Language Selection

சமூகவியலாளர்கள்

கட்டுடலிற் சட்டை மாட்டி - விட்டுக்
கத்தரித்த முடி சீவிப்
பட்டுச் சிறாய்இடை அணிந்தே - கையில்
பந்தடி கோலினை ஏந்திச்
சிட்டுப் பறந்தது போலே - எனை
விட்டுப் பிரிந்தனர் தோழி!
ஒட்டுற வற்றிட வில்லை - எனில்
உயிர் துடித்திட லானேன்.

வடக்குத் தெருவௌி தன்னில் - அவர்
மற்றுள தோழர்க ளோடும்
எடுத்ததன் பந்தடி கோலால் - பந்தை
எதிர்த்தடித் தேவிளை யாடிக்
கடத்திடும் ஒவ்வொரு நொடியும் - சாக்
காட்டின் துறைப்படி அன்றோ?
கொடுப்பதைப் பார்மிகத் துன்பம் - இக்
குளிர்நறுந் தென்றலும் என்றாள்.

"வளர்ப்பு மயில்களின் ஆடல் - தோட்ட
மரங்கள், மலர்க்கிளைக் கூட்டம்,
கிளிக்குப் பழந்தரும் கொடிகள் - தென்னங்
கீற்று நடுக்குலைக் காய்கள்
அளித்த எழில்கண் டிருந்தாய் - உன்
அருகினில் இன்பவெள் ளத்தில்
குளிர்ந்த இரண்டு புறாக்கள் - காதல்
கொணர்ந்தன உன்றன் நினைவில்."

தோழிஇவ் வாறுரைக் குங்கால் - அந்தத்
தோகையின் காதலன் வந்தான்.
"நாழிகை ஆவதன் முன்னே - நீவிர்
நண்ணிய தென்இங்கே" என்றாள்.
"தாழ்குழலே! அந்தப் பந்து - கைக்குத்
தப்பிஎன் தோளினைத் தாக்கி
வீழ்ந்தது; வந்ததுன் இன்ப
மேனி நினை"வென்று சொன்னான்.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt213

எனக்கும் உன்மேல் விருப்பம் - இங்
குனக்கும் என்மேல் விருப்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

எனக்கு நீதுணை அன்றோ - இங்
குனக்கு நான்துணை அன்றோ? - அத்தான்
எனக்கும் உன்மேல்...

இனிக்கும் என்செயல் உனக்கும் - இங்
கெனக்கும் உன்செயல் இனிக்கும்!
தனித்தல் உனக்கும் எனக்கும் - நொடி
நினைப்பின் வருத்தம் மனத்தில் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

விழி தனிலுன தழகே - என்
அழ கிலுனது விழியே
தொழுத பிறகுன் தழுவல் - நான்
தழுவிப் பிறகுன் தொழுதல் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

நீஉடல்! உயிர் நானே - நாம்
நிறை மணமலர் தேனே
ஓய்விலை நம தன்பும் - இங்கு
ஒழிவிலை பே ரின்பம் - அத்தான்
எனக்கும் உன்மேல்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt212

சொல்வதென்றால் வெட்கமடி தோழி - சொல்லச்
சொல்லுகின்றாய் என்துணைவன்
சொன்னதையும் செய்ததையும்
சொல்வதென்றால்...

முல்லைவிலை என்ன என்றான்
இல்லைஎன்று நான் சிரித்தேன்
பல்லைஇதோ என்று காட்டிப்
பத்துமுத்தம் வைத்து நின்றான்
சொல்வதென்றால்...

பின்னலைப்பின் னேகரும்பாம் பென்றான் - உடன்
பேதைதுடித் தேன்அணைத்து நின்றான்
கன்னல் என்றான் கனியிதழைக்
காதல்மருந் தென்று தின்றான்.
சொல்வதென்றால்...

நிறையிருட்டில் ஒருபுதிரைப் போட்டான்;
நிலவெறிப்ப தென்னவென்று கேட்டான்.
குறைமதியும் இல்லை என்றேன்.
குளிர்முகத்தில் முகம் அணைத்தான்.
சொல்வதென்றால்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt211

உண்டனன் உலவி னன்பின்
உள்ளறை இட்ட கட்டில்
அண்டையில் நின்ற வண்ணம்
என்வர வறிவா னாகி,
மண்டிடும் காதற் கண்ணான்
வாயிலில் நின்றி ருந்தான்!
உண்டேன்என் மாமி என்னை
உறங்கப்போ என்று சொன்னாள்.

அறைவாயி லுட்பு குந்தேன்
அத்தான்தன் கையால் அள்ளி
நிறைவாயின் அமுது கேட்டுக்
கனிஇதழ் நெடிது றிஞ்சி
மறைவாக்கிக் கதவை, என்னை
மணிவிளக் கொளியிற் கண்டு
நறுமலர்ப் பஞ்ச ணைமேல்
நலியா துட்கார வைத்தான்.

கமழ் தேய்வு* பூசி வேண்டிக்
கனியோடு பாலும் ஊட்டி
அமைவுற என்கால் தொட்டே
அவனுடை யால்து டைத்தே
தமிழ்,அன்பு சேர்த்துப் பேசித்
தலையணை சாய்த்துச் சாய்ந்தே
இமையாது நோக்கி நோக்கி
எழில்நுதல் வியர்வை போக்கி,
* தேய்வு -- சந்தனம்

தென்றலும் போதா தென்று
சிவிறி*கைக் கொண்டு வீசி
அன்றிராப் பொழுதை இன்பம்
அறாப் பொழுதாக்கி என்னை
நன்றுறத் துயிலிற் சேர்த்தான்
நவிலுவேன் கேட்பாய் தோழி.
* சிவிறி -- விசிறி

கண்மூக்குக் காது வாய்மெய்
இன்பத்திற் கவிழ்ப்பான். மற்றும்
பெண்பெற்ற தாயும் போல்வான்;
பெரும்பணி எனக்கி ழைப்பான்.
வண்மையால் கால் துடைப்பான்
மறுப்பினும் கேட்பா னில்லை.
உண்மையில் நான்அ வன்பால்
உயர்மதிப் புடையேன் தோழி!

மதிப்பிலாள் என்று நெஞ்சம்
அன்புளான் வருந்து வானேல்
மதிகுன்றும் உயிர்போன் றார்க்கு
மறம்*குன்றும் செங்கோல் ஓச்சும்
அதிராத்தோள் அதிர லாகும்
அன்புறும் குடிகள் வாழ்வின்
நிதிகுன்றும் மன்னன் கையில்
மழைகுன்ற நேரும் அன்றோ?
* மறம் - வீரம்

நிலந்தொழேன் நீர்தொ ழேன்விண்
வளிதொழேன் எரிதொ ழேன்நான்
அலங்கல்சேர் மார்பன் என்றன்
அன்பனைத் தொழுவ தன்றி!
இலங்கிழைத் தோழி கேள்!பின்
இரவுபோ யிற்றே. கோழி
புலர்ந்தது பொழுதென் றோதப்
பூத்ததென் கண்ண ரும்பு.

உயிர்போன்றான் துயில் களைந்தான்
ஒளிமுகம் குறுந கைப்புப்
பயின்றது. பரந்த மார்பில்
பன்மலர்த் தாரும் கண்டேன்.
வெயில்மணித் தோடும் காதும்
புதியதோர் வியப்பைச் செய்ய
இயங்கிடும் உயிரன் னோனை
இருகையால் தொழுதெ ழுந்தேன்.

அழைத்தனர் எதிர்கொண் டெம்மை
அணிஇசை பாடி வாழ்த்தி.
இழைத்திடு மன்று நோக்கி
ஏகினோம். குடிகள் அங்கே
"ஒழித்தது வறுமை அன்னாய்
உதவுக" என்று நைந்தார்.
"பிழைத்தது மழை*என் அத்தான்
பெய்"என்றேன் குடிகட் கெல்லாம்.

மழைத்தது* மழைக்கை** செந்நெல்
வண்டிகள் நடந்த யாண்டும்.

* பிழைத்தது மழை - மழை பெய்யவில்லை.
* மழைத்தது - மழைபோல் செந்நெல் தந்தது.
** மழைக்கை - கொடுக்குமியல்புள்ள மன்னன் கை.

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt210

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
புதுமணத்தில் தோய்ந்து,பூந் தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித் தெற்கு
நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண் எழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம் சுவைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி,

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்
செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்
அங்கிருந்த விசுப்பலகை தனிற் படுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனை யின்மேல்
அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு பொருளை யெல்லாம்
பாழாக்கி னாலும்அதில் கவலை கொள்ளேன்.

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;
சூழ்ந்த துணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் `தனிமை', `அந்தி'
இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,
மணம் இவற்றைப் பருகுவதே நினைவாயிற்று.

தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்
சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்;
சரியாத குழல்சரிய லானாள் போலும்;
தடவினாள் போலும்;எனைத் தன்க ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினே னென்றாள் ஓகோ!
பேசுமிவள் மனைவி;மற் றொருத்தி தென்றல்!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt209

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE