Language Selection

சமூகவியலாளர்கள்

சினத்தை யடக்குதல் வேண்டும் -- சினம்
உனக்கே கெடுதியைத் தூண்டும்!

சினத்தினை யடக்கிட முடியுமா என்று
செப்புகின்றாய் எனில்கேள் இதை நன்று

வலிவுள்ளவன் என்று கண்டு -- சினம்
வாராமலே யடக்கல் உண்டு;
வலிவிலான்மேல் அன்பு கொண்டு -- அதை
மாற்றாதான் பெரிய மண்டு!
நலியும் மொழிகளைப் பேசவும் சொல்லும்
நாக்கையும் பல்லால் நறுக்கவும் சொல்லும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!

அடங்கா வெகுளிமண் மேலே -- காட்
டாறுபோய்ச் சீறுதல் போலே,
தொடர்ந்தின்னல் செய்யுமதனாலே -- அதைத்
தோன்றாமலே செய்உன் பாலே!
கடிதில் சுடுமிரும்பைத் தூக்கவும் வைக்கும்
கண்ணாடி மேசையைத் தூளாய் உடைக்கும்
சினத்தை யடக்குதல் வேண்டும்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt122

பொறுமைதான் உன்றன் உடைமை! அதைப்
போற்றலே கடமை

பொறுமையாற் கழியும் நாளிலே
புதுவன்மை சேருமுன் தோளிலே!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பொறுமையுடைய ஏழையே கொடையன்!
பொறுமையிலாதவன் கடையன்!
இறைவனே எனினும் பிழை செய்தோன்
ஏதுமற்றவனாகி நைவான்!
பொறுமைதான் உன்றன் உடைமை!

பலமுறை பொறுப்பாய் வேறு
பழுதும் நேருமெனில் சீறு!
நிலைமை மிஞ்சுகையில் பகைவனை
நீறாக்கலே பொறுமையின் பயன்
பொறுமைதான் உன்றன் உடைமை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt121

மெய் சொல்லல் நல்லதப்பா! தம்பி
மெய் சொல்லல் நல்லதப்பா!

கண்டதைச் சொல்லென்று சொன்னாலும் -- நீ
உண்டதைச் சொல்லென்று சொன்னாலும்,
மண்டை யுடைத்திட வந்தாலும் -- பொருள்
கொண்டுவந் துன்னிடம் தந்தாலும்
மெய் சொல்லல் நல்லதப்பா!

பின்னவன் கெஞ்சியும் நின்றாலும் --அன்றி
முன்னவன் அஞ்சிட நின்றாலும்
மன்னவரே எதிர் நின்றாலும் -- புலி
தின்னவரே னென்று சொன்னாலும் -- நீ
மெய் சொல்லல் நல்லதப்பா!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt120

அன்பை வளர்த்திடுவாய் -- மெய்
யன்பை வளர்த்திடுவாய்

கூடப் பிறந்த குழந்தை யிடத்தினில்
கொஞ்சுதல் அன்பாலே! உற
வாடி அம்மாவை மகிழ்ந்த மகிழ்ச்சியும்
அன்பின் திறத்தாலே!
தேடிய அப்பத்தில் கொஞ்சத்தை இன்னொரு
சின்னவனுக்குத் தர --நீ
ஓடுவ துண்டெனில் கண்டிருப்பாய் உன்
உள்ளத்திருந்த அன்பை!

கன்றையும் ஆவையும் ஒன்றாய் இணைத்தது
கருதில் அன்பன்றோ?
உன்னையும் உன்னரும் தோழர்கள் தம்மையும்
ஒட்டிய தன்பன்றோ?
சென்னையி னின்றொரு பேர்வழி வந்ததும்
சிட்டுப் பறந்ததுபோல் -- நீ
முன்னுற ஓடஉன் உள்ளம் பறந்ததும்
முற்றிலும் அன்பன்றோ?

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt119

தூய்மை சேரடா தம்பி -- என்
சொல்லை நீபெரிதும் நம்பித்
தூய்மை சேரடா தம்பி!

வாய்மையாலும் ஒழுக்கத்தினாலும் அகத்
தூய்மை உண்டாகும் மேலும்மேலும்
தூய்மை சேரடா தம்பி!

உடையினில் தூய்மை -- உண்ணும்
உணவினில் தூய்மை -- வாழ்வின்
நடையினில் தூய்மை -- உன்றன்
நல்லுடற் றூய்மை -- சேர்ப்பின்
தடையில்லை வாழ்நாள் ஒவ்வொன்றும் இன்பம்
தரும்நாள் ஆகும் நீஎன்றும்
தூய்மை சேரடா தம்பி!

துகளிலா நெஞ்சில் -- சாதி
துளிப்பதும் இல்லை -- சமயப்
புகைச்சலும் இல்லை -- மற்றும்
புன்செயல் இல்லை -- தம்பி
அகத்திலே அன்பின் வெள்ளம் மூளும்; தீய
அச்சம் போகும்! நீ எந்நாளும்
தூய்மை சேரடா தம்பி!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt118

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE