Language Selection

சமூகவியலாளர்கள்

மூவாயிரம் ஆண்டுக்கு மேலாக இருக்கும் "தமிழ்த்தாய்"

உங்களைப் படித்தவராக ஆக்கினாளா?

(12.08.1971 : பெரியார்)

நம் நாட்டைப் பொறுத்தவரை மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகின்றேன். மனிதன் மனிதனாக இல்லை. மனிதனை மனிதனாக்க இதுவரை இந்தியாவில் எவனுமே தோன்றவில்லை. அப்படிப் பாடுபட வந்தவனை எல்லாம் மக்கள் தடுத்தார்கள். பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக்-கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன.இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்காவண்ணம் அதன் மேல் சாஸ்திரங்கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை ஆனதால், இரு கால்களுடைய மனிதர்களாக இருந்து நாம் மிருகங்களாக இருந்து வருகின்றோம்.

 

இலக்கியம் என்றால் "அறிவு" என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்று பாடினார்கள். எந்தக் காரியத்தை எடுத்தாலும் ஏன் எதற்கு என்று சிந்திக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3,000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் “அ” வருமா என்று கேட்கிறேன்?

 

திராவிட இயக்கம் தோன்றுகிற வரை தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100 - க்கு 5 - பேர் தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது?அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால் உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

 

நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்திரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன? இங்கு எதிரிலிருக்கிற மாணவர்களில் பலர் நெற்றியில் சாம்பலடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இங்குள்ள ஆசிரியர்கள் தான். அவர்கள் அறிவற்றவர்கள் என்பதையே இது காட்டுகின்றது. ஆசிரியர்கள் அறிவாளிகளாக இருந்தால் மாணவர்களைச் சாம்பலடித்துக் கொள்ளச் சொல்லமாட்டார்கள். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை- அன்பை- அறிவைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

 

நம் நாடு முன்னேற்றமடையாததற்குக் காரணம் மாணவர்களுக்கு அறிவைச் சொல்லிக் கொடுப்பதற்கு ஆளில்லாததே ஆகும். இங்குள்ள ஆசிரியர்கள் மடமையை முட்டாள்தனத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். மாணவர்கள் ஆசிரியருக்குக் கட்டுப்படுவது கிடையாது. அரசியல் கட்சிகளில் சேர்ந்து கிளர்ச்சிகளில் ஈடுபடுபவர்களாக இருக்கிறார்கள். எதற்காக மாணவர்கள் அரசியல் கட்சியில் ஈடுபட வேண்டும்? மேல் நாடுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு மிகவும் கட்டுப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஏதாவது சிறு தவறு செய்தால் அதனை ஆசிரியர்களிடம் தான் போய்ச் சொல்வார்கள். இங்கு மாணவரை ஆசிரியர் கண்டித்தால் உடனே மாணவனின் பெற்றோர் ஆசிரியரைக் கண்டிக்க ஆரம்பித்து விடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும். நீங்கள் கல்வியை வளரச் செய்த இந்த அரசாங்கத்திற்கு நன்றி செலுத்த வேண்டும், நீங்கள் எல்லாம் படிக்கிற இப்பள்ளி நிறுவனருக்கு, நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது தான் அறிவோடு செய்ய வேண்டியதாகும்.

 

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்று கூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை, முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்பவர்கள் நாம் தான் ஆவோம். முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும்.

 

ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்நதெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பது தான். நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்த காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையன அல்ல.

 

இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும்.மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும். மனித சமுதாயத்திற்கு நன்மையாக இருக்கிற ஆட்சியினை ஆதரிக்க வேண்டியது கடமையாகும்.

 

(12.08.1971 அன்று பெரியார்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_25.html

 

வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூகவாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது குடிஅரசு தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு-தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள் தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.


உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்க வேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும்; இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; எவ்விதச் சட்டமும் செய்யக் கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும், அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள். எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும்.


இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும் இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்தச் சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும்.


(குடிஅரசு, தலையங்கம் - 19.05.1929)


வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணர முடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றி சந்தேகப்படத் தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால், அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம்.


இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின்மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும் மாடங்களும் மாளிகைகளும் நாசமானாலும் கூட, ஓர் உயிர் உள்ள வரை போராடியே தீருவேன் என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும்.


நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ஏன் சண்டை போடவேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே என்கின்ற ஞானமும், யார் ஜெயித்தால் தான் என்ன? என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.


மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் வகுப்புவாதி என்றும் - தேசத் துரோகி என்றும் - உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும். நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ஆம் என்றே வைத்துக் கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்?

திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால் யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்று கூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும் அர்த்தமாகும்.

எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே ஆவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்? உத்தியோகம் யார் அப்பன் வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய்-தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்த்தகத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட்டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்க மாட்டானா என்று கேட்கிறேன்.

(சென்னையில், 08.09.1940 இல் தந்தை பெரியார் சொற்பொழிவு - விடுதலை, 29.08.1950)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1745.html

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?

 

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது.


2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது.


3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது.


4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது. 5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது.


6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது.


7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது.


8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது.


9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

 

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?

எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.
நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?


ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

 

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால் தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

 

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

 

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

 

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?

 

அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

 

எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

 

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.


(கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே தந்தை பெரியார் 09.02.1959 அன்று நிகழ்த்திய உரையாடல்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_9318.html

 

 

பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண்டிருக்கும் போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். தனியார் துறை நிர்வாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும். இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள். இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகே தான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை. இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும் போது எந்தக் கண்ணோட்டத்தில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே!

சட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளிகள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும் போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்குவதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.

அரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப்பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக்குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.தந்தை பெரியார் அறிவுரை:

ஏற்றத் தாழ்வை விரும்புவோர் "உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.

(பெரியார் 85 -ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் : 92)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_4103.html

 

"மதமென்பது என்னவென்பதையும்,


அதன் அவசியத்தையும்


அறிந்திருப்போர் வெகுசிலர்.


அது என்னவென்றே அறியாது


பழைமை என்பதனாலும்,


முன்னோர்களுடையது என்பதனாலும்,


பழக்கவழக்கம் என்பதனாலும்,


கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு


இருப்பவர்கள் பெரும்பாலோர்.

(தந்தை பெரியார் -"குடிஅரசு", 15.04.1928)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1289.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE