Language Selection

சமூகவியலாளர்கள்

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt132

புகைச் சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய்ஏறும் -- பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல் சீறும் -- நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசுபணத்தால் தீச்செயலை வாங்கிப் -- பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக்கொண்டே விரலிடையில் தாங்கி -- நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt131

காப்பி எதற்காக நெஞ்சே?
காப்பி எதற்காக?

கையினில் சுக்குடன் மல்லி இருக்கையில்
காப்பி எதற்காக?

தீப்பட்ட மெய்யும் சிலிர்க்க இளிப்புக்கு
வாய்ப்புற்ற தெங்கு வளர்ந்த தென்னாட்டினில்
காப்பி எதற்காக?

ஆட்பட்டாய் சாதி சமயங்களுக்கே
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்கப்
பூப்போட்ட மேல்நாட்டுச் சிப்பம் வியந்தாய்
போதாக் குறைக்கிங்குத் தீதாய் விளைந்திட்ட
காப்பி எதற்காக?

திரும்பிய பக்கமெல் லாம்மேல் வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்
கரும்பு விளைந்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இலாத
காப்பி எதற்காக?

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt130

பூனை வந்தது பூனை! -- இனிப்
போனது தயிர்ப் பானை!

தேனின் கிண்ணத்தைத் துடைக்கும் -- நெய்யைத்
திருடி உண்டபின் நக்குந்தன் கையைப்
பூனை வந்தது பூனை!

பட்டப் பகல்தான் இருட்டும் -- அது
பானை சட்டியை உருட்டும்!
சிட்டுக் குருவியும் கோழியும் இன்னும்
சின்ன உயிரையும் வஞ்சித்துத் தின்னும்
பூனை வந்தது பூனை!

எலிகொல்லப் பூனை தோது -- மெய்தான்
எங்கள் வீட்டில் எலி ஏது?
தலை தெரியாத குப்பை இருட்டறை
தன்னிலன்றோ எலிக்குண்டு திருட்டறை!
பூனை வந்தது பூனை!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt129

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது
முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்
கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;
என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்
அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது
முதல் வளர்த்தவன் போஎன்றாலும் போகாது;
மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!
என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது
நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்
வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்
வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்
என்றன் நாயின் பேர் அப்பாய்...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt128

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE