பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவனான சந்திரகுமார் சுதர்ஷனை துரிதமாக விடுவிக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் நஜீத் இந்திக்க, சபரகமுவ பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 50நாட்கள் கடந்துள்ளதாக தெரிவித்தார்.
கிளிநொச்சியில் இருந்து தென்னிலங்கைக்கு வந்த குறித்த மாணவன் மீது பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் கடத்திச் செல்லப்பட்டமைக்கு, விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தமை காரணமாக புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்ற காரணம் கூறப்பட்டது. எனினும், அவர் சிறுவர் போராளியாக பலவந்தமாகவே இயக்கத்தில் செயற்பட்டு வந்துள்ளார் என மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் நஜீத் இந்திக்க குறிப்பிட்டார்.
இதன்காரணமாக அவர் மீது இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை அநீதியான செயல் என்றும் குற்றம்சுமத்தினார்.