட்டுக் கொண்டும் மதுவருந்திக் கொண்டும் இருக்கிறவர்கள் தான் இப்பொழுது உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். தவிரவும், நீங்கள் மாடு சாப்பிடுவதன் குற்றம் உங்களைச் சேர்ந்ததல்ல.

 

உங்களை மற்றவர்களைப் போல சரியானபடி சம்பாதிக்கவும், தாராளமாய் சாப்பிடவும், தெருவில் நடக்கவும், தாராளமாய் எங்கும் போய் வேலை செய்து சம்பாதிக்கவும் வழியில்லாமல் செய்துவிட்டதால் கொஞ்சப் பணத்தில் அதிக ஆகாரம் ஆகக் கூடியதான மாட்டு மாமிசத்தைப் புசிக்க வேண்டியதாயிற்று. மாட்டு மாமிசத்தை அநுமதிக்கும் மதத்தைச் சேர்ந்த மகமதியரும், கிறிஸ்தவரிலும் கூட சிலர் கைப்பணந் தாராளமாய்க் கிடைப்பதாயிருந்தால் நாங்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுகிற வழக்கம் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆதலால், நமது நாட்டார் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு தரித்திரந்தான் முக்கியக் காரணம்.

 

அல்லாமலும், மாட்டு மாமிசம் சாப்பிடுவது ஆடு, கோழி, மீன், பன்றி இவைகளைவிட என்ன அவ்வளவு அதிகமான பாவமாய்ப் போய்விட்டது. கோழியும், மீனும், பன்றியும் எச்சிலையும், பூச்சு புழுக்களையும், அழுக்கு களையும், மலத்தையும் சாப்பிடுகிறது. இப்படியிருக்க இதைச் சாப்பிடுகிற வட நாட்டு "ராமணர்கள்' முதல் தென்னாட்டு 'சூத்திரர்கள்' வரை நல்ல ஜாதியும், தொடக்கூடியவர்களாயுமிருக்கும் போது, புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும், புண்ணாக்கும் சாப்பிடுகிற மாட்டிறைச்சி சாப்பிடுவதனால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான். அப்படிப் பார்த்தாலும் மாடு சாப்பிடுகிறவர்களையெல்லாம் 'தொடாதே' , 'தெருவில் நடக்காதே' , 'குளத்தில் தண்ணீர் சாப்பிடாதே', 'ஊருக்குள் குடியிருக்காதே' என்று சொல்லுகிறார்களா?

 

இது வீணாய், வேண்டுமென்றே உங்களைத் தாழ்த்தி வைப்பதற்காகச் சொல்லும் ஒரு யோக்கியப் பொறுப்பற்ற காரணமேயல்லாமல் உண்மையான காரணமல்ல என்பதுதான் எனது முடிவு. மதுவையும் மாட்டு மாமிசத்தையும் தள்ள வேண்டும் என்பதை நான் ஆட்சேபிக்க வரவில்லை. மதுவையும், மாட்டு மாமிசத்தையும் தள்ளினால்தான் உங்கள் ஜாதி உயரும் என்று சிலர் சொல்லும் அயோக்கியத்தனமான காரியத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. ஜாதி உயருவதற்காக மதுவையும், மாட்டு மாமிசத்தையும் விடுங்களென்று கேட்கமாட்டேன். அதற்காக நீங்கள் விடுவதும் அவ்வளவு அவசியமில்லை.

 

நம் நாட்டில் தென்னை, பனை மரங்களில் ஊறும் கள்ளும், காய்ச்சும் சாராயமும் வெளிநாடுகளிலிருந்து வரும் சாராய தினுசுகளும் சென்னை மாகாணத்தில் மாத்திரம் சுமார் 15,20 - கோடி ரூபாய் பொரும்படியானதையெல்லாம் நீங்களேவா குடித்து விடுகிறீர்கள்? யாராவது நம்புவார்களா? ஒருக்காலும் நம்பமாட்டார்கள். ஆதலால், ஜாதி உயர்வை உத்தேசித்து இவற்றை விட்டுவிட வேண்டுமானால் மற்றவர்கள் முதலில் விடட்டும். மதுபானம் மனிதனின் ஒழுக்கத்திற்கு விரோதமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். மதுவிலக்குக்காக நானும் சிறிது தொண்டு செய்திருக்கிறேன். ஆனால், ஜாதி உயர்வுக்கு எல்லா ஜாதியாரும் சாப்பிடும் மதுவிலக்கு ஒன்றும் தடை செய்வதில்லை. ஆகையால், மதுவிலக்கும் மாமிச விலக்கும் ஜாதி உயர்வுக்கு அவசியம் என்று சொல்வது வேண்டுமென்றே சொல்லும் பொய். அல்லாமலும் உங்களிடமும் சில குற்றங்கள் இருக்கிறதை சொல்லாமலிருக்க முடியவில்லை.

 

அதாவது, நீங்களாகவே உங்கள் ஜாதிக்கு இழிவு சம்பாதித்துக் கொள்ளுகிறீர்கள். அநாவசியமாய் யாரைக் கண்டாலும் 'சுவாமி' என்று கும்பிடுகிறீர்கள். நீங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் உங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறது. அதை மாற்றிவிட வேண்டும். ஒரு மனிதனைப் பார்த்தால் அவனுக்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் என்கிற எண்ணம் உங்கள் மனதில் உதிக்க வேண்டும். சுயமரியாதையில் கவனமில்லாத ஜாதியாரை உயர்த்தினாலும் உயராது. அவனவனுக்கே, தான் மனிதன் என்கிற உணர்ச்சி வரவேண்டும். நீங்கள் இனிமேல் யாரையும் 'சுவாமி' என்று கூப்பிடக் கூடாது. வேண்டுமானால் 'ஐயா' என்று கூப்பிடுங்கள்.

 

நீங்களாகவே பதுங்குவதும், ஒதுங்குவதுமான துர்க்குணங்கள் உங்களை விட்டுப் போகவேண்டும். அன்றுதான் நீங்கள் சமத்துவமாக நடத்தப்படுவீர்கள்.


 (காரைக்குடி-சிராவயலில் நடைபெற்ற காந்தி வாசக சாலையின் ஆண்டு நிறைவு விழா மற்றும் காந்தி கிணறு திறப்பு விழாவில் 06-04-1926 - ந்தேதி ஆற்றிய சொற்பொழிவு) (குடிஅரசு-25.04.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_11.html

''ஈ.வே. ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகின்றேன். இதைத் தவிர வேறு பற்றி ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்''.

 

இவ்வாறு ஈ.வெ.ரா. தன்னையும் தன் பாணியையும் குறித்து வெளியிட்ட பிரகடனம் நமது கவனிப்புக்குரியது.

 

தான் எத்தகைய சமுதாயப் பின்புலத்தில் பணி செய்ய வந்தேன் என்பதைத் தெளிவுபடுத்தவே மேற்கண்ட பிரகடனத்தை முன் வைத்தார். பெரியார் பல்வேறு சமயங்களில் பல்வேறு முழக்கங்களையும், குறிக்கோள்களையும் முன் வைத்துப் பிரச்சாரம், இயக்கம், கிளர்ச்சிகள் ஆகியவற்றை நடத்தி வந்தார். இருப்பினும் இவற்றினூடே தொடர் சரடாக இருப்பதும், பிரதானமாக வெளிப்படுவதும் 'சாதி ஒழிப்பு' என்பதாகவே இருந்தது.

 

சாதிப் படிநிலை அமைப்பைத் தகர்க்கக்கூடிய சாதி சமத்துவத்தை நிறுவக்கூடிய கோரிக்கைகளுக்காகப் போராடுவது என்பதை ஒருபுறமும், சாதியக் கருத்தியலின் மொத்தப் பின்புலத்தையும் சாதியத்தின் சட்டமான பார்ப்பனியத்தையும் அவை சார்ந்த குறியீடுகள் புனைவுகள் ஆகியவற்றையும் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்பதை மறுபுறமும் சாதி ஒழிப்புக்கான நடவடிக்கைகளாய் பெரியார் மேற்கொண்டார். ஆகவே, சாதிய ஒழிப்பைப் பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்பட்ட பாங்கு 'பெரியாரியம்' என்பதாகவும் புரிந்து கொள்ள முடியும்.

 

காங்கிரஸ் கட்சியில் பெரியார் இணைந்து செயல்பட்ட காலத்தில் - திலகர் சகாப்தம் முடிவடைந்து காந்தி சகாப்தம் தொடங்கியதிலிருந்து- சட்டசபையில் நுழையாமை, ஒத்துழையாமை, கதர் வளர்ச்சி, மதுவிலக்கு, தீண்டாமைஒழிப்பு ஆகியவற்றின் காரணமாகக் காங்கிரஸ் மீது ஈடுபாடு இருந்தாலும் எல்லாவற்றையும் விட தீண்டாமை ஒழிப்புதான் தனக்கு முக்கியமானதாகப்பட்டது என்கிறார்.

 

1920-களின் தொடக்கத்தில் திருச்செங்கோட்டில் ராஜாஜி ஒரு ஆசிரமம் தொடங்கியபோது அதனைத் திறந்து வைத்துப் பெரியார் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது.

''மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, கோயிலுக்குள் போகக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்கிறவை போன்ற கொள்கை தாண்டவமாடும் ஒரு நாட்டைப் பூகம்பத்தால் அழிக்காமலோ எரிமலையின் நெருப்புக் குழம்பால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அழியச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகளாக்காமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், சர்வதயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரிக் கொடுமைப்படுத்தித் தாழ்த்தப்பட்ட ஒரு மாபெரும் மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும் அஹிம்சா தர்மத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ? இம்மாதிரியான மக்கள் இன்றும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதை விட அவர்கள் இம் முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா?''

 

என்ற உரத்தக் கேள்வி - சிந்தனை, தீண்டாமை ஒழிப்பு என்பதை மேலும் பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்பதுடன் தொடர்புபடுத்திப் பார்த்தார்.தீண்டாமை ஒழிப்பு, தீண்டாதார் முன்னேற்றம் என்பதையே தனது கொள்கையாக வரித்துக் கொள்ளத் தொடங்கினார்.''நம்முடைய முன்னோர்களான அரசர்கள் அனைவரும் சாதியைக் காப்பாற்றினார்கள்.நம் முன்னோர்களான மூவேந்தர்கள் -ஐந்து வேந்தர்கள் - வெங்காய வேந்தர்கள் எல்லாம் சாதியைக் காப்பாற்றித்தான் புகழ் பெற்றார்கள். அவர்களுக்கு எல்லாம் என்ன உயர்ந்த பட்டம் என்றால் 'மனு நீதி தவறாத குணசீலர்கள்' என்பது. இதை யாரும் மறுக்க முடியாது. மனுநீதிக்குப் புறம்பாக அரசன் ஆண்டதாக இல்லை.சாதியைக் காப்பாற்றுகிற கடவுளைத்தானே இன்று நாம் வணங்குகிறோம்?

 

நாம் வணங்குகின்ற கடவுள் சாதியைக் காப்பாற்றும் கடவுள் அல்ல என்று எவராவது சொல்லட்டுமே! நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்; நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்; நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி.இதை உயர்ந்த மொழி என்கின்றனர். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழ் மொழி - சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கின்றது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று.''

 

இவ்வாறு கூறிச் செல்லும் பெரியார் 'சாதி ஒழிப்பு' என்பதன் தேவையைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார்.''சாதி ஒழிப்புக்காரர்கள் எங்கே கொசு உற்பத்தியாகின்றதோ அங்கே போக வேண்டும்.சாதிக்கு ஆதாரம் கடவுள்; அதற்கு ஆதாரம் - புராணம்; சாதிக்குத் துணை அதன் பாதுகாப்பாளர்கள். இத்தனை பேரையும் ஒழித்தால்தானே சாதி நோய் வராமலிருக்கும்? கடவுளை வைத்துக் கொண்டு- சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எப்படி ஒழிக்க முடியும்?'' எனக் கேட்டதன் மூலம் சாதிய வேரின் ஆழத்தை நன்கு உணர்ந்து அதனை அடியோடு சாய்க்க வேண்டும் என்பதையே தனது சிந்தனையின் அடிநாதமாகக் கொண்டிருந்தார் என்பது நன்கு தெரிய வருகிறது.

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_12.html

 

 இந்து மதம் என்றால் என்ன? எப்போது உருவானது? அதன் பிராமணம், தத்துவம், ஆதாரம் என்னவென்று யாரையும் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் சண்டையிட பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரியது, ஒரு கடவுள் சிறியது என்றும், ஒரு கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும், ஒரு மதத்தவனை மற்றொரு மதத்தவன் பார்ப்பது பாவம் என்றும் சண்டையிடிகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் அது என்ன என்பதை நம்மில் ஒருவரும் அறிவதில்லை.

 

இந்து மதம் எப்பொழுது உருவானது என்றால், அது அனாதி மதம், வேத காலம் தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் எப்பொழுது யாரால் உருவானது என்றால், அதுவும் அனாதியானது, கடவுளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள் " அய்யா வேதம் என்பது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர்தானே, அதை (வேதத்தை) நான் பார்க்கலாமா? என்றால், ஆகா, மோசம் வந்துவிடும்; நீ பார்க்கக் கூடாது; நீ சூத்திரன்; அதைப் பார்த்தால் கண்ணைப் பிடுங்கிவிட வேண்டும்; படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும்; யாராவது படிக்கும் போது கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்" என்கிறார்கள்.

 

அது போகட்டும்; இந்த இந்து மதம் என்ற வார்த்தையாவது நம் தமிழ் நூல்களில் எங்கேயாவது, எதிலாவது உண்டா? இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் நம்மிடையே பல உள்ளனவே! அதில் எதாவது இடத்தில் பெயருக்காகவாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்து மதப்பெயரின் ரகசியமே நமக்குத் தெரியவில்லை, இது எவ்வளவு மானக்கேடான நிலைமையாக இருக்கிறது? இந்து என்ற வார்த்தை 'பெர்ஷியன்' பாஷையில்தான் வழங்கப்படுகிறது. அதற்கு அர்த்தம் என்னவென்றால், 'திருடன்' என்பது பொருள். இந்து என்ற வார்த்தை, சிந்து நதிக்கரை வழியே ஆரியர்கள் வந்ததால், 'சிந்து' 'இந்து' வாகி பின் இந்தியனாகிவிட்டதாக ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உள்ளது.

 

அதே மாதிரி, இந்து சமயம் பார்ப்பனர் சமயம் என்றும் ஆங்கில ஏடுகள் ஆதாரத்தோடு கூறுகிறது. அவ்வாறே ஆங்கில ஏடுகளை நம்பாமல் ஆரியர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம் இவைகளின் பாஷியம், புராணம் என்பன போன்ற ஆதாரங்களில் ஒரு இடத்தில் கூட இந்து என்ற பெயர் இடம் பெறவில்லை.

 

(தந்தை பெரியார் - 1923)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_13.html

**
இன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது. ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா? இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம்.

நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டது. இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல், வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடு வந்துவிடுமா? செத்தவனும் வந்து விடுவானா?

குத்துவேன், வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? எந்த மாதிரி சொன்னான்? அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான்? எங்கு சொன்னான்? கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள். சி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள்.

 

குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்?ஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியதுதான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்! ஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 - பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல். குத்துகிறேன், வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.

 

சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை. குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்று இலட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியதுதானா?அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும், வடநாட்டானுக்கும் தானா?

 

தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனை பேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.

 

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது. ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்றுதான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சகணக்கான குரல்)

 

நாலு பேர் சாவது, ஜெயிலுக்குப் (சிறைக்குப்) போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 - க்கு 97 -பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும்; பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

 

இந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்கள். எதற்குக் கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை... முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா? செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.

 

நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100 - க்கு 10 - பேர்தான் இருக்கும். 100- க்கு 90 - பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான். தப்பான காரியத்திற்கு என் தொண்டர்களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

(03-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடை வெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் சொற்பொழிவு : (விடுதலை 08-11-1957)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_17.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE