மழை, வெள்ளம், காற்றுடன் கூடிய இருண்ட கால நிலை, நீதி மன்றத் தடை யுத்தரவு, போலீசார் மற்றும் இராணுவப் புலணாய்வாளர்களின் மிரட்டல் போன்றவரையும் மீறி தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், அவரின் பிறப்புரிமையான குடியியல் உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் இன்று 08/12/2015 பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னிலை சோசலிசக் கட்சியும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சக இடதுசாரி கட்சிகளின் தலைமைகளுடன் இணைந்து முன்னெடுத்தது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த இப் போரட்டம் ஜனாதிபதியின் காரியாலயத்தை நோக்கி கோஷங்களுடன் முன் நகர்ந்த போது, ஹில்டன் ஹோட்டல் முன்பாகவுள்ள லோட்டஸ் ரவுன்டபோர்ட் சந்தியில் அதிரடிப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பாரிய பிரயத்தனத்தின் பின் போராட்டக்காரர்கள் அதிரடிப் படையினால் கலைக்கப்பட்டனர். ஆனாலும், தோழர் குமாரின் விடுதலைக்கான போராட்டம் தொடருமென கட்சி தலைமை தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க இன்றைய போராட்டம் நடக்கப் போவதை ஏற்கனவே அறிந்த பிரதமர் ரணில் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் 05.12.2015 அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டர். அப்பேச்சுவார்த்தை எந்த தீர்வினையும் எட்டாது முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது .