மக்கள் விரோத அரசியல் நிலையை உணர்ந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் மலையக மக்களும் தமது அரசியல் பாதையை தெரிவு செய்ய வேண்டும்.
25 வருடங்களின் பின் வடக்கு மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது. மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2009ம் ஆண்டு இடம்பெற்று 5 வருடங்கள் பூர்த்தியாகும் முன்னமே சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு தேர்தல்களை முன்கூட்டியே வைப்பதன் மூலம் மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு “ஜனநாயக உரிமை” வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறிவருகிறது. எனினும் வட மாகாண சபையில் அரசாங்கத்துக்கு ஏற்படப்போகும் தேர்தலை ஈடுகட்டவே ஏனைய இரு மாகாணங்களுக்குமான தேர்தலையும் நடத்துகிறது என்பதே உண்மை. ஒட்டு மொத்தமாக தொழிலாளர்களும்; அனைத்து உழைக்கும் மக்களும் மிகவும் மோசமான பொருளாதார சுமைக்கு ஆளாக்கப்பட்ட சூழ்நிலையிலேயே இந்த மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் இடம்பெற உள்ளன. இந்த பாதிப்பிற்கு மலையக மக்கள் வெகுவாக முகம் கொடுத்து வருகின்ற நிலையிலேயே மலையக மக்களில் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் வாழும் மத்திய மாகாணத்தில் மாகாண சபை தேர்தல் இடம்பெறுகிறது.