Language Selection

சமூகவியலாளர்கள்

காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை கண்டு -- நீ
வாழ்க்கை நடத்தினால் நன்மை உண்டு
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்! -- காக்கை
அழைத்துத்தன் இனத்தொடு குந்திப் பொறுக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

காக்கையை ஒருபையன் கொன்று விட்டதால் --அதைக்
காக்கைகள் அத்தனையும் கண்டு விட்டதால்
கூக்குரல் இட்டபடி குந்தி வருந்தும்! -- அதைக்
கொன்றபையன் கண்டுதன் நெஞ்சு வருந்தும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

வரிசையில் குந்தியந்தக் காக்கைகள் எலாம் -- நல்ல
வரிசை கெட்டமக்களின் வாழ்க்கை நிலையைப்
பெருங்கேலி யாய்மிகவும் பேசியிருக்கும் -- அதன்
பின்பவைகள் தத்தமிடம் நோக்கிப் பறக்கும்
காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt127

இத்தனைச் சிறிய சிட்டு! -- நீபார்!
எத்தனை சுறுசுறுப்பு! -- தம்பி
இத்தனைச் சிறிய சிட்டு!

குத்தின நெல்லைத் தின்றுநம் வீட்டுக்
கூரையில் குந்தி நடத்திடும் பாட்டு
இத்தனைச் சிறிய சிட்டு!

கொத்தும் அதன்மூக்கு முல்லை அரும்பு
கொட்டை பிளந்திடத் தக்க இரும்பு!
தொத்தி இறைப்பினில் கூடொன்று கட்டும்
கூட்டை நீ கலைத் தாலது திட்டும்!
இத்தனைச் சிறிய சிட்டு!

மல்லி பிளந்தது போன்றதன் கண்ணை
வளைத்துப் பார்த்த ளாவிடும் விண்ணை!
கொல்லையில் தன் பெட்டை அண்டையில் செல்லும்
குதித்துக் கொண்டது நன்மொழி சொல்லும்
இத்தனைச் சிறிய சிட்டு!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt126

நிறையப் பால் தரும் கறவை -- நீ
மறவேல் அதன் உறவை!
குறைவிலாது வைத் திடுக தீனியைக்
குளிப் பாட்டிவா நாளும் மேனியை!
நிறையப் பால்தரும் கறவை!

நோய் மிகுத்து மாளும்! -- கொட்டில்
தூய்மை செய்எந் நாளும்!
தோய்வு குப்பை கூளம் -- இன்றித்
துடைக்க என் ஓக்காளம்?
வாய் மணக்கவே, உடல் மணக்கவே
வட்டில் நெய்யோடு கட்டித்தயிர் ஏடு
நிறையப் பால்தரும் கறவை!

ஈக்கள் மொய்த்தல் தீது! -- கூடவே
எருமை கட்டொ ணாது!
மேய்க்கப் போகும் போது -- மேய்ப்போன்
விடுக பசும்புல் மீது!
நோக்கும் கன்றினும், நமது நன்மையைக்
காக்கும் தாயடா! காக்கும் தாயடா!
நிறையப் பால்தரும் கறவை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt125

முழுமை நிலா! அழகு நிலா!
முளைத்ததுவிண் மேலே --அது
பழைமையிலே புதுநினைவு
பாய்ந்தெழுந்தாற் போலே!
அழுதமுகம் சிரித்ததுபோல்
அல்லி விரித்தாற் போல் -- மேல்
சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத்
தொத்திக்கிடந் தாற்போல்
முழுமை நிலா! அழகு நிலா!

குருட்டு விழியும் திறந்ததுபோல்
இருட்டில் வான விளக்கு! -- நம்
பொருட்டு வந்ததுபாடி ஆடிப்
பொழுது போக்கத் துவக்கு!
மரத்தின் அடியில் நிலவு வெளிச்சம்
மயிலின் தோகை விழிகள்! -- பிற
தெருக்கள் எல்லாம் குளிரும் ஒளியும்
சேர்த்து மெழுகும் வழிகள்!
முழுமை நிலா! அழகு நிலா!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt124

மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ்
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ? மழையே...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt123

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE