ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 15
“திரிபுகள், மோசடிகள், இடதுசாரியாக வேடம் போடுவது, வலது சாரிகளுக்கு உதவுவது. இது தான் டிராட்ஸ்கி.!!” என்றார் லெனின்
சோவியத்தின் ஏற்றத் தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டே, டிராட்ஸ்கி போல்ஸ்விக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டான். கட்சியில் இணையும் படி லெனின் விடுத்த கோரிக்கையை முதலில் நிராகரித்தவன்தான் டிராட்ஸ்கி. போல்ஸ்சுவிக் அல்லாத வகையில் தனது அதிகாரத்தை நிறுவும் தன்னெழுச்சியான மாற்றங்களுக்காக காத்துக் கிடந்தான். இவை அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், போல்ஸ்சுவிக்களுடனான இணைவை டிராட்ஸ்கி நாடினான். அப்போதும் தனக்கு சாதகமாக இருக்க கூடிய வகையில், போல்ஸ்விக் அல்லாத ஒரு குழுவுடன் இனைந்த பின், ஒரு குழுவாகவே இணைந்தான். இந்த குழுவை அவன் கட்சியில் இணைந்த பின்பு கலைக்கவில்லை. மேலும் போல்ஸ்விக்குகளுடன் முரண்பட்ட பலரையும் உள்ளடக்கிய வகையில், தன்னை ஒரு தனிக் குழுவாக கட்சிக்குள் உருவாக்கியபடி செயல்படத் தொடங்கினான். அந்த குழுவை போல்ஸ்சுவிக்கு பதிலாக அதிகாரத்தில் கொண்டுவரவே, தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினான். இது பகிரங்கமான சதிப் பாணியிலான ஒரு மோதலாக வளர்ச்சி பெற்றது. டிராட்ஸ்கி தனது குழுவை இடது குழுவாக அறிவித்துக் கொண்டான். இதன் போது வலது குழுக்களும் தனது சொந்த அரசியலுடன் செயல்படத் தொடங்கியது. லெனினின் மார்க்சிய பார்வைக்கு எதிராக வலது இடது எதிர்ப்புகள் அரங்கில் சுறுசுறுப்பாக செயல்பட்டன. ஒவ்வொரு விடையத்திலும் மூன்று விதமான பார்வை போல்ஸ்விக் கட்சியில் பிரதிபலித்தது. இதன் மூலம் வலது இடது பிரிவினர் முதலாளித்துவ மீட்சிக்கான அரசியல் விலகல்களை முன் தள்ளினர். தமது அதிகாரத்தை நிலைநாட்ட முனைப்புப் பெற்றனர். இது படிப்படியாக ஜனநாயக மத்தியத்துவத்தை துஸ்பிரயோகம் செய்து, சதிப்பாணியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில் இரகசிய குழுக்களை, இரகசிய சந்திப்புகளை நடத்தின.