நாளை டிசம்பர் 10ம் திகதி, சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கொழும்பில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், பாராமுகங்களை எதிர்த்து மாபெரும் ஆர்பாட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அழைப்பினை விடுத்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களான; கடத்தல், மற்றும் சரணடைந்து காணாமல் ஆக்கல், வன்னி யுத்தத்தில் மக்களை கொத்து கொத்தாக படுகொலை செய்தது முதல் பத்திரிகையாளர்கள், மனித உரிமையாளர்கள் கடத்தல், காணாமல் ஆக்கல் படுகொலைகள் என இன-மத-மொழி வேறுபாடுகள் இன்றி பல் வேறு மனித உரிமைகள் மீறப்பட்டன.
இவற்றிக்கெல்லாம் நீதியை பெற்றுத்தருவதாக ஆட்சியை பிடித்த மைத்திரி - ரணில் கூட்டாட்சி இன்று குற்றவாளிகளை பாதுகாத்து அவற்றை மறைக்கும் வேலையில் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மலையக மக்கள் மற்றும் மத்திய அரவு நாடுகளில் பணிக்காக செல்பவர்களின் மனித உரிமைகள் குறித்த அக்கறை அற்றும் பாராமுகமாகவும் நடந்து கொண்டிருக்கின்றது.
கூட்டாட்சி அரசின் மனித உரிமை மீறல்கள், குற்றவாளிகளை பாதுகாத்து மக்களை ஏமாற்றும் செயல்களிற்கு எதிராக போராட ஜனநாயத்தை, மனித உரிமைகளை நேசிப்பவர்களே, போராடும் மக்களுடன் இணைந்து கொண்டு உங்கள் ஆதரவினையும் அரசிற்கு எதிரான உங்கள் எதிர்ப்பையும் தெரிவிக்க அழைக்கின்றது சமவுரிமை இயக்கம்.