Language Selection

சமூகவியலாளர்கள்

 தலைவாரிப் பூச்சூடி உன்னைப் -- பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள் உன் அன்னை!
சிலைபோல ஏனங்கு நின்றாய்? -- நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? -- கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? -- நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!

படியாத பெண்ணா யிருந்தால் -- கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு! -- என்
கண்ணல்ல? அண்டைவீட் டுப்பெண்க ளோடு!
கடிதாய் இருக்குமிப் போது -- கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது!
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு -- பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt147

பெண்களால் முன்னேறக் கூடும் -- நம்
வண் தமிழ் நாடும்எந் நாடும்!
கண்களால் வழிகான முடிவதைப் போலே
கால்களால் முன்னேற முடிவதைப் போலே
பெண்களால் முன்னேறக் கூடும்!

படியாத பெண்ணினால் தீமை! -- என்ன
பயன்விளைப் பாளந்த ஊமை?
நெடுந்தமிழ் நாடெனும் செல்வி -- நல்ல
நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!
பெண்களால் முன்னேறக் கூடும்!

பெற்றநல் தந்தைதாய் மாரே -- நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே -- முன்
னேறவேண் டும்வைய மேலே!
பெண்களால் முன்னேறக் கூடும்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt146

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093c.htm#dt145

பண்டு தமிழ்ச் சங்கத்தை
உண்டு பண்ணிய மன்னன் சீரெல்லாம்,
விண்டு புகழ்ந்து பாடி
இன்னும் வியக்கின்றார் இப் பாரெல்லாம்.

அண்டும் புலவர்க் கெல்லாம்
அந்நாள் மன்னர் கொடுத்த கொடைதானே,
தண்டமிழ் இந்நாள் மட்டும்
சாகாமைக்கே அடிப்படை மானே!

புலவர் நினைப்பை யெல்லாம்
பொன் னெழுத்தால் பதித்து நூலாக்கி,
நலம் செய்தா ரடிமானே
நம் தமிழ்வேந்தர் நம்மை மேலாக்கி!

இலை என்று புலவர்க்கோ
எடை யின்றிப் பொன்தந்தார் மூவேந்தர்,
கலை தந்தார் நமக் கெல்லாம்
அதனால் இன்றைக்கு நாம்தமிழ் மாந்தர்!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt144

வெண்ணி லாவும் வானும் போலே
வீரனும்கூர் வாளும் போலே
வெண்ணிலாவும் வானும் போலே!

வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
வெண்ணிலாவும் வானும் போலே!

வையகமே உய்யு மாறு
வாய்த்த தமிழ் என்அரும் பேறு!
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை
(தம்) கையிலே வேலேந்தி இந்தக்
கடல் உலகாள் மூவேந்தர்
கருத் தேந்திக் காத்தார்; அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல
வெண்ணிலாவும் வானும் போலே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093b.htm#dt143

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE