Language Selection

அழுக்குத் துணிக்குள்ளே அறத்தோடு பிணைந்துள்ள
அவ்வுயிரே என்றன் ஆருயிராம்!

பழுப்பேறக் காய்ச்சிய இருப்பினைத் தூக்கி
உழைப்பாலும் உணர்வாலும் உலகை உண்டாக்கி -- இவ்
அழுக்குத் துணிக்குள்ளே...

பழக்காடும் கிளியும்போல் நானும் அத்தானும்
பகற்போதைக் கழித்தபின் அவன் கொஞ்சமேனும்
பிழைஇன்றி ஆலைக்குச் சென்றுதன் மானம்
பேண இராவேலையைக் காணாவிடிலோ ஊனம்
தழற் காட்டிலே இரும்புச் சரக்கும் உருகக்கண்டு
விழிப்போடிருந்து வேண்டும் உருப்படி செய்வதுண்டு
அழுக்குத் துணிக்குள்ளே...

அறம்புரிவார் எய்தும் இன்பமே இன்பம்
அயலார்க்கு நலம்செய்யார் எய்துவார் துன்பம்
இறந்து படும்உடலோ ஏகிடும் முன்பும்
எழில் உள்ளம் நன்மைதீமை இனம்கண்ட பின்பும்
"அறஞ்செய் அறஞ்செய் என்றே அறிவேஎனை அழைத்தால்
இறந்தார்போல் இருப்பேனோ" என்பான்என் அத்தான்
அழுக்குத் துணிக்குள்ளே...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt108