Language Selection

சமூகவியலாளர்கள்

பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் மதுவிலக்கை எதிர்த்தே வந்துள்ளார் என்பதைக் கீழ்க்கண்ட அவரது கூற்றுகள் விளக்கும். பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங்கதையாடல்களிடிப்படையிலான பேரறங்களை அவர் எப்போதும் மறுத்தார்.

 

* மதுபானத்தால் பொருளாதாரக்கேடு ஏற்படுவதும், அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையாலே ஒழிய இயற்கையால் அல்ல. (குடிஅரசு - 03.10.1937)

 

* பொதுவாக மது அருந்துவதையே குற்றமென்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாக்கும்படியானதும், பொருளாதாரத்திலும், அறிவிலும், கேடுவிளைவிக்கும்படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே யாரும் எப்போதும் அடியோடு வெறுத்ததுமில்லை. (குடிஅரசு - 03.10.1937)

 

* மதுவிலக்கு சர்க்காரின் மனதறிந்த ஒரு மோசடியாகவே இருந்துவருகிறது. இதனால் உழைப்பாளிமக்கள் உற்சாகம் குறைந்து சோம்பேறிகளாகவே ஆக்கப்படுவர். (விடுதலை - 29.11.1962)

 

* பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் முட்டாள்தனமான போராட்டமேயாகும். (விடுதலை - 09.11.1968)

 

* மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்பற்றவர்கள் என்றும், மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. (குடிஅரசு - 16.02.1969)

 

* தீபாவளிக்கு லீவு விடுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட இரண்டுபங்கு முட்டாள்தனம் மதுவிலக்கை எடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும். (விடுதலை - 21.10.1969)

 

* மதுவிலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத்தன்மையில் சேர்ந்ததல்ல என்பதை எங்குவேண்டுமாலும் நிரூபிக்கத்தயார்.(விடுதலை - 17.03.1971)

 

* பத்து கள்ளுக்கடைகள் மூடப்படுவது ஒரு கோயிலைத்திறப்பதற்குச் சமம். கோயிலை மட்டும் வைத்துக்கொண்டு கள்ளுக்கடைகளை மூடவேண்டுமா? (விடுதலை - 20.06.1973)

 

('விடுதலை', 'குடிஅரசு'- முனைவர். 'மா.நன்னன்' அவர்கள் தொகுத்த 'பெரியார்கணினி' நூலினின்று எடுக்கப்பட்டவை)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_4488.html

  

 இந்த நாட்டில் நாட்டுப்பற்றோ, மனிதப்பற்றறோ உள்ள அரசாங்கமானாலும், பொதுத் தொண்டு செய்யும் ஸ்தாபனங்களானாலும், அல்லது தனிப்பட்ட சமூதாயப்பற்றுள்ள மக்களானாலும் அவர்கள் முதலாவது செய்ய வேண்டிய காரியம் நாட்டு மக்களை அறிவாளிகளாகச் செய்து அவர்களது ஆராய்ச்சித் தன்மையைப் பெருக்கவேண்டியதாகும்.

 

மக்களின் வாழ்க்கைத்தரத்துக்கு ஒரு வழி செய்து அவர்களுக்குக் கவலையோ, குறைபாடோ ஏற்படுவதற்கு இல்லாமல் பொருளாதார சமத்துவமும், சமூதாய சமத்துவமும், ஏற்படும்படிச் செய்ய வேண்டும்.இந்தத் தன்மைகள் உள்ள நாட்டைத் தான் நாடு என்றும் சுதந்திர பூமி என்றும் சொல்லலாம். இவை இல்லாத நாட்டையும் சமூதாயத்தையும் சிறைக்கூடம் என்றும், அடிமைச் சமூதாயம் என்றும் தான் சொல்ல வேண்டும். சாதாரணமாக அரசர்களால் ஆளப்படும் நாடுகளும், சமூதாயமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

 

ஏனெனில் அரசனுக்கு ஆட்சி முறை மதமும் சாஸ்திரங்களுமே, தான் மக்களால் ஆளப்படும் நாடுகளுக்கு ஆட்சி முறை அறிவும் சுதந்திரமுமேயாகும். மதமும் சாத்திரங்களும் மனிதனின் அறிவையும், சுதந்திரத்தையும் ஒழிப்பதற் கென்றே, மக்களை மடையர்களாகவும், அடிமைகளாகவும்,ஆக்குவதற்கென்றறே ஏற்பட்ட - ஏற்படுத்தப்பட்ட சாதனங்களாகும். அவைகளும் மக்கள் காட்டுமிராண்டிகளாய் மிருகப் பிராயத்தில் இருந்த போது ஏற்படுத்தப்பட்டவைகளாகும். எப்படி என்றால், மக்களுக்குப் பயத்தைக் காட்டியே அதாவது பேய், பிசாசு, பூதம் என்பவைகளைச் சொல்லியே எப்படி மக்கள் பயமுறுத்தப்பட்டார்களோ அது போலவே தான் மதத்தையும், சாத்திரங்களையும் கூறி மக்களை பயமுறுத்தி வைத்து விட்டார்கள்.

 

மதத்திற்கும், சாத்திரங்களுக்கும் கடவுளுளை எஜமானனாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும் கடவுள் வேறு மதம் - சாத்திரம் வேறு என்று தான். சொல்ல வேண்டும். ஏனெனில் கடவுள் அறியாமையிலிருந்து தோன்றியாதாகும். மதமும், சாத்திரங்களும் அயோக்கியத்தத்திலிருந்து அதாவது மக்களை மடையர்களாக்கவும், பயமுறுத்தி அடிமைகளாக்கவும் வேண்டுமென்ற எண்ணத்தின் மீதே உண்டாக்கப்பட்டவைகளாகும்.

 

உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட மேல் நாட்டுக் குறிப்பிடத் தகுந்த அறிஞர்களாலேயே இக்கருத்து வலிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஏனெனில் அவன் மடையன், அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். ஆனால் மதத்தையும், சாத்திரங்களையும் (ஆத்மா – மோட்சம் - நரகம்) கற்பித்தவன் அயோக்கியன்; இவனை மன்னிக்கவே முடியாது, இவன் மக்களை பயமுறுத்தி வைக்க வேண்டியே இவற்றைக் கற்பித்து இருக்கிறான் என்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

 

கடவுளைக் கற்பித்தவன் "உலக உற்பத்திக்கு, நடத்தைக்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும்; அந்த கர்த்தாதான் கடவுள்" என்று உத்தேசத்தின் மீது உறுதிப்பத்திச் சொல்லுகின்றான். அதாவது சந்தேகத்தின் பயனை (பெனிபிட் ஆஃப் டவுட்) (Benefit of Doubt) கடவுளுக்குக் கொடுக்கின்றான். ஆனால் மதமும் சாத்திரமும் அப்படி இல்லை. முழுப் பொய்யையே கற்பனை செய்து மக்களை ஏய்ப்பதற்கென்றே பயமூறுத்தி வைப்பதற்கென்றே பாகுபடுத்தி மதத்தையும், சாத்திரத்தையும் அமைத்திருக்கின்றான்.

 

இந்த அமைப்புக்கு (இதை அமைப்பு என்பதற்கு) ஆதாரம் என்னவென்றால் பல மாதங்கள், பல சாத்திரங்கள் இருப்பதும், அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக (நேர்மாறாக) இருப்பதுமேயாகும். மற்றும் இப்படிக் கற்பித்தவர்கள் என்பவர்கள் மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதும், இந்துமத சாத்திரங்கள் இயற்கை பிரத்தியட்ச விதிகளுக்கு மாறுபாடாக இருப்பதும் மற்றொரு ஆதாரமாகும். இதை நாம் ஏன் குறை கூறுகிறோம் என்றால், இவை அறிவை மாத்திரமல்லாமல் ஒழுக்கம், நேர்மை, அன்பு, அருள், ஒற்றுமை, சமநிலை முதலியவற்றைப் பாழ் செய்வதோடு, வளர்ச்சியையும் கெடுத்து, விஞ்ஞானத்தை மறைத்து அஞ்ஞானத்தை வளர்த்து வருகிறது. இதை உணர நாம் வெகுதூரம் போக வேண்டியதில்லை.

 

"நமது" மதத்தையும் சாத்திரங்ளையும் எடுத்துக் கொண்டாலே போதுமானதாகும். நம் (திராவிடர்) தமிழர்களாகிய மக்களுக்கு (கடவுள் உண்டா? இல்லையா? என்பது வேறு விஷயம்) ஆனால் மதமே இல்லை, இந்து நம் மதம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதுவே ஒரு மாபெரும் "இமயமலை அளவு" முட்டாள்தனமாகும். இந்துமதம் என்றால் என்ன? அதற்குப் பொருள் என்ன? மதம் என்னும் சொல்லுக்கு கிருஸ்து மதம், இஸ்லாம் மதம் என்பதற்கு உள்ள இலட்சணப்படி, ஆதாரப்படி இலட்சணப்படி ஆதாரப்படி இலட்சிய ஆதாரம் சரித்திரம் ஏதாவது உண்டா? இந்து மத சாத்திரம் வேதம் என்பதாக இருக்கிறதா? இந்து மதத்தை பார்ப்பனர் வேத மதம் என்கிறார்கள்.

 

பார்ப்பனர் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதனால் அதை ஆரிய மதம் என்றும் சொல்லிக் கொள்கின்றார்கள். அதனால் அதை ஆரியமதம் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால் பிராமணர் மதம் என்றும் கிருஸ்துவர் மகமதியர் அல்லாதாருடைய மதம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விரிக்கில் பெருகும். ஆகவே சுருக்கிக் கொள்கின்றேன்.

 

இந்து மதத்திற்கு ஆதாரம் வேதம், சாத்திரம், புராண, இதிகாசமே! இந்த மதத்தின்படி நாம் கீழான பிறவி, 4 -ஆவது 5- ஆவது ஜாதியினராவோம்! அதனால் மேற்கண்ட மத ஆதாரங்களைப் படிக்கத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். வேத, சாத்திர, புராண, இதிகாச ஆதாரங்கள் பெரிதும் நம் மக்களை இதிலே மயக்கி, அயோக்கியராக்கிப் பல வழிகளிலும் அவமானப்படுத்தியுள்ளன. ஆகவே தான் கடவுள் நம்பிக்கை, மதம், சாத்திரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று கூறுகின்றோம்.

 

(14-10-1970 "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்."பெரியார் களஞ்சியம்" - தொகுதி:2 …. பக்கம்: 34)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_1322.html

 

 

 காங்கிரசாரை நான் கேட்கிறேன்! அந்நியனாகிய வெள்ளையனுக்கு நாம் அடிமையாக இருக்க வேண்டும் என்றா அல்லது அவன் போக வேண்டாமென்றா நான் சொல்லுகின்றேன்? தேர்தலுக்குக் கூட நாங்கள் நிற்கவில்லையே! எங்களுக்கு வேண்டியதெல்லாம் நமக்கு இருக்கும் சூத்திரப் பட்டம் ஒழியவேண்டும். நமது நாட்டை வேறு எந்த நாட்டானும், ஆரியனும் சுரண்டக்கூடாது. நாடிமுத்துவோ, வடபாதி மங்கலம் மைனரோ, காமராஜரோ மற்றும் எந்தத் திராவிடரோ சூத்திரர்களாக இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கவலை.

 

காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களே, ஏன் எங்களுக்கு இடையூறு செய்கின்றீர்கள்? வெள்ளையன் எங்களுக்கு வேண்டாம், அவன் எதற்கும் எங்களுக்குத் தெவையில்லை. நாட்டை ஆண்டுவந்த நாங்கள், வெள்ளையன் வந்தபிறகு, பியூனாக, பட்லராக, கான்ஸ்டேபிளாக இருக்கின்றோம். ஆனால் பிச்சை எடுத்தக் கூட்டத்தார், இன்று ஹைபோர்ட் ஜட்ஜாக, அட்வகேட் ஜனரலாக, மந்திரியாக, சங்கராச்சாரியாக, பகவான்களாக இருக்கின்றனர். பார்ப்பனர்கள் ஜட்ஜ் முதலிய பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். அதனால் அவர்களுக்கு வெள்ளையன் இருப்பதால் நஷ்டமொன்றுமில்லை. எங்களுக்குத்தான் முதலில் வெள்ளையன் வெளியே போகவேண்டுமென்ற கவலை, ஏனனில் வெள்ளையனுக்கும் ஆரியனுக்கும் நாங்கள் தான் அடிமைகளாக இருக்கின்றோம்.

காங்கிரஸ் தோழர்களே! எங்களைச் சந்தேகிக்க வேண்டாம் வெள்ளையன் வெளியேறினால், பார்ப்பானுடைய உயர்வுக்கும், நமது தாழ்மைக்கும் அறிகுறியாகிய உச்சிக்குடுமி பூணூல் ஆகியவைகளைக் காங்கிரசிலுள்ள திராவிடத் தோழர்களாகிய நீங்கள் தான் கத்திரிக்கப்போகின்றீர்களென்பது ஆரியனுக்கும் தெரியும் ஏன்! அது பாடுபடாத கூட்டம். கடுகளவாவது நாங்கள் உங்கள் விரோதிகளல்ல’அணுக்குண்டு காலத்தில், இந்த அதிசய காலத்தில் நீங்கள் இதை உணரவில்லையென்றால் பின்பு எப்பொழுது நீங்கள் உணரப்போகின்றீர்கள். எச்சில் காப்பிக் கடைகளில் திராவிடன் நுழையக்கூடாது என்று இந்தக்காலத்திலா சொல்லுவது?

நாம் பாடுபடுகின்றோம். மண்வெட்டி எடுத்தப் பூமியைத் திருத்தி உழுது, பயிரிட்டுப் பாடுபடுகிறோம். அப்படியிருக்க ஏன் நமக்கு இந்த இழிவு? யாரை நாம் வஞ்சித்தோம்? இந்த மானமற்றத் தன்மை போவதாக நாம் பாடுபட்டால், நாம் துரோகிகளா? அகிம்சையே தங்கள் அடிப்படைக் கொள்கை என்று பெருமை பேசிய காங்கிரஸ் பதவி ஏற்புக்குப் பிறகு எங்கள் மாநாட்டுப் பந்தல்கள் நெருப்புக்கிரையாக்கப்பட்டன. கண்போனது, கால்வெட்டப்பட்டது. ஆகிம்சா மூர்த்திகளாகிய காங்கிரஸ்காரர்களே! இந்தக் கொடுமைகளை நீங்கள் செய்யலாமா? இது நேர்மையா? சிந்தித்துப் பார்த்து நீங்களே தீர்ப்பளியுங்கள்.

காங்கிரஸ்காரர்களை விட நாங்கள் பின் வாங்கியவர்களா? நாங்களும் அப்படியே செய்தால் நாடு என்ன கதியாகும்? திராவிடர்களுக்குத்தானே கஷ்டம் ஏற்படும்.

கம்யூனிஸ்ட் தோழர்களே! எங்களிடத்தில் உங்களுக்கு ஏன் சந்தேகம்? கம்யூனிஸ்ட், காங்கிரஸ்காரர்களால் எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு, வெள்ளையன் வாழ வெண்டுமென்றா நாங்கள் சொல்லுகின்றோம்? சுயராஜ்யம் வந்துவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் காங்கிரசார் சுயராஜ்ய காலத்தில் இப்படிச் செய்தால் இதை மக்கள் எப்படிச் சகிப்பார்கள்? காந்தியார்கூட சொல்லிவிட்டாரே ‘வெள்ளையன் மேல் சந்தேகம் வேண்டாம், அவன் நல்லவனாகிவிட்டான்” என்று! இது தானா சுயராஜ்யம்?

கம்யூனிஸ்ட் கட்சியார், மில்லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும், சூத்திரப்பட்டம் தாங்கிய நாலுகோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? சூத்திரனைக், கூலி இல்லாமல் பார்ப்பனன் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே, இது கடவுளின் கட்டளையாம். திராவிடச் சங்கம் என்றால் சூத்திரன் சங்கம் என்றுதானே கருத்து? இதற்குத்தானே, இப்படிச் சொல்ல வெட்கப்பட்டுத்தானே பார்ப்பனரல்லாதார் சங்கம் என்றும் சொன்னோம்? ஏன் இந்த இழிவான பெயர்கள் நமக்கு? பார்ப்பனன் வேண்டுமென்றால் தங்கள் சங்கத்தைச் சூததிரனல்லாதான் சங்கம் என பெயர் வைத்துக் கொள்ளட்டுமே. நாம் ஏன் நம்மை பார்ப்பனரல்லாதான் என்று அழைத்துக் கொள்ளவேண்டும்? நமக்குச் சொந்தப் பெயரில்லையா?

நாம் திராவிடர்கள் அல்லவா? பிராமணன் உயர்வானவனென்று யக்ஞவல்யர், நாரதர், பராசரர் சொன்னது இன்று இந்து சட்டமாகக் காட்சியளிக்கின்றதே. சட்டத்திலே, சாஸ்திரத்திலே, நடத்தையிலே, பிறவியிலே நாம் சூத்திரராயிற்றே. “கடவுளாலே கொடுக்கப்பட்டது” என்று சொல்லப்படும் இந்தச் சூத்திரப் பட்டத்தைத் தாங்கி நிற்பவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகிய திராவிடர்களல்லவா? நாம் எப்பொழுது இந்தச் சூத்திரப்பட்டத்தை ஒழிப்பது?

கம்யூனிஸ்ட் தோழர்களே! சூதுகள், தந்திரங்கள் ஒழியவேண்டும். நயவஞ்சகமாக இவ்வளவுநாள் நடந்த இந்த ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா? இது பிரிட்டிஷ் நாட்டுஆட்சி அல்ல. இந்த பேதங்கள் அங்கேயில்லை. பார்ப்பனர் நூற்றுக்கு நூறு வாழ வசதி செய்து கொடுத்தது இந்த ஆட்சி. சூத்திரன் படித்தால் ராஜாவுக்குக் கேடு, பட்டத்துக்குக்கேடு என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்வதுபடி நடந்தது இந்த ஆட்சி. பிராமணன் உடலால் உழைக்கக்கூடாது என்பதற்காகத்தான் அவனுக்கு ஜட்ஜ் (நீதிபதி) முதலிய உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வெள்ளையன் பார்ப்பானுக்கு உடந்தையாக இருக்கின்றான். இது வெள்ளை ஆரியனுக்கும், மஞ்சள் ஆரியனுக்கும் உள்ள ஒப்பந்தம்தான். இனி ஏற்படப்போவது கூட அந்த ஒப்பந்தம்தான் மற்றப் பேர்களெல்லாம் தந்திரம். இதை இரண்டுவருடத்துக்கு முன்பே நான் சொல்லி விட்டேன்.

அம்பேக்கரும், ஜின்னாவும் இப்போழுது சொல்லுகிறார்கள், இன்றைய சமுதாய அமைப்பைக் காப்பாற்றுவதுதான் சுயராஜ்யம். இதற்கு ஒரு உதாரணம், திருவையாற்றிலே, சாப்பாட்டில் பேதம் கூடாது என்று சொன்ன காலத்திலே, மகாகனம் சாஸ்திரியார்.பி.எஸ். சிவசாமி ஜயர், டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் முதலியோர் “நாம் செய்து கொண்ட உடன்படிகை மீறுகின்றாயே” என வெள்ளையனைக் கேட்டார்கள். இதைத்தான் நாம் உடைக்க வேண்டும். வெளளையன் இந்த நாட்டை விட்டுப் போய்விடுகிறேன் என்று சொல்லுவது, மற்ற வல்லரசுகளிடம் அவன் செய்து கொண்ட ஒப்பந்தம், சண்டை நீங்கியவுடன் அவரவர்கள் நாட்டை அவரவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று நிபந்தனை செய்து கொண்டார்கள். அந்தப்படி அமெரிக்கன், பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டுவிட்டான். அதைப்போலவே பிரஞ்சுக்காரனும் வியட்நாம் நாட்டை விட்டுவிட்டான். ஆனால் நமது நாட்டை நம்மிடம் விடாமல் வெள்ளையன் தந்திரம் செய்கின்றான்.

காங்கிரஸ் அவனை வெளியே விடாமல் தடுத்து நிற்கின்றது. காங்கிரஸ் ஏன் அவனிடம் பேரம் பேசுகின்றது? நாட்டை ஆள நமக்குத் தகுதி இல்லையா? நாட்டில் ஆட்சிக்கு முட்டுக்கட்டையாக, ஒற்றுமைக்கு விரோதமாக எவன் ஜாதிப்பட்டம் வைத்திருக்கின்றானோ, எவன் பெயருக்குப் பின்னால் ஜாதியைக் குறிப்பிடும் வால் வைத்திருக்கின்றானோ, அவனுக்கு 6-மாத தண்டனை விதிக்கட்டுமே பெருவாரியான ஜாதிமத பாகுபாடுள்ள நாட்டிலே ஒரே கொள்கையையுடைய ஒரு இனம், அதுவும் நூற்றுக்கு, 60 - க்கு மேல் மெஜாரிட்டியாகவுள்ள இடத்தைத் தங்களுக்கென முஸ்லீம்கள் தனியே பிரித்து கொள்ளுகிறதென்றால், இதில் என்ன தவறு? இது என்ன முட்டுக்கட்டை- நாடு என்ன பிளந்துபோகும்? நாடு என்ன வெடித்துப்போகும்?

இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்றால் இது வெள்ளையனும், ‘ஆரியனும் உண்டாக்குகிற கலகம். இங்கு இருக்கின்ற பிணக்கு, ஆபாசம் வெள்ளையனுக்குத் தெரியாதா? பார்ப்பான் என்று ஒரு ஜாதியும், பறையன் என்று ஒரு ஜாதியும் இருப்பதும், ஹோட்டலுக்குள் ஒரு ஜாதிக்காரன் போகக்கூடாது என்பதையும் பார்த்து வெள்ளைக்காரன் சிரிக்கமாட்டானா?

(கும்பகோணத்தில் 18-08-1946 – ஆம் தேதி 'காங்கேயன் பார்க்கில்" தந்தை பெரியார் ஈ.வெ.ரா. உரை - ‘குடிஅரசு’ தலையங்கம் 09-10-1946) 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_7303.html

அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர வேறு ஒரு பொருளைக் கொண்டதென்ற சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மைஆண், பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசகம் எழுதப்படுவதாகும். ஏனெனில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி, அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல் திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.ஆனால்....

காதல் என்றால் என்ன?அதற்குள்ள சக்தி என்ன?அது எப்படி உண்டாகின்றது?அது எது வரையில் இருக்கின்றது?அது எந்த எந்த சமயதில் உண்டாவது?அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணம் என்ன?என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக் காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படிப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றிப் பேசுகிறவர்கள் “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு, காதல் வேறு, நட்பு வேறு என்றும் அது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுத்துவதாகும்.

அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமே இல்லை என்றும், அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும். அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது என்றும், பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல் ஏற்படாது. அந்தப்படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும் காதலாகாது என்றும், ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.

மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும் ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது. ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபோகமும் மக்களின் அனுபவ ஞானமும் இல்லாதவர்கள் என்றோ அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாதவர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்றும் சொல்கின்றோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய்த் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல வேண்டும்.

இவ்வளவு பெருமையையும் அணியையும் அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகிறது? என்பதை யோசித்துப் பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா? என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன் வேறுவிதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத் தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள் தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண் சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை.

இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகிறதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை. ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டு பிடித்தார்களென்பதும் நமக்கு விளங்கவில்லை.நிற்க, இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில் எந்த ஆதாரத்தின் மீது என்பவைகளைக் கவனித்தால், பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்ப்பதாலும் அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும் உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்க கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப்படியும் கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில் கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கிறானோ அதுபோல் தான் இந்தக் காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேற எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப்படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தைத் திருப்தியைக் கோரித்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல் போகாது. அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்குப் பயன்படுவதைக் கொண்டோ அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு காரியத்தையோ குணத்தையோ கொண்டோதான் யாரும் எந்தப் பெண்ணிடமும் ஆணிடமும் காதல் கொள்ள முடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும் போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷ மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு யார் என்று இவர்களில் ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமாரத்தி என்று சொல்லுகின்றாள். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி.

இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது? நிற்க, அவன் தன்னைச் சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்துத் தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லிவிட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறுஜென்மத்தாலும்” இவனை விட்டுப் பிரியக்கூடாது என்று கருதி விடுகிறாள். நான்கு நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும் சேவகன் மகன் என்றும் அறிந்தாள் என்று வைத்துக்கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா?அல்லது இருந்தாக வேண்டுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும் மறுக்கும் தன்மையும் விளங்கும்.

இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது.

இது போலவே இன்னமும் தான் முதலில் நினைத்ததற்கு அல்லது தனது நன்மைக்கும் திருப்திக்கும் இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்ட காரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன்படுமா? அதை எவ்வளவு தான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக்காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது. நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக் கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலயே ஏற்படும் காதல் நல்லதா?அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்தகாதல் நல்லதா? என்பவைகளைக் கவனிக்கும் போது சரீர மாறுபாடாலும் பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாற முடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய்க் கருத நேர்ந்தால் அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்குச் சந்தேகப்படும்படி விட்டால் அப்போது கூடக் காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கி விடக்கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகர முடியும்?

காதல் கொள்ளும் போது காதலர்கள் நிலமை, மனப்பான்மை, பக்குவம், லஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, லஷியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியிலும் துன்பத்திலும் அழுந்த வேண்டியதுதானா? என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.

ஒரு ஜதைக் காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் இந்தச் சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்னடுமா? விரோதமில்லையானால் ஓருவர் ஞானியாகி துறவியாகிவிட்டால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக் விரோதமாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்காமல் போகாது.

பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும், ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.அது போலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும் வெறுப்புக் கொள்வதும் பிரிவதும் இயற்கையேயாகும். பலவீனமாய் இருக்கும் போது ஏமாந்து விடுவதும், உறுதி ஏற்பட்ட பின்பு தவறுதலைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாத போது கட்டுப்பட்டு விடுவதும், அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையேயல்லவா?

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஓரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களையெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்தத் தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனிடமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம்.

ஆகவே இந்தத் தாசி கொண்டது காதலா? அல்லது வாழ்க்கைக்கு ஒரு செளகரியமான வழியா? இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இது ஒத்த காதல் ஆகிவிடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளை விடச் சிறிது கூடச் சிறந்தது அல்லவென்பது விளங்கிவிடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் பெண்களுக்குள் புகுத்திவிட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்மென்று கருதி எப்படிப் பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அநேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் சதா கோவிலுக்குப்போவதும் பாட்டுக்கள் பாடி அழுவதும் வாயில் "சிவ, சிவ" என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்திமான்களாகக் காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் துங்குவது போல் வேஷம் போட்டுக் கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ‘தூங்கினால் கால் ஆடுமே’ என்று சொன்னால்அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்க வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படிப் பெண்கள் இப்படி இப்படி இருப்பது தான் கற்பு என்றால் பெண்கள் அது போலவெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்….

ஆகவே ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும் அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அ..றிணைப் பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையிலிருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில்இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும், நடவடிக்கையும், யோக்கியதையும், மனப்பான்மையும், தேவையும், ஆசையும் மாறக் கூடியதென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாற வேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம்.

ஆகவே, இதிலிருந்து நாம் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும் திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல்அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இதை எழுதுகின்றோம்.இதுவும் ஏன் எழுதவேண்டியதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’, ‘அது காதலுக்கு விரோதம்’, ‘அது காம இச்சை’, ‘இது மிருக இச்சை’, ‘இது விபச்சாரம்’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு விதப் பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்துவிடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்.

(18.01.1931′குடிஅரசு’ இதழில் பெரியார் எழுதிய தலையங்கம்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_23.html

 

என்னுடைய 76-வது பிறந்தநாளாகிய இன்று ஒரு அறிக்கை விடவேண்டும் என்று என் தோழர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதை அனுசரித்து இன்றைக்கு முக்கியமான பிரச்சனை என்றும், இனி நாம் அதிகமாக கவலை செலுத்த வேண்டிய பிரச்சனை என்றும் கருதுகிற ஒரு விசயத்தைப்பற்றி பொதுமக்களுக்கு எனது வேண்டுகோளாக தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.

 

தோழர்களே! தமிழ் நாட்டை வடநாடு பொருளாதாரத் துறையில் பெருங்கொள்ளை அடிப்பதோடு தமிழ்நாட்டை பொருளாதாரத் துறையிலும், தொழில்துறையிலும் தலையெடுக்க ஒட்டாமல் மட்டந்தட்டிக்கொண்டு வருகிறது. இந்த ஒரு முக்கியமான காரியத்துக்காகவே வடநாட்டான் அரசியலிலும், தமிழ்நாட்டை தனக்கு அடிமைப்படுத்தி தனது காலடியில் வைத்திருக்கிறான். இதற்கு அனுகூலமாக இந்நாட்டு பார்ப்பனர்கள் தங்களுக்கு இனி இந்நாட்டில் ஆதிக்கம்பெறவோ, இதுவரையிலும் வாழ்ந்தது போன்ற ஆதிக்க வாழ்வு வாழ முடியாது என்று கருதி வடநாட்டானுக்கு அவனது அரசியல், பொருளாதார ஆதிக்கத்துக்கு தமிழ்நாட்டைக் காட்டிக்கொடுப்பதற்கு உடந்தையாகவும், உள் ஆளாகவும் இருந்து வருகிறார்கள்.

 

இந்த காரணங்களுக்காகவே வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து தமிழ்நாட்டை விலக்கி சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்க வேண்டும் என்றும், நாட்டைக் காட்டிக்கொடுத்து பிழைக்கும் சமுதாயமாகிய பார்ப்பனச் சமுதாயத்தை தமிழ்நாட்டிலிருந்தே வெளியாக்கிவிட வேண்டுமென்றும நான் உறுதியாகக்கருதி என்னாலான முயற்சிகளை திராவிடர்கழகத்தின் மூலம் தொண்டாற்றி வருகிறேன். இது ஒருபுறமிருக்க இந்த சந்தர்பத்தையும், நடப்புக்களையும் ஆதரவாகக் கொண்டு உள்நாட்டிலேயே சில கொள்ளைக்கூட்டங்கள் தோன்றி வசதிபட்ட அளவுக்குக்கூட தமிழனை தலையெடுக்கவொட்டாமல் செய்து வருகின்றன. இங்கு சற்று விவரமாக சொல்ல வேண்டியிருக்கிறது.

 

இந்த நாட்டு அரசியலில் வெள்ளையன் இருந்த காலம் முதற்கொண்டே பார்ப்பனர்கள் ஏகபோகம் ஆதிக்கம் பெற்று தமிழர்களுக்கு சிறிதும் நல்வாய்பில்லாமல் தமிழர்கள் அழுத்தப்பட்டு வந்திருப்பதைக் கண்டிக்கும் முறையில் இந்நாட்டு தமிழ் மக்களால் நான் அறிய 1890-ஆம் ஆண்டிலிருந்தே பெருங்கிளர்ச்சி செய்யப்பட்டு வந்திருக்கிறது.

 

உதாரணமாக 1892-லும், 1893-லும் சென்னை மாகானத்தில் கவர்னராயிருந்த லார்டு வென்லக் துரை அவர்களுக்கு இந்நாட்டு தமிழ் (திராவிட) பெருங்குடி மக்களின் பெயரால் கவர்னருக்கு பகிரங்கக்கடிதம் என்பதாக குறிப்பிட்டு இரண்டு கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகளின் நகல் என் கைவசம் இருக்கின்றன. அக்கடிதங்களில் சமுதாயத்துறையிலும், அரசியல் துறையிலும் பார்ப்பனர் ஆதிக்கத்தையும், கொடுமையையும் ஆதாரப்பூர்வமாக புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. மற்றும் அக்கடிதத்தில் அவற்றை அனுசரித்து மெயில் முதலிய பத்திரிக்கைகளின் கருத்துக்களையும் டாக்டர் மில்லர் போன்ற பெரியோர்களின் கருத்துக்களையும் எடுத்துப் போட்டு காட்டப்பட்டிருக்கின்றன.

 

இதை எதற்காக குறிப்பிட்டேன் என்றால் பார்ப்பன ஆதிக்கமும், கொடுமையும் பற்றி சொல்வது ஜஸ்டிஸ்கட்சி ஏற்பட்ட பிறகோ, அல்லது சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகோ அல்லவென்றும், 1890-லேயே நம்மவர்கள் உணர்ந்து முறையிட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்தக்காட்டுவதற்காகவே. நிற்க, இத்தொல்லைகள் அல்லாமல் தமிழர்களுக்கு தமிழ்நாட்டிலே மற்றொரு தொல்லை வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது. அது என்னவென்றால் உத்தியோகத்துறையில் - தமிழன்- பார்ப்பனரல்லாதான- என்கிற பெயரால் தனக்குறிய பங்கை வலியுறுத்த ஆரம்பித்த பிறகு பார்ப்பனர் அதை எதிர்த்து ஒடுக்கும் வகையில் தங்களால் ஆனவற்றையெல்லாம் செய்து ஒடுக்கிபின் மீதி- அதாவது பார்ப்பனரல்லாதவருக்கு ஏதாவது சலுகைகாட்டி பதவி கொடுத்துத்தான் தீரவேண்டும் என்ற நிலைமை நிர்பந்தம் ஏற்பட்ட சந்தர்பத்தில் பார்ப்பனரல்லாதார் என்று சொல்லிக்கொண்டு சில பதவிகளை வெள்ளையனுக்கு கொடுப்பதும், அவனுக்கு கொடுப்பது மக்களுக்கு இஷ்டமில்லை என்றால் வெளி மாகாணக்காரர்களுக்கு கொடுப்பதும், அவர்களுக்கு கொடுப்பதும் சாத்தியப்படாத சந்தர்பங்களில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்கு கொடுப்பதும், அது சாத்தியப்படாத சந்தர்ப்பங்களில் ஆந்திரர், மலையாளி, கருநாடகர் ஆகியவர்களுக்கு கொடுப்பதுமாய் சூழ்ச்சி செய்து தமிழர்களுக்கு எவ்வளவு கொடுமையும், குறைபாடும் செய்யவேண்டுமோ அந்த அளவுக்கு செய்து வந்தார்கள்.

 

வெள்ளையன் அரசாங்கமும் இவர்களுக்கு ஆதரவு கொடுத்தே வந்திருக்கிறது. இப்போது வெள்ளையன் ஆட்சி ஒழிந்துவிட்டது. இந்தியன் ஆட்சி என்று ஏற்பட்டுவிட்டது. அதோடு நாடும் பல விதத்திலும் வடநாடு- தென்னாடு என்று பிரிந்துவிட்டது. அது மாத்திரம் அல்லாமல் மொழிவாநாடு என்னும் பேரால் ஆந்திர நாடும் தமிழ்நாட்டை விட்டுப் பிரிந்துவிட்டது. இதனால் ஆந்திரர்கள் தொல்லை அரசியலிலும், உத்தியோகங்களிலும் ஒரு அளவிற்கு ஒழிந்து விட்டது என்றாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள், கர்நாடகர்கள் என்பவர்களது தொல்லை அரசியல் ஆதிக்கத்திலும் உத்தியோகத்திலும் ஒழிந்தபாடில்லை.

 

இதை ஏன் சொல்கிறேனென்றால், தமிழ்நாடு மொத்த ஜனசங்கையில் பார்ப்பனர் 100- க்கு இரண்டேமுக்காலும், கிறிஸ்தவர் 100 - க்கு 4-ம், முஸ்லிம்கள் சுமார் 100 - க்கு 5-ம், மலையாளிகள் சுமார் 100- க்கு 8-ம், கர்நாடகர்கள் 100 - க்குக் 5-ம் (இவைகள் உத்தேசமான புள்ளிகள்) இவ்வளவு பேரும் சேர்ந்து, ஜனசங்கியையில் தமிழ்நாட்டார் -தமிழர் அல்லாதவர்கள்,100 -க்கு 25-பேர்களுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தாலும் இந்த கூட்டத்தினர் ஒவ்வொருவரும் நீதி நிர்வாக தலைமை உத்தியோகங்களில் சுமார் 100 - க்கு 60 - பேர்களாகவும், முக்கியமான உயர்ந்த உத்தியோகங்களில் 100 - க்கு 75-பேர்களாகவும் இருக்கிறார்கள்.

 

இதை ஏன் பிரித்துக் குறிப்பிட்டுக்காட்டுகிறேன் என்றால் தமிழ்நாட்டிலே தமிழர்களைத் தவிர, அதாவது மேற்படி கூட்டத்தினர் தவிர்த்த தமிழர்களைப் பற்றியாவது, தமிழர்களின் பழக்கவழக்க, கலாச்சார குறைபாடுகளைப் பற்றியாவது, சமுதாயத்துறையில் அவர்களுக்குள்ள இழிவைப் பற்றியாவது, அரசியல், கல்வி, பொருளாதாரத் துறையிலாவது, மேலேகாட்டிய இந்தக்கூட்டத்தாருக்கு சிறிதும் கவலையில்லை என்பதோடு, பெரிதும் மாறுபட்டவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.தமிழர்கள் சமுதாயத் துறையில் கீழான சாதியராக - சூத்திரர்களாக இருப்பதைப்பற்றி இவர்கள் யாருக்கும் கவலையில்லை. எப்படியாவது தங்களுக்கு தங்கள் விகிதத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையளவு பதவிகள் கிடைப்பதனால் தமிழன் கதி எக்கேடு கெட்டாலும் இவர்கள் இலட்சியம் செய்பவர்கள் அல்லர்.

 

அவரவர்கள் தங்கள் தங்கள் சமூகத்துக்கு எப்படி நடந்து பயன்பெறுவது என்பதையே பெரும்பாலும் இலட்சியமாகக் கொண்டவர்கள் ஆவார்கள். அப்படியே இருந்தும் வந்திருக்கிறார்கள். அதனால்தான் எந்த விதத்திலும் தங்களைவிட தனிப்பட்ட யோக்கிதை இவர்களுக்கு இல்லாமலிருந்தும் தமிழர்களைவிட இவர்கள் 3 - பங்கு ஆதிக்கத்தில் பதவியில் இருந்துவருகிறார்கள். இதில் குறிப்பாகக் கூற வேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாகவந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் - அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் ஒரு சில உதாரணங்களைக் கூறுகிறேன்.

 

சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப்செக்ரட்டரி: திரு.ராமுண்ணிமேனன், சீப் எஞ்சினியர்: திரு. கே. நம்பியார், சூப்பரின்டெண்டிங் எஞ்சினியர்கள்: 1. திரு.நாயக், 2. திரு.காமத், வைத்திய இலாக்கா: எழும்பூர் பிள்ளைப்பேறு ஆஸ்பத்தரி சூப்பரின்டெண்ட்டு: திரு. ஆர்.கே.கே.தம்பான: அசிஸ்டெண்ட் சூப்பிரின்டெண்ட்: திரு. கிருஷ்ண மேனன்: ஸ்டான்லி ஆஸ்பத்திரி சூப்பரின்டெண்ட், திரு.கே.என்.பிஷரொட்டி: பெண்கள் ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி, சூப்பரின் டெண்ட்: திருமதி. பாருகுட்டிராமன்.கல்வி இலாக்கா:- பிரஸிடென்சி கல்லூரிபிரின்ஸ்பால்: திரு. பாலகிருஷ்ணநாயர், குவீன்மேரீஸ் கல்லூரி:திருமதி.லேடிவெலிங்டன்: திருமதி.வர்கிஸ். சட்டக்கல்லூரி டைரெக்கடர்: திரு.குன்னிராமன். இவை - ஒருசில நிர்வாக அடிப்படைப்பதவிகளிலுள்ள மலையாளிகளை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டப்பட்டன.இனி மாவட்ட (ஜில்லா) தலைமைப் பதவிகளிலுள்ள மலையாளிகள் எண்ணிக்கையைக் காட்டுவதற்கு போலிஸ் இலாக்கா ஒன்றை மாத்திரம் உதாரணமாக எடுத்துக்காட்டுகிறேன்.

 

இவைகளிலிருந்து மற்ற இலாக்காக்களையும் தெரிந்து கொள்ளுங்கள். இதில் 13-ஜில்லாக்களோடு சென்னையைச் சேர்த்தால் 14-ஆகும். இவற்றில், சென்னையில் கமிஷனர்: திரு.பார்த்தசாரதி அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் இருப்பது மாத்திரமல்லாமல் அடுத்த பதவியான டிப்டி கமிஷனர் என்பதில் மூன்றிலும் மூன்று மலையாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் முறையே..

 

1. திரு. அடிகை (லா அண்டு ஆர்டர்), 2. திரு.தாமோதரன் (கிரைம்),3. திரு.சுகுமாரன் (டிராபிக்). ஆய்ஜிக்கு அசிஸ்டெண்ட்: திரு.வி.பி.நாயர். அசிஸ்டெண்ட் கமிஷனர்கள்: 1. திரு.செதுமாதவமேனன்(லா அண்டு ஆர்டர்), 2. திரு. சேதுமாதவநாயர்: (புரொகிபிஷன்).இனி ஜில்லாக்களில் போலிஸ் சூப்பரின்டெண்ட்டுகள்: திருச்சி: திரு. விஸ்வநாத அய்யர்: மதுரை(வ)திரு. ஏ.சி.நம்மியார்: திருநெல்வேலி:திரு. மாப்ளா அப்துல்லா. வடஆர்க்காடு திரு. ஷெனாய், சேலம்: திரு.பாலக்கிருஷ்ணமேனன், நீலகிரி: மாப்ளாரூக்கி இவைதவிர மற்ற ஜில்லாக்களிலும் அய்யர், அய்யங்கார்கள்.

 

அதாவது மதுரை(தெ)திரு.கிருஷ்ணசாமி அய்யர்: இராமநாதபுரம்: திரு. நரசிம்ம அய்யங்கார், மலபார்: திரு. இராமானுஜ அய்யங்கார், தென்கன்னடம்: திரு. முத்துசாமி அய்யர். மீதியுள்ள ஜில்லாக்களில் இரண்டில் ஆங்கிலோ கிறிஸ்த்தவர்களும், ஒரே ஒரு ஜில்லாவில், தென்னாற்காட்டுக்கு மட்டும் திரு. பாலக்கிருஷ்ண உடையார் என்ற தமிழரும் இருந்து வருகிறார்கள். இவர் பதவியும் ஆட்டத்தில் இருக்கிறது.இவை தவிர அரசாங்க போலீஸ் இலாக்கா (போர்ட்போலியோ) நிர்வாகத் தலைமையில், செரட்டரி: திரு. ஆர்.ஏ. கோபால்சாமி அய்யங்கார்: டிப்டி செக்ரட்டரி:டி.ஏ. சுப்புசாமி அய்யர் ஆகிய இரண்டு பார்ப்பனர் இருப்பதுபோக மற்றும் இரண்டு டிப்டி செக்ரட்டிரிகள்: 1.திரு.ஒய்.சிவராம மேனன்,2. திரு.சி.ஆர்.பணிக்கர். மற்றும் பப்ளிக் (பொலிடிகல்) என்று கூறப்படும் இரகசிய நிர்வாகத் தலைமையில் செக்ரட்டரி: திரு.டி.என். இலட்சுமிநாராயண அய்யர்: அண்டர்செக்ரட்டரி: திரு. ஆர். பாலசுப்பரமணி அய்யர். அரசாங்கத் தலைமை ஸ்தாபனங்கள் இந்தப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

இவை உதாரணங்களாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு சிலவேயாகும்.மற்ற இலாக்காக்களிலும் 100- க்கு 90- பேர்களான தமிழர்களைத் தவிர மற்ற சமுதாயக்காரர்களே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த நிலைமை இதற்கு முன்பே இருந்து வந்தாலும் இவ்வளவு மோசகரமான நிலைமை, அதாவது செக்ரிட்டேரியட், போலிஸ்- முதலியவற்றில் இவ்வளவு மோசகரமான நிலைமை - திரு. ஆச்சாரியார் அவர்கள் காலத்தில் ஏற்பட்டதாகவே தெரிகிறது. இங்கே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்-தமிழனுக்கு ஆட்சியில் இடமெங்கே? தமிழன் வாழ்வில் ஆட்சியின் உதவி தேடுவதற்கு வழி எங்கே? தமிழனை பழிவாங்கும் தன்மையிலே இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறு காரணம் ஒன்றும் காணோம். ஆகையால், ஒவ்வொரு இனத்தாரும், ஒவ்வொரு ஜில்லாக்காரர்களும் பிரிந்து மொழிவாரி மாகாண நாடு பெறும் வரையில் பதவிகள் ஜில்லா விகிதமாவது அந்தந்த ஜில்லா அடையும்படி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

 

சமீபகாலத்தில் திருவாங்கூர் - கொச்சி இராஜ்ஜியத்தில் தமிழர் உரிமை கேட்டதற்காக, தமிழர்களை அந்தநாட்டு மலையாளிகள் நடத்திய விதத்தைப் பார்த்தால், குறைந்தளவு நாம் நமது உரிமைக்காவது பாடுபடக்கூடாதா என்று தோன்றுகிறது. இந்த உணர்ச்சியின் பெயரால்தான் இந்த எண்ணங்கள் நமக்குத்தோன்றுகின்றன. ஆகவே தமிழர் இவற்றைப்பற்றி நல்ல வண்ணம் யோசித்து, கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெறவேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே என்னுடைய பிறந்தநாள் விழா வேண்டுகோள்.

 

(தந்தை பெரியார் விடுதலை அறிக்கை 17.09.1954)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_596.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE