முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரத்தினம் இன்று (01) அதிகாலை நாடு திரும்பியுள்ளார். அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் குமார் குணரத்னத்திற்கு இலங்கை வர தடை இருந்த நிலையில் இன்று அதிகாலை 12.15 அளவில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். முன்னிலை சோஷலிச கட்சியின் தொடக்க நிகழ்விற்காக இலங்கை வந்திருந்த குமார் குணரத்னம், கடத்தி அச்சுறுத்தப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
அவுஸ்திரேலிய திரும்பிய தோழர் குமார் அவர்கள் பல தடவைகள் நாடு திரும்பும் முயற்ச்சியில் இலங்கையில் மேலதிக நாட்கள் தங்கியிருந்தமைக்கான குற்றப்பணத்தை கட்ட முயற்ச்சித்த போதெல்லாம் அதனை குடிவரவு திணைக்களம் மறுத்துக் கொண்டிருந்தது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தோழர் குமார் அவர்களை நாடு திரும்ப வைக்கும் முயற்ச்சியில் முன்னிலை சோசலிச கட்சி தீவிரமாக செயற்பட்டு குடிவரவு திணைக்களத்துடன் சட்டபோராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தது.
மகிந்த அரசோ, தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுதற்க்காகவே நாடு திருப்ப முயற்சிக்கின்றார் என எண்ணி பல காரணங்களை கூறி மறுத்தது. இடதுசாரிய முன்னணி சார்பில் தோழர் துமிந்த நாகமுவ அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டு போட்டியிடுகின்ற இன்றைய நிலையிலும், தொடர்ச்சியாக முன்னிலை சோசலிச கட்சி குடிவரவு திணைக்களத்துடன் முட்டி மோதிய நிலையிலும், இது குறித்து சர்வதேச மனிதவுரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையிலும் மேலதிகமாக தங்கியிருந்தமைக்கான குற்றப் பணத்தினை கட்ட குடிவரவு திணைக்களம் உடன்பட்டது. அதனை தொடர்ந்து பணம் கட்டப்பட்டு மீண்டும் தோழர் குமார் நாட்டிற்கு வருவதற்க்கான விசாவுக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டு விசாவும் கிடைக்கப் பெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை தோழர் குமார் குணரத்தினம் அவர்கள் நாடு திரும்பியுள்ளார்
இந்த நிலையில் தோழர் குமாரினது இலங்கை வருகை குறித்து, "முதலில் சுவாசிப்பதற்கான ஒக்சிஜன் வேண்டும்" என்று கூறிக் கொண்டு மகிந்த சர்வாதிகரிக்கு பதிலாக மைத்திரி சர்வாதிகாரியை பதவிக்கு கொண்டு வருவதற்க்காக மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரிக்கின்ற புலம்பெயர் இணையங்கள் அவதூற்று பொய்ப் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.
ஜே.வி.பி - மைத்திரிக்கும் "இரகசிய உடன்பாட்டை" குமார் இலங்கை போய் சொல்ல வேண்டும் என்று கூறுவது, அதற்காக இலங்கை சென்றார் என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய். இங்கு அரசியல் நேர்மையினத்தையும், ஊடாக விபச்சாரத்தையும் தாண்டி, இதற்கான சமூக நடைமுறை சார்ந்த எந்த உண்மைகளும் இருப்பதில்லை.
இடதுசாரி முன்னணியில், முன்னிலை சோசலிசக் கட்சியும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதை மைத்திரி ஆதாரவு அரசியல் எதிர்க்கின்றது என்பதே உண்மை. இடதுசாரிய முன்னணியும், அதில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியும் கடந்த காலத்தில் மகிந்தா அரசுக்கு எதிராக போராடியதால் எற்படும் அரசியல் விளைவுகளை, மைத்திரி கும்பல் அறுவடை செய்ய முன்னிலை சோசலிசக் கட்சி அனுமதிக்க வேண்டும் என்பதே இந்த அவதூறு அரசியலின் பின்னுள்ள உள்ளடக்கம்.
அத்துடன் அரசுக்கும் அதன் வர்க்க சர்வாதிகாரத்துக்கும் எதிராக போராடும், வர்க்க அரசியலை குலைப்பதுமே இதன் பின்னுள்ள அரசியல் நோக்கமாகும்.
இதன் மூலம் முன்னிலை சோசலிசக் கட்சி தேர்தலில் பங்கு கொள்ளும் ஜனநாயக உரிமையை மறுப்பதற்காக இட்டுக் கட்டும் அவதூறு தான், குமார் பற்றி கேடுகெட்ட அரசியல் பின்னுள்ள பிழைப்பாகும்.
குமார் சட்டவிரோமாக கடத்த்தப்பட்டு, இறுதியில் நாடு கடத்தப்பட்டவர். குற்றச்சாட்டு சட்டவிரோதமாக நாட்டில் இருந்தது என்பதால், அதற்கு எதிராக சட்ட ரீதியாக அனுகுவதானது ஜனநாயக ரீதியான போராட்டமாகும். இன்று நாட்டுக்கு வெளியில் வாழ்கின்ற அனைவருக்கும் இந்த சட்ட ரீதியாக அனுகுமுறை பொருந்தும். இந்த வகையில் முன்னிலை சோசலிசக் கட்சி இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகின்றது. இந்த சட்ட ரீதியான ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டத்தை நீண்ட காலமாக நடத்தியதன் பலன், தேர்தல் காலத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதை தேர்தலில் ஒரு அணிக்கு சார்பானதாக இட்டுக் காட்டுகின்ற அரசியல் அவதூறு, மைத்திரி சார்பு அரசியலின் வங்குரோத்தனத்தமாகும்.
இந்த அவதூற்றுப் பின்புலத்தில் தமிழர் என்ற இன அடையாளத்தை முன்னிறுத்தி, முன்னிலை சோசலிசக் கட்சிக்கு எதிரான பிரச்சாரம் தான், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்கவில்லை என்று கூறுவதாகும். இந்த அவதூறுக்கு பின்னால் இருப்பது, ஜனநாயக உரிமைகளை கோருவதல்ல, குறுந்தேசியவாதத்தை அங்கீகரிக்கக் கோருவதேயாகும். இடதுசாரிகள் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை அங்கீகரிக்கினர், இந்த வகையில் முன்னிலை சோசலிசக் கட்சி இதற்கு விதிவிலக்கல்ல.
குமார் பற்றி அவதூறுக்கு பின்னால் இருப்பது மைத்திரி ஆதாரவு அரசியலும், வர்க்க விரோத சிந்தனையுமே.