Language Selection

சமூகவியலாளர்கள்

காடைக் காரக் குறவன் வந்து
பாடப் பாடக் குறத்தி தான்
கூடக் கூடப் பாடி ஆடிக்
குலுங்கக் குலுங்கச் சிரித்தனள்

சாடச் சாட ஒருபுறப் பறை
தக தக வென் றாடினாள்
போடப் போடப் புதுப் புதுக்கை
புதுப் புதுக்கண் காட்டினாள்

ஓடிச் சென்று மயிலைப் போல
ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே
மூடி மலர்க்கை திறந்து வாங்கி
முறிப்பும் முத்தமும் குறித்தனள்

தேடத் தேடக் கிடைப்ப துண்டோ
சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள்
ஈடு பட்டது நேரில் முத்தமிழ்
ஏழை மக்களின் வாழ்விலே!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt112

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன் -- நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!

பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்
பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து...

தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் கின்றாள் -- ஒரு
பூவைக் காட்டிப் பேர்சொல் என்றேன்
பூவை "என்பேர் பூவை" என்றாள்
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து...

காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து -- பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ!
மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள். சேர்த்து...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt111

கசங்கு சீவடி பிரம்பு செற்றடி
கைவேலை முடித் திடலாம் -- நம்
பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால்
பழயதைக் கொடுத் திடலாம்

பிசைந்து வைத்துள மாவும் தேனும்
பீர்க்கங் கொடியின் ஓரம் -- அந்த
உசந்த பானை திறந்து கரடி
உருட்டிடும் இந்த நேரம்

கூடைமுறங்கள் முடித்து விட்டேன்
காடை இறக்கை போலே -- இனி
மூடுதட்டும் குழந்தை மூச்சிலும்
முடிப் பதுதான் வேலை

காடு வெட்டவும் உதவி யில்லாக்
கழிப்புக் கத்தியைத் தீட்டி -- நீ
ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க
எழுந்திரு கண் ணாட்டி

சோடியாக நா மிருவர்
கூடி உழைக்கும்போது -- நம்
ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை
உரைத்திட முடி யாது

பாடி நிறுத்தி நீகொடுத்திடும்
பாக்கு வெற்றிலைச் சருகும் -- அத
னோடு பார்க்கும் பார்வையும் என்
உயிரினை வந்து திருகும்.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt110

வெய்யில் தாழ வரச் சொல்லடி -- இந்தத்
தையல் சொன்ன தாகச் சொல்லடி
வெய்யில் தாழ வரச் சொல்லடி

கையில் கோடாலி கொண்டு
கட்டை பிளப் பாரைக் கண்டு
கொய்யாக் கனியை இன்று
கொய்து போக லாகும்என்று
வெய்யில் தாழ வரச் சொல்லடி

கூரைக்குப்பின் னால் இருக்கும் தென்னை -- அதன்
கூட இருக்கும் வளர்ந்த புன்னை
நேரினிலே காத்திருப்பேன்! என்னை
நிந்திப்பதில் என்னபயன் பின்னை?
வெய்யில் தாழ வரச் சொல்லடி

தாய் அயலூர் சென்றுவிட்டாள்; நாளை -- சென்று
தான் வருவாள் இன்றுநல்ல வேளை
வாய் மணக்கக் கள்ளழுகும் பாளை -- நாள்
மாறிவிட்டால் ஆசை எல்லாம் தூளே
வெய்யில் தாழ வரச் சொல்லடி.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt109

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ஆருயிராம்!

பழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி -- இவ்
அழுக்குத் துணிக்குள்ளே...

பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி ஆலைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
அழுக்குத் துணிக்குள்ளே...

அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
"அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ" என்பான்என் அத்தான்
அழுக்குத் துணிக்குள்ளே...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt108

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE