Language Selection

சமூகவியலாளர்கள்

தென்றிசையைப் பார்க்கின்றேன்; என்சொல்வேன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்கு தடடா!
அன்றந்த லங்கையினை ஆண்டமறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்!
குன்றெடுக்கும் பெருந்தோளான் கொடைகொடுக்கும் கையான்!
குள்ளநரிச் செயல்செய்யும் கூட்டத்தின் கூற்றம்!
என்தமிழர் மூதாதை! என்தமிழர் பெருமான்
இராவணன்காண்! அவன்நாமம் இவ்வுலகம் அறியும்!

வஞ்சக விபூஷணனின் அண்ணனென்று தன்னை
வையத்தார் சொல்லுமொரு மாபழிக்கே அஞ்சும்
நெஞ்சகனை, நல்யாழின் நரம்புதனைத் தடவி
நிறையஇசைச் செவியமுது தரும்புலவன் தன்னை,
வெஞ்சமரில் சாதல்வர நேர்ந்திடினும் சூழ்ச்சி
விரும்பாத பெருந்தகையைத் தமிழ்மறைகள் நான்கும்
சஞ்சரிக்கும் நாவானை வாழ்த்துகின்ற தமிழர்
தமிழரென்பேன், மறந்தவரைச் சழக்கரெனச் சொல்வேன்!

வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச்செயல்கள் விடவேண்டும்! ராவ ணன்தன்
கீர்த்திசொல்லி அவன்நாமம் வாழ்த்த வேண்டும்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt165

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாளஉ னதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனேவிழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர்நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியே!உயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஜனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையேகதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt164

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!
மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்
தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை
சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,
அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்
துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்
நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.
நூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து
நொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
மரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,
ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
நினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்
மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதா யச்சீர்
மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt163

உருவினையும் ஒலியினையும் ஒன்றாகச் சேர்த்தே
ஒளிபெருகத் திரையினிலே படங்காட்டும் கலையைத்
திருவிளைக்கும் நல்லறிஞர், ஐரோப்பி யர்கள்
தெரிந்துவெளி யாக்குகின்றார் எனக்கேட்ட நாளில்,
"இருவிழியால் அதுகாணும் நாள்எந்த நாளோ,
என்நாடும் அக்கலையில் இறங்குநாள் எந்நாள்,
இருள்கிழித்துத் தமிழ்நாடாம் நிலவுதனை, உலகின்
எதிர்வைக்கும் நாள்எந்நாள்" என்றுபல நினைத்தேன்.

ஒலியுருவப் படம்ஊரில் காட்டுவதாய்க் கேட்டேன்;
ஓடினேன்; ஓடியுட்கார்ந் தேன்இரவில் ஒருநாள்.
புலிவாழும் காட்டினிலே ஆங்கிலப்பெண் ஒருத்தி,
புருஷர்சக வாசமிலாப் புதுப்பருவ மங்கை
மலர்க்குலத்தின் அழகினிலே வண்டுவிழி போக்கி
வசமிழந்த படியிருந்தாள்! பின்பக்கம் ஒருவன்
எலிபிடிக்கும் பூனைபோல் வந்தந்த மங்கை
எழில்முதுகிற் கைவைத்தான்! புதுமைஒன்று கண்டேன்.

உளமுற்ற கூச்சந்தான் ஒளிவிழியில் மின்ன,
உயிர்அதிர்ந்த காரணத்தால் உடல்அதிர்ந்து நின்றே,
தெளிபுனலின் தாமரைமேற் காற்றடித்த போது
சிதறுகின்ற இதழ்போலே செவ்விதழ் துடித்துச்
சுளைவாயால் நீயார்என் றனல்விழியாற் கேட்டாள்
சொல்பதில்நீ என்றதவள் சுட்டுவிரல் ஈட்டி!
களங்கமிலாக் காட்சி,அதில் இயற்கையெழில் கண்டேன்!
கதைமுடிவில் யுபடம்ருஎன்ற நினைவுவந்த தன்றே!

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதா யில்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவா யில்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவா யில்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதா யில்லை!

வடநாட்டார் போன்றஉடை, வடநாட்டார் மெட்டு!
மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்!
வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்!
வாய்க்குவரா இந்துஸ்தான்! ஆபாச நடனம்!
அடையும்இவை அத்தனையும் கழித்துப்பார்க் குங்கால்,
அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்!
கடவுளர்கள், அட்டைமுடி, காகிதப் பூஞ்சோலை
கண்ணாடி முத்துவடம் கண்கொள்ளாக் காட்சி!

பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்!
மகரிஷிகள் கோயில்குளம் - இவைகள் கதாசாரம்.
இரக்கமற்ற படமுதலா ளிக்கெல்லாம் இதனால்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சியது லாபம்!

படக்கலைதான் வாராதா எனநினைத்த நெஞ்சம்
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயலால்,
படக்கலையாம் சனியொழிந்தால் போதுமென எண்ணும்!
பயன்விளைக்கும் விதத்தினிலே பலசெல்வர் கூடி
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ்நா டென்னும்இள மயிலும்
படமெடுத்தாடும்; தமிழர் பங்கமெலாம் போமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt162

மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி? தோழி - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர்
காதினிக் கும்படி சொன்னசொல் ஏதடி? தோழி - அந்தக்
கர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி தோழா - அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர்? தோழி - இந்தப்
பாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா.

ஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி? தோழி - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி? தோழி - அட
முன்-மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி? தோழி - சட்டம்
நால் வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்
ஆசை மதம்புகப் பேதம் அகன்றதோ? தோழி - அவர்க்
கங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள் தோழா!

சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி - அந்தத்
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப்
புல்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி - அதைப்
போதாக் குறைக்குமுப் போகம் விளைத்தனர் தோழா - அடி
எல்லையில் பேதம் இழைத்தது தான் எவர்? தோழி - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா - முன்பு
வல்லவர் சேசு வகுத்தது தான்என்ன? தோழி - புவி
"மக்கள் எல்லாம்சமம்" என்று முழக்கினர் தோழா!

ஈண்டுள்ள தொண்டர்கள் என்ன செய்கின்றனர்? தோழி - அவர்
ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி
வேண்ட வரும்திருக் கோயில் வழக்கென்ன? தோழி - அட
மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா - விரல்
தீண்டப் படாதவர் என்பவர் யாரடி? தோழி - இங்குச்
சேசு மதத்தினை தாபித்த பேர்கள்என் தோழா - உளம்
தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி - அவர்
"சோதரர் யாவரும்" என்று முழங்கினர் தோழா!

பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல் லாம்என்ன? தோழி - இவை
பாரத நாட்டுப் பழிச்சின்னத் தின்பெயர் தோழா - இங்குக்
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன? தோழி - தினம்
நேர்மையில் கோயில்வி யாபாரம் செய்வது தோழா - இந்த
வஞ்சகர்க் கென்ன வழுத்தினர் சேசுநல் தோழி - இன்ப
வாழ்க்கை யடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்!

நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி - அங்கு
நல்ல மரத்தினிற் பொம்மை அமைத்தனர் தோழா - அந்த
ஆலயம் சாமி அமைத்தவர் யாரடி? தோழி - மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆள நினைப்பவர் தோழா - மக்கள்
மாலைத் தவிர்த்து வழிசெய்வ ரோஇனித் தோழி - செக்கு
மாடுக ளாக்கித்தம் காலைச்சுற் றச்செய்வர் தோழா - அந்தக்
கோலநற் சேசு குறித்தது தானென்ன? தோழி - ஆஹா
கோயிலென் றால்அன்பு தோய்மனம் என்றனர் தோழா!

ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்? தோழி - அவர்
அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா - அந்தக்
கேண்மைகொள் சேசுவின் கீர்த்தி யுரைத்திடு தோழி - அவர்
கீர்த்தி யுரைத்திட வார்த்தை கிடைக்கிலை தோழா - நலம்
தாண்டவம் ஆடிடச் செய்தவரோ அவர்? தோழி - அன்று
தன்னைப் புவிக்குத் தரும்பெரு மானவர் தோழா - அந்த
ஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர்? - எனில்
"அன்னியர்ரு தான்"என்ற பேதமி லாதவர் தோழா.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt161

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE