Language Selection

சமூகவியலாளர்கள்

தாய்மார்களே! தோழர்களே!

அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள். அகிம்சை என்பது ‘தெய்வீகக்’ கருத்தின் பேரில் சொன்ன உபதேசம். முதலில் நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசியவர்கள் பவுத்தர்கள், சமணர்கள். இரண்டாவது, மேல் நாட்டில் ஏசுபிரான் பேசினார். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை.

சமணர்கள் நடைமுறைகளைப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சமணர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்; தலையில் பேன் பிடித்தால் பேனைக் கொல்ல வேண்டி வரும் என்பதற்காகவே மொட்டையடித்துக் கொண்டார்கள். கையில் மயில் தோகையை வைத்து முன்னால் கூட்டிக் கொண்டு நடக்கவேண்டும்; விளக்குமாற்றால் கூட்டக்கூடாது, விளக்குமாற்றால் கூட்டினால் எறும்பு, பூச்சிகள் செத்துவிடும். இப்படியெல்லாம் என்னென்னமோ செய்து அகிம்சையைப் பற்றிப் பெருத்த உபதேசம் செய்தார்கள். பலன் என்ன? அவர்களுடைய தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. இதைக் கொண்டாட இன்னும் பண்டிகை நடக்கிறது. ‘அன்பே சிவம்’; ‘சிவமே அன்பு’ என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இவர்கள்தான் ஆயிரம், பதினாயிரம் என்று சமணர்களை வெட்டிச் சாய்த்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், சமணர்கள் பேசிவந்த அகிம்சை அவர்களுக்குப் பயன்படவில்லை என்பதைக் காட்டத்தான். அகிம்சை பேசியதன் காரணமாகவே சமணர்கள் அழிக்கப்பட்டார்கள். பலன் என்ன? ஏசு, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்று சொன்னார். இன்று அதுபோல் நடந்தால், பல் போய்விடும். ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு’ என்று சொன்னார். இப்போது அப்படிச் செய்தால், என்ன ஆகும்? எல்லோரும் நிர்வாண சங்கத்தில் தான் சேரவேண்டும்.

இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள் தான் வெடிகுண்டு, அணுகுண்டு செய்கிறார்கள். இம்சை செய்வதற்கு என்பதல்ல; எதிரியிடம் ஓர் அணுகுண்டு இருக்கும்போது என்னிடமும் 2, 3 இருக்கிறது என்று சொன்னால்தான், தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம், இல்லாவிட்டால் 3000 - வருடங்களாக தேவடியாள் மகன், சூத்திரன் என்று நம்மை இழிவு செய்கிறபோது இங்கு ஒரே ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இது ரொம்பக் கேடு.

உலகத்தில் வேறு எந்த ஜீவனும் தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு ஜீவனை அடித்துச் சாப்பிடுவதில்லை. மனிதன்தான் தன் இனத்தையே அடிப்பது, கொல்வது, சதி செய்து வாழ்வது எல்லாம். மனிதனை மனிதன் கொலை செய்வது எவ்வளவு? மனிதனை மனிதன் கொடுமைப்படுத்துவதைக் காணமுடியுமே தவிர, மாடு மாட்டைக் கடித்தது, நரி நரியைக் கொன்றது, மான் மானை அடித்தது என்று காணமுடியாது. மனிதனை மனிதன் வஞ்சிப்பது, கொடுமைப்படுத்துவது, வதைப்பது வளர்ந்துவிட்டது. ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்களை எடுத்துக் கொண்டாலும் எந்த அரசன் கையில் கத்தி இல்லாமல் இருந்தான்? முதலாவது செங்கோல் தடி; இரண்டாவது உடைவாள்; இவை இல்லாத அரசனே கிடையாது. கத்தியும் கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின.

கடவுளை எடுத்துக் கொண்டாலும், எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது? குழவிக்கல் மாதிரியான இலிங்கம் தவிர, உருவமாகக் காட்டுகிற சிவனுக்கெல்லாம், கையில் கொழு, மழு, கோடரி, அரிவாள், ஈட்டி, வேல், சூலாயுதம், அப்புறம் கொஞ்சம் பக்குவப்பட்ட பிறகு திரிசூல ஆயுதம், அதற்குமேல் பக்குவ மேற்பட்ட பின் வில், சக்கரம் இப்படியாக உள்ளனவே. அகிம்சை எங்கே போகிறது? பேரோ, சைவக் கடவுள் - அதற்குக் கத்தியும், கொழுவும், மழுவும் ஆயுதம், ஆயுதம் இல்லாவிட்டால் ஏது சைவம்? சமணர்களை வெட்டி, குத்தி, கழுவில் ஏற்றித் தீர்த்த பிறகுதானே சைவம் மிஞ்சிற்று? சமணர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தாலேயே சமணம் அழிந்தது. சைவம் ஆயுதத்தினாலேயே மிஞ்சிற்று. ‘சைவம்’, ‘அன்பு’ என்பதெல்லாம் தாசியின் காதல் போன்றதே.


(திருச்சியில் 1956-ல் சொற்பொழிவு, (‘விடுதலை’,25.10.1956)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_16.html

" உலக ஒற்றுமையை நான் வெறுப்பவனல்ல.

உலக மக்கள் சமதர்ம வாழ்வை மேற்கொள்வதை

வேண்டாமென்று கூறவில்லை. மக்கள் யாவரும்

விகிதாசாரம் உழைத்து, அவ்வுழைப்பின் பலனை பகிர்ந்து,

தத்தம் தகுதிக்கும், தேவைக்கும் அவசியமான அளவு

அனுபவிப்பதை நான் ஆட்சேபிக்கவில்லை. ஆனால்,

தேசீயம் என்றும், தேச சேவை என்றும், தேச பக்தி என்றும்,

தேச விடுதலை என்றும், தேச ஒற்றுமை என்றும்,

ஆத்மார்த்தம் என்றும், பிராப்தம் என்றும், பல பல சொற்களைக் காட்டி,

மெய்வருத்திப் பாடுபட்டுப் பொருளீட்டும் பொதுமக்களை,

கட்டின ஆடை கசங்காமல், மெய்யில் வெய்யில் படாமல்

வாழ்க்கை நடத்தும் ஒரு சிறு கூட்டத்தார் வஞ்சித்து ஏமாற்றி

வயிறு வளர்ப்பதை - ஏன்? உழைப்பாளிகளைவிட

அதிக சுகமான வாழ்வு வாழ்வதை - அடியோடு ஒழிக்க வேண்டும்

என்பதற்காகவே நான் இதைச் சொல்லுகிறேன்."

 

 (தந்தை பெரியார், தமிழர் தலைவர் என்ற நூலலில் இருந்து .... ஆசிரியர் சாமி. சிதம்பரனார். பக்கம் : 149)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_4230.html

இவ்வளவு தெளிவான காலத்தில் நம் மக்களில் பலருக்கு இன்னும் அறிவு ஏற்படாததற்குக் காரணம், மானங்கெட்ட தன்மையோடு அறிவிற்கு ஏற்காத வகையில் கடவுளையும், மதத்தையும், சாஸ்ரத்தையும், கடவுள் கதைகளையும் ஏற்படுத்தி அதனை நம்பும்படியாகச் செய்து விட்டதாலேயே ஆகும். உலகில் உள்ள மக்கள் தொகையில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே ஆவார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தாலேயே மற்ற நாட்டு மக்கள் அறிவு வளர்ச்சி பெறுகின்றனர்.கடவுள் நம்பிக்கையின் காரணமாகவே நம் நாட்டு மக்கள் இன்னும் அறிவு பெறாமல் வளர்ச்சியடையாமல் இருக்கிறார்கள். இந்தக் கடவுளில் நாம் கைவைக்க ஆரம்பித்த பின்தான் இன்று நம் மக்கள் ஓரளவு வளர்ச்சி பெற்று வருகின்றனர்.

நம் நாட்டிற்கு வந்த பெரிய கேடு கடவுள். கடவுளின் பெயரால் மதம், மதத்தின் பெயரால் சாஸ்திரம் என்பதெல்லாம் ஆகும். ஒரு மனிதன் இராமனை, முருகனை, கணபதியை நம்புகின்றான் என்றால் அவனை விட அடிமுட்டாள் எவனுமிருக்க முடியாது.இவற்றை உற்பத்தி செய்திருக்கின்ற கதைகளைப் பார்த்தால் பார்ப்பானைவிட அறிவற்ற ஒரு காட்டுமிராண்டி உலகத்திலேயே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு மடத்தனமாக, காட்டுமிராண்டித் தன்மையுடையதாக அவற்றைக் கற்பித்திருக்கின்றான். அவனால் கற்பிக்கப்பட்ட கடவுள்களைத் தான் நம் மக்கள் ஏற்றுக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு மக்கள் மடையர்களாக இருப்பார்கள். இல்லாத சாமியை செருப்பாலடித்தது உன் மனதைப் புண்படுத்துகிறது என்றால், இத்தனை ஆயிரம் மக்களைச் சூத்திரர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நான் மட்டும் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளக் கூடிய வகையில் நீ பூணூல் அணிந்து கொண்டிருப்பதும், உச்சிக்குடுமி வைத்துக் கொண்டிருப்பதும் வைத்துக் கொண்டிருப்பதும் எங்கள் மனதைப் புண்படுத்துமா இல்லையா? என்று கேட்கின்றேன்.

எங்களை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கிய கடவுளை செருப்பால் மட்டுமல்ல, வேறு எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாமே!இந்து மதக் கொள்கைகளும், சாஸ்திரங்களும், புராணங்களும், கடவுள்களும் இருக்கின்ற வரை நாம் மனிதர்களாக முடியாது. சாஸ்திரப்படி எந்தக் கொலையும் செய்யலாம், எந்த அயோக்கியத்தனமான அதருமத்தையும் செய்யலாம்; என்பது தருமமாக இருக்கிற வரை எப்படி மனிதன் யோக்கியனாக இருக்க முடியும். இந்தக் கடவுள் மதம் சாஸ்திரங்களைக் காரித்துப்ப வேண்டும்; தீயிட்டுக் கொளுத்தவேண்டும்.இந்தக் காரியத்தை நான் இன்று செய்யவில்லை. 40 - வருடங்களாகச் செய்து வருகின்றேன். திருமதி. இந்திராகாந்தி அம்மையாரே நான் இதை 35- வருடங்களாகச் செய்து வருகிறேன் என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மனிதன் ஒரு சிட்டிகை சாம்பலை நெற்றியில் இட்டுக் கொண்டால் அவன் செய்த பாவம் எல்லாம் போகும் என்று சொன்னால், எந்த மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான்? செம்மண் பட்டையடித்துக் கொண்டால் பாவம் போகும் என்றால், எந்த மனிதன் அயோக்கியத்தனம் செய்யாமல் இருப்பான்? நம் மக்கள் அறிவுள்ளவர்களாக வேண்டும். நம் நாடு மற்ற உலக நாடுகளைப் போன்று வளர்ச்சியடைய வேண்டும். மற்ற உலக மக்களைப் போன்று நம் மக்களும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசையாகும்.

நான் சொன்னதைப் போல் பலர் சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருக்கிறார்கள். காந்தியார் கோயில் என்பது குச்சுக்காரிகள் வீடு; இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை. மதத்திற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாது; காங்கிரசைக் கலைத்துவிட வேண்டும் என்று சொன்ன 56 - ஆம் நாள், பார்ப்பானால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னையும் காந்தியைப் போல் சுட்டுக் கொன்றிருப்பார்கள். காந்தியை மகாத்மாவாக்கி விளம்பரம் செய்து மகானாக்கியது பார்ப்பனர்கள்; அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களே அவரைக் கொன்றதால் கேட்க நாதியற்றுப் போயிற்று.

நான் பார்ப்பான் தயவில் இல்லை. என்னைப் பின்பற்றக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். என் ஒருவனைக் கொன்றால் காந்தியைப் போன்று நாதியற்றுப் போகாது. பலர் கொல்லப்படுவார்கள். கலகம் ஏற்படும். பார்ப்பனர்கள் தப்ப முடியாது என்பதால்தான் என்னை விட்டு வைத்திருக்கிறார்களே ஒழிய, அவர்களுக்கு என்னைக் கொல்வது சிரமம் என்பதால் அல்ல! என்னைப் போல் கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் அத்தனைபேரும் கொல்லப்பட்டிருப்பதாகப் புராணங்கள் சரித்திரம் வரையில் இருக்கிறது. நாம் கெட்டதற்குக் காரணம் நாம் இந்து என்று சொல்லிக் கொண்டதாலேயே ஆகும். இந்து என்பது பார்ப்பானால் உண்டாக்கப்பட்டதே தவிர, எந்தப் புராண இலக்கியத்திலும் இந்து என்பதற்கு ஆதாரமில்லை.

பார்ப்பானைப் பிராமணன் என்று அழைக்கக்கூடாது, மதக் குறியான சாம்பல் மண் பூசக் கூடாது, கோயிலுக்குப் போகக் கூடாது, எதற்காக நீங்கள் கோயிலுக்குப் போக வேண்டும்? அதனால் எவனோ பார்ப்பான் தின்ன வேண்டும் என்பதோடு நாமெல்லாம் முட்டாளாகிறோம். இதைத் தவிர வேறு பயன் பலன் என்ன? என்பதைச் சிந்திக்க வேண்டும். நாமெல்லாம் பகுத்தறிவாளர்களாக வேண்டும்.


(தந்தை பெரியார் அவர்கள் 13.04.1971 இல் திண்டுக்கல்லில் ஆற்றிய சொற்பொழிவு)
http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_593.html

இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும் பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக்கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான், முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.

அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும், அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக்கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்போது, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையென்று ஒன்றுகூட்டி, அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதம் என்றும், மநுதர்மவிதியென்றும், வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்வதை நாம் பார்க்கிறோம்.

சென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத்தலைவர் சிறீமான் டி. ஆர். ராமச்சந்திர ஐயர் என்பதை வாசகர்கள் அறிவார்கள். அவர் வருணாசிரம தர்மத்தினுடையவும், பிறவியில் தான் உயர்ந்த பிராமண ஜாதியாமென்பதினுடையவும், தீண்டாதான் என்பவன் தெருவில் நடக்கக்கூடாது, கண்ணில் படக்கூடாது என்பதினுடையவும் அவதாரம். அதே மாதிரி கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டணம், கோயமுத்தூர் முதலிய இடங்களிலுள்ள இந்து மகாசபைத் தலைவர்களும், சென்னைத் தலைவருக்கு இளைத்தவர்களல்ல. கும்பகோணம் இந்து மகாசபையிலேயே தீண்டாமை சாஸ்திர சம்மதமானதென்றும், அதை ஒழிக்கக்கூடாதென்றும் ஓர் தீர்மானம் செய்திருப்பதாக நமக்கு ஞாபகமிருக்கிறது. இப்படியிருக்க இந்து மகாசபை நாட்டில் பரப்புவது எப்படி இந்துமதத்திற்கு நன்மை பயப்பதாகும்?

ஓர் கொள்கைக்காக ஒரு ஸ்தாபனம் ஏற்பட்டால் அந்தக் கொள்கைப்படி நடப்பவர் கிடைக்காவிட்டாலும், அந்தக் கொள்கையை நம்புகிறவர்களாவது, அந்த ஸ்தாபனத்தை நடத்துகிறவர்களாயிருக்க வேண்டாமா? சிறீமான் டி.ஆர். இராமச்சந்திர ஐயர் தீண்டாமையை ஒழிப்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சபைக்கு அக்கிராசனம் வகிப்பதானது, வாஸ்தவத்திலேயே அச்சபையின் யோக்கியதையைக் காட்டுவதாகுமா? அல்லது அச்சபையின் புரட்டுகளை காட்டுவதாகுமா? நமது நாட்டிலுள்ள சில வைதீகர்கள் எப்படி பாமர மக்களை ஏமாற்றி ஆதிக்கம் பெறலாம் என்கிற கொள்கைக்கு ஸ்தாபனங் கண்டுபிடிக்க கருத்தாய் இருக்கின்றார்களேயல்லாமல் உண்மையாக ஓர் காரியத்தைச் செய்வதற்கு ஒருவருமில்லை.

இந்து மகாசபையின் ஸ்தாபகர் சிறீமான் மாளவியா அவர்களே, தீண்டாதவரைப் பற்றி பேசும்போது, கண்களில் ஜலம் விடுகின்றாரேயல்லாமல், பிறவியில் தனக்கும், தீண்டாதாருக்கும் வித்தியாசம் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுவதே இல்லை. தன்னை பெரிய வருணாச்சிரமத் தர்மியாகத்தான் ஒப்புக்கொள்ளுகிறார். முஸ்ஸீம்களின் உபத்திரவங் காரணமாக இந்து மகாசபையை ஏற்படுத்த வேண்டியதாயிற்று என்று சொன்ன காரணத்தால், பஞ்சாபில் முஸ்ஸீம்கள் நடத்தையால் அதிருப்தி கொண்ட லாலா லஜபதிராய் அவர்களும் இந்து மகாசபையில் சேர்ந்து இந்து மகாசபைக்கு உழைக்க முன் வரவேண்டியதாயிற்று. இந்துக்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில், இந்துக்களல்லாத வர்களைத் தாழ்மையாகக் கருதுவதும், இந்துக்களில் பிராமணர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் பிராமணரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும், மகமதியர் அதிகமாயிருக்கிற பாகங்களில் மகமதிய ரல்லாதவரைத் தாழ்மையாகக் கருதுவதும், கிறிஸ்தவர்கள் அதிகமாயிருக்கிற பாகங்களில் கிறிஸ்தவரல்லாதாரைத் தாழ்மையாகக் கருதுவதும் பெரும்பாலும் உலக சுபாவமாகவே கருதுகிறோம். அத்தோடு, கொஞ்சம் செல்வாக்கு உள்ளவர்களும் செல்வாக்கில்லாத வர்களைத் தாழ்மையாகவே கருதுவதும் சுபாவமாகத்தானிருக்கிறது.

உதாரணமாக, இந்துக்கள் மகமதியர்களையும், கிறிஸ்தவர்களையும் மிலேச்சர்களென்று சொல்லுவதையும், மகமதியனைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டியெறிய வேண்டுமெனச் சொல்லி வந்ததையும், இந்துக்களுக்குள் பிராமணனை, பிராமணரல்லாதார் மிலேச்சர்களென்று அகராதியில் எழுதியிருப்பதையும், பிராமணர் பிராமணரல்லாதாரை விபசாரி மகன், வேசிமகன், சூத்திரன் என்று எழுதிவைத்துக் கொண்டிருப்பதையும் மகமதியர் இந்துக்களை "காபர்" அதாவது நாஸ்திகர் என்று சொல்லுவதையும், கிறிஸ்தவர்கள் இந்துக்களை அஞ்ஞானிகள் என்று சொல்லுவதையும், தினமும் பார்த்தும் கேட்டும் வருகிறோம். இத்தத்துவத்தினாலேதான், இன்றைய தினம் நாம் நமது ராஜ்யத்தை இந்திய அரசாங்கமாகச் செய்து கொள்ளாமல், பிரிட்டிஷ் அரசாங்கமாகச் செய்து வைத்துக்கொண்டிருக்கிறோம்.

நமது பொய்க்கிளர்ச்சிகளின் பலனாக ஒருசமயம் பிரிட்டிஷ் அரசாங்கம் தொலைந்தாலும், ஜெர்மனி அரசாங்கமோ, ஜப்பான் அரசாங்கமோ அல்லது வேறு எந்த வெளிநாட்டு அரசாங்கமோ ஏற்படுமேயல்லாமல் ஒருக்காலும் இந்திய அரசாங்கம் ஏற்படுமென்று கருதுவதற்கே வகையில்லாமல் இருக்கிறது. லாலா லஜபதிராய் அவர்கள் தமது பிரசங்கத்தில், " முஸ்லீம்கள், முஸ்லீம் ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டுமென்று ஏதோ ஓர் பத்திரிகை எழுதுவதாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பதாகவும், ஆதலால் இடங்கொடுக்கக் கூடாதென்றும் " வெகு எளிதில் சொல்லிவிட்டார்.இந்திய அரசாங்கத்தில் இந்திய ஜனசங்கையில், நாலிலொரு பங்குக்கு மேற்பட்ட பெரிய சமூகத்தாராகிய மகமதிய சகோதரர்களுக்கு பங்கு உண்டா? இல்லையா? அவர்கள் ஏழரைக் கோடிப்பேரும் இனிமேல் இந்தியாவை விட்டுப் போய்விட முடியுமா? அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமானால், ராஜீய விஷயத்திலும், மதவிஷயத்திலும் நமக்கு சரியான அந்தஸ்து பெற்றுத்தானே ஆக வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால் அவர்களுக்கு சமஉரிமை கிடைத்து விடுமா?

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மகமதியர்களுக்கு ஏற்படாததற்கு முன் மகமதியர் கொஞ்சமாயுள்ள எந்தப் பிரதேசத் திலாவது, தேர்தல்களில் ஒழுங்கான பிரதிநிதித்துவம் பெற்றிருக் கிறார்களா? அல்லது எந்த கிறிஸ்தவர்களாவது அப்படிப் பெற்றிருக்கிறார்களா? உதாரணமாய், நம் நாட்டிலுள்ள தீண்டாதாரென்று சொல்லப்படுவோரை நாம் எப்படி வைத்திருக்கிறோம்? பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டு இன்றைக்கு 200 வருஷங்களாகியும், ஒரு தீண்டாதானாவது தேர்தல்களில் நின்று இந்தியனுடன் போட்டி போட்டு ஜெயம் பெற சக்தியுண்டாக்கியிருக்கிறானா? எந்த ஒரு தீண்டாதானல்லாத இந்தியனாவது, தீண்டாதவனும் நமது சமூகத்தில் மூன்றிலொருபங்கு எண்ணிக்கை உள்ளவர் தானே, அவனை நிறுத்தி அவனுக்கு நம்முடைய ஓட்டைக் கொடுத்து, நமது அரசியல், சமூகவியல் இவைகளில் அவனுக்குள்ள பங்கைக் கொடுக்க வேண்டுமென்று சிறீமான்கள் மாளவியா, லஜபதிராய் போன்ற யாராவது அநுபவத்தில் காட்டியிருக்கிறார்களா?

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சமசுதந்திரம் அடைவதோடல்லாமல், உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப்படமாட்டேன், நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா? இந்தியாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும், மகமதியர்களும், இந்துக்களில் தீண்டாதவர்களும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையும் சம உரிமையும் பெற்றாலல்லாது, இந்தியா விடுதலையடையுமென்று நினைப்பது பைத்தியக்காரத்தனமென்றே சொல்லுவோம். சம உரிமையும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மனம் ஒப்பிக் கொடுப்பதுதான் ஏற்ற மருந்தாகும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உணர்ச்சியை அடக்கி மழுப்பி விடலாமென்று நினைப்பது, சரீரத்தில் ஏற்பட்ட ஒரு புண்ணை மருந்துபோடாமல் மூடிவைத்து விடுவதினால் அது ஆறிப்போகுமென்று நினைப்பதுபோல்தான் முடியும். இந்து மகாசபைக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் விரோதமென்று சொல்வதனால் அவ்விந்து மகாசபையை, நமது தேசத்தின் ஒற்றுமைக் குறைவுக்கும், துவேஷத்திற்கும் ஏற்பட்ட மற்றொரு சாதனமென்றுதான் சொல்ல வேண்டும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி "இந்து"ப் பத்திரிகையென்னும் பிராமணப் பத்திரிகை எழுதியிருப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். அதாவது :

" வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், ஜனங்களிடை சுயமதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்திற்கு காரணமாயிருக்கிறதென்பதையும், அது ஏற்படுவதற்கு முன் ராஜீய வாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பினர்க்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டு பண்ணியிருக்கிறதென்பதையும் மறுக்க முடியாது" என்று எழுதியிருக்கிறது.

இந்தக் குணங்களை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் உண்டாக்கி யிருக்குமேயானால், இந்தியாவிலுள்ள மற்ற எல்லா ஸ்தாபனங் களையும்விட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அதிகபலன் அளித்திருக்கிறது என்பதில் சந்தேகம் உண்டா ? ஆதலால் இந்து மகா சமூகமானது, ஒரு கூட்டத்தாரின், ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கு அநுகூலமானதேயல்லாமல், தேச பொதுநன்மைக்கும், சமூக ஒற்றுமைக்கும் உற்றதல்லவென்பதையும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்தான், தேச ஒற்றுமைக்கும், சமூக முன்னேற்றத்திற்கும்,பரஸ்பர நம்பிக்கைக்கும், சஞ்சீவி என்பதையும் நாம் உறுதியாகச் சொல்லுவோம்.


(குடி அரசு - தலையங்கம் 13 . 12 . 1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_20.html

மகாராஷ்டிரர்கள் "நூல்வலை" யில் வீழாமல் தப்ப உறுதி கொண்டதன் பொருட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவதாக மகாராஷ்டிர மாகாண மகாநாட்டில் தலைமை வகித்த சிறீமான் தேசமுகர் கூறினாராம். சட்டசபையென்னும் மாயவலையில் சிக்குண்டவர்களுக்கு மகாத்மா அருளிய "பக்திவலை" யின் பெருமை எவ்வாறு புலனாகும்? ஆகவே, இவ்வாறு இவர் களிக்கூத்தாடுவதில் ஆச்சரியமெதுவுமில்லை. ஆனால் சுயராஜ்யக் கட்சியினர் பெல்காம் ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைக்கும் நேர்மையைப் பற்றி மட்டும் இங்கு சிறிது ஆராய்வோம்.


சுயராஜ்யக் கட்சியின் திட்டத்தைப் பற்றி ஒத்துழையாதோர் சற்றே வாயைத் திறந்து "இம்" என்றால் போதும்; உடனே "குடிமுழுகிற்று", "ஒற்றுமை குலைந்தது" என்று கூக்குரல் கிளம்புகிறது. ஆனால் மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினரோ தங்கள் மாகாண மகாநாட்டில் நூல் சந்தா ஒழிய வேண்டுமென்று பகிரங்கமாகத் தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறார்கள். காந்தியடிகளை, காங்கிரஸை விட்டு விரட்டிவிடுவதே இவர்கள் நோக்கமென்பதை அக்கிராசனர் தமது உரையில் தெளிவாகக் கூறிவிட்டார்.
லோகமான்யர் பிறந்த மகாராஷ்டிரம் இந்நிலைக்கோ வந்துவிட்டதென்று நமது நேயர்கள் வருத்தமுறுதல் கூடும். ஒரு விஷயம் அவர்களுக்கு ஆறுதலை அளிக்குமென நம்புகிறோம். மாகாண மகாநாட்டில் கூடிய மேதாவிகளின் அபிப்பிராயம் மகாராஷ்டிரர்களின் உண்மையபிப்பிராயம் அன்று என்றும், அம்மாகாணத்தில் பெரும்பான்மையோர் காந்தியடிகளிடத்தும் இராட்டையிடத்தும் அன்பு பூண்டவர்களென்றும் பம்பாய் "கிரானிகல்" பத்திரிகை கூறுகிறது. நூல் சந்தா விஷயமாக விவாதம் நேரிடலாமென்று எண்ணி ஒத்துழையாதோர் எவரும் அம்மகாநாட்டுக்குப் போகவில்லை.
இதில் நகைச்சுவை பொருந்திய அம்சம் யாதெனில் ஒத்துழையாதார் அம்மகாநாட்டுக்கு போகாமலிருந்ததும் அவர்களுடைய குற்றமாகிவிட்டது." வேண்டாமென்ற மனைவி கைப்பட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றம்" என்பார்கள். ஒத்துழையாதார் மகாநாட்டிற்குச் சென்றிருந்து 'நூல் சந்தாவை' ஆதரித்திருந்தால் "சண்டையிட்டு ஒற்றுமையைக் கெடுக்க வந்தார்கள்" என்று குறை கூறப்பட்டிருக்கும்.


மகாநாட்டுக்கு வராதிருந்ததால் அவர்கள் அஹிம்சையைக் கைவிட்டு ஹிம்சைக் குற்றத்திற்கு ஆளாகிவிட்டனர் என்று அக்கிராசனர் தேசமுகர் இப்போது கூறுகிறார். அஹிம்சையின் தத்துவத்தைப்பற்றி உபதேசங்கேட்க காந்தியடிகள் இவரிடந்தான் வரவேண்டும். சட்டசபைக்குச் செல்லாதிருத்தலே ஹிம்சையென்று இனி இவர் சொல்வார் போலும்! ஏன்? ஒத்துழையாதார் உயிருடன் இருத்தலே ஒரு குற்றமாய்விடுதலுங்கூடும்.


காந்தியடிகளின் தலைமையின் கீழ் ஒத்துழையாதார் ஒவ்வொரு தடவையிலும் சுயராஜ்யக் கட்சியாருக்கு விட்டுக்கொடுத்து வந்திருக்கும் விஷயம் உலகமறியும். இவர் பொருட்டு பகிஷ்காரப் பிரசாரத்தை, ஏன்? ஒத்துழையாமையையே ஓராண்டிற்கு நிறுத்தி வைத்ததோடன்றி, தமது திட்டத்தின் உயிர்நிலையான கதர் விஷயத்திலும் மகாத்மா இவர்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தத்தை உண்மையுடன் நிறைவேற்றி வைப்பார்களென்று காந்தியடிகள் மனப்பூர்வமாக நம்பினார். ஆனால் சுயராஜ்யக் கட்சியினரோ தொடக்கத்திலிருந்து நூல் சந்தாத் திட்டம் தோற்றே போய் விடுமென்று உறுதிகொண்டுவிட்டார்கள். இவ்விஷயத்தில் இவர்களுக்கு "விரும்பும் எண்ணத்திற்கு தந்தை" யாயிருந்திருக்கின்றது.


மகாராஷ்டிர சுயராஜ்யக் கட்சியினர் தீர்மானத்தைப் பற்றி முன்னர் கூறினோம். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சிறீமான் ஐயங்கார் இவர்களைவிட ஒருபடி முன்சென்றுவிட்டார். இவர் இந்திய சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியின் பிரபல அங்கத்தினராயிருப்பவர். காங்கிரஸ் காரியக்கமிட்டி அங்கத்தினர். நாகபுரி புகைவண்டி நிலையத்தில் இவர் காந்தியடிகளைப் பார்க்க வந்தபோது கதராடை அணிந்து வரவில்லையாம். தாம் காங்கிரஸ் காரியமாக வரவில்லையென்று சமாதானம் கூறினாராம். இச்சம்பவத்தைப் பற்றிக் காந்தியடிகள் "யங் இந்தியா" வில் மனம் வருந்தி எழுதியுள்ளார்.


தமது குடும்ப நலத்தை அறியும் பொருட்டு அவர் தம்மைப் பார்க்கவர நியாயமில்லையென்றும், அவர் கூறியது போலிச் சமாதானமென்றும் காந்தியடிகள் எடுத்துக் காட்டுகிறார். சுயராஜ்யக் கட்சியார் நூல் சந்தா திட்டத்தை மனப்பூர்வமாக நடத்தி வைப்பார்களென்று எண்ணி, மகாத்மா காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அநேகமாக எல்லோரையும் சுயராஜ்யக் கட்சியினராகவே பொறுக்கி எடுத்துக்கொண்டார். ஆகவே சிறீமான் ஐயங்காரின் செயல் அவருக்குப் பெரும் ஏமாற்றம் அளித்திருப்பதில் ஆச்சரியமில்லை.


(தலையங்கம் : குடி அரசு 17. 05.1925)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/i.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE