உறுதி உறுதி உறுதி!
ஒன்றே சமுகம் என்றெண்ணார்க்கே - இறுதி!
உறுதி உறுதி உறுதி ...
உறவினர் ஆவார் ஒரு நாட்டார் - எனல்
உறுதி உறுதி உறுதி ...
பிறவியில் உயர்வும் தாழ்வும் சொல்லல் மடமை - இந்தப்
பிழைநீக் குவதே உயிருள் ளாரின் கடமை - நம்மிற்
குறைசொல வேண்டாம் உறவினர் பகைநீங் குங்கோள் - உங்கள்
குகையினை விட்டே வெளிவரு வீர்சிங் கங்காள்
உறுதி உறுதி உறுதி ...
நாட்டுக் குலையில் தீட்டுச் சொல்வார் மொழியை - நாமே
நம்பித் தேடிக் கொண்டோ ம் மீளாப் பழியை - நாட்டின்
கோட்டைக் கதவைக் காக்கத் தவறும் அந்நாள் - இந்தக்
குற்றம் செய்தோம்; விடுவோம்; வாழ்வோம் இந்நாள்
உறுதி உறுதி உறுதி ...
வாழ்விற் செம்மை அடைதல் வேண்டும் நாமே - நம்மில்
வஞ்சம் காட்டிச் சிலரைத் தாழ்த்தல் தீமை - புவியில்
வாழ்வோ ரெல்லாம் சமதர் மத்தால் வாழ்வோர் - மற்றும்
வரிதிற் றாழ்வோர் பேதத் தாலே தாழ்வோர்
உறுதி உறுதி உறுதி ...
தேசத் தினர்கள் ஓர்தாய் தந்திடு சேய்கள் - இதனைத்
தெளியா மக்கள் பிறரை நத்தும் நாய்கள் - மிகவும்
நேசத் தாலே நாமெல் லாரும் ஒன்றாய் - நின்றால்
நிறைவாழ் வடைவோம் சலியா வயிரக் குன்றாய்.
உறுதி உறுதி உறுதி ...
பத்துங் கூடிப் பயனைத் தேடும் போது - நம்மில்
பகைகொண் டிழிவாய்க் கூறிக் கொள்ளல் தீது - நம்
சித்தத் தினிலே இருளைப் போக்கும் சொல்லைக் - கேளீர்
செனனத் தாலே உயர்வும் தாழ்வும் இல்லை
உறுதி உறுதி உறுதி ...
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt160
சமூகவியலாளர்கள்
பலிபீடம்
மத - ஓடத்திலேறிய மாந்தரே - பலி
பீடத்திலே சாய்ந்தீரே!
பாடுபட் டீர்கள் பருக்கையில் லாதொரு
பட்டியில் மாடென வாழ்கின்றீர் - மதக்
கேடர்கள் காலினில் வீழ்கின்றீர் - ஒண்ட
வீடுமில் லாமலே தாழ்கின்றீர்!
மத - ஓடத்திலேறிய ...
பாதிக்கு தேபசி என்றுரைத் தால்,செய்த
பாபத்தைக் காரணம் காட்டுவார் - மத
வாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்
ஓதிநின் றால்படை கூட்டுவார்.
மத - ஓடத்திலேறிய ...
வாதனை சொல்லி வணங்கிநின் றால்தெய்வ
சோதனை என்றவர் சொல்லுவார் - பணச்
சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட
போதனையால் தினம் கொல்லுவார்.
மத - ஓடத்திலேறிய ...
பேதிக்கும் நோய்க்கும் பெரும்பசிக் கும்,பல
பீதிக்கும் வாய்திறப் பீர்களோ! - இழி
சாதியென்றால் எதிர்ப் பீர்களோ? - செல்வர்
வீதியைத் தான் மதிப்பீர்களோ?
மத - ஓடத்திலேறிய ...
கூடித் தவிக்கும் குழந்தை மனைவியர்
கூழை நினைத்திடும் போதிலே - கோயில்
வேடிக்கையாம் தெரு மீதிலே - செல்வர்
வாடிக்கை ஏற்பீரோ காதிலே?
மத - ஓடத்திலேறிய ...
தொட்டிடும் வேலை தொடங்கலு மின்றியே
தொந்தி சுமக்கும்பு ரோகிதர் - இட்ட
சட்டப்படிக்கு நீரோ பதர் - அவர்
அட்டகா சத்தினுக் கேதெதிர்?
மத - ஓடத்திலேறிய ...
மூடத் தனத்தை முடுக்கும் மதத்தைநிர்
மூலப் படுத்தக்கை ஓங்குவீர் - பலி
பீடத்தை விட்டினி நீங்குவீர் - செல்வ
நாடு நமக்கென்று வாங்குவீர்.
மத - ஓடத்திலேறிய ...
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt159
புதிய உலகு செய்வோம்
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
புதியதோர் உலகம் ...
பொதுஉடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதைஎங்கள் உயிரென்று காப்போம்.
புதியதோர் உலகம் ...
இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
யுஇதுஎனதெரு ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்
புதியதோர் உலகம் ...
உணர்வெனும் கனலிடை அயர்வினை எரிப்போம்
யுஒருபொருள் தனிருஎனும் மனிதரைச் சிரிப்போம்!
புதியதோர் உலகம் ...
இயல்பொருள் பயன்தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம்.
புதியதோர் உலகம் ...
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt158
நீங்களே சொல்லுங்கள்!
சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ!உங்கள் வேரினிலே.
நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே! - உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே! உமைத்
தந்தஅக் காலத்திலே - எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே.
மாமிகு பாதைகளே! உமை இப்பெரு
வையமெ லாம் வகுத்தார் - அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெலாம் உழைத்தார்.
ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே! - உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? - நீங்கள்
ஊர்த்தொழி லாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய்அல்லவோ?
கீர்த்திகொள் போகப் பொருட்புவியே! உன்றன்
கீழிருக்கும் கடைக்கால் - எங்கள்
சீர்த்தொழி லாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள்தோல்!
நீர்கனல் நல்ல நிலம்வெளி காற்றென
நின்ற இயற்கைகளே! - உம்மைச்
சாரும் புவிப்பொருள் தந்ததெவை? தொழி
லாளார் தடக்கைகளே!
தாரணியே! தொழி லாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ? - பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதிநன்றோ ?
எலிகள் புசிக்க எலாம்கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ? - இனிப்
புலிகள் நரிக்குப் புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்துக் கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும்உத் தேசமில்லை - சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt157
வியர்வைக் கடல்
அதிகாலை
கிழக்கு வெளுக்கமுன் வெளியிற் கிளம்பினேன்
ஒளிசெயும் மணியிருள், குளிர்ச்சி, நிசப்தம்,
இவற்றிடை என்னுளம் துள்ளும் மான்குட்டி!
உத்ஸாகம் எனைத் தூக்கி ஓடினது!
இயற்கை
குன்றம் இருக்கும்.அக் குன்றத் தின்பால்
குளமும், அழகிய குளிர்பூஞ் சோலையும்
அழகு செய்யும்! அவ்விடத் தில்தான்
என்றன் சொந்த நன்செய் உள்ளது.
பகல்
கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர்
வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது.
இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்.
வயல்
வளம்பெற நிறைந்த இளம்பயிர்ப் பசுமை
மரகதம் குவிந்த வண்ணம் ஆயிற்று;
மரகதக் குவியல்மேல் வாய்ந்த பனித்துளி
காணக்கண் கூசும் வயிரக் களஞ்சியம்!
பரந்தஎன் வயலைப் பார்த்துக்கொண் டிருந்தேன்
மகிழ்ச்சி தவிர மற்றொன்று காணேன்!
உழைப்பு
களையினைக் களைவது கருதி, எனது
பண்ணை ஆட்கள் பலபேர் வந்தனர்.
என்னை வணங்கினர்; வயலில் இறங்கினர்.
வில்லாய் வளைந்தது மேனி; அவர்தோள்
விசையாய்க் களைந்தது களையின் விளைவை!
முகவிழி கவிழ்ந்து வயலில் மொய்த்தது.
நடுப்பகல்
காலைப் போதினைக் கனலாற் பொசுக்கிச்
சூரியன் ஏறி உச்சியிற் சூழ்ந்தான்.
சுடுவெயில் உழவர் தோலை உரித்தது;
புதுமலர்ச் சோலையில் போய்விட்டேன் நான்.
வெயில்
குளிர்புனல் தெளிந்து நிறைந்த மணிக்குளம்!
நிழல்சேர் கரையில் நின்றுகொண் டிருந்தேன்
புழுக்கமும் வியர்வையும் எழுப்பி என்னை
நலிவு செய்த நச்சு வெய்யில்,
வானி லிருந்து மண்ணிற் குதித்துத்
தேன்மலர்ச் சோலை செழுமை கடந்தென்
உளத்தையும் உயிரையும் பிளப்பது விந்தை!
குளத்தில் விழுந்து குளிக்கத் தொடங்கினேன்.
வெள்ளப் புனலும் கொள்ளிபோல் சுட்டது.
உழைப்புத் துன்பம்
காலைப் போதினைக் கனலால் பொசுக்கிச்
சோலையும் கடந்து சுடவந்த வெய்யில்
விரிபுனற் குளத்தையும் வெதுப்பிய தெண்ணினேன்.
எண்ணும் போதென் கண்ணின் எதிரில்
வியர்வையும் அயர்வுமாய்ப் பண்ணை யாட்கள்
வந்து நின்று வணக்கம் செய்தனர்.
ஐயகோ நெஞ்சமே, இந்த ஆட்கள்
தாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்?
வியர்வைக் கடலின் காட்சி
களைபோக்கும் சிறுபயன் விளைக்க இவர்கள்
உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுல குழைப்பவர்க் குரிய தென்பதையே!
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt156