Language Selection

சமூகவியலாளர்கள்

தாமரை பூத்த குளத்தினிலே - முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்! - அந்தக்
கோமள வல்லியைக் கண்டுவிட்டான் - குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! - அவள்
தூய்மை படைத்த உடம்பினையும் - பசுந்
தோகை நிகர்த்த நடையினையும் - கண்டு
காமனைக் கொல்லும் நினைப்புடனே - குப்பன்
காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.

முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் - ஒரு
முழுமதி போல நனைந்திருக்கும் - தன்
துகிலினைப் பற்றித் துறைக்குவந்தாள்! - குப்பன்
சோர்ந்துவிட் டானந்தக் காமனம்பால்! - நாம்
புகழ்வதுண் டோ குப்பன் உள்ளநிலை! - துகில்
பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் - குப்பன்
"சகலமும் நீயடி மாதரசி - என்
சாக்காட்டை நீக்கிட வேண்டும்" என்றான்.

கன்னி யனுப்பும் புதுப்பார்வை - அவன்
கட்டுடல் மீதிலும் தோளினிலும் - சென்று
மின்னலின் மீண்டது! கட்டழகன் - தந்த
விண்ணப்பம் ஒப்பினள் புன்னகையால்!

சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் - அவள்
சங்கீத வாய்மொழி ஒன்றினிலே - எண்ணம்
முற்றும் அறிந்திடக் கூடுமென்றே - அவள்
முன்பு நடந்திடப் பின்தொடர்ந்தான் - பின்பு
சிற்றிடை வாய்திறந் தாள்.அதுதான் - இன்பத்
தேனின் பெருக்கன்று; செந்தமிழே!
"சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் - என்
தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.

காலை மலர்ந்தது! மாந்தரெலாம் - தங்கள்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! - இச்
சோலையி லேஇள மாமரங்கள் - அடர்
தோப்பினை நோக்கி வருக!" என்றாள்.
நாலடி சென்றனர்! மாமரத்தின் - கிளை
நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி!
மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் - அந்த
மொய்குழல் "யாதுன்றன் எண்ண" மென்றாள்.

"உன்னை எனக்குக் கொடுத்துவிடு! - நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை" - இந்தக்
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் - எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்:
"சின்ன வயதினில் என்றனையோர் - பெருஞ்
சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! - எனில்
அன்னது நான்செய்த குற்றமன்று! - நான்
அமங்கலை" என்றுகண் ணீர்சொரிந்தாள்!

"மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?" - என்று
வார்த்தைசொன் னாள்;குப்பன் யோசித்தனன்! - தன்னை
இணங்கென்று சொன்னது காதலுள்ளம் - "தள்"
என்றனமூட வழக்க மெலாம் - தலை
வணங்கிய வண்ணம் தரையினிலே - குப்பன்
மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! - பின்
கணம்ஒன்றி லேகுப்பன் நெஞ்சினிலே - சில
கண்ணற்ற மூட உறவினரும்,

வீதியிற் பற்பல வீணர்களும் - வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் - வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் - உன்
தந்தையின் சொத்தையும் நீஇழப்பாய்! - நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! - தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! - நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து - மணம்
கூட்டிவைப் போம்என்று சத்தமிட்டார்!

கூடிய மட்டிலும் யோசித்தனன் - குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! - முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் - அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும்அவன் - ஆ!
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! - மூடர்
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! - மற்றும்
பேடி வழக்கங்கள், மூடத்தனம் - இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!

காதல் அடைதல் உயிரியற்கை! - அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? - அடி
சாதல் அடைவதும் காதலிலே - ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! - இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! - கை
நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! - அடி
கோதை தொடங்கடி! என்றுசொன்னான். - இன்பம்
கொள்ளை!கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165kaathal.htm#dt111

குன்றின்மீது நின்று கண்டேன்
கோலம் என்ன கோலமே!
பொன் ததும்பும் "அந்திவானம்"
போதந் தந்த தே - டி - தோழி!
குன்றின்மீது...

முன்பு கண்ட காட்சி தன்னை
முருகன் என்றும் வேலன் என்றும்
கொன் பயின்றார் சொல்வர்; அஃது
குறுகும் கொள்கை அன் - றோ - தோழி!
குன்றின்மீது...

கண்ணும் நெஞ்சும் கவரு கின்ற
கடலை, வானைக் கவிஞர் அந்நாள்
வண்ண மயில் வேலோன் என்றார்;
வந்ததே போர் இந் - நாள் - தோழி!
குன்றின்மீது...

எண்ண எண்ண இனிக்கும் காட்சிக்
கேது கோயில்? தீபம் ஏனோ?
வண்ணம் வேண்டில் எங்கும் உண்டாம்
மயில வெற்பும் நன் - றே - தோழி!
குன்றின்மீது...

பண்ண வேண்டும் பூசை என்பார்
பாலும் தேனும் வேண்டும் என்பார்
உண்ண வேண்டும் சாமி என்பார்
உளத்தில் அன்பு வேண் - டார் - தோழி!
குன்றின்மீது...

அன்பு வேண்டும்; அஃது யார்க்கும்
ஆக்கம் கூட்டும் ஏக்கம் நீக்கும்!
வன்பு கொண்டோ ர் வடிவு காட்டி
வணங்க என்று சொல் - வார் - தோழி!
குன்றின்மீது...

என்பும் தோலும் வாடு கின்றார்
"ஏழை" என்ப தெண்ணார் அன்றே
துன்பம் நீக்கும் மக்கள் தொண்டு
சூழ்க வையம் தோ - ழி - வாழி!
குன்றின்மீது...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1.10._காட்சி_இன்பம்_

சிட்டு

தென்னை மரத்தில் - சிட்டுப்
பின்னும் அழைக்கும் - ஒரு
புன்னை மரத்தினில் ஓடிய காதலி
"போ போ" என்றுரைக்கும்.

வண்ண இறக்கை - தன்னை
அங்கு விரித்தே - தன்
சென்னியை உள்ளுக்கு வாங்கிஅச் சேவலும்
செப்பும் மணிவாயால்:

"என்னடி பெண்ணே - உயிர்
ஏகிடும் முன்னே - நீ
என்னிடம் வாஎனை யாகிலும் கூப்பிடு,
தாமதம் நீக்கிவிடு"

என்றிது சொல்லப் - பெட்டை
எண்ணம் உயர்ந்தே - அத்
தென்னையிற் கூடிப்பின் புன்னையிற் பாய்ந்தது,
பின்னும் அழைக்கும் சிட்டு.

அணில்

கீச்சென் றுகத்தி - அணில்
கிளையொன் றில்ஓடிப் - பின்
வீச்சென்று பாய்ந்துதன் காதலன் வாலை
வெடுக்கென்று தான் கடிக்கும்.

ஆச்சென்று சொல்லி - ஆண்
அணைக்க நெருங்கும் - உடன்
பாய்ச்சிய அம்பெனக் கீழ்த்தரை நோக்கிப்
பறந்திடும் பெட்டை அணில்!

மூச்சுடன் ஆணோ - அதன்
முதுகிற் குதிக்கும் - கொல்லர்
காய்ச்சும் இரும்பிடை நீர்த்துளி ஆகக்
கலந்திடும் இன்பத் திலே.

ஏச்சுக்கள் அச்சம் - தம்மில்
எளிமை வளப்பம் - சதிக்
கூச்சல் குழப்பங்கள் கொத்தடி மைத்தனம்
கொஞ்சமும் இல்லை அங்கே!

வானும் முல்லையும்

எண்ணங் கள்போலே - விரி
வெத்தனை கண்டாய்! - இரு
கண்ணைக் கவர்ந்திடும் ஆயிரம் வண்ணங்கள்
கூடிச் சுடர்தரும் வான்!

வண்ணங் களைப்போய்க் - கரு
மாமுகில் உண்டு - பின்பு
பண்ணும் முழக்கத்தை, மின்னலை, அம்முகில்
பாய்ச்சிய வானவில்லை,

வண்ணக் கலாப - மயில்
பண்ணிய கூத்தை - அங்கு
வெண்முத்து மல்லிகை கண்டு சிரித்தனள்!
மேல்முத்தை வான் சொரிந்தான்!

விண்முத் தணிந்தாள் - அவள்
மேனி சிலிர்த்தாள்! - இதைக்
கண்ணுண்ண உண்ணக் கருத்தினி லின்பக்
கடல்வந்து பாய்ந்திடுதே!

மனிதர்

மஞ்சம் திருத்தி - உடை
மாற்றி யணிந்தே - கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதன் வரும்படி
கோதைஅ ழைக்கையிலே,

மிஞ்சிய சோகம் - மித
மிஞ்சிய அச்சம் - "என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதனை கொள்வாரோ?"

நெஞ்சிலிவ் வாறு - நினைந்
தங்குரைக் கின்றான்: - "அடி
பஞ்சைப் பரம்பரை நாமடி! பிள்ளைகள்
பற்பலர் ஏதுக்" கென்பான்.

கஞ்சி பறித்தார் - எழுங்
காதல் பறித்தார் - கெட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச் சாதிக்கு
வாய்த்த நிலை இதுவோ!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1._9._மக்கள்_நிலை_

உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில்
உதித்துவிட்டான் செங்கதிரோன்; தகத்தகா யம்பார்!
விலகிற்றுக் காரிருள்தான்; பறந்ததுபார் அயர்வு;
விண்ணிலெலாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடடா!
மிலையும்எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!
மேலெல்லாம் விழிஅள்ளும் ஒளியின் ப்ரவாகம்!
நலம்செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டி
நடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!

ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில்
உயர்மலைகள், சோலை,நதி இயற்கைஎழில் கள்பார்!
களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால்
கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்!
தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி!
திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்;
ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில்
உயர்கின்றான்; உதயசூ ரியன்வாழ்க நன்றே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1.6.%20உதய%20சூரியன்

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE