Language Selection

சமூகவியலாளர்கள்

கடவுள்கடவுள் என்றெதற்கும்
கதறுகின்ற மனிதர்காள்!
கடவுள்என்ற நாமதேயம்
கழறிடாத நாளிலும்
உடைமையாவும் பொதுமையாக
உலகுநன்று வாழ்ந்ததாம்;
"கடையர்ரு"செல்வர்" என்றதொல்லை
கடவுள்பேர் இழைத்ததே!

உடைசுமந்த கழுதைகொண்
டுழைத்ததோர் நிலைமையும்
உடைமைமுற்றும் படையைஏவி
அடையும்மன்னர் நிலைமையும்
கடவுளாணை யாயின்,அந்த
உடைவெளுக்கும் தோழரைக்
கடவுள்தான்முன் னேற்றுமோ?தன்
கழுதைதான் முன்னேற்றுமோ?

ஊரிலேனும் நாட்டிலேனும்
உலகிலேனும் எண்ணினால்
நீர்நிறைந்த கடலையொக்கும்
நேர்உழைப் பவர்தொகை!
நீர்மிதந்த ஓடமொக்கும்
நிறைமுதல்கொள் வோர்தொகை!
நேரிற்சூறை மோதுமாயின்
தோணிஓட்டம் மேவுமோ?

தொழிலறிந்த ஏழைமக்கள்
தொழில்புரிந்து செல்வர்பால்
அழிவிலாமு தல்கொடுக்க
அம்முதற் பணத்தினால்
பழிமிகுந்த அரசமைத்துப்
படைகள்தம்மை ஏவியே
தொழில்புரிந்த ஏழைமக்கள்
சோற்றிலே மண்போடுவார்!

நடவுசெய்த தோழர்கூலி
நாலணாவை ஏற்பதும்
உடலுழைப்பி லாதசெல்வர்
உலகைஆண் டுலாவலும்
கடவுளாணை என்றுரைத்த
கயவர்கூட்ட மீதிலே
கடவுளென்ற கட்டறுத்துத்
தொழிலுளாரை ஏவுவோம்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt145

 துன்பம் பிறர்க்கு!நல் இன்பம் தமக்கெனும்
துட்ட மனோபாவம்,
அன்பினை மாய்க்கும்; அறங்குலைக் கும்;புவி
ஆக்கந்தனைக் கெடுக்கும்!
வன்புக் கெலாம் அதுவேதுணை யாய்விடும்
வறுமை யெலாம்சேர்க்கும்!
"இன்பம் எல்லார்க்கும்" என்றேசொல்லிப் பேரிகை
எங்கும் முழங்கிடுவாய்!

தாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்
தாரணி என்றவண்ணம்,
தீமைக்கெல் லாம்துணை யாகும்; இயற்கையின்
செல்வத்தையும் ஒழிக்கும்!
தேமலர்ச் சோலையும் பைம்புனல் ஓடையும்
சித்தத்திலே சேர்ப்போம்!
"க்ஷேமம் எல்லார்க்கும்" என்றேசொல்லிப் பேரிகை
செகம் முழங்கிடுவாய்!

நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும்
நச்சு மனப்பான்மை,
தொல்புவி மேல்விழும் பேரிடியாம்; அது
தூய்மைதனைப் போக்கும்!
சொல்லிடும் நெஞ்சில் எரிமலை பூகம்பம்
சூழத் தகாதுகண்டாய்!
"செல்வங்கள் யார்க்கும்" என்றே சொல்லிப் பேரிகை
திக்கில் முழங்கிடுவாய்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt144

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோ ன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!
கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!
தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,
அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!
மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோ ம்!
தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
தொல்லுலக மக்களெலாம் யுஒன்றேரு என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே
சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt143

தமிழ்நா டெங்கும் தடபுடல்! அமளி!!
பணமே எங்கணும் பறக்குது விரைவில்
குவியுது பணங்கள்! மலைபோற் குவியுது!!
தமிழின் தொண்டர் தடுக்கினும் நில்லார்,
ஓடினார், ஓடினார், ஓடினார் நடந்தே!
ஆயிரம் ஆயிரத் தைந்நூறு பெண்கள்
ஒளிகொள் விழியில் உறுதி காட்டி
இறக்கை கட்டிப் பறக்கின் றார்கள்!
ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உத்ஸாகம்!
சமுத்திரம் போல அமைந்த மைதானம்!
அங்கே கூடினார் அத்தனை பேரும்!
குவித்தனர் அங்கொரு கோடி ரூபாய்!
வீரத் தமிழன் வெறிகொண் டெழுந்தான்!
உரக்கக் கேட்டான்: யுஉயிரோ நம்தமிழ்?ரு
அகிலம் கிழிய யுஆம்!ஆம்!ரு என்றனர்!!
"ஒற்றுமை" என்றான்; "நற்றேன்" என்றனர்.
உள்ளன்பு ஊற்றி ஊற்றி ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச் சேர்த்தமைத் தார்கள்!
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்க்கவி தொடங்கினர்! பறந்தது தொழும்பு!
கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்,
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்,
தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்!
காற்றி லெலாம் கலந்தது கீதம்!
சங்கீத மெலாம் தகத்தகா யத்தமிழ்!
காதலெலாம் தமிழ் கனிந்த சாறு!
கண்ணெதிர் தமிழக் கட்டுடல் வீரர்கள்!
காதல் ததும்பும் கண்ணா ளன்றனைக்
கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால்
புகழ்ந்தா ளென்று பொறாமல் சோர்ந்து
வீழ்ந்தான்! உடனே திடுக்கென விழித்தேன்.
அந்தோ! அந்தோ! பழய
நைந்த தமிழரொடு நானிருந்தேனே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm#dt128

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!
எங்கள் வாழ்வும்......

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165thamizh.htm#dt127

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE