கடந்த இரு நாட்களாக வட-கிழக்கில், அரச படைகளின் அத்துமீறிய அராஜகம் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த தியாகிகளை நினைவு கூருவதை, சிங்களப் பேரினவாதம் ஒடுக்கும் வண்ணம் அரச பயங்கரவாதத்தை ஒரு இனத்தின் மீது ஏவியிருக்கின்றது.
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பாக பேரினவாத வெறி கொண்டு வன்னியில் ஓர் மாபெரும் மனித வேள்வியை நடாத்திய அரசின் பிணந்தின்னிகள்தான், இலட்சோப இலட்சமாய் வடகிழக்கில் வாழும் எம்மக்களின் காவல் நாய்களாக உள்ளன. கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரியாது. அதனால்தான் எம்மக்கள் தாம் பறிகொடுத்த தம் சொந்த-பந்த இரத்த உறவுகளை இந்நாளில் நினைவுகூர முற்படும் போது, அம்மக்களை காடைத்தனம் கொண்டு அடக்குகின்றது அரச பயங்கரவாதம். தங்கள் உறவுகளை நினைவு கூரவும் உணர்வுகளை வெளிப்படுத்தவும் கூட சுதந்திரம் கிடையாது. வட-கிழக்கின் சிவில் நிர்வாகம் இப்படித்தான் அம்மணமாகி இருக்கின்றது.