சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு வைத்திருக்கும் நீண்டகால மயக்க மருந்து இனவாதம். தேர்தல் வரப் போகின்றதென்றால் அந்த இனவாத மயக்க மருந்தை இரட்டிப்பாக அள்ளி வழங்குவார்கள். இனவாதச் சேற்றில் கால் புதைத்து நிற்பவர்களின் தோள்களின் மேல் பொய்மூடைகள் ஏற்றப்படுகின்றன. அளுத்கம முஸ்லீம் மக்களின் மீதான கலவரங்கள், காணாமல் போன தம் அன்புக்குரியவர்களை தேடும் தமிழ்மக்களின் கூட்டத்தை பொதுபல சேனாவின் பிக்குகள் என்னும் குண்டர்களைக் கொண்டு குழப்புதல், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் யோகராஜா நிரோசன் என்னும் தமிழ் மாணவனை பயங்கரவாதி என்று கைது செய்தல் என்று பலவழிகளில் இலங்கை அரசு இனவாத நஞ்சை கக்குகிறது.
தமிழ்மக்களைக் கொன்று குவித்து சிங்களத் தேசிய வீரனாக தன்னைக் காட்டிக் கொண்ட மகிந்தாவின் வாக்குவங்கி கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் சிங்கள மக்களின் வாக்குகள் ஜக்கிய தேசியக்கட்சிக்கு செல்லுமாயின் அடுத்த தேர்தலில் தோல்வி தான் என்று அமைச்சர் ஒருவர் பேசியதாக சொல்லுகிறார்கள். அதற்காகத் தான் இந்த அவசரத் தயாரிப்புகள். கணக்கற்ற பிணங்களில் மேல் ஏறி உட்கார்ந்த சிம்மாசனம் ஆடத் தொடங்கியுள்ளதால் அடுத்த பலிக்கு ஆயத்தம் ஆகிறார்கள்.