ராஜபக்ச ஆட்சியை தோற்கடிக்க அடிப்படை பொது கொள்கையாக ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் இருந்தது. ராஜபக்ச ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதே தமது பிரதான குறிக்கோள் என்று ஆட்சியை பிடித்த புதிய ஆட்சியாளர்கள் முன்னைய ஆட்சிக்கு மேலாக ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுப்பவர்களாக மாறி உள்ளனர். இந்த அரசிடமிருந்து ஜனநாயக உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக போராடவும், ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும்; இடதுசாரி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், கலைஞர்கள் பல்வேறு குழுக்கள் இணைந்து ஜனநாயக்திற்காக போராட புதிய படையினை அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13-06-2016) கொழும்பு தேசிய நூல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த, ஜக்கிய சோசலிச கட்சியின் சிறிதுங்க ஜெயசுரிய, சோசலிச கட்சி பிறேமபால, சுயாதீன ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சரத், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த லகிரு வீரசேகரா, ஜனநாயகத்துக்கான மீடியா அமைப்பினை சேர்ந்த சிறிமல்வத்த, வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பினை சேர்ந்த தமிக்க முனசிங்க, பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பினை சேர்ந்த கலாநிதி நிமால் றஞ்சித் உட்பட பலர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றினர்.
"அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்", "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையினை ஏற்றுக்கொள்" மற்றும் "அடக்குமுறை சட்டங்களை சுருட்டிக் கொள்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஜனநாயகத்திற்க்கான அமைப்பின் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.