பிரமுகர்களே கேளுங்கள்
உங்களுக்குப் பின்னால் அந்த ஒளிவட்டம்
நாங்களெல்லாம் நமஸ்காரம்
பண்ணவேண்டியது ஜயன்மீர்!
சிம்மாசனத்தில் வீற்றிருக்கிற உங்கள் பாதங்கள்
நோகலாமோ
ஏவற்காரர்களையும் சேவகர்களையும்
தேவைப்படின் நடனமங்கையர்களையும்
கொண்டு வரும்படி முகப்புத்தகத்தில்
ஓலை விட்டிருக்கிறோம் ஜயரீர்!
யாரங்கே !
அதுவரை சற்றுக் காற்றுவர சாளரத்தை
திறந்து சாமரங்கள் வீசுங்கடா நாய்களா?
வித்துவங்கள் விண்ணதிரத்
தத்துவங்கள் மூச்சுமுட்ட
தகமை கொண்ட
தாங்கள் பொறுக்கி
விட்டெறியும் வார்த்தையிலே ஒன்றும்கூட
விரயமாகிப் போகலாமோ வீணாய்!
எம் முதுகு கனத்தாலும்
தங்கள் ஒளிவட்டத்தை
சிலுவையாய் சுமப்பதுவேயன்றி
வேறென்ன வேலை நமக்கு!
18/04/2012