மைத்திரி - ரணில் தேசிய கூட்டரசாங்கம் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை கடந்த வாராம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. பொதுவில் இந்த வரவு செலவுத் திட்டமானது; உழைக்கும் மக்களிற்கும், அரச ஊழியர்களிற்கும், பொது மக்களிற்கும் எந்தவித நன்மையினையும் கொண்டிருக்கவில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்தவித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. இதன் உள்ளடக்கம் உழைக்கும் மக்களையும், பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட அனைவரையும் மேலும் மேலும் வறுமையில் வீழ்த்தும் ஒன்றாகும்.
அதேவேளை, சர்வதேச நிறுவனங்களுக்கும், உள்நாட்டு தரகு நிறுவனகளுக்கும் ஏதுவான ஒன்றாகும். குறிப்பாக, உள்நாட்டு விவசாய உற்பத்தியை மேலும் மேலும் அழிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த வரவு செலவு திட்டம், கல்விக்கான ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. அதேவேளை ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யப்போவதாக கூறிக் கொண்டு ஆட்சியமைத்த மைத்திரி - ரணில் அரசு; முப்படைகளுக்கும் அடுத்த நிதியாண்டில் ஒதுக்கியுள்ள தொகையானது பாரிய ஒன்றாகவும் யுத்தகாலத்தில் ஒதுக்கிய தொகையினை விட உயர்வாகவும் உள்ளதனை நாம் அவதானிக்கலாம்.இந்த மக்கள் விரோத வரவு செலவு திட்டத்தினை எதிர்த்து, முன்னிலை சோசலிசக் கட்சி எதிர்வரும் செவ்வாய் 24ம் திகதி கொழும்பு கோட்டை முன்பாக தனது கண்டனத்தை தெரிவித்து ஆர்ப்பாட்டம் போராட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளது.